'ஓ.. உன்னாலதான் எல்லாம் வெளிய தெரியுதா.. கெளம்பு கெளம்பு!'

Vishal Expels His Long Time Driver

விஷால் சின்னப் புள்ளையா இருந்த நாளிலிருந்து அவருக்கு டிரைவராக ஒரு பெரியவர் வேலை பார்த்து வந்தார்.

விஷாலைப் பற்றி அவருக்குத் தெரியாததே இல்லை எனும் அளகவுக்கு அவர்தான் ஆல் இன் ஆல்.

ஆனால் திடீரென்று விஷால் அவரை நிறுத்திவிட்டார். காரணம்... ரகசியமா வச்சிருக்க வேண்டிய ரகசியத்தை அவ்வப்போது விஷாலின் தந்தையிடம் போட்டுக் கொடுத்துவிட்டாராம்.

குறிப்பாக காதல் விவகாரங்களை லைவ் அப்டேட் மாதிரி அடிக்கடி சொல்லி வைக்க, அது தந்தைக்கும் மகனுக்கும் சண்டை வருமளவுக்குப் போய்விட்டதாம்.

இப்போது பெரும்பாலும் தானே செல்ப் ட்ரைவ் செய்து கொள்கிறாராம்!

 

ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை!- சௌந்தர்யா

Soundarya Rajini Denies Rumours On Rasool

ரசூல் பூக்குட்டி புதிதாக இந்திப்படம் இயக்குவதாகவும், அதில் ரஜினி - அமிதாப் இணைந்து நடிப்பதாகவும் வந்த செய்திகளில் உண்மையில்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் பணிகள் தொடர்பாகவே அவர் தனது அலுவலகம் வந்ததாக அவர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று சென்னை வந்த ரசூல் பூக்குட்டி, தான் அடுத்து இயக்கும் புதுப்படம் குறித்து ரஜினியிடம் பேசியதாகவும், அதில் அமிதாப்புடன் ரஜினியும் இணைந்து நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின.

இதனை மறுத்துள்ளார் சௌந்தர்யா ரஜினி.

அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், கோச்சடையானின் ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்றுகிறார் என்றும், அது தொடர்பாக பேசவே ரசூல் பூக்குட்டி தனது அலுவலகத்துக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரசூல் பூக்குட்டி, கோச்சடையான் ஒலி வடிவமைப்பு குறித்து சௌந்தர்யாவைச் சந்தித்தது உண்மைதான். ஆனால் ரஜினியை வைத்து நான் இயக்கப் போவதாக வந்த செய்தி எனக்கு பெரும் வருத்தத்தைத் தந்தது. அப்படி ஒரு திட்டமே இல்லை. ரஜினி சாருக்கு தேவையில்லாத மன உளைச்சலை இந்த செய்திகள் தருமே என்ற கவலை எனக்குள்ளது. அமிதாப்பிடம் என் படத்தின் ஸ்கிரிப்டைக் கொடுத்தது மட்டுமே உண்மை," என்றார்.

ரசூல் பூக்குட்டி நியாயமாக வருத்தப்படவேண்டியது அவரது மேலாளரிடம்தான். அவர்தான் ரசூல் பூக்குட்டி ரஜினியைச் சந்தித்து கதை பற்றி விவாதித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார்!!

 

இந்திய- பாகிஸ்தான் எல்லையை படமாக்க ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் திட்டம்!

Steven Spielberg Plans Film Based On Indo Pak Border

டெல்லி: தனது அடுத்த படத்தின் ஒரு பகுதியை இந்திய பாகிஸ்தான் எல்லையில் வைத்துப் படமாக்க விரும்புவதாக ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற லிங்கன் படத்தின் வெற்றியைக் கொண்டாட இந்தியா வந்துள்ள ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவுக்கும் தனது குடும்பத்துக்குமான தொடர்புகளை நினைவு கூர்ந்துள்ளார்.

ஸ்பீல்பெர்க்கின் தந்தை அர்னால்ட், இரண்டாம் உலகப் போரில் 490வது குண்டுவீச்சுப் பிரிவில் ஸ்க்வாட்ரனாக இருந்துள்ளார். அப்போது பிரிக்கப்படாத இந்தியாவில், கராச்சி நகரில் நிலை கொண்டிருந்தது அவர் பணியாற்றிய படைப் பிரிவு. பர்மாவில் ஜப்பானிய ரயில்வே லைன்களைத் தகர்த்து ஜப்பானை முன்னேற விடாமல் தடுத்ததில் இவர் பங்கு பெரிதாக இருந்துள்ளது.

பம்பாய், கல்கத்தா மற்றும் பல இந்திய நகரங்களுக்கு ஸ்பீல்பெர்க்கின் தந்தை அர்னால்ட் அடிக்கடி வந்து போவது வழக்கமாம்.

அர்னால்டுக்கு இப்போது 96 வயதாகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் அவரது பெட்டிகளை ஆராய்ந்தபோது, ஏராளமான கடிதங்கள் மற்றும் புகைப்பட பிலிம்களைக் கண்டெடுத்துள்ளார் ஸ்பீல்பெர்க். அந்தக் கடிதங்கள் பெரும்பாலும் ஸ்பீல்பெர்க்கின் தந்தை தன் மனைவிக்கு எழுதியவை. அவற்றை அர்னால்ட் படிக்கப் படிக்க ஒரு கேமிராவில் பதிவு செய்து கொண்டாராம் ஸ்பீல்பெர்க்.

உறைகளுக்குள் டெவலப் செய்யப்படாமல் இருந்த ஏராளமான பிலிம்களை, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு டெவலப் செய்து பார்த்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்.

அவை அனைத்துமே இந்தியாவில் அவர் தந்தை இருந்தபோது எடுத்த படங்களாம். அப்போதுதான் தனது குடும்பத்துக்கும் இந்தியாவுக்கும் இத்தனை நெருங்கிய தொடர்பு இருப்பது ஸ்பீல்பெர்க்குக்கே தெரிந்ததாம்.

இந்திய - பாக் எல்லையில்...

'சரி இத்தனை தொடர்புடைய இந்தியா பற்றி... அல்லது இந்தியாவில் படமெடுக்க ஆசை இல்லையா?'

'நிச்சயம் உள்ளது... ஏற்கெனவே 1977-ல் க்ளோஸ் என்கவுன்டர்ஸ் படத்துக்காக ஒருமுறை இந்தியாவில் ஷூட் செய்திருக்கிறேன். பின்னர் இந்தியானா ஜோன்ஸ் படத்துக்காக வந்திருக்கிறேன். ஆனால் எனது அடுத்த படத்தின் ஒரு பாதி முழுவதையும் இந்திய - பாக் எல்லையில், காஷ்மீரில் படமாக்க ஆசை. இதற்கான ஸ்க்ரிப்ட் கூட முடிவடைந்துவிட்டது. எனது ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கவிருக்கின்றன," என்றார் ஸ்பீல்பெர்க்.

இந்தியாவில் யார் நடிப்பு பிடித்திருக்கிறது என்று கேட்டபோது, "அமிதாப் பச்சன்தான். மிகச் சிறந்த நடிகர். அவரது The Great Gatsby பார்த்து வியந்திருக்கிறேன்," என்றார்.

 

கொய்னா மித்ராவை சீர்குலைத்த பிளாஸ்டிக் சர்ஜரி!

Doctors Gave Up My Confidence Only Brought Me Up

ராம்கோபார்ல வர்மாவின் ரோட், முசபிர், ஏக் கிலாடி ஏக் ஹசினா போன்ற ஹிந்தி படங்களில் கவர்ச்சி பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் கொய்னா மித்ரா.

மிகவும் கவர்ச்சியான உடலமைப்பை கொண்ட இவருக்கு எமனாக வந்து, அவருடைய அழகையே சீர்குலைத்துவிட்டது பிளாஸ்டிக் சர்ஜரி. கோயனாவின் முக அமைப்பிற்கு, அவருடைய மூக்கு சிறிது நீளமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் கூற, மூக்கை நீளமாக்க காஸ்மெடிக் சர்ஜரி மேற்கொண்டார் கொய்னா.

அறுவை சிகிச்சையினால் கொய்னாவின் முகத்தில் உள்ள எழும்புகள் வீங்க ஆரம்பித்தன. இதனால் அவருடைய முகம் பெரிதாகி, விகாரமாகிவிட்டது.

இதுகுறித்து நினைவு கூறும் கொய்னா "எனது முகம் வீங்க ஆரம்பித்தவுடன், நான் மருத்துவர்களிடம் சென்றேன். ஆனால் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். கடவுளும், மருந்துகளும் தான் உன்னை காப்பாற்ற வேண்டும் என்று கூறிவிட்டனர். இதில் இருந்து மீண்டு தற்போது இந்த நிலைமைக்கு வந்ததற்கு எனது தன்னம்பிக்கை தான் காரணம். எனது முகம் விகாரமானவுடன் சிறிது காலம் வெளியே வராமல் மும்பையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தேன்.

அதன் பிறகு என்னை நானே தேற்றிக்கொண்டு வெளியே வர ஆரம்பித்தேன். என்னை போன்ற ஒரு பிரபலமான சினிமா நட்சத்திரம் இந்த முகத்துடன் வெளியே வருவதற்கு மிகுந்த மன தைரியம் வேண்டும் என்று சிலர் கூறினாலும், பலர் என்னை வெறுக்கவே செய்தனர். எனது நெருங்கிய நண்பர்கள் கூட என்னை விட்டு சென்றுவிட்டார்கள் என்று கூறியுள்ளார் கொய்னா.

கொய்னாவின் முகம் மீண்டும் சீராக அவருக்கு மேலும் சில அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன. காஸ்மெடிக் அறுவை சிகிச்சை அவருடைய முகத்தை சீர்குலைத்தாலும், திரைப்பட வாழ்வை குலைக்கவில்லை. திரைப்பட வாய்ப்புகள் மீண்டும் வரத் தொடங்கின. ஆனால் அது எதுவும் சரிபடவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகு, அமரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது நன்பர் மூலம் மைக்கேல் ஹெர்ஷல்ஸின் தீ ஸ்டோரி ஆப் நவோமி படவாய்ப்பு கிடைத்தது.

"என்னுடைய இந்த முக அமைப்பே இந்த படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு மிகவும் பொறுத்தமாக அமைந்தது" புன்னகையுடன் கூறுகிறார் கொய்னா.

 

'தமிழ் இனி' மணி ராம் சிறந்த குறும்பட இயக்குநர்... சிறந்த படம் இடுக்கண்!

Mani Ram Adjudged As Best Short Film Director

ஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருது, தமிழ் இனி படத்தை இயக்கிய மணி ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக இடுக்கண் தேர்வாகியுள்ளது.

நார்வே தமிழ் திரைப்பட விழா 2013-ன் முதல் கட்டமாக, குறும்படங்கள் திரையிடல் மற்றும் தேர்வு மார்ச் 10-ம் தேதி நடந்தது. இதில் ஏராளமான தமிழ் குறும்படங்கள், ஆவணப் படங்கள், இசை வீடியோக்கள் இடம்பெற்றன.

அனைத்துப் படங்களும் திரையிடப்பட்டு, அவற்றில் தேர்வு பெற்ற சிறந்த படைப்புகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்:

சிறந்த குறும்படம் - இடுக்கண். சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் விஸ்வநாதன் இயக்கத்தில் உருவான 13 நிமிடப் படம் இது.

சிறந்த குறும்பட இயக்குநர் - மணி ராம்.

அமெரிக்காவின் ப்ளாரிடாவைச் சேர்ந்த தமிழர் மணிராம் இயக்கிய இந்தப் படம், வெளிநாடுகளில் செட்டிலான தமிழர்கள் மத்தியில் அருகி வரும் தமிழின் எதிர்காலம் குறித்துப் பேசுகிறது. நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் தேர்வு பெற்ற படம் இது.

சிறந்த கதை - மவுன மொழி.

சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திர ஹாஸ்மி இயக்கத்தில் உருவான படம் இது.

சிறந்த நடிகர் - விஸ்வா. கசப்பும் இனிப்பும் படத்துக்காக சென்னையைச் சேர்ந்த விஸ்வா சிறந்த நடிகராக தேர்வு பெற்றுள்ளார்.

சிறந்த ஒளிப்பதிவு / எடிட்டிங் - டுடே 27. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்த பாரிசை சேர்ந்த தேசுபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த ஆவணப்படம் பிரிவில் பாரிசைச் சேர்ந்த ஆல்பிரடோ டி பிராங்கஸா இயக்கிய பாக்ஸிங் பாபிலோன் தேர்வு பெற்றுள்ளது.

சிறந்த இசை வீடியோவாக நார்வேயைச் சேர்ந்த பிரசன்னா பர்குணம் இயக்கிய உயிரின் ஏக்கம் தேர்வு பெற்றுள்ளது.

தேர்வு பெற்ற படங்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் நிறைவு நாளில் (ஏப்ரல் 28) தமிழர் விருதுகள் வழங்கப்படும்.

 

இந்தியாவில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்: அமிதாப் உள்பட 61 சினிமா பிரபலங்களைச் சந்திக்கிறார்!

61 Indian Film Personalities Meet Spielberg Today

மும்பை: இந்தியா வந்துள்ள பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை இந்திய திரையுலகைச் சேர்ந்த 61 பிரபலங்கள் இன்று சந்தித்துப் பேசினர்.

இவர்களில் பிரபல நடிகர் அமிதாப், தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஏ ஆர் முருகதாஸ், பிரபு தேவா ஆகியோரும் இடம்பெற்றனர்.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்கு புதிதாக அறிமுகம் தேவையில்லை. பாக்ஸ் ஆபீஸ் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை ஒரு சேர வென்றவர்.

சமீபத்தில் இவர் இயக்கிய லிங்கன் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில், அமெரிக்க ஜனாதிபதி லிங்கனாக நடித்ததற்காக டேனியல் டே லீவிஸ் சிறந்த நடிகர் விருது பெற்றார். இந்த படம் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனம் மற்றும் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.

எனவே இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக ஸ்பீல்பெர்க் இந்தியாவிற்கு இன்று வருகை தந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார். இவர்கள் இருவரும் கொலாபாவில் உள்ள தாஜ் மகால் ஓட்டலில் தங்கியுள்ளனர்.

அமெரிக்க அடிமைத்தனத்தை ஒழிக்கும் 13வது சட்டதிருத்தத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி நடைபெற்ற உள்நாட்டு போர் மற்றும் அதில் ஆபிரகாம் லிங்கனின் போராட்டம் ஆகியவைதான் இந்தப் படத்தின் மையக்கரு.

நமது நாட்டுக்கு விருந்தினராக வந்துள்ள இயக்குனர் ஸ்பீல்பெர்க் இன்று இந்திய திரை பிரபலங்களை சந்தித்து உரையாடினார்.

அவர்களிடம் தனது திரையுலக அனுபவங்களையும், படத்தயாரிப்பு குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அமிதாப் உள்பட 61 திரை பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா ஆகியோரும் இடம் பெற்றனர்.

இந்த பட்டியலில் இயக்குனர்கள் பிரியதர்சன், ராஜ்குமார் ஹிரானி, அனுராக் காஷ்யப், பர்ஹான் அக்தர், ஜோயா அக்தர், அபிஷேக் கபூர், ஹபீப் பைசல், ராம் கோபால் வர்மா, சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பாரா கான் ஆகியோரும் இடம்பெற்றனர்.

'சினிமாவின் கடவுள்'

ஸ்பீல்பெர்க்கைச் சந்தித்த பின், அவரைப்பற்றி மீடியாக்களிடம் பேசிய பிரபல இயக்குநர்கள் மதுர் பண்டார்கர், அஷுதோஷ் கோவாரிகர் போன்றோர், "ஸ்பீல்பெர்க் ஒரு சிறந்த மனிதர். படைப்பாளிகளில் சிகரம் தொட்டவர். அவரது பண்பு எங்களைச் சிலிர்க்க வைத்தது. மிகப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. சினிமாவின் கடவுள் அவர் என்றால் மிகையல்ல," என்றனர்.

 

சாப்பாட்டைக் குறைத்து ஸ்லிம்மாகிவிட்டேன்! - ஹன்ஸிகா

Hansika Interview   

முதலில் கொஞ்சம் குண்டாகத்தான் இருந்தேன். சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு ஸ்லிம்மாகிவிட்டேன், என்றார் நடிகை ஹன்ஸிகா.

தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக உள்ளார் ஹன்ஸிகா. தமிழில் மட்டுமே 7 படங்களில் நடித்து வருகிறார்.

தான் நடிக்கும் படங்கள், தனது ரசனைகள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி இது:

உங்கள் வாழ்க்கையில் உந்துதலாக உள்ள பெண்மணி?

எனது தாயார்தான். எனக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் என் தாய். என்னுடைய பலம் அவர்தான்.

உங்களைக் கவர்ந்த நடிகை ?

என்னை ஈர்த்தவர்கள் நடிகைகள் மட்டுமல்ல, தனது வாழ்வின் எல்லா அம்சங்களையும் சரியாகக் கையாண்டு, கடின உழைப்பு மற்றும் தியாகங்களை செய்யும் எல்லா பெண்களும்தான்.. அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு பற்றிய உங்களது கருத்து..

இன்றைய சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு என்பது அவர்கள் கையில்தான் இருக்கிறது. எந்த ஒரு சூழலையும் துணிச்சலுடனும் புத்திசாலித்தனமாகவும் கையாள்வது அவசியம். அலுவலகங்களில் வேலை தாமதமாக முடியும் நிலையில், பெண்கள் தங்கள் பெற்றோருக்கு அதை உடனே தெரிவிப்பது நல்லது.

ஏழை எளிய குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறீர்களே...என்ன காரணம்?

நல்லது செய்ய காரணங்கள் வேண்டாம்.. இது எனது பழக்கம். ஏழை குழந்தைகளை நான் தத்தெடுத்து வளர்ப்பது உண்மைதான். இவ்வாறான சேவைகளை என் தாயார் செய்து வருகிறார். ஒரு நாள் நீயும் ஏன் இதை செய்யக்கூடாது என கேட்டார். இந்த கேள்வி என்னை யோசிக்க வைத்தது. அதன்பிறகு நான் குழந்தைகளை தத்தெடுத்தேன். அவர்களின் நல்வாழ்வுக்கு தேவையான விஷயங்களை செய்து வருகிறேன். எனக்கு இது மனநிறைவை தருகிறது.

தங்களின் கருத்தின்படி கதாநாயகிகளை கையாள்வதிலும் நடத்துவதிலும் தமிழ் திரை துறைக்கும் தெலுங்கு திரைத்துறைக்கும் வேறுபாடுகள் உள்ளதா ?

இல்லவே இல்லை... தமிழ் திரை துறைக்கும் தெலுங்கு பட உலகுக்கும் வேறுபாடு இல்லை. மொழி மாறுமே தவிர படப்பிடிப்பு என்ற உணர்வும் உபசரிப்பும் ஒன்றுதான்.

இந்தி பட வாய்ப்புகள் பற்றி...

ஓய்வில்லாமல் இங்கு படங்கள் செய்து வருகிறேன். வாய்ப்புக்களும் வந்த வண்ணம் உள்ளன .. ஆனால் இந்தி படங்களில் நடிக்க நேரம்தான் இல்லை .

எப்படி குறுகிய காலத்தில் உடல் இடையை குறைத்தீர்கள்? அந்த ரகசியத்தை சொல்லுங்களேன்?

சாப்பிடுவதை குறைத்து கொண்டதால் உடல் எடையும் குறைந்து விட்டது. தினமும் அதிக நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டதும் எடை குறைவுக்கு காரணமாக அமைந்தது. நான் நடிகையாக இருப்பதில் சந்தோஷப்படுகிறேன். முதல் இடத்தை பிடிப்பது பற்றி சிந்திக்கவில்லை. நம்பர் விளையாட்டில் நம்பிக்கை இல்லை. சிறந்த நடிகை பண்பான நடிகை என்ற பெயரே நிரந்தரமானது.

இந்திய கதாநாயகிகளின் திரை ஆயுட்காலம் குறைவாகவும் ஹாலிவுட் கதாநாயகிகளின் திரை ஆயுட்காலம் பெரிதாகவும் உள்ளதே, அதை பற்றி...?.

ஆட்சேபிக்கிறேன்! ரேவதி, குஷ்பு, ஸ்ரீதேவி போன்றோர் இன்னும் சினிமாவில் நிலைத்து உள்ளனரே...

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

 

ஸ்பீல்பெர்க்கைச் சந்தித்தார் அமிதாப் பச்சன்!

Amitabh Meets Spielberg

பாலிவுட்டின் சாதனை நாயகன் அமிதாப் பச்சன் இன்று காலை ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ஹாலிவுட்டில் வந்து பணியாற்றுமாறு அமிதாப்புக்கு அழைப்பு விடுத்தார் ஸ்பீல்பெர்க்.

தனது லிங்கன் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்றதைக் கொண்டாட இந்தியா வந்துள்ளார் ஸ்பீல்பெர்க். இந்தப் பயணத்துக்கு முழு ஏற்பாடுகளையும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அனில் அம்பானியும் அவர் மனைவி முன்னாள் நடிகை டினாவும் செய்துள்ளனர்.

ஸ்பீல்பெர்க்கைச் சந்திக்க 61 இந்திய சினிமா பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அமிதாப் பச்சனை இன்று காலை சந்தித்தார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

அனில் அம்பானியும் டினாவும் அவரை வரவேற்று ஸ்பீல்பெர்க்குக்கு அறிமுகப்படுத்தினர்.

அமிதாப்பின் படங்கள் சிலவற்றைப் பார்த்திருப்பதாகவும், அவரது நடிப்பு ஹாலிவுட்டையும் கவரக்கூடியதாக உள்ளதாகவும் ஸ்பீல்பெர்க் தெரிவித்தார்.

இந்திய சினிமா உலகின் சார்பில் ஸ்பீல்பெர்க்கை இந்தியாவுக்கு வரவேற்ற அமிதாப், அவரது படங்கள், இந்தியாவில் அவற்றுக்கு கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பு குறித்து கூறியபோது, மிகவும் மகிழ்ந்தார் ஸ்பீல்பெர்க்.

இருவரும் பல்வேறு விஷயங்களைப் பேசினர். முன்னதாக ஸ்பீல்பெர்க்கை சந்திக்கப் போகும், இந்த சந்திப்பு தனக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமிதாப் தெரிவித்திருந்தார்.

அமிதாப்பைத் தொடர்ந்து ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோரும் ஸ்பீல்பெர்க்கைச் சந்தித்தனர்.

 

அடேங்கப்பா... 27 கோடிக்கு மார்புகளை இன்சூரன்ஸ் செய்யும் ஹாலிவுட் நடிகை!

Jennifer Love Hewitt Wants Insure Her Breasts

லாஸ் ஏஞ்செலஸ்: ஹாலிவுட்டைச் சேர்ந்த கவர்ச்சி நடிகை ஜெனீபர் லவ் ஹெவிட், தனது மார்புகளை ரூ. 27 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப் போகிறாராம்.

மிகப் பெரிய மார்புகளுடன் ஹாலிவுட்டில் வலம் வருபவர் ஜெனீபர். இப்போது இந்த முன்னழகை பெரும் தொகை கொடுத்துப் பாதுகாக்கப் போகிறாராம் ஜெனீபர்.

34 வயதாகும் ஜெனீபர் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ஆமாம், எனது அழகிய மார்புகளை இன்சூரன்ஸ் செய்யப் போகிறேன். ரூ.27 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யும் திட்டம் உள்ளது. சிலர் குறைந்த தொகைக்கு இன்சூரன்ஸ் கேட்டார்கள். ஆனால் எனது மார்புகள் அவ்வளவு குறைந்தவை அல்ல. எனவே ரூ. 27 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்ய தீர்மானித்துள்ளேன். இதை விட குறைந்த தொகைக்கு எனது மார்புகளை என்னால் இன்சூர் செய்ய முடியாது என்றார் பெருமையுடன் தனது மார்புகளைப் பார்த்தபடி.

இதற்கு முன்பு ஜெனீபர் லோபஸ்தான் மிகப் பெரிய தொகைக்கு தனது மார்புகளை இன்சூர் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல டோலி பார்டான் என்ற இன்னொரு நடிகை தனது இரு மார்புகளையும் தலா 3 லட்சம் டாலர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து வைத்துள்ளார்.

தனது சைஸுக்கேற்ற பிரா மற்றும் பாண்டீஸை ஜெனீபரே வடிவமைத்துக் கொள்கிறார் என்பது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.

 

இயக்குநர் மணிவண்ணன் மகன் திருமண நிச்சயதார்த்தம் - ஈழத் தமிழ்ப் பெண்ணை மணக்கிறார்!

Manivannan S Son Tie Knot Jaffna Girl

தமிழின் முன்னணி இயக்குநர், குணச்சித்திர நடிகரான மணிவண்ணன் மகன் நடிகர் ரகுவண்ணனுக்கும், ஈழத் தமிழ்ப் பெண் அபிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சென்னையில் எளிய முறையில் சிறப்பாக நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் மணிவண்ணனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.

கோபுரங்கள் சாய்வதில்லை தொடங்கி, நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை, ஆண்டான் அடிமை வரை தமிழ் சினிமாவில் 49 படங்களை இயக்கியவர் மணிவண்ணன். 50வது படமாக அமைதிப் படை பாகம் 2 (நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ) இயக்கி வருகிறார்.

அதற்கடுத்து தாலாட்டு மச்சி தாலாட்டு என்ற படத்தையும் இயக்குகிறார். அவரது மகன் ரகுவண்ணன், மாறன் என்ற படத்தில் சத்யராஜுடன் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இப்போது அமைதிப்படை -2, தாலாட்டு மச்சி தாலாட்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவருக்கும், அபி என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணுக்கும் நேற்று முன்தினம் சென்னை கிரீன் பார்க்கில் நிச்சயதார்த்தம் நடந்தது.

எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் மணிவண்ணனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.

திருமணம் வரும் ஜூன் மாதம் விமரிசையாக நடக்கவிருக்கிறது.