பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி - இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து!

சென்னை: மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது தமிழ் திரையுலகம்.

தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்ஸி போன்ற அமைப்புகள் கூட்டாக இதனை அறிவித்துள்ளன.

தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளியான பாலு மகேந்திரா நேற்று மரணத்தைத் தழுவினார்.

பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி - இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து!

இதைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகமே திரண்டுவந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது. இன்று பிற்பகல் 2 மணிக்கு அவர் உடல் போரூரில் தகனம் செய்யப்படுகிறது.

ஒரு நாள் படப்பிடிப்புகள் ரத்து

தமிழ் சினிமாவுக்கு பல கவுரவங்களைத் தேடித் தந்த படைப்பாளியான பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று ஒரு நாள் அனைத்துப் படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்தார்.

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்சி தலைவர் அமீர் ஆகியோரும் இதே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

 

பண்ணையாரும் பத்மினியும் - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: விஜய் சேதுபதி, ஜெய்பிரகாஷ், துளசி, ஐஸ்வர்யா, பால சரவணன், நீலிமா

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

பிஆர்ஓ: ஜான்சன்

தயாரிப்பு: எம் ஆர் கணேஷ்

எழுத்து - இயக்கம் : அருண் குமார்

பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரில் ஏற்கெனவே வெளியான ஒரு குறும் படத்தின் நீ...ட்சியாக இந்தப் பெரும் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

உயர்திணையோ அஃறிணையோ.. ஒவ்வொரு உயிர் அல்லது பொருள் மீதும் நமக்கு ஒரு சென்டிமென்ட்... பாசம் இருக்கவே செய்கிறது. காலங்கள் மாறினாலும் இந்த சென்டிமென்ட் மாறுவதில்லை.

சிலருக்கு ஆசையாக வளர்த்த காளை மீது.. நாய்க் குட்டி மீது... பார்த்துப் பார்த்து வாங்கிய மாட்டு வண்டி மீது... புல்லட் மீது. அப்படி இந்தப் படத்தில் பண்ணையாருக்கு 'பத்மினி' மீது!

பண்ணையாரும் பத்மினியும் - விமர்சனம்

கதை... ரொம்ப சிம்பிள். ஒரு ஊர்ல ஒரு பண்ணையார். அவர் கிட்ட வந்து சேருது ஒரு பத்மினி.. கார். அந்த கார் மீது அவரும் அவர் மனைவியும் அவர் ட்ரைவரும் அவரது க்ளீனரும் மகா ப்ரியம் வைத்து விடுகிறார்கள்.

தங்கள் கல்யாண நாளன்று கணவன் கார் ஓட்ட.. அதில் தான் உட்கார்ந்து போக வேண்டும் என்பதாக கனவு காண்கிறாள் பண்ணையார் மனைவி. ஆனால் மகள் வந்து காரை கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு போகிறாள்.

பண்ணையாருக்கு 'பத்மினி' மீண்டும் கிடைத்ததா என்பதுதான் கதை.

ஒரு பண்ணையாரையும் பத்மினி காரையும் மட்டும் வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக இரண்டரை மணி நேரம் கதை சொல்வது லேசுப்பட்ட காரியமில்லை. அவ்வப்போது கொஞ்சம் இழுவையாக சில காட்சிகள் வந்தாலும், படம் முழுக்க ஒரு இயல்பான நீரோடை போல நகர்கின்றன காட்சிகள்.

பண்ணையாரும் பத்மினியும் - விமர்சனம்

யார் ஹீரோ... யாருக்கு முக்கியத்துவம் என்றெல்லாம் பார்க்காமல் கதையை மட்டும் கவனத்தில் கொண்டால் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு அவ்வளவாக ஏமாற்றம் இருக்காது.

காரணம்... கதைப்படி படத்தின் நாயகன் பண்ணையார் ஜெயப்பிரகாஷ்தான். மனிதர் வெளுத்து வாங்கிவிட்டார். எப்போதே வந்திருக்க வேண்டிய ஆள் இவர் என்பது மட்டும் புரிகிறது. ரேடியோ, டிவி, நவீன கழிப்பிடம் என ஒவ்வொன்றாக இவர் ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்து இலவசமாகத் தரும் பாங்கும், அந்த பத்மினி காரைப் பார்த்ததும் சின்னக் குழந்தையாக மாறி துள்ளிக் குதிப்பதும்... மனைவியிடம் செல்லக் கோபம் கொள்வதும்... மெல்லக் காதல் காட்டுவதும்... அத்தனை இயல்பு, நேர்த்தி!

அதுவும் அந்த காரை சினேகாவிடம் ஒப்படைப்பதா வேண்டாமா என பண்ணையார் தயங்க, 'இது என்ன அநியாயம்.. அவங்க பொருளை அவங்ககிட்ட கொடுக்க வேணாமா' என பண்ணையாரம்மா நியாயம் கேட்பது... மனித நீதி வாழ்வது இந்த மாதிரி இதயங்களில்தான்!

பண்ணையாரும் பத்மினியும் - விமர்சனம்

துளசிக்கு இப்படியொரு வாய்ப்பு அவரது வாலிபப் பிராயத்தில் கூட கிடைத்ததில்லை (நல்லவனுக்கு நல்லவனில் ரஜினி மகளாக வருவாரே... அதே துளசி!). கிடைத்த வாய்ப்பை க்ளாஸிக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்!

விஜய் சேதுபதியும் குறை வைக்கவில்லை. தனக்கு ஸ்கோப் உள்ள இடங்கள் அனைத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். 'காரே இன்னும் கத்துக்கல.. அதுக்குள்ள பேச்சைப் பாரு... இவரு காராமே... கார் ஓட்ட கத்துக்கு விட்ருவோமா...' என கறுவிக் கொண்டு, பண்ணையாரை தொங்கலில் விடும் அந்த காட்சி ஒன்று போதும் அவரது இயல்பான நடிப்புக்கு. அதே விஜய் சேதுபதி பண்ணையார் - அவர் மனைவியின் கார் சென்டிமென்ட் புரிந்து, அந்தக் காரை மீட்கப் படும் பாடு... நெகிழ்ச்சி.

ஹீரோயின் ஐஸ்வர்யா யதார்த்தமான அழகு. ஆனால் நடிக்க ஒன்றும் வாய்ப்பில்லை.

பாலசரவணனுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. அதைப் புரிந்து காமெடியில் புதிய தடம் பதித்திருக்கிறார். டார்ச்சர் பார்ட்டிகளிடம் 'அண்ணே.. பேசாம நீ நல்லாருன்னு சொல்லிரட்டுமா' என மிரட்டுவது குபீர்.

படத்தில் எல்லாரும் நல்லவர்களே... பண்ணையாரின் பேராசைக்கார மகள் நீலிமாவைத் தவிர!

பண்ணையாரும் பத்மினியும் - விமர்சனம்

படத்தில் வரும் அத்தனைப் பாத்திரங்களையும் நாம் முன்பே சந்தித்திருக்கிறோம்... இப்போதும் சந்திக்கிறோம் என்பது இயக்குநர் அருண்குமாரின் திரைக்கதைக்கு ப்ளஸ். எங்கே திடீர் திருப்பம் என்ற பெயரில் காரை விபத்துக்குள்ளாக்கிவிடுவார்களோ, பண்ணையாரையோ அந்தம்மாவையோ காலி பண்ணிவிடுவார்களோ என்று கொஞ்சம் அச்சத்தோடுதான் பார்க்கிறோம்.. நல்ல வேளை அப்படி எந்தக் காட்சியும் இல்லை.

இன்னொன்று, குடிக்கிற மாதிரியோ, புகைக்கிற மாதிரியோ ஒரு காட்சி கூட இல்லாமல் பார்த்துக் கொண்டதற்காகவே ஒரு ஸ்பெஷல் பாராட்டு சொல்ல வேண்டும் இயக்குநருக்கு!

ஆனால் எந்த வித விறுவிறுப்போ திருப்பமோ இல்லாததுதான் பெரிய மைனஸ். காட்சிகளின் தேவையில்லாத நீளம்... அந்த சாவு வீட்டு பயணம்...

அடுத்து, படம் நடக்கும் காலகட்டம் எது என்பதில் இயக்குநருக்கு மகா குழப்பம் போலிருக்கிறது.

பண்ணையாரும் பத்மினியும் - விமர்சனம்

ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்துக்கு முக்கிய பலம். உனக்காக பொறந்தேனே... மிக அழகிய மெலடி. பின்னணி இசையிலும் மனதை வருடுகிறது இசை. கோகுல் பினாய் ஒளிப்பதிவு யதார்த்தம். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இன்னும் கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு கிராமத்துப் பண்ணையார், அவரைக் கொண்டாடும் மக்களுடன் கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டு வந்த உணர்வுடன் திரும்புகிறோம் படம் பார்த்து முடிந்ததும்!

குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்!

 

அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா!

மறைந்த காமிரா கவிஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த அமரர் பாலு மகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான்.

பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார். இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர்.

தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா.

அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா!

அகிலா

பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார்.

மனைவி அகிலா குறித்து பாலு மகேந்திராவின் கருத்து என்ன... இதோ அவரது வார்த்தைகளில்....

"சினிமாவையும், இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு, என் வாழ்க்கைத் துணையும் சினிமாவோடும், இலக்கியத் தோடும் சம்பந்தப்பட்டவளாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்று ஒரு பேராசை. இது அபத்தமான ஆசை, முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும். அபத்தங்களும் முட்டாள் தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான்.

இந்த உறவை (மௌனிகாவுடனான) ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்கவேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை. உள்ளும் புறமும் அழகானவள் அகிலா.

எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் பதினெட்டு வயது. சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள் | பரிசுத்தவதிகள் | புராணகாலத்தில்தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா. என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல. கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்ததுதான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.

அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா!

மனைவியைத்தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத, மனசால்கூட நினைக்காத ஒரு நல்ல ஆண்மகனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அகிலா. என்னை மாதிரி ஒரு கோணங்கிக்கு வாழ்க்கைப் பட்டது அவள் விதி. இந்தப் பத்தினிக்கு வலிகளையும் காயங்களையும் தவிர, வேறு என்ன தந்தேன் என்று நினைக்கும்போது எங்காவது கண்காணாமல் போய்விடத் தோன்றுகிறது!

மௌனிகாவின் பேரன்பு...

மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது.

மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை.

ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.

அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா!

அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன். புத்திபூர்வ மாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவுதான் எனக்கும் மௌனிக்குமான உறவு.

'இவ்வளவு வேதனைப்படுகிற நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை இத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டீர்கள்?''

''காரணம் மௌனியின் பேரன்புதான். 'நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!' என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான் எப்படி உதறித் தள்ளுவது? தன் இளமைக் காலத்தை எனக்காக, என்னுடன் பகிர்ந்துகொண்ட வளை எப்படி உதற? என் உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள். இந்த செவ்வாய்கூட எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக் கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும் அழுத்தமான பக்தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்துகொள்ள முடியும்.

இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது? அதேசமயம், என்அகிலாவை நான் எந்தக் காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாக நேசிக்கிறேன். என்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும் அன்பை, பொங்கிப் பிரவாகமெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்துகொண்டால் எனது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்!

''மௌனிகாவுக்கும் உங்களுக்குமான உறவில், உங்கள் மகன் ஷங்கியின் நிலை என்ன?''

''ஷங்கி என் சிநேகிதன். என்னை அணுஅணுவாகப் புரிந்தவன். மௌனி மீது கோபப்படவோ அவளை அவமரியாதை செய்யவோ அவனால் இயலாது. அன்பும் கருணையும் மென்மையும் கொண்ட கம்பீரமான ஆண் ஷங்கி. எனக்கும் மௌனிக்குமான உறவை அவன் அங்கீகரிக்கிறானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அவன் அதை முழுவதுமாகப் புரிந்துகொண்டு இருக்கிறான். என்னை என் பலங்களோடும் பலவீனங்களோடும் நேசிப்பவன் ஷங்கி.'

''மௌனிகாவைத் திருமணம் செய்துகொண்டீர்களா?''

''என் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்ல சிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற பெண்ணை சினிமா வட்டாரத்தில், 'பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணு' என்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் 98|ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன் கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன்.

மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான். ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள்.'

நான் பாலு மகேந்திராவின் மனைவிதான்... ஆனால் திருமதி பாலுமகேந்திரா அல்ல!!

நான் திருமதி பாலுமகேந்திரா அல்ல... என்னை திருமதி பாலுமகேந்திரா என்று அழைக்காதீர்கள் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டவர் மௌனிகா.

ஏன் அப்படி?

"பாலு மகேந்திரா எனக்குத் தாலி கட்டியிருப்பதும் அவரோடு பல வருடங்களாக நான் குடும்பம் நடத்தி வருவதும் உண்மைதான். ஆனால், திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது.

முதலில் பாலுமகேந்திரா என்ற பெயரைப் பற்றி பலருக்குத் தெரியாத ஒரு விஷயத்தை இங்கு சொல்லியாக வேண்டும். அவரது தகப்பனார் பெயர் பாலநாதன். நண்பர்களாலும் உறவினர்களாலும் அவர் 'பாலு' என்று அழைக்கப்பட்டு வந்தார். ஆக, பாலுமகேந்திரா என்ற பெயரில் அவருடைய தகப்பனாரது பெயரும் சேர்ந்திருக்கிறது. எனவே, பாலுமகேந்திரா என்ற பெயர் ஒரு தனி நபரின் பெயரல்ல. அது பாலுமகேந்திராவைத் தலைவராகக் கொண்ட அவரது நேரடிக் குடும்பத் தைச் சேர்ந்த அவருடைய முதல் மனைவி அகிலாம்மா, மகன் ஷங்கி, பேரன் ஷிறேயாஸ், மருமகள் ரேகா ஆகியோரது குடும்பப் பெயர்.

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலை இயற்கை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அழுத்தமாகவே வைத்திருக்கிறது | இனவிருத்தி வேண்டி. அந்த ஆசையும் அதற்கான வயசும் வளர்த்து ஆளாக்குவதற்கான சம்பாத்தியமும் ஆரோக்கியமும் எனக்கிருந்தும் குழந்தை வேண்டாம் என்று நான் முடிவு செய்தது, பிற்காலத்தில் அவரது குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று நான் கருதிய தன் காரணமாக மட்டும்தான். அவர் மூலம் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்தப் பையனுக்கோ பெண்ணுக்கோ நிச்சயமாக பாலுமகேந்திரா என்ற பெயர் சொந்தமாகி இருந்திருக்கும். காரணம், அந்தக் குழந்தை அவரது ரத்தம் என்பதால்!

பாலுமகேந்திரா, எனக்குத் தாலி கட்டியதை முதன்முதலாக அவர் பகிரங்கப்படுத்தியதே, எனக்கும் அவருக்குமிடையே இருந்து வருகிற ஆத்மார்த்தமான உறவுக்கு, அவர் கொடுத்த சமூக அங்கீகாரம்.

எனக்கும் அவருக்குமான உறவில், எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. நான் அவரை அவருக்காக மட்டுமே நேசிக்கிறேன். அவரும் அப்படித்தான்.

எனவேதான் அகிலாம்மாவின் முகவரியாகவும் அடையாளமாகவும் இருக்கும் திருமதி பாலுமகேந்திரா என்ற பெயரால் நான் குறிப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பாலு மகேந்திரா இருக்கும்போது மட்டுமல்ல, அவரது மறைவுக்குப் பின்பும்கூட, திருமதி பாலுமகேந்திரா என்றால் அது அகிலாம்மாவைத்தான் குறிக்கும்.

என்னை பாலு மகேந்திராவின் துணைவி என்றோ அல்லது திருமதி மௌனிகா என்றோ குறிப்பிடுங்கள்.

மனைவி என்பதும் துணைவி என்பதும் ஒரே ஸ்தானத்தைக் குறிக்கும் வார்த்தைகள்தான். இருப்பினும் ஒரு ஆண், இரண்டு சம்சாரங்களுடன் வாழும்போது, பிரித்தறிதல் வேண்டி, மூத்த சம்சாரத்தை மனைவி என்றும் இளைய சம்சாரத்தை துணைவி என் றும் குறிப்பிடுதல் அவசியமாகிறது.

இப்போது எனது பிரார்த்தனையெல்லாம், இந்த மனிதர் மறுபடியும் ஆஸ்பத்திரி அது இது என்று போகாமல், ஆரோக்கியமாக அவருக்குப் பிடித்த சினிமாவைச் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வரத்தை இறைவன் நிச்சயம் எனக்குத் தருவார்!

அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா!

எனில்... ஷோபா யார்?

அச்சாணி படத்தில் அறிமுகமாகி, கே பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் பிரபலமாகி, பசி படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ஷோபா. ஊர்வசி என்ற விருதினை மத்திய அரசு அவருக்கு அளித்தது. அப்போது அவருக்கு வயது 17. அடுத்த சில தினங்களில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷோபா பாலு மகேந்திராவின் இன்னொரு மனைவி!!

ஷோபாவுக்கும் தனக்குமான உறவைப் பற்றி பாலு மகேந்திரா இப்படி வர்ணிக்கிறார்...

"தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது?

அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகை என்பதையா... நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்தியேகதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா...

குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா...?

அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தையா..?

எதை? எதை எழுதுவது?

மிக அடர்த்தியான உணர்வுகள் முட்டி மோதும் சமயங்களில் வார்த்தைகள் காணாமல் போய் விடுகின்றன. நாம் தலையில் வைத்து கொண்டாடும் நமது தமிழ் நம்மை "அம்போ" என்று விட்டு விலகிக்கொள்கிறது.

அந்த மனநிலையில் எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன்.

ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார். அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன்.

அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது. அதில் ஒரு கேள்வி:

மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே... எப்படி இது...?

ஷோபா சொல்லியிருந்த பதில்:

"மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்."

எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.

தேவலோகவாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா.

ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம்.

அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். "மூன்றாம் பிறை" படம் மூலமாக.

மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.!

நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்.

ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு..

எனக்கு...

எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்...!"

 

கணவர் பாலு மகேந்திரா உடலைப் பார்க்க மௌனிகாவுக்கு 'ஒருவழியாக' அனுமதி!

கணவர் பாலு மகேந்திரா உடலைப் பார்க்க மௌனிகாவுக்கு 'ஒருவழியாக' அனுமதி!

சென்னை: நடிகை மௌனிகாவுக்கு ஒருவழியாக தன் கணவர் மறைந்த பாலு மகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி கிடைத்தது. அவர் இன்று காலை நேரில் வந்து கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

பாலு மகேந்திரா 1998-ல் தாலி கட்டி மணந்தவர் நடிகை மௌனிகா. இதனை 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். நேற்று திடீரென மாரடைப்பில் இறந்தார் பாலு மகேந்திரா.

தகவலறிந்து, கணவர் உடலைப் பார்க்க ஓடிவந்த மௌனிகாவை, பாலுமகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

இயக்குநர் பாலா, நடிகைகள் அர்ச்சனா மற்றும் ஈஸ்வரி ராவ் போன்றவர்கள்தான் மௌனிகா அங்கு வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பரபரப்பு கிளம்பியது. பாலு மகேந்திரா மீது அவரது மனைவியான மௌனிகாவுக்கு இல்லாத உரிமையா.. அதைத் தடுக்க இவர்கள் யார்? என்ற அளவுக்கு விவாதம் கிளம்ப, உடனடியாக இதில் சுமூகத் தீர்வு காண இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேசினர்.

அதன்படி இன்று காலை மௌனிகாவை அழைத்து, பாலு மகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்த அழைத்தனர்.

அதைத் தொடர்ந்து அவர் பாலு மகேந்திரா உடல் வைக்கப்பட்டிருக்கும் அவரது சினிமா பட்டறை கூடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

 

பென்சிலுக்காக பென்சில் சைசுக்கு மாறிய ஜிவி!

ஒரு பக்கா நடிகராகிவிடுவது என்பதில் தீவிரமாக இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்.

இதனால் பல இசையமைப்பு வாய்ப்புகள் அவர் கையைவிட்டுப் போனாலும கவலையில்லை என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டார்.

பென்சிலுக்காக பென்சில் சைசுக்கு மாறிய ஜிவி!

இப்போது அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பென்சில் படத்துக்காக தன் உடல் எடையை கணிசமாகக் குறைத்துள்ளாராம் ஜிவி.

படத்தில் பள்ளி மாணவன் தோற்றத்தில் தெரிவதற்காக இந்த எடை குறைப்பு செய்துள்ளாராம். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.

படம் ஆரம்பிக்கும் முன் 69 கிலோவாக இருந்த இவரது உடல் எடை தற்போது 60 கிலோவாக குறைந்துள்ளதாம். இப்படத்தை மணி நாகராஜ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் இசைப் பணியையும் ஜீ.வி.பிரகாஷே கவனிக்கிறார்.

ஏற்கெனவே மதயானைக் கூட்டம் படத்தைத் தயாரித்தார் ஜிவி. படம் பெரிதாகப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பென்சில் படத்தில் ஜிவிக்கு ஜோடியாக ஊதா கலரு ரிப்பன் புகழ் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.

 

பாலு மகேந்திராவுக்கு நண்பர்கள் மூலம் மலர் வளையம் அனுப்பி அஞ்சலி செலுத்திய ரஜினி!

சென்னை: இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு தன் நெருங்கிய நண்பர்கள் மூலம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பாலு மகேந்திரா. பின்னர் ரஜினியை வைத்து உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தை இயக்கினார்.

பாலு மகேந்திராவுக்கு நண்பர்கள் மூலம் மலர் வளையம் அனுப்பி அஞ்சலி செலுத்திய ரஜினி!

இருவரும் நெருக்கமான நண்பர்களாகவும் இருந்தனர். நேற்று பாலு மகேந்திரா மறைந்த செய்தி ரஜினியை அறிந்து வருத்தமும் ஆழந்த வேதனையும் தெரிவித்தார் ரஜினி.

பாலு மகேந்திராவின் உடலை நேரில் பார்த்தால் ரஜினி மனதளவில் மிகுந்த வேதனைக்குள்ளாவார் என்பதால், கடைசி நேரத்தில் ரஜினியைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.

ஆனாலும் தனது நெருங்கிய நண்பர்கள் இயக்குநர் நட்ராஜ், ரஜினி மன்ற பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் மூலம் மலர் வளையம் அனுப்பி ரஜினி சார்பில் பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தனது நெருங்கிய நண்பர் இயக்குநர் மணிவண்ணன் மரணத்தின்போதும் ரஜினி நேரில் வரவில்லை. ஆனால் அவர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

No such pipe, or this pipe has been deleted

This data comes from pipes.yahoo.com but the Pipe does not exist or has been deleted.
 

என் கணவர் பாலுமகேந்திரா உடலை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை- நடிகை மௌனிகா

சென்னை: என் கணவர் பாலு மகேந்திரா உடலைப் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை, என்று நடிகை மௌனிகா புகார் கூறியுள்ளார்.

இயக்குநர் பாலுமகேந்திரா மறைவு குறித்து நடிகை மௌனிகா மனம் திறந்துள்ளார். அவர், "பாலுமகேந்திரா என் கணவர். கடந்த 1993-ம் ஆண்டு முதல் அவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது.

16 வருடங்களுக்கு முன்பு (1998-ம் ஆண்டில்) நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்.

என் கணவர் பாலுமகேந்திரா உடலை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை- நடிகை மௌனிகா

அன்று முதல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடினேன். ஆனால் அவர் உடலைப் பார்க்க என்னை சிலர் அனுமதிக்கவில்லை.

பொதுவாக எல்லா 2-வது மனைவிகளுக்கும் நடக்கும் கொடுமைதான் இது என்பது எனக்குப் புரிந்தாலும், இந்தக் கொடுமையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.

வண்ண வண்ணப் பூக்கள் படத்தில் பாலு மகேந்திராவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மௌனிகா. அதன் பிறகு பாலு மகேந்திரா இயக்கிய கதை நேரம் குறும்படத் தொடரில் பல படங்களில் நடித்துள்ளார்.

இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தனர். 'மௌனிகாவும் என் மனைவிதான்' என்று 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார் பாலு மகேந்திரா. 1998-ம் ஆண்டு கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.

 

காலை 11 மணிக்கு பாலு மகேந்திரா இறுதிச் சடங்கு!

சென்னை: நேற்று மரணமடைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் இறுதிச் சடங்குகள் இன்று காலை 11 மணிக்கு சென்னை போரூர் மின் மயானத்தில் நடக்கிறது.

பாலு மகேந்திராவின் உடல் பொதுமக்கள் மற்றும் திரைத் துறையினர் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா சினிமா பட்டறை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாலுமகேந்திராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காலை 11 மணிக்கு பாலு மகேந்திரா இறுதிச் சடங்கு!

இறுதிச் சடங்குகள் போரூர் மின் மயானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (பிப்.14) காலை நடைபெறுகிறது.

பாலு மகேந்திராவின் உடல் காலை 11 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பாலுமகேந்திராவுக்கு மனைவி அகிலா, மகன் ஷங்கி மகேந்திரா ஆகியோர் உள்ளனர். ஷங்கி மகேந்திராவும் ஒளிப்பதிவாளராக உள்ளார்.

இன்னொரு மனைவியான மௌனவிகாவும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முயன்று வருகிறார். ஆனால் அவரை பங்கேற்க விடாமல் சிலர் தடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

காதலர் தின ஸ்பெஷலாக 320 அரங்குகளில் வெளியாகும் இது கதிர்வேலன் காதல்!

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு இன்று 320 அரங்குகளில் வெளியாகிறது உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள 'இது கதிர்வேலன் காதல்' திரைப்படம்.

உதயநிதி-நயன்தாரா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது கதிர்வேலன் காதல். இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது.

காதலர் தின ஸ்பெஷலாக 320 அரங்குகளில் வெளியாகும் இது கதிர்வேலன் காதல்!

‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இரண்டாவது படம் இது.

நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீசான ‘ஆரம்பம்', ‘ராஜா ராணி' படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்' படம் வருகிறது.

இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது. கிட்டதட்ட 320 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படம், ஆரோ 11.1, டால்ஃபி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.