ரஜினியைப் பார்க்கணும்...! - அரவிந்த் சாமி

ரஜினியைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன. அவரை மீண்டும் பார்க்கணும், என்று கூறியுள்ளார் தளபதி படத்தில் அவருடன் நடித்த அரவிந்த் சாமி.

மணிரத்னம் இயக்கி ரஜினி - மம்முட்டி நடித்த தளபதி படம் இன்றும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களுள் ஒன்று. அந்தப் படத்தில் கலெக்டராக வரும் அரவிந்த் சாமியும் மிக முக்கியமான பாத்திரம்.

முன்னணி நாயகனாக வரவேண்டிய அரவிந்த் சாமி, ஏனோ இடையில் சினிமாவிலிருந்து விலகிக் கொண்டார். விபத்தில் சிக்கி பெரும் பாதிப்புக்குள்ளானார். அதே நேரம் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டார்.

Arvind Swamy wishes to meet Rajini

இந்த பாதிப்புகளிலிருந்து மீண்ட அரவிந்த் சாமி, இப்போது மீண்டும் பிஸியான நடிகராகிவிட்டார்.

விகடனுக்கு பேட்டியளித்துள்ள அவரிடம், "தளபதி' படத்துக்குப் பிறகு ரஜினியைச் சந்திச்சுப் பேசினீங்களா?'' என்று கேட்டிருந்தனர்.

அதற்கு அவர் அளித்த பதில்: 'தளபதி' படம் பண்ணும்போது எனக்கு 20 வயசு. யார்கிட்டயும் எந்தத் தயக்கமும் கிடையாது. 'ஹலோ சார், எப்படி இருக்கீங்க?'னு போய் பேசிக்கிட்டே இருப்பேன்.

ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சீக்கிரம் வந்துட்டேன். ரொம்ப டயர்டா இருந்துச்சுன்னு ஒரு ரூம்ல போய் படுத்துத் தூங்கிட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சு எழுந்து பார்த்தா, பக்கத்துல உள்ள ஒரு சோபாவுல கை கால்களைக் குறுக்கிக்கிட்டு ரஜினி சார் படுத்திருந்தார்.

மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி சார்கிட்ட, 'ஏன் சார் அங்கே படுத்திருக்கார்? நல்லா வசதியா ஏதாவது பெட்ல படுக்கவேண்டியது தானே?'னு கேட்டேன். 'இது அவர் ரூம். நீங்க வந்து படுத்தீட்டீங்க'னு சொன்னார்.

'எழுப்பி இருக்கலாமே!' கேட்டேன். ''டிஸ்டர்ப் பண்ண வேணாம், தூங்கட்டும்'னு சொல்லிட்டார்'னு சொன்னார்.

அதேபோல, மைசூர்ல ஷூட்டிங். ஒரு இடத்துல யோசிக்கிற மாதிரி நின்னு பார்த்துக்கிட்டே இருந்தார். சுத்தியும் ஆயிரக்கணக்கில் கூட்டம். 'என்ன சார்... என்ன யோசனை'ங்கிற மாதிரி போய் நின்னேன். தன் சின்ன வயசுல பசியில ரெண்டு மூணு நாட்கள் அந்த இடத்துல படுத்துக்கிடந்ததைச் சொன்னார். இப்படி நிறைய அனுபவங்கள்... ரொம்ப வருஷம் ஆச்சு அவரைப் பார்த்து. மறுபடியும் பார்க்கணும்.''

 

'நான் ஒண்ணும் அவ்ளோ பெரிய நடிகன் கிடையாது!' - ரஞ்சித்தை மிரள வைத்த ரஜினி

ரஜினி சார் எளிமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரில் அவரது எளிமை கண்டு மிரண்டு போனேன், என்றார் இயக்குநர் பா ரஞ்சித்.

ரஜினி நடிக்கும் கபாலி படத்தை இயக்கும் பா ரஞ்சித் முதல் முறையாக விகடனுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் ரஜினியிடம் தான் கதை சொல்லப் போனபோது, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்துள்ளார். அதில் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்...

Rajini stunned director Ranjith

ரஜினியிடம் ரஞ்சித் கதை சொல்லி முடித்ததும், ரஜினி இப்படிச் சொன்னாராம்:

'இந்தப் படத்துல யார் யார் உங்க டீம்ல ஒர்க் பண்ணணும்னு, ஒரு கிரியேட்டரா நீங்கதான் முடிவு பண்ணணும். நான் தலையிட மாட்டேன். எனக்கு ஏதாவது ஐடியா தோணுச்சுன்னா சொல்றேன். அதை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உங்க விருப்பம்.

படத்துல நடிக்கப்போறவங்க பிரபலமா இருக்கணும்னு அவசியம் கிடையாது. யாரை வேணும்னாலும் நடிக்க வைங்க. நீங்க நினைக்கிற மாதிரி, நான் ஒண்ணும் அவ்ளோ பெரிய நடிகன் கிடையாது. ஏதோ மக்கள் ஆசீர்வாதத்துல நடிகனா இருக்கேன்'னு அவர் சொல்லச் சொல்ல, நான் மிரண்டுபோனேன்.

ரஜினி சார் எளிமையானவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வளவு எளிமையானவரா என ஆச்சர்யமாக இருந்தது.

'கபாலி' எந்தப் படத்தின் ரீமேக்கும் கிடையாது. நான் படித்துச் சேகரித்த, சிந்தித்து உருவாக்கிய படம்.

ரஜினி சார் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை நிச்சயமாகக் காப்பாற்றுவேன்!''

 

ஒரு இயக்குநரின் டைரி: இளையராஜா இசையில் படமாகும் சில்க் ஸ்மிதாவின் காதல் வாழ்க்கை!

கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை போன்ற படங்களை எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய வேலு பிரபாகரன் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.

முந்தைய படங்களில் கடவுள் இல்லை என்பதையும், அரசியல் எப்படி ஏழை மக்களை வஞ்சிக்கிறது என்பதையும் சொன்ன இவர் அடுத்து எடுக்க இருக்கும் படத்தில் தன்னுடைய வாழ்க்கையையே படமாக்குகிறார்.

Ilaiyaraaja to compose Velu Prabhakaran's next

இந்த படத்திற்கு 'ஒரு இயக்குனரின் டைரி' என்று தலைப்பு வைத்திருக்கிறார். இந்த கதையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தான் நேசித்த நடிகைகளைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சில்க் ஸ்மிதாவிற்கும் தனக்கும் உள்ள காதல் வாழ்க்கையை காட்சிகளாக்கியிருக்கிறார்.

பரபரப்பை ஏற்படுத்தப்போகும் இந்த கதைக்கு இளையராஜா இசையமைக்கிறார். நேற்று இளையராஜாவை பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்த வேலு பிரபாகரன், படம் குறித்து அவருடன் ஆலோசனை செய்தார்.

 

தாயின் பெயரில் கல்வி அறக்கட்டளை தொடங்கினார் விஷால்.. 16 மாணவிகளுக்கு உதவி!

தனது தாயின் பெயரால் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் விஷால், 16 ஏழை மாணவிகள் உயர்கல்வி பயில உதவி செய்துள்ளார்.

நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாக கல்வி உதவி செய்வதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிறைய உதவிகள் செய்கிறார். அரசுப் பள்ளிகளை அடிக்கடி பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் தேவைப்பட்டால் செய்து தருகிறார்.

இப்போது இந்த உதவிகளைச் செய்ய ‘தேவி சமூகம் மற்றும் கல்வி அறக்கட்டளை' என்று தனது தாயார் பெயரில் அறக்கட்டளை தொடங்கியிருக்கிறார்.

Vishal starts educational trust in the name of his mother

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உதவிகள் செய்வதை முறைப்படுத்திடவே இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

மறைந்த மேதை அப்துல்கலாம் கண்ட கனவின்படி, பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதே இதன் முக்கிய குறிக்கோள். அதன்படி கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மாணவிகள் என 16 பேருக்கு ஏற்கனவே கல்வி உதவி செய்யப்பட்டுள்ளது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது விஜயின் "புலி" ட்ரெய்லர்... பாடல்கள், சண்டைக்காட்சிகளில் பிரம்மாண்டம்

சென்னை: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புலி படத்தின் டிரைலர் காட்சிகள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியானது.

விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Puli Trailor

ஏற்கனவே வெளியான புலி படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பல புதிய வரலாறுகளையும் படைத்தது.

(புலி டிரைலர்)

அடுத்ததாக புலி படத்தின் டிரைலரை 20 ம் தேதியில் வெளியிடுகிறோம் என்று நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளில், நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

விஜயின் அறிவிப்பை புலி படத்தின் பாடல்களை வாங்கியிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்து ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது புலி படத்தின் டிரைலர் நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியிடப்பட்டது. பாடல்கள், மற்றும் விஜயின் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளில் பிரம்மாண்டம் ஜொலிக்கிறது.

காட்சிகளின் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் விஜய் ரசிகர்களை கிறங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

ரஜினியின் கபாலியில் கார்த்திக் சுப்பராஜின் தந்தை.. மகனுக்கு கிடைக்காத வாய்ப்பு அப்பாவுக்கு கிடைத்தது

கபாலி படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தந்தை கஜராஜுக்கு.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படமான ‘கபாலி'யின் தலைப்பு வெளியானதிலிருந்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைத் தளங்கள் இந்தத் தலைப்பை வைத்து பெரும் விவாதமே நடத்தி வருகின்றன.

இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகி விட்டது.

Karthik Subbaraj father gets a chance to play with Rajini

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் அப்பா கஜராஜும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘பீட்சா', ‘ஜிகர்தண்டா' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ், தன்னுடைய அப்பா கஜராஜை ஜிகர்தண்டா படத்தில் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் ‘முண்டாசுப்பட்டி' படத்தில் நந்திதாவின் அப்பாவாக நடித்தார்.

தற்போது, ரஜினி நடிக்கும் ‘கபாலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார்.

‘கபாலி' படத்தில் ரஜினியுடன் நடிப்பது குறித்து கஜராஜ் கூறும்போது, "நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவருடைய நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.

கபாலி படம் முடிவாவதற்கு முன்பு கார்த்திக் சுப்பராஜிடமும் கதை கேட்டார் ரஜினி. ஆனால் அந்தக் கதையில் ரஜினி நடிக்கவில்லை. ஆனால் கார்த்திக் சுப்பராஜின் தந்தைக்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

 

விஷாலின் பாண்டவர் அணிக்கு விவேக், மனோபாலா ஆதரவு!

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷாலின் பாண்டவர் அணிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் நடிகர் விவேக்.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடக்கிறது. அந்தத் தேர்தலில் விஷால் தலமையிலான அணி, சரத்குமார் அணியை எதிர்த்துப் போட்டியிடுகிறது.

தனது தேர்தல் அணிக்கு பாண்டவர் அணி என்று பெயர் சூட்டியுள்ளார் விஷால். குருசேத்திரப் போராக நினைத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் போராடுவதாக அறிவித்து வேலைப் பார்த்து வருகின்றனர்.

Vivek, Manobala supports Vishal team

சமீபத்தில் ரஜினி, கமல் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவு கேட்டது விஷால் அணி.

அடுத்து விஜய் போன்ற நடிகர்களையும் சந்தித்தனர். நேற்று நடிகர் விவேக், இயக்குநர் - நடிகர் மனோபாலா ஆகியோரைச் சந்தித்தனர்.

இருவருமே விஷால் அணிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தனர்.

 

ரஜினி படத்தில் நடிப்பதன் மூலம் கனவு நிறைவேறியது! - தன்ஷிகா

ரஜினி படத்தில் நடிப்பதன் மூலம் என் கனவு நிறைவேறிவிட்டது என்று நடிகை தன்ஷிகா கூறினார்.

லிங்கா' படத்தை அடுத்து ரஜினிகாந்த், ‘கலைப்புலி' எஸ்.தாணு தயாரிக்க, ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘கபாலி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே நாயகியாக நடிக்கிறார். நடிகை தன்ஷிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Dhanshika exciting to act with Rajini

தன்ஷிகா உண்மையிலேயே ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினி ரசிகர்களின் விழாக்களுக்கு தவறாமல் செல்பவரும் கூட. சிறு படங்களில் நாயகியாகவும், பெரிய படங்களில் சின்னச் சின்ன வேடங்களிலும் நடித்து வந்த அவருக்குகு ரஜினி படத்தில் நடிப்பது பெரிய முன்னேற்றம்.

இதுகுறித்து தன்ஷிகா கூறுகையில், "ரஜினிகாந்த் மிகப்பெரிய நடிகர். அவருடன் நடிப்பதற்கு எல்லா நடிகைகளுமே ஆசைப்படுவார்கள். எனக்கு அந்த அதிர்ஷ்டம் எதிர்பாராதவிதமாக கிடைத்து இருக்கிறது.

நான், சின்ன வயது முதலே ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. அவர் நடிக்கும் எல்லா படங்களையும் பார்த்து விடுவேன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என் சினிமா வாழ்க்கையில் இதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. கடவுளுக்குத்தான் நன்றி.

‘கபாலி' படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பே என்னிடம் கேட்டார்கள். படத்தில், ரஜினிகாந்தின் மகளாக நடிக்கிறேனா? என்று எனக்கு தெரியாது. என்ன வேடம் என்று என்னிடம் சொல்லவில்லை," என்றார்.

 

இரு "டார்லிங் பேய்"களின் டரியல் மோதல்...'மாயா' நயன்தாரா Vs 'நாயகி' த்ரிஷா!

நயன்தாரா பேயாக நடிக்கும் மாயா படத்துக்குப் போட்டியாக நாயகியில் நடிக்கவில்லை என்று த்ரிஷா கூறினார்.

த்ரிஷா பேய் வேடத்தில் நடிக்கும் புதிய படம் நாயகி இன்று தொடங்கியது.

இந்தப் படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த த்ரிஷாவிடம், நயன்தாரா தற்போது ‘மாயா' என்ற பேய் படத்தில் நடிக்கிறார். அவருக்கு போட்டியாக நீங்களும் இந்த பேய் படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டனர்.

No competition with Nayanthara, says Trisha

அதற்கு பதிலளித்த த்ரிஷா, "நயன்தாராவுக்குப் போட்டியாக நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. நயன்தாரா நடித்திருக்கும் ‘மாயா' படம் வேறொரு கதையம்சத்துடன் உருவாகியுள்ளது.

‘நாயகி' படத்தின் கதை வேறு. பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடுதான் இந்த படத்தில் நடித்தேன். மற்றபடி, எனக்கும் நயன்தாராவுக்கும் போட்டி கிடையாது," என்றார்.

 

செய்திவாசிப்பாளர் சரண்யாவிற்கு ஆக.27ல் கல்யாணம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்திவாசிப்பளரும் நடிகையுமான சரண்யாவிற்கு வரும் 27ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரண்யாவிற்கு கணவராக வரப்போகும் மணமகனின் பெயர் அமுதன். இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த அமுதனின் குடும்பத்தினர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர்.

TV news anchor Sharanya gets ready to enter into wedlock

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிற்கு வந்த போது அமுதனை சந்தித்துள்ளார் சரண்யா. நட்பு காதலாகி இப்போது கல்யாணம் வரை வந்துள்ளது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்னர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. வரும் 27ம்தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்குப் பின்னர் சரண்யா லண்டனில் செட்டில் ஆகப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TV news anchor Sharanya gets ready to enter into wedlock

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் சரண்யா. சரண்யா வாசிக்கும் செய்தியை கேட்கவே தனி ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.