இன்று நேற்று நாளை- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிகர்கள்: விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், ஆர்யா (சிறப்புத் தோற்றம்), கருணாகரன்
ஒளிப்பதிவு: ஏ வசந்த்
இசை: ஆதி
தயாரிப்பு: ஞானவேல் ராஜா, சிவி குமார்
இயக்கம்: ஆர் ரவிகுமார்

தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதிய கதைக் களம்தான். இன்னும் சிரத்தையெடுத்து, விஷுவலில் நம்பகத் தன்மை காட்டியிருந்தால், ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டிய படம் இந்த இன்று நேற்று நாளை.

டைம் மெஷின் எனும் கால எந்திரத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.

Indru Netru Naalai Review

2065 ஆம் ஆண்டு ஒரு டைம் மெஷினைக் கண்டுபிடிக்கிறார் ஆர்யா. தவறுதலாக அது கடந்த காலம், அதாவது 2015-ம் ஆண்டுக்கு வந்து, விஷ்ணு, கருணாகரன் கைகளில் சிக்குகிறது. அப்புறமென்ன புகுந்து விளையாடுகிறார்கள் அந்த மெஷினை வைத்துக் கொண்டு. காதல், பிஸினஸ் என அனைத்தையும் தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொள்ள அந்த டைம் மெஷின் உதவுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்து, டைம் மிஷினே ஆபத்தாக மாறுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

புகுந்து விளையாட வேண்டிய கதைக் களம். ஆனால் பட்ஜெட் காரணமாக கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டிய நிலை போலிருக்கிறது இயக்குநருக்கு. ஆனால் அந்த 'லிமிடெட்' வட்டத்துக்குள்ளேயே சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து ரசிகர்களை உட்கார வைத்துவிடுகிறார் இயக்குநர் ரவிக்குமார்.

Indru Netru Naalai Review

விஷ்ணு தண்ணீர் மாதிரி. பாத்திரத்துக்கு ஏற்ற வடிவத்தில் ஜொலிக்கிறார். டைம் மெஷினை வைத்து தன் சொந்தத் தொழில் கனவை நிறைவேற்றிக் கொள்வது, காதலில் ஜெயிப்பது போன்ற காட்சிகளில் அந்தப் பாத்திரமாகவே மாறி கலக்குகிறார்.

கருணாகரன் காமெடி படத்துக்கு ப்ளஸ். அவரது ஒன்லைனர்கள் ரசிக்க வைக்கின்றன.

நாயகி மியா ஜார்ஜ் அழகான காதலியாக மனதில் பதிகிறார். டிஎம் கார்த்திக், வில்லன் ரவிசங்கர், ஜெயப்பிரகாஷ் என அனைவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு (வசந்த்), இசை (ஆதி), எடிட்டிங் (லியோ ஜான் பால்) எதுவும் சொதப்பவில்லை. அவரவர் பணியை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

Indru Netru Naalai Review

இந்தப் படத்தின் முதுகெலும்பு அதன் திரைக்கதைதான். அதற்காக இயக்குநர் ரவிக்குமாருக்கு பாராட்டுகள். குழப்பமில்லாமல், லாஜிக் மீறாமல் காட்சிகளை வைத்திருக்கிறார். ஆனால் பெரிய குறை என்றால், டைம் மெஷின் இருந்தாலும், கருணாகரன் சொல்வதுபோல ஒரு கால் டாக்ஸியைப் பார்க்கிற மாதிரிதான் இருக்கிறது. பிரமிப்பு ஏற்படவில்லை.

மற்றபடி குடும்பத்தோடு பார்க்கக் கூடிய சுவாரஸ்யமான படம்தான் இன்று நேற்று நாளை.

 

செய்வீர்களா..... செஞ்சுருவேன்.. கலகலக்கும் "மாரி" கலாட்டா.. வாட்ஸ் ஆப்பில்!

சென்னை: தனுஷ் - காஜல் அகர்வால் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மாரி படத்தின்" செஞ்சிருவேன்" என்று தனுஷ் சொல்லும், வசனத்தை வைத்து சிம்பு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர் நெட்டில்.

ஒருவழியாக வரும் ஜூலை 17 ம் தேதி மாரி படத்துடன் போட்டி போடும் நோக்கில் வெளியாகிறது வாலு திரைப்படம். கண்டிப்பாக வெளியாகும் என்று சூடம் ஏற்றாத குறையாக டி.ராஜேந்தர் சொல்லி இருக்கிறார்.

Vaalu Vs Maari – Whatsapp Comedy

இந்த நிலையில் யாரோ ஒரு புண்ணியவான் வாலு படத்தை மரண ஓட்டு ஓட்டித் தள்ள, தற்போது வாட்ஸ் ஆப்பில் வலம் வந்துகொண்டிருக்கிறது அந்த டயலாக். அது என்னவென்று கேட்கிறீர்களா மாரி படத்தில் தனுஷ் என்ன கேட்டாலும் செஞ்சிருவேன் என்று சொல்கிறார் அல்லவா, அந்த வசனத்தையும் வாலுவையும் மிக்ஸ் பண்ணி சொல்லி இருப்பதைக் கொஞ்சம் படியுங்கள்.

முதலில் புரட்சித் தலைவி "அம்மா" கேட்கிறார் செய்வீர்களா? தனுஷின் பதில் செஞ்சிருவேன். அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தனுஷிடம் யோகா செய்வீர்களா? என்று கேட்க அதற்கு தனுஷ் செஞ்சிருவேன் என்று கூறுகிறார்.

அடுத்து நடிகர் சிம்பு தனுஷிடம் என்ன சொன்னாலும் செஞ்சிருவியா? என்று கேட்க, தனுஷும் சளைக்காமல் செஞ்சிருவேன் என்று கூறுகிறார். சிம்பு ஒரு கேள்வியை தனுஷைப் பார்த்துக் கேட்க அதற்கு தனுஷ் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய்விடுகிறார்.

அப்படி என்ன சிம்பு கேட்டார் சொல்லவா வேறு ஒன்றுமில்லை வாலு படம் வெளியானதும் மாரி படத்தை ரிலீஸ் செய், என்று சிம்பு கூற இப்போது தெரிகிறதா தனுஷ் ஏன் வாயடைத்துப் போனார் என்று.

 

பால் மரியாவை வியக்க வைத்த இளையராஜா!

1983ல் முதல்முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்துத் திரும்பிய இசைஞானி இளையராஜா தன் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்ட "சங்கீதக் கனவுகள்" புத்தகத்திலிருந்து சில பகுதிகள்..

"இரண்டு மாதங்களுக்கு முன், முதன் முறையாக வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் ஒன்று செய்ய வேண்டும் என்று என் (வெளிநாட்டு) நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டனர்.

Ilaiyaraaja stuns Paul Mauriat

நான் இப்போது, என் வேலையைத் தவிர, வெளியில் போனால் கோயிலுக்கு மட்டுமே போகிறேன். வெளிநாட்டில் போய் எதைப் பார்ப்பது, இது ஒரு பெரிய கேள்விக்குறியாக நின்றது. வெளிநாட்டிலாவது கோயிலாவது! ஆகா! மின்னல் வெட்டினாற்போல் ஒரு யோசனை.

பாஃக் (Bach),

பீதோவன் (Beethoven),

ப்ராம்ஸ் (Brahms),

ஹைடின் (Haydn),

மொஸார்ட் (Mozart)

- இவர்கள் போன்ற பெரிய இசை மேதைகள் வாழ்ந்த - நடந்த மண்ணை, இசைகளை உருவாக்கிய, இசை நிகழ்ச்சிகளை நடத்தி பல உள்ளங்களை மகிழ்வித்த இடங்களைத் தரிசித்தால் என்ன என்று தோன்றியது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்தன.

நண்பர் Air France கோபால், பாரிஸ் நகரில் பணிபுரியும் நண்பர் ‘புரொபஸர் பாரிஸ்' ஜமால் அவர்களை சென்னையிலேயே எனக்கு அறிமுகப்படுத்தினார்.

"உங்களுக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்" என்றார்.

"முதற் காரியம் - எனக்கு வரவேற்பு, சொற்பொழிவு போன்ற எந்த நிகழ்ச்சிகளும் வேண்டாம்" என்றேன்.

‘சரி பின்'?

‘ஃப்ரான்ஸ் நாட்டின் Composer PAUL MAURIAT, பாரீஸ் நகரத்தில்தானே இருக்கிறார். அவரைப் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா?" என்று கேட்டேன்.

‘முடியும்' என்றார்கள்.

‘பால் மரியா' எனக்கு மிகவும் பிடித்த Composer Arranger. ‘Arranger' என்றால் Orchestrator என்று பொருள்.

தமிழில் மெல்லிசை என்று சொல்லக்கூடிய Light Music-ல் புதிய உத்திகளைக் கையாண்டு தற்போதைய மெல்லிசைக்கு உயிர் கொடுத்தவர் அவர். அவரைச் சந்திப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்" என்றேன்.

நான் அவர் மீது வைத்திருக்கும் மரியாதையைப் பார்த்து விட்டு, "அவரைச் சந்திக்க எப்படியாவது ஏற்பாடு செய்து விடுகிறேன்" என்றார்.

நண்பர் Air France கோபால், பாரிஸ் நகரத்துக்குப் பலமுறை ‘பால் மரியா'வுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். அவருடைய மற்ற நண்பர்களுக்கும் விஷயத்தைத் தெரிவித்து அவர்கள் மூலமாகவும் முயற்சி செய்தார்.

நண்பர் பாரிஸ் ஜமால், ‘நீங்கள் அவரைச் சந்திக்கும் முன்பு, உங்களைப் பற்றிய முக்கிய விஷயங்களை அவருக்குத் தெரிவித்தால்தான் அவர் உங்களைச் சந்திக்க விரும்புகிறாரா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். எனவே உங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒன்றைத் தயார் செய்து என்னிடம் கொடுங்கள்" என்றார்.

எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என்றாலும், ‘இப்போது இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே' என்று வருந்தினேன். அப்போது, நண்பர் கோபால் முன் வந்து, "ஏற்கெனவே நான் ஒன்று தயாரித்து வைத்திருக்கிறேன். அதைக் கொண்டுபோங்கள். அத்துடன் இளையராஜாவின் முக்கியமான பாடல்களில் சிலவற்றை எடுத்துப் போங்கள். வாழ்க்கைக் குறிப்பைவிட, அவருடைய ‘இசை' அவரைத் தெளிவாக விளக்கிக் காட்டிவிடும்!" என்று யோசனை சொன்னார்.

எனக்கு அது சரியாகப் பட்டது. நானே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதைப் பத்து பன்னிரண்டு கேஸட்டுகளில் பதிவு செய்து, ஒன்றை ஜமாலிடம் கொடுத்தேன். அது தவிர ‘வேத கானம்' கேஸட் ஒன்றும், சினிமாவுக்கில்லாமல் நான் தனியாகப் பதிவு செய்த இசைக்கோர்வை அடங்கிய கேஸட் ஒன்றுமாக மூன்று கொடுத்தேன். இதில்லாமல், புதிதாக நான் எழுத ஆரம்பித்திருக்கிற ஒரு Experimental Music-ஐயும் புறப்படுவதற்கு முதல் நாள் Record செய்தேன். அது பதிவானபோதே இசைக்குழுவில் இருந்த அத்தனை பேரும் மனமாரப் பாராட்டினார்கள்.

அடுத்த நாள் என்னை எப்படியாவது மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவது என்று நண்பர்கள் கொண்ட முயற்சி வீண்போகவில்லை. பால் மரியா 2 மணிக்கு வரச் சொல்லிவிட்டார். அரை மணி நேரம் முன்பாகவே போனோம்.

ஆனால் அவர் நமக்காக ஒதுக்கியுள்ள நேரம் 5 நிமிடம்தான். சம்மதமா என்றார்கள்.

சரி, பார்த்துவிட்டாவது வருவோம் என்ற எண்ணத்துடன், அவருக்கு அன்பளிப்பாக நான் வாங்கி வைத்திருந்த மாலை ஒன்றும், கிருஷ்ணன் சிலை ஒன்றும், கிளம்பும் முன் Record செய்த Music Cassette ஒன்றும் எடுத்துக்கொண்டேன்.

10 நிமிடம் முன்பாகவே அவருடைய வீட்டில் Composing Hall-ல் காத்திருந்தோம். ஹாலைப் பார்த்து வியந்துகொண்டிருந்தேன். அங்கு ஒரு Grand Piano-வும், Electronic Synthesizer மூன்றுக்கு மேலும், Music எழுதும் Manuscript பேப்பர்களும், பேனா, பென்சில்களும் Record Collection-களும் என் கவனத்தைக் கவர்ந்தன. இவற்றைப் பார்த்து 10 நிமிடம் மட்டும்தான் என்னால் வியக்க முடிந்தது. ஏனெனில், சரியாக 2 மணிக்கு பால் மரியா The Great உள்ளே வந்தார்.

நண்பர்கள் என்னை அறிமுகப்படுத்த, சந்தன மாலையையும், கிருஷ்ணன் சிலையையும் அன்புடன் அளித்தேன்.

என்னைப் பற்றி விசாரித்த அவர் சென்னையைப் பற்றியும், இந்திய நாட்டைப் பற்றியும், இந்திய இசையைப் பற்றியும் விசாரித்தார்.

ஆரம்பித்தேன். உலகிலேயே உயர்ந்த இசை கர்நாடக இசைதான். புரிந்துகொள்வது கஷ்டமாக இருப்பதால் அது சரியில்லை என்று சொல்ல முடியாது. இசையை Develop செய்துகொண்டே போய், இதற்கு மேல் Develop செய்ய ஒன்றுமில்லை என்ற ஒரு நிலை வருமானால், அதுவே "கர்நாடக இசை" என்றேன்.

‘எப்படிச் சொல்கிறீர்கள்'? என்றார்.

"Western Music'ல் குறைந்த இடைவெளி உள்ள இரண்டு சுரங்களைச் சொல்லுங்கள்.." என்றேன்.

"C to D Flat" என்றார்.

"அதற்கும் குறைந்த இடைவெளி உள்ள சுரங்களை எங்கள் முன்னோர்கள் கண்டுபிடித்து வெவ்வேறு ராகங்களில் வெவ்வேறு கோணங்களில் அமைத்து வைத்திருக்கிறார்கள்.." என்று எனக்குத் தெரிந்த அளவில் பாடியும் காட்டி விளக்கினேன்.

அவர் புரிந்துகொண்டு, "ஆம்! நீங்கள் சொல்வது உண்மைதான்" என்றார்.

"இதைக்கூட உங்கள் நாட்டில் Micro Tones என்று சொல்வார்கள்' என்றேன்.

"ஆம்! இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் விளங்காத விஷயம்.. Indian Rhythms தான்..! Oh My God..!" என்று வியந்தார்.

அவர் ஹிந்துஸ்தானி தபலாவையும், நம் ஊர் மிருதங்கத்தையும், தவிலையும் எங்கோ கேட்டிருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் அப்படி ஒரு பிரமிப்பு அவருக்கு.

"ஏன் நீங்கள் உங்களது Orchestration'ல் எவ்வளவோ தாளக் கோவைகளை interesting'ஆக புகுத்தியிருக்கிறீர்கள்..! அப்படிப்பட்ட உங்களுக்கு Indian Rhythms அப்படி ஒன்று கஷ்டமே இல்லை" என்றேன்.

"Oh I can't.." என்றார்.

உடன் எடுத்துச் சென்றிருந்த கேஸட்டைக் காட்டி, "இதை நான் உங்களுடன் கேட்க விரும்புகிறேன்" என்றேன். "Oh Yes..!" என்று கீழே உள்ள Listening Room'க்கு அழைத்துச் சென்றார்.

3 Pieces Record செய்திருந்தேன். Cassette On பண்ணியதுதான் தாமதம், கண்களை மூடிவிட்டார். மியூஸிக் முடிந்தபின்னர்தான் கண்களைத் திறந்தார்.

"Something Different and wonderful" என்று ஆரம்பித்தவர், நன்றாக, மனம் திறந்து பாராட்டினார். அதையெல்லாம் விவரமாக எழுதலாம் என்றாலோ, என் மனசாட்சி, ‘டேய்! முதலிலேயே இது சுயபுராணம் அல்ல என்று பெரிசா பீத்திக்கிட்டியே! இப்போ..?? ஹி.. ஹி.." என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டது.

Cassette முடிந்ததும், "இதை நான் வைத்துக்கொள்ளலாமா?" என்று கேட்டார்.

என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. "இதை நான் உங்களுக்காகவே எடுத்து வந்தேன்" என்று அவருக்குக் கொடுத்துவிட்டேன்.

அதில்...

அப்படி என்ன இருந்ததென்றால், நம் ஊர் Classical-ஐயும், அவர்கள் ஊர் Classical'ஐயும் blend செய்து ஒரு ராகமாலிகை Concerto for Orchestra பண்ணியிருந்தேன்... அவ்வளவுதான்.

மாயா மாளவ கெளளையில் ஒரு "Mad Mod Mood Fugue" எனக்குப் பிடித்தமான Classical Composer ஆன Bach கம்போஸ் செய்த Bouree in E Minor'க்கு ஒரு Counter Melody கம்போஸ் செய்திருந்தேன். இதைப் படித்தபின் இசை தெரிந்தவர்கள் இனிமேல் அந்த ஐடியாவை வைத்துக்கொண்டு, இதைப்போல் வேறு ‘பீஸ்' கம்போஸ் பண்ணலாம். ஆனால் ‘பால் மரியா' சொல்லிவிட்டார்.... "You are the First Man" என்று, இது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. (சீச்சீ..! என் மனசாட்சி வேறு இடையில்) ஹி.. ஹி..!

பால் மரியா எனக்காக ஒதுக்கிய ஐந்து நிமிடம் முடிந்து, ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. P.A. வேறு இடையிடையே நேரத்தைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தார். அதைப் பற்றியெல்லாம் பால் மரியா கவலைப்படவில்லை.

"புதிதாக எத்தனை ரெக்கார்ட் கட் பண்ணினீர்கள்?" என்றேன்.

"புதிய ரெக்கார்ட் கட் செய்தது, 3 வருடங்களுக்கு முன்" என்று பதில் வந்தது.

அவர்கள் ஒரு ரெக்கார்ட் வெளியிட்டால் எவ்வளவோ மில்லியன் டாலர்ஸ் வருமானமாக, ஆயுள் பூராவும் வந்து கொண்டிருக்கும்.

இங்கு..?

"உங்களுக்குப் பிடித்த Classical Composer யார்?" என்றேன்.

யோசிக்காமல், ‘Bach' என்றார்.

வேறு யாராக இருக்க முடியும்? எனக்குப் பிடித்தவரையே இவரும் சொல்கிறாரே என்று வியப்பதற்கு முன்..

"You See! இப்போது Bach கம்போஸ் செய்த Toccata in D Minor'ஐ நான் Orchestration பண்ணிக்கொண்டிருக்கிறேன். I can't change even a single note!" என்றார். அசந்தே போனேன்.

அதற்கு அர்த்தம்: வேறு எந்த கம்போஸர் ஆனாலும், அவர்கள் படைப்பில், எதை வேண்டுமானாலும் மாற்றி விடலாம். "Bach" கம்போஸிஷனில் மட்டும் ஒரு சுரத்தைக் கூட மாற்ற இயலாது என்று அவர் சொன்னது Bach'ன் மேல் எனக்கிருந்த மரியாதையையும், பக்தியையும் அதிகப்படுத்தியது.

Bach வாழ்ந்த ‘லீப்ஸிக்' (Leipzig) என்ற இடத்திற்கு நான் போகப் போவதாகச் சொன்னபோது மகிழ்ந்து போனார். வாழ்த்தினார். விடை பெறுவதற்கு முன், ‘இந்தியாவுக்கு வாருங்கள்' என்று அழைப்பு விடுத்தேன்.

"வருவதானால் உங்கள் Recording'ஐப் பார்ப்பதற்கு மட்டுமே வருவேன்" என்றவர் - எந்த மாதம் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டு, அதன் பேரில் ஜனவரி மாதத்தில் சென்னை வருவதாக ஒப்புக்கொண்டார். அதற்கு முன் ஹாங்காங்கில் டிசம்பர் 5, 6 தேதிகளில் அவரை நான் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்து 2 மணி நேரம் அவருடன் அளவளாவுவதற்கு வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவித்து அனைவரும் விடை பெற்றுக்கொண்டோம்.

வீட்டுக்கு வெளியே வந்ததும் நண்பர்களின் மகிழ்ச்சி அளவில்லாமல் கரைபுரண்டது. அதற்குக் கரையாக நானிருந்து தடுத்துக்கொண்டேன்.

அவர்கள் சொன்னது: "ராஜா சார்.. உங்களுக்குத் தெரியாது சார்! விஷயம் இல்லாத ஆளாக இருந்திருந்தால் இவர்கள் உங்களுடன் பேசியிருக்கவே மாட்டார்கள். மாலையையும் கேஸட்டையும் வாங்கிக்கொண்டு "We will see some other time" என்று வழியனுப்பி வைத்திருப்பார்கள் சார். உங்களிடம் ஏதோ விஷயம் இருக்கு" என்றார்கள்.

நானும் உணர்ந்து கொண்டேன். ஓகோ! நம்மிடமும் ஏதோ விஷயம் இருக்கிறது என்று.

- இசைஞானி இளையராஜா

(சங்கீதக் கனவுகள் புத்தகத்திலிருந்து)

நன்றி: இசைஞானி பக்தர்கள்

குறிப்பு: பால் மரியா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இசை மேதை. அவரது பல இசைத் தட்டுகள் மில்லியன் கணக்கில் விற்பனையாகி சாதனைப் படைத்தவை. 2006-ல் 81 வயதில் மறைந்தார்.

This is a piece of article from Maestro Ilaiyaraaja's Sangeetha Kanavugal, that was published in 1983 after his first foreign trip to Europe.

1983ல் முதல்முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்துத் திரும்பிய இசைஞானி இளையராஜா தன் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்ட "சங்கீதக் கனவுகள்" புத்தகத்திலிருந்து சில பகுதிகள்..

 

கோடம்பாக்கம் டூ அமேரிக்கா- அஞ்சலி

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்களில், இயக்குனர்களின் முதல் சாய்ஸாக இருந்தவர் நடிகை அஞ்சலி. இவர் நடிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்பொதும், அங்காடித் தெரு போன்ற படங்கள் நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரை அஞ்சலிக்குப் பெற்றுத் தந்தன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த அஞ்சலி இடையில் நடந்த குடும்பப் பிரச்சினைகளால், தமிழ்த் திரையுலகில் இருந்து காணாமல் போனார். மீண்டும் நீண்ட வருடங்கள் கழித்துத் தற்போது தமிழ் சினிமாவில் தனது 2வது இன்னிங்க்சைத் தொடங்கி உள்ளார்.

Anjali Continuously Flying America?

தமிழில் தற்போது ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர், விமலுடன் மாப்ள சிங்கம், பாபி சிம்ஹாவுடன் இறைவி போன்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்புகளுக்கு தொடர்ந்து மட்டம் போட்டு விட்டு அமேரிக்காவுக்கு பறந்து விடுகிறாராம் அஞ்சலி.

இதனால் அஞ்சலியை வைத்து படம் எடுத்து வரும் தமிழ் இயக்குனர்கள், வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்களாம்.

 

இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியாமணி

பெங்களூர்: இயக்குனர் ஆர்.பி. பட்னாயக் தெலுங்கு-கன்னடத்தில் எடுத்து வரும் படத்தில் பிரியாமணி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

நடிப்பில் அசத்தினாலும் பிரியாமணிக்கு கோலிவுட்டில் வாய்ப்பு இல்லை. அவரும் எனக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது, நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன் என்று அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை.

Priyamani dons khaki in bilingual

இந்நிலையில் அவர் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கன்னட படங்களில் பிரியாமணி கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவர் தற்போது இசையமைப்பாளரும், இயக்குனருமான ஆர்.பி. பட்னாயக்கின் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்காத இந்த படம் தெலுங்கு-கன்னட மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

முதன்முதலாக பிரியாமணி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது குறித்து பட்னாயக் கூறுகையில்,

படத்தில் பிரியா சக்திவாய்ந்த சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அவரை கவர்ச்சியாகவே பார்த்தவர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். படத்தில் நிறைய த்ரில் இருக்கும். கர்தாவியம் படத்தில் வரும் விஜயசாந்தியை மக்களுக்கு நினைவூட்டுவார் பிரியாமணி என்றார்.

 

புலி படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 2 ம் தேதியா?

சென்னை: இளையதளபதி விஜயின் புலி படம் அவரது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் முதல்முறையாக ஒரு வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட சரித்திரப் படத்தில் நடிக்கிறார், இது விஜய் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுவரை இல்லாத அளவுக்கு புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையதளங்களில் டவுன்லோட் செய்து உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Puli Audio Launch – August 2  Confirmed?

புலி படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் மாதம் என்று கூறிவந்த நிலையில் தற்போது புலி படத்தின் இசை வெளியீடு எப்போது என்று தகவல்கள் கசிந்துள்ளன, அதாவது ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி புலி படத்தின் ஆடியோவை வெளியிட இருக்கிறார்களாம் படக்குழுவினர்.

விரைவில் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவில் இருந்து வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புலி டீசரை இதுவரை கண்டுகளித்துள்ளவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சினிமாவில் தமிழ் மொழியை தெளிவாகப் பேசுங்கள்! - பாரதிராஜா

தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. ஆனால் சினிமாவில் தமிழ் மொழியை தெளிவாகப் பேச முயற்சிப்பதில்லை என்றார் இயக்குநர் பாரதிராஜா.

பாபி சிம்ஹா நடித்துள்ள உறுமீன் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சார்லி, பாபி சிம்ஹா, கலையரசன் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.

Bharathiraja's request to young filmmakers

இயக்குநர் பாரதிராஜா ஆடியோ மற்றும் ட்ரைலரை வெளியிட்டுப் பேசுகையில், "நான் மூன்று தலைமுறை கலைஞர்களை பார்த்து விட்டேன். பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இப்போது வரைக்கும் உள்ள தலைமுறை வரைக்கும் பார்ப்பது என்பதும் மகிழ்ச்சிதான்.

இன்றைக்கு தமிழ் சினிமா அசாதாரண வளர்ச்சி கண்டுள்ளது. அந்த நாட்களில் 10 தயாரிப்பாளர்கள் இருப்பார்கள். இப்போது 100 தயாரிப்பாளர்கள், 200 இயக்குநர்கள், ஆண்டுக்கு 300 படங்கள் என்று தமிழ் சினிமா வளர்ச்சி புதிய பரிமாணம் தொட்டிருக்கிறது. இது தேவையானதும்கூட.

சில படங்களை பார்க்கும்போது அதிலுள்ள வசன உச்சரிப்பு படத்தை பார்க்கும் ஆசையை தூண்டுவதில்லை. இன்னும் பெரிய உயரத்துக்கு தமிழ் சினிமா போக வேண்டும். அதே நேரத்தில் தமிழ் படம் தனித்துத் தெரிய வேண்டும். இந்த மண்ணின், மொழியின் அடையாளங்கள் அதில் இருக்க வேண்டும்.

இது தமிழ் கலாச்சாரப் படம் என்பதை அடையாளப்படுத்த வேண்டும். இந்திய சினிமாவில் தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாதான் உயர்ந்து நிற்கிறது. அதே நேரம் படத்தில் தமிழ் மொழியை தெளிவாக உச்சரிக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம்," என்றார்.

 

அரசியலுக்கு வந்தால் நடிப்பை தொடரக் கூடாது! - நடிகர் விவேக்

சென்னை: எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. அதில் இல்லாமலேயே கூட மக்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் ஒருவேளை வந்தால், நடிப்பதை விட்டுவிடுவேன், என்றார் நடிகர் விவேக்.

லாரன்ஸ் தயாரிப்பில், சந்திரமோகன் இயக்கத்தில் விவேக் நாயகனாக நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகளைப் பார்த்த திரையுலகினர் விவேக்கைப் பாராட்டியுள்ளனர்.

Vivek talks about his political entry

படம் குறித்து செய்தியாளர்களிடம் விவேக் பேசுகையில், "ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பதில்லை. எனக்கு ஏற்ற கதைகள் வந்தால் நாயகனாக நடிப்பேன். இல்லாவிட்டால் காமெடி நடிகராகத் தொடர்வேன். இப்போது காஷ்மோரா என்ற படத்தில் காமெடியனாக மட்டுமல்ல, நல்ல குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறேன்.

இதுவரை 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன். ஒரு கோடி என்ற இலக்கை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன். இந்தப் பணியில் நான் இறங்கிய பிறகு, பல விஷயங்களை மறந்துவிட்டேன். அத்தனை சந்தோஷமான பணி இது. ஒரு முறை டாக்டர் அப்துல் கலாம், "என்ன விவேக்... உங்க தொழிலைக் கூட மறந்துவிட்டு, மரம் நடும் பணியில் தீவிரமா இருக்கீங்களாமே?" என்று கேட்டார்.

அரசியலுக்கு வரும் யோசனை இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு அனைத்து கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு ஒரு உதவி வேண்டும் என்றால் அவர்கள் மூலம் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், நடிப்பதைத் தொடரமாட்டேன். இரண்டு வண்டியில் சவாரி செய்யக் கூடாது என்பது என் கருத்து," என்றார்.