விஸ்வரூபத்துக்கு தடை கோரி வழக்கு!

Saimira Sues Case Against Viswaroopam Release

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரீஜெண்ட் சாய்மிரா எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் ராஜேந்திர ஜெயின் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

தனது மனுவில், "மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பது தொடர்பாக சந்திரஹாசன், கமல்ஹாசன் ஆகியோரை பங்குதாரர்களாக கொண்ட ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கும், எங்கள் நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2.4.2008 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் பின்னர் படத் தயாரிப்புப் பணிகளுக்காக பெரும் தொகையை எங்கள் நிறுவனம் அளித்தது. ஒப்பந்தப்படி 18 மாதங்களுக்குள் படத் தயாரிப்புப் பணிகள் முடிவடைய வேண்டும்.

எனினும் திட்டமிட்டபடி படத்தின் தயாரிப்புப் பணிகளை ராஜ்கமல் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இதனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் எங்கள் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஏற்கெனவே மர்மயோகி படத்தை தயாரிப்பதற்காக எங்கள் நிறுவனத்திடம் வாங்கிய தொகையை ராஜ்கமல் நிறுவனம் திருப்பித் தராத வரை, விஸ்வரூபம் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்," என்று கோரியுள்ளார் ராஜேந்திர ஜெயின்.

இந்த மனு நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

 

கவர்ச்சியில் கலக்கிய மோனிகா... தேடி வரும் வாய்ப்புகள்

Monica Thrilled Be Back Tamil Films   

தமிழில் சிலந்தி படம் மூலம் கவர்ச்சியில் கலக்கிய மோனிகா கன்னட திரை உலகில் ‘கல்லா மல்லா சுள்ளா' படத்திலும் கவர்ச்சியாக நடித்தார். இதனால் அவருக்கு தமிழ், கன்னடம், மலையாளத்திலும் கவர்ச்சி வாய்ப்புகள் குவிகிறதாம்.

தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மோனிகா, குமரியான உடன் அழகி படத்தில் நடித்தார். பின்னர் குடும்பப் பாங்கான வேடங்களில் தலை காட்டிய அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சிலந்தி படத்தில் கவர்ச்சி காட்டினார். இதனால் கன்னட வாய்ப்பு கிடைத்தது.

கன்னடத்தில் வெளியான படம் கல்லா மல்லா சுள்ளா. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த் என ஏகப்பட்ட பேர் நடித்த படம். படத்தில் கவர்ச்சிக்கும், காமெடிக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். படத்தில் நம்ம ஊர் மோனிகாவும் நடித்திருந்தார். இதில் கவர்ச்சியாகவே நடித்திருந்தார். இதற்காக அவருக்கு அவர் கேட்ட கூடுதல் சம்பளத்தையும் கொடுத்தார்களாம். இப்போது கை மேல் பலனாக கன்னடத்தில் புதிய பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்துள்ளதாம்.

அதேபோல் மலையாளப் பட உலகிலும் வாய்ப்புகள் கதவை தட்டி வருகிறதாம். இதேபோல எங்களது படத்திலும் கவர்ச்சியாக நடியுங்கள் என்று அன்புக் கோரிக்கையும் விடுக்கிறார்களாம்.

 

சொன்னா புரிஞ்சிக்கங்க... டிடிஎச்-ஆல் தியேட்டர்களுக்கு பாதிப்பு வராது - கமல் விளக்கம்

Theaters Will Not Affect Viswaroopam

சென்னை: விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுவதால் எந்த பாதிப்பும் வராது என்பதை தியேட்டர்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடும் முடிவை கமல் கைவிட வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கோரி வருகின்றனர்.

ஆனால் அவர்கள் கோரிக்கையை கமல் ஏற்கவில்லை. டி.டி.எச்.சில் `விஸ்வரூபம்' படத்தை ஒளிபரப்புவதில் உறுதியாக இருக்கிறார். இது தொடர்பான புரமோஷனல் வேலைகளையும் அவர் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்.

இதையடுத்து தியேட்டர்களில் `விஸ்வரூபம்' படத்தை திரையிடுவது இல்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை, மதுரை, கோவையில் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆதரவு திரட்டினர். அடுத்து திருச்சியில் இக்கூட்டம் நடக்க உள்ளது.

இதற்கிடையில் டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய கமல் டி.டி.எச்.சில் 'விஸ்வரூபம்' படம் ஒளிபரப்பப்படுவது உறுதி. டி.டி.எச்.களில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிடுவதால் தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ரூ. 95 கோடி பணத்தை போட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். அந்த பணத்தை திரும்ப எடுப்பதற்கு டி.டி.எச்.சில் படத்தை வெளியிடுவதுதான் எனக்குத் தெரிந்த ஒரே வழி. இந்த உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்," என்றார்.

 

சமையல் அறை ரொமான்ஸ் ரகசியங்கள்…. நீயா நானா முன்னோட்டம்

Neeya Naana Discuss About Kitchen Romance

சமையல் அறை என்பது வெறும் உப்பு, புளி, மிளகாய் என்பது மட்டுமல்ல அது உயிரோட்டமுள்ள இடம். வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ அன்னையோ, மனைவியோ, மகளோ அன்பாக சமைக்கிறார்கள். பாத்திரங்கள் அவர்களுக்கு நண்பர்கள். அஞ்சரைப் பெட்டியும் கூட அவர்களின் ஸ்பரிசத்தை புரிந்து அதற்கேற்ப பொருட்களை வழங்கும்.

இந்த சமையலறை பெண்களுக்கான இடம் மட்டுமல்ல ஆண்களுக்கும் அங்கு இடமுண்டு. இன்றைக்கு பெரும்பாலான ஆண்கள் சுவையாய், அழகாய் சமைக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனைவி வந்த பின்னர் எத்தனை ஆண்கள் பிரியமாய் சமைத்து பறிமாறுகிறார்கள் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். மனைவியோடு சேர்ந்து ரொமான்ஸ் உணர்வுகளுடன் சமைக்கும் ஆண்கள்தான் இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சியில் பேச இருக்கின்றனர்.

எப்பவுமோ நீயா நானா முடிஞ்ச உடனேதான் அதைப்பற்றி எழுதுவது வழக்கம். ஆனால் இந்த வாரம் நிகழ்ச்சியின் முன்னோட்டமே சுவாரஸ்யமாக இருந்தது. அதான் நாமும் முன்னோட்டம் எழுதுவோமே என்று தொடங்கிவிட்டோம்.

சாம்பார்ல உப்பு போடுவதற்காக அதை எடுக்கும் போது அப்படியே என் கை மனைவியின் கண்ணத்தை தடவும் என்கிறார் ஒருவர். சமையல் அறையில் கன்னத்தோடு கன்னம் உரசி ரொமான்ஸ் செய்துகொண்டே சமைப்போம் என்கிறார் மற்றொருவர். அவர்கள் சொல்ல சொல்ல ஆஹா.... என்று சொல்லிவிட்டு சிரித்தார் கோபிநாத். ஒருவேளை அவர்வீட்டில் நடந் சமையலறை ரொமான்ஸ் நினைவிற்கு வந்துவிட்டதோ என்னவோ?

ஆண்கள் கூட வெட்கப்படுவார்களா என்ன இந்த நிகழ்ச்சியில் சிலர் விவரிக்கும் ரொமான்ஸ் நினைவுகளைக் கேட்டு பெரும்பாலான ஆண்கள் வெட்கப்பட்டு சிரிக்கின்றனர்.

சமையல் செய்யும் ஆண்களை சமையல் பற்றி தெரியாத ஆண்கள் கிண்டல் அடிப்பது வாடிக்கைதான். அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேச இருக்கின்றனர்.

இந்த வார ஞாயிறு இரவு ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மொத்தத்தில் களை கட்டப்போகிறது என்றே கூறலாம்.

 

மகளை களமிறக்கும் நடிகை ரூபினி… தமிழ்படத்தில் அறிமுகம்

Actress Rubini S Daughter Debut Film

மும்பையைச் சேர்ந்த முன்னாள் கதாநாயகி ரூபினியின் மகள் நடிக்க வருகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோமல் என்ற இயற்பெயர் கொண்ட ரூபினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனிதன் படம் மூலம் நடிக்க வந்தார். கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த அவர், முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் புதுமுகங்களின் பெருக்கத்தால் ஓய்வு பெற்றுப் போய் விட்டார்.

இப்போது அவரது மகள் நடிக்கும் வயதை எட்டி விட்டாராம். அம்மாவை விட படு அழகாக இருக்கிறாராம் ரூபினியின் மகள். இதனால் தனது தாயார் பாணியில் அவரும் நடிக்க வருகிறாராம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே ராதா தனது இரு மகள்களையும் நடிக்க வைத்து விட்டார். கமல், அர்ஜூன், சரத்குமார் ஆகியோர் தங்கள் மகள்களை நடிக்க வைத்துள்ளனர். இப்போது ரூபினி தனது மகளை களம் இறக்குகிறார். வாரிசு நடிகைகள் வரிசையில் இன்னொரு புதுமுகம். ஹீரோக்களுக்கு யோகம்தான்.

 

அவங்க வேலையை இவங்க செஞ்சா?... மக்கள் டிவியின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

New Year Special Program On Makkal Tv

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் களை கட்டும். மக்கள் தொலைக்காட்சியில் தமிழகம் தொடங்கி உலகம் முழுவமும் 2012ல் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை ஒளிபரப்புகின்றனர். மார்கழியின் சிறப்பு, பேசித்தீர்க்கலாம் வாங்க, புதியமுகம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.

2012 கடந்து வந்த பாதை

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். 2012ம் ஆண்டு தமிழகம், இந்தியா, உலகம் என பிரித்து எதிர்கொண்ட சாதனைகள், சோதனைகளை பட்டியலிட்டு கடந்த வந்த பாதை நிகழ்ச்சியை டிசம்பர் 31ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்புகின்றனர்.

மக்கள் 2012

மக்கள் தொலைக்காட்சியில் 2012ம் ஆண்டு புதிதாக மலர்ந்த நிகழ்ச்சிகளை பற்றி ஓர் பார்வை. மக்கள் தொலைக்காட்சி பற்றி மக்கள் கருத்தினை கேட்கின்றனர். இது டிசம்பர் 31 இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஊர் சுற்றலாம் வாங்க

சென்னை நகரில் டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டு நிகழ்வுகள் களை கட்டும். அந்த உற்சாக கொண்டாட்டத்தினை இரவு 10.30க்கு ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறது.

புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

புத்தாண்டு தினத்தில் காலை 6.30 மணிக்கு பாவை இசைவிழா உடன் சிறப்பு நிகழ்ச்சி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து புத்தாண்டு சிந்தனைகள், பிரபலங்களின் வாழ்த்துக்கள் ஒளிபரப்பாகிறது. உலகத் திரைப்படங்கள் குறித்து இந்திய திரைக்கலைஞர்களின் கருத்து ‘அயல்' என்ற பெயரில் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பேசும் பொம்மைகள்

புதிய சுவை நிகழ்ச்சியில் புத்தாண்டு கேக் தயாரிப்பது பற்றி 3 மணிக்கு கற்றுத் தருகின்றனர். தமிழகத்தின் மறந்து போன கலையான தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி ‘பேசும் பொம்மைகள்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக 3.30 அன்று மக்கள் தொலைக்காட்சியில் மக்கள் காண ஒளிபரப்பாகிறது. இதைத்தொடர்ந்து மேற்கத்திய இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

மாதம் போற்றும் மார்கழி

புத்தாண்டு தினத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி செவிக்கு விருந்தளிக்க வருகின்றனர் இசைக் கலைஞர் சிவா மற்றும் அவரது மாணவியர். இது மாலை 06.05க்கு ஒளிபரப்பாகிறது.

பேசித் தீர்க்கலாம் வாங்க

புத்தாண்டு தினத்தில் பட்டிமன்றம், விவாதநிகழ்ச்சிகள் இடம் பெறுவது வழக்கம் மக்கள் தொலைக்காட்சியில்' பேசித்தீர்க்கலாம் வாங்க' நிகழ்ச்சியில் காரசாரமாக கலந்துரையாடுகின்றனர் தமிழ் அறிஞர்கள். இந்த நிகழ்ச்சி இரவு 07.02க்கு ஒளிபரப்பாகிறது.

புதிய முகம்

மக்கள் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்களும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் இடம் மாறி தங்கள் பணியை செய்கின்றனர். அவங்க வேலையை இவங்க பார்த்த எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை ததும்ப சொல்கின்றனர்.

 

இது பார்த்திபனின் புத்தாண்டு வாழ்த்து!

Parthiban S New Year Wish

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!

பல காலம் நான் ஏங்கியதுண்டு,
ஒரு column/5cm அளவாவது என் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வந்து விடாதா? என்று!

உலகே மாயமென்கையில்,
உறவுகள் மட்டுமென்ன சாசுவதமா?

அதி வேகமாக சுழழும் திரையுலக பூமி பந்தில் நானும் ஒரு பூஞ்சிறகாய் ஒட்டிக்கொண்டு பயணித்த இத்துனை வருடங்களில் எனக்கு நல் துணையாய் விளங்குவது என் நன்னம்பிக்கை மற்றும் மற்றும்,
நீங்கள் மட்டும்தான்!

இருப்பதை சுவாசம் உணர்த்துவதைப்போல, என் இருப்பை உலகிற்கு உணர்த்தும் சுவாச நேசமாய் நீங்கள்!

'கவர்'ந்திழுத்ததில்லை பெரிதாய் நான் இதுவரை!
கண்ணியமாய் பழகுவேன், ரேகை இடம் பெயர கை குலுக்குவேன், இறுதிவரை நன்றியோடு உயிர் நழுவுவேன்!

வேறென்ன செய்ய?என் புகழ்வின்
வேரென விளங்கும் உங்களை வாழ்த்துவதை மீறி?
புதூ -13, வரும் வருடம் மற்றும் வாழ்நாளெல்லாம்,
ராட்சத ப்ரியங்களுடன்,

-இராதகிருஷ்ணன் பார்த்திபன்
-2013

 

நீங்க என்னோட நண்பர்களாக இருக்கக்கூடாதா?... கமலின் ஆதங்கம்

Super Singers Mesmerise Kamal Hassan

நான் சிறுவனாக இருந்தபோது நீங்களெல்லாம் என்னோட நண்பர்களாக இருந்திருந்தால் அந்த பொறாமையில் இன்னமும் அதிக திறமைசாலியாக வளர்ந்திருப்பேன் என்று உலகநாயகன் கமல்ஹாசன் ஆதங்கப்பட்டார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டி 20 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த கமல், சிறுவர் சிறுமியர்களின் பாடலை ரசித்துக் கேட்டார். இந்த நிகழ்ச்சியில் கமல் நடித்த திரைப்படங்களில் இருந்துதான் பாடல்கள் பாடப்பட்டன. ஒவ்வொரு பாடலும் பாடி முடிக்கப்பட்ட உடன் அந்த பாடல் எடுக்கப்பட்ட சூழல், எந்த அளவிற்கு இந்த பாடல் தனக்கு பெயர் பெற்றுத் தந்தது என்றும் பகிர்ந்து கொண்டார் கமல்.

இன்னும் திறமைசாலியாக வளர்ந்திருப்பேன்

ப்ளூ அணியினர் கமலின் எவர்கிரீன் ஹிட் பாடலான "இளமை இதோ.... இதோ..." பாடலை பாடினர். பாடலை பாடப் பாட கமல் முகத்தில் பெருமிதம் பொங்கியது. அவர்களைப் பாராட்டிய கமல், இவ்ளோ சின்ன வயதில் நிறைய திறமைகள் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நீங்களெல்லாம் எனக்கு நண்பர்களாக கிடைத்திருந்தால் உங்களைப் பார்த்து பொறாமையில் நான் இன்னும் நிறைய திறமைசாலியாக வளர்ந்திருப்பேன் என்றார்.

ராஜாதான் எழுதத் தூண்டினார்...

இதைத் தொடர்ந்து கமலின் படத்தில் இருந்த தீம் மியூசிக் மட்டும் பாடினர். இந்த தீம் இசை வெற்றிக்கு ராஜாதான் காரணம் என்றார் கமல். அதுமட்டுமல்லாது விருமாண்டி படத்தில் இயக்குநராக இருந்த என்னை பாடல் எழுத வைத்தது ராஜாதான் என்றார் கமல். "ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்லை..." என்ற முதல் அடியை எடுத்துக் கொடுத்து எழுத வைத்தார் இளையராஜா என்று கூறினார்.

60 வருஷம் பேச வச்சிருவார்

"சொர்க்கம் மதுவிலே"... என்ற பாடலை கவுதம் உற்சாகமாகப் பாடப் பாட கமல் உற்சாகமாகிவிட்டார். இந்தப் பாடல் இந்த அளவிற்கு இத்தனை தலைமுறை தாண்டி பேசுவதற்கு காரணம் ராஜாதான். இதை பாலு கேட்டிருந்தால் சந்தோசப்பட்டிருப்பார் என்றார் கமல். ராஜாவிடம் இதை பாடிக்காட்டு உன்னை 60 வருஷம் வரைக்கும் பிரபலமாக்கிடுவார் என்றார்.

காதல் இளவரசன் டூ உலகநாயகன்

சூப்பர் சிங்கர் டி20 சிறப்பு நிகழ்ச்சியில் கமல் காதல் இளவரசனாக இருந்தபோது நடித்த படங்கள் முதல் இன்றைக்கு உலக நாயகனாக உயர்ந்தது வரை நடித்த படங்களில் இருந்து பாடல்களைப் பாடுகின்றனர் குழுவினர். டிசம்பர் 25 முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு இரவும் தொடர்கிறது. இதுநாள்வரை நிகழ்ச்சியைப் பார்க்காமல் தவற விட்டவர்கள் இன்றைக்குப் பார்க்கலாம்.

 

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு... சிக்கலில் வடிவேலு மனைவி

Vadilvelu S Wife Encroachment Crisis

காஞ்சிபுரம்: சிரிப்பு நடிகர் வடிவேலுவின் மனைவி விசாலாட்சிக்கு சிக்கல் வந்துள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நிலத்தை காலி செய்யுமாறு மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புஷ்பகிரி பகுதியில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடங்களை மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து ஆந்திர மாநில விவசாயிகளுக்கு விற்றுவிட்டனர்.

அந்த இடங்களில் ஆந்திர மாநில விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். நாளடைவில் விவசாயப் பணிகளுக்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் ஆந்திர மாநில விவசாயிகள் அந்த இடங்களை நடிகர்கள் மற்றும் தனியார்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விற்றுவிட்டனர்.

தற்போது நடிகர் வடிவேலுவின் மனைவி விசாலாட்சி உள்பட 19-க்கும் மேற்பட்ட வெளியூர் பகுதியைச் சேர்ந்த தனியார் சிலர் அரசு புறம்போக்கு இடம் சுமார் 130 ஏக்கரில் தனித்தனியாக மா, தேக்கு மற்றும் தென்னை தோப்புகள் அமைத்து பண்ணை வீடுகளாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புஷ்பகிரி பகுதியில் விசாலாட்சி உள்பட 19 பேர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 60 ஹெக்டேர் பரப்புள்ள அரசு புறம்போக்கு இடங்களை வரும் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என படப்பை வருவாய் துறை ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பானது இன்று நேற்று நடந்து வருவதல்ல என்று கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள். கடந்த 50 வருடமாகவே பலரும் இந்த நிலங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இருந்த அரசுகள் இதற்கு உரிய நடவடிக்கையே எடுத்ததில்லை. மிகவும் தாமதமாக இப்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என்பது மக்களின் குற்றச்சாட்டாகும்.

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக வடிவேலு மனைவி உள்ளிட்டோர் மீது வழக்கு பாயுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.