கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டி கும்பல்: கமிஷனரிடம் நடிகை சிந்து புகார்!

கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டி கும்பல்: கமிஷனரிடம் நடிகை சிந்து புகார்!

சென்னை: கந்து வட்டி வாங்கியதற்காக, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மகள் மீது ஆசிட் வீசப்போவதாக விடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை கௌரி என்கிற சிந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

இவர் பரதேசி படத்தில் கங்காணியின் மனைவியாக நடித்தவர் ஆவார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், கூறியுள்ளதாவது:

''நான் 'ஐ.நா.' என்ற திரைப்படம் எடுப்பதற்காக புரசைவாக்கத்தை சேர்ந்த சாந்தி, அமுலு, ஈஸ்வரி, சுகந்தி, குட்டிமா (எ) வசந்தி ஆகியோரிடம் சுமார் ரூ.4 லட்சம் கந்து வட்டியாக வாங்கியிருந்தேன். வாங்கிய பணத்திற்கு காலம் தவறாமல் வட்டியை, வாங்கிய பணத்தை விட அதிகமாக தந்து விட்டேன். மேற்படி 'ஐ.நா.' படம் சூட்டிங் குறுகிய காலம்தான் எடுத்தோம். இப்படத்தின் இணை தயாரிப்பாளர் வெளிநாடு சென்று இருப்பதால் படம் தற்போது எடுக்காமல் காலதாமதாமாகி இருக்கிறது. இதனால் வாங்கிய பணத்தை என்னால் கொடுக்க முடியவில்லை.

இதனால், மேற்படி நபர்கள் தொடர்ந்து தொலைபேசியிலும், என்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கு வந்து, அடியாட்களை வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு, அயனாவரத்தில் இருக்கும் எனது சகோதரி வீட்டிற்கு சென்று அவர்களையும் மிக அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, 'உங்களை கொன்று சாட்சியில்லாமல் எரித்து விடுவேன்' என்று கூறி மிரட்டுகிறார்கள்.

மேலும், எனது மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று குழந்தையை கடத்தி கொன்று விடுவேன் என்றும், சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து என் மீது ஆசிட் ஊற்றி விடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள். அதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

மேலும் இதன் காரணமாக தொடர்ந்து மனஉளைச்சல் ஏற்பட்டு கடந்த 6ஆம் தேதி மதியம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அருகில் உள்ளவர்கள் என்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், 'ஐ.யூ.சி. வார்டில் வைத்து உன்னை கொலை செய்து விடுவேன்' என்றும், 'எனக்கு எல்லா பக்கமும் ஆட்கள் இருக்கிறார்கள்' என்றும் போனில் மிரட்டுகிறார்கள். இவர்களுக்கு பயந்து எனது போனை சுவிட்ச் ஆப் செய்ததினால், என் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருந்தால் நான் எப்படி கடனை அடைப்பது. நான் பணம் தரவில்லை என்று கூறவில்லை. எனக்கு போதிய கால அவகாசம் தர வேண்டுமாய் கேட்கின்றேன்.

எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும், சாந்தி, அமுலு, ஈஸ்வரி, சுகந்தி, குட்டிமா (எ) வசந்தி ஆகியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

 

சிறந்த விளம்பரங்களுக்கான TEA அவார்ட்ஸ் - சூர்யா, சிம்ரன், தேவயானி, ராதாரவிக்கு விருது!

சென்னை: சிறந்த விளம்பரங்களுக்கான தாமஸ் எடிசன் அட்வர்டைஸ்மெண்ட் விருது (TEA Awards) வழங்கும் விழாவில் நடிகைகள் சிம்ரன், தேவயானி, ராதாரவி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.

எடிசன் அவார்ட்ஸ் அமைப்பின் தலைவர் ஜெ செல்வகுமார் இந்த 2013-ம் ஆண்டிலிருந்து புதிதாக விளம்பரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இந்த ஆண்டு சிறந்த விளம்பரங்கள், தயாரித்த நிறுவனங்கள் மற்றும் அதில் நடித்த கலைஞர்களுக்கு ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை லேடி ஆண்டாள் அரங்கில் நடந்த இந்த வண்ணமிகு விழாவில் பிரபலமான விளம்பரங்களில் நடித்த நடிகர் நடிகைகள், அந்த விளம்பரங்களைத் தயாரித்த நிறுவனங்கள் பங்கேற்றன(ர்).

சிறந்த விளம்பரங்களுக்கான TEA அவார்ட்ஸ் - சூர்யா, சிம்ரன், தேவயானி, ராதாரவிக்கு விருது!

மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

மத்திய தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிப் பேசினார். விளம்பரங்களின் முக்கியத்துவம் குறித்து அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

சூர்யாவுக்கு

ஏர்செல் ஆண் விளம்பரத் தூதருக்கான ராயல் கிங் விருது ஏர்செல் விளம்பரத்தில் இடம்பெற்ற சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. குடும்ப நிகழ்ச்சிக்காக மும்பை சென்றுள்ள சூர்யா சார்பில் ரேணுகா ஜெயபால் பெற்றுக் கொண்டார்.

சிறந்த தொலைத் தொடர்பு விளம்பரத்துக்கான விருது ஏர்செல்லின் கனெக்டிங் ஹார்ட்ஸ் விளம்பரத்துக்குக் கிடைத்தது. இதனை அந்த நிறுவனத்தின் ரேணுகா ஜெய்பால், சங்கர் நாராயணன் பெற்றுக் கொண்டனர்.

சிறந்த ரியல் எஸ்டேட் விளம்பரத்துக்கான கேட் ஆப் ஈடன் கார்டன் விருது அக்ஷயா ஹோம்ஸ் விளம்பரத்துக்காக ஸ்ரீகாந்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த விளம்பரங்களுக்கான TEA அவார்ட்ஸ் - சூர்யா, சிம்ரன், தேவயானி, ராதாரவிக்கு விருது!

சிறந்த நகைக்கடை விளம்பரத்துக்கான விருது ஜோஸ் ஆலுகாஸுக்கு வழங்கப்பட்டது. நிறுவனத்தின் இயக்குநர் வர்கீஸ் ஆலுக்காஸ் அதைப் பெற்றுக் கொண்டார்.

சிறந்த குளிர்பான விளம்ரத்துக்கான பெஸ்டிவ் செலப்ரேட்டர்ஸ் விருது செவன் அப்புக்காக தயாரிக்கப்பட்ட விளம்பரத்துக்கு வழங்கப்பட்டது. அதனை பெப்சிகோவின் தமிழக தலைவர் ஸ்ரீகாந்திடம் வழங்கினர்.

சிம்ரன்

குர்குரே பாக்கெட் திண்பண்டத்துக்காக சிம்ரன் தோன்றும் விளம்பரத்துக்காக தி டேஸ்டி ஸ்டிக்ஸ் விருது வழங்கப்பட்டது. நடிகை சிம்ரன் பெற்றுக் கொண்டு நன்றி கூறினார்.

சிறந்த விளம்பரங்களுக்கான TEA அவார்ட்ஸ் - சூர்யா, சிம்ரன், தேவயானி, ராதாரவிக்கு விருது!

ஸ்ரீகாந்த்

ஆலயா வேட்டி சட்டை விளம்பத்தில் தோன்றிய நடிகர் ஸ்ரீகாந்துக்கு தி எத்னிக் ஐகான் விருது வழங்கப்பட்டது.

சிறந்த இரு சக்கர வாகன விளம்பரத்துக்கான தி வின்ட் ஆப் ஜூப்ளியேஷன் விருது மஹிந்திரா ட்யூரோ விளம்பரத்தில் நடித்த கரணுக்கு வழங்கப்பட்டது.

ராதாரவி

நேஷனல் வேட்டி விளம்பரத்தில் நடித்த ராதாரவிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

சர்வதேச அளவில் சிறந்த விளம்பரத்துக்கான விருது (The Journey of Delight Award ) மலேசியன் டூரிசத்துக்கு வழங்கப்பட்டது. மலேஷிய தூதர் சித்ராதேவி பெற்றுக் கொண்டார்.

ஏர் ஏசியா நிறுவனத்தின் விளம்பரத்துக்கு The Exquisite Pic Award வழங்கப்பட்டது. இதனை நிறுவனத்தின் இந்திய தலைவர் மிட்டு சண்டிலியா பெற்றுக் கொண்டார்.

சிறந்த அவுட்டோர் விளம்பரத்துக்கான The Panache of Showcase விருது மெட்ரோ மல்டி மீடியாவின் முரளிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த வங்கி

சிறந்த வங்கிக்கான விருது (Friendly Guardian) ரெப்கோ வங்கிக்கு வழங்கப்பட்டது. ரெப்கோ வங்கியின் எம்டி வரதராஜன் இதனைப் பெற்றுக் கொண்டார்.

சிறந்த கால் டாக்சிக்கான விருது என்டிஎல் கால் டாக்சிக்கு வழங்கப்பட்டது.

தேவயானி

மிராக்கிள் ஆப் மைல்ஸ்டோன் விருது நடிகை தேவயானி, ராம்நாத் Ram Nath RNB & IBP Studio - Malaysia Saint TFC -க்கு வழங்கப்பட்டது.

சிறந்த விளம்பரப் பட இசை அமைப்பாளருக்கான விருது விஜய் ஆன்டனிக்குக் கிடைத்தது. சிறந்த விளம்பர நிறுவனத்துக்கான விருது சேலஞ்ச் நிறுவனத்தின் ஜெயந்திக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நடிகர்கள் ரமேஷ் கண்ணா, குண்டு கல்யானம், நடிகை தேவயானி உள்பட பலரும் கலந்து கொண்டனர். நடிகர் வின்சென்ட் அசோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

 

சிமா விருது விழாவுக்கான டிக்கெட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி: முந்துங்கள்

துபாய்: துபாயில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கும் தென்னந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவுக்கான டிக்கெட்டுகள் 10 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்படும்.

இவ்விழாவில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன் லால், தனுஷ், ஆர்யா, அனிருத், ஸ்ரேயா சரண், சோனு சூத், ராணா, ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, உஷா உதூப், ரம்யா நம்பீசன், பிரனிதா, ரிச்சா, பார்வதி ஓமனக்குட்டன், பாருல் யாதவ், பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமார், உபேந்திரா, ஸ்ரீதேவி, அசின், நயன்தாரா, காஜல் அகர்வால் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

சிமா விருது விழாவுக்கான டிக்கெட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி: முந்துங்கள்

இந்த விழாவுக்கான டிக்கெட்டுகள் 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. தள்ளுபடியில் டிக்கெட்டுகள் கிடைக்குமிடம்,

கராமா - சிவ்ஸ்டார் பவன்(04-3362566), ஷார்ஜா ரோல்லா - 06-5210066
குஸைஸ் - யம்மி ரெஸ்டாரன்ட் (04-2677337) | 050-4735151
தேரா - பார்பிக்யூ வேர்ல்ட் (தேரா ஷெரடன் எதிரில்) 04-2562555, 04-2562888), சென்னை பிரியாணி - (04-2394884)
(இன்டர்நேஷனல் சிட்டி) அம்மாஸ் ரெஸ்டாரன்ட் - (04-4308038), மெட்ராஸ் மசாலா - (04-4580820),
டிஐபி ஏரியா - 055-9562617, ஷார்ஜா - 06-5447983

10 நபர்கள் அமரக்கூடிய டேபிள் முன்பதிவுக்கு (கார்பரேட் மற்றும் தனிநபர்) ரமேஷ் மற்றும் கீதா ஆகியோரை +97150-5865375 மற்றும் +97150-2748691 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

சினிமாவில் எனக்கு நிறைய ராணிகள் இருக்கிறார்கள்… ஆர்யா

சினிமாவில் எனக்கு நிறைய ராணிகள் இருக்கிறார்கள்… ஆர்யா

சினிமாவில் எனக்கு நிறைய ராணிகள் இருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் ராணியாக போகும் பெண்ணை இதுவரை நான் கண்டுபிடிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஆர்யா.

இன்றைக்கு ஊடகங்களில் அதிகம் கிசுகிசுவில் இடம் பெறும் ஜோடி ஆர்யா - நயன்தாராதான்.

‘பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் இணைந்த இந்த ஜோடி இப்போது ‘ராஜாராணி' படத்தில் இணைந்து நடிக்கின்றனர் இதற்கான விளம்பரமே இருவரின் திருமண போஸ்டர்தான். இதனால் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ஆர்யா, ‘ராஜா ராணி' படத்தில் நயன்தாராவும் நானும் கணவன்-மனைவியாக நடிக்கிறோம். படத்தில் எங்களின் திருமண காட்சியொன்று உள்ளது. அதை படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்தினர். இதற்காக எங்களை இணைத்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. என்னைப் பற்றி இதுபோன்ற செய்திகள் வெளியாகும் போது நான் சினிமாவில் இன்னும் இருக்கிறேன் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. ஏனென்றால் பிரபலமாக இல்லாதவர்களை கண்டு கொள்ளமாட்டார்கள்.

பெற்றோர் நிச்சயித்து நடக்கும் நிறைய திருமணங்கள் ‘ஈகோ', தகராறு காரணங்களால் நன்றாக இல்லை. அந்த ‘கரு' ராஜா ராணி படத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கதை மிகவும் பிடித்தது. வசனங்களும் சிறப்பாக உள்ளன. இதில் துறுதுறு இளைஞனாகவும், கணவனாகவும் இரு கெட்டப்பில் வருகிறேன். நான் எதையும் மறைக்க மாட்டேன், எனக்கு காதல் ஏற்பட்டால் உடனே ரசிகர்களுக்கு தெரிவித்து விடுவேன் இவ்வாறு ஆர்யா கூறியுள்ளார்.

 

சினிமா தயாரிப்பாளராகும் சுரேஷ்கிருஷ்ணா! மிஸ் இந்தியா அழகியை அறிமுகப்படுத்துகிறார்

சினிமா தயாரிப்பாளராகும் சுரேஷ்கிருஷ்ணா! மிஸ் இந்தியா அழகியை அறிமுகப்படுத்துகிறார்

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்தின் மூலம் 2012 ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வான வான்யா மிஷ்ராவை அறிமுகம் செய்கிறார்.

ரஜினி, கமல் ஆகியோருக்கு மாஸ் திரைப்படங்களை கொடுத்தவர் சுரேஷ்கிருஷ்ணா. கடந்த 27 வருடங்களில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

‘சத்யா', ‘இந்திரன் சந்திரன்', ‘அண்ணாமலை', ‘வீரா', ‘பாட்ஷா', தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூன், மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான் உள்ளிட்ட சூப்பர் மற்றும் மெகா ஸ்டார்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இவர் தற்போது சுரேஷ் கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் புதிய படக்கம்பெனியை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றை தயாரித்து, இயக்கவிருக்கிறார்.

காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தில் நாயகனாக பிரின்ஸ் மற்றும் நாயகியாக ‘2012 மிஸ் இந்தியா' வான்யா மிஷ்ரா ஆகியோர் அறிமுகமாகின்றனர். இதற்கான போட்டோ சூட்டிங் சென்னையில் முடிந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

 

பீட்ஸா 2 வில்லாவிற்கு யுஏ சான்றிதழ்… வரிச்சலுகை கட்!

பி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் பீட்சா 2 - வில்லா படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன்மூலம் வரிச்சலுகை கிடைப்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டது சென்சார்.

பீட்சா மாதிரியே, வில்லா படமும் திகில் கதையம்சம் கொண்டதுதான். பீட்ஸாவில் ஆவி எதுவும் கிடையாது. வில்லாவில் ஆவி உண்டாம். குழந்தைகள் பெற்றோர்களின் துணையில்லாமல் பார்க்க முடியாது என்பதால் சென்சார் யுஏ சான்றிதழ் தந்துள்ளது.

தமிழக அரசின் 30 சதவீதம் வரிச்சலுகை பெற முக்கியமான இரண்டு விதிகள் உண்டு. அதன்படி படத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும், யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பின்னதில் வில்லா கோட்டைவிட்டதால் படத்திற்கு வரிச்சலுகை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

பீட்ஸா 2 வில்லாவிற்கு யுஏ சான்றிதழ்… வரிச்சலுகை கட்!

மிரட்டும் டிரைலர்

படத்தின் டிரைலரே மிரட்டலாக அமைந்துள்ளது. படம் பற்றி கூறிய இயக்குநர் தீபன் சக்ரவர்த்தி, வில்லா' திரைப்படம் ‘பீட்சா'வின் தொடர்ச்சி அல்ல. இது வேறு; அது வேறு. ஆனால், ‘பீட்சா' போல் ஒரு வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இது எடுக்கப்பட்டிருக்கும். ஒரு வீட்டுக்குள் நடக்கும் சில முக்கிய சம்பவங்கள்தான் இதன் கதை. இது பேய் படம் அல்ல. கிளாசிக்கல் திகில் படம். சஸ்பென்ஸ் உடைந்து விட்டால் த்ரில் போய்விடும் என்பதால், கதை பற்றி இதற்குமேல் எதுவும் சொல்ல முடியாது என்றார்.

பீட்ஸா 2 வில்லாவிற்கு யுஏ சான்றிதழ்… வரிச்சலுகை கட்!

முதன் முறையாக இந்த படமானது டால்பி அட்மாஸ் என்ற நவீனதொழில் நுட்பத்தில் ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாம். இது ரசிகர்களுக்கு புதுமையான உணர்வையும், அனுபவத்தையும் ஏற்படுத்தும். இந்த படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

 

ஏழரையை கூட்டிய காமெடி நடிகர்: காண்டாகி இருக்கும் அரசு அதிகாரிகள்

சென்னை: விலை உயர்ந்த கார் வாங்கும் காமெடி நடிகர் தான் நடித்துள்ள படம் ஒன்றில் அரசின் குட்கா விளம்பரத்தை நக்கலடித்துள்ளாராம். படம் வரட்டும் அப்புறம் பார்த்துக்குவோம் என்று அரசு அதிகாரிகள் சூடாக உள்ளார்களாம்.

விலை உயர்ந்த கார் வாங்கும் காமெடி நடிகர் தீபாவளிக்கு ரிலீஸாகும் சிறுத்தையின் படத்தில் நடித்துள்ளார். வழக்கமாக தனது படத்தில் யாரையாவது கிண்டலடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த காமெடியன். இந்நிலையில் சிறுத்தையின் படத்தில் படம் துவங்கும் முன்பு தியேட்டர்களில் வரும் குட்கா விளம்பரத்தை கிண்டல் செய்துள்ளாராம்.

அந்த விளம்பரத்தை பார்த்து பலர் திருந்தி வரும் நிலையில் காமெடியனின் நக்கல் அரசு அதிகாரிகளை கடுப்பேத்தியுள்ளதாம். படம் வரும் வரை காத்திருப்போம். வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறார்களாம் அதிகாரிகள்.

படம் வந்த பிறகு நடிகருக்கு ஏதோ பெரிதாக காத்திருக்கிறது.

 

துபாய் பல் டாக்டரை மணந்தார் நடிகர் பரத்... செப் 14-ல் சென்னையில் வரவேற்பு!

துபாயைச் சேர்ந்த பல் டாக்டர் ஜெஸ்லியை நேற்று மணந்தார் நடிகர் பரத். திருமண வரவேற்பு வரும் 14-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 555 படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.

பரத்துக்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா - ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லி (பல்மருத்துவர்)ஆகிய இருவருக்கும் திருமணம் 09.09.2013 ஆம் தேதி பெற்றோர் முன்னிலையில் நடந்தது.

துபாய் பல் டாக்டரை மணந்தார் நடிகர் பரத்... செப் 14-ல் சென்னையில் வரவேற்பு!

வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர்14 அன்று சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு நடக்கிறது.

திரைப்படத் துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்ற கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - விமர்சனம்

Rating:
3.0/5
எஸ்.ஷங்கர்

நடிப்பு: சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி, பிந்துமாதவி
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியன்
இசை: இமான்
வசனம்: எம் ராஜேஷ்
தயாரிப்பு: எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் பி மதன்
இயக்கம்: பொன்ராம்

சில படங்கள் ஏன்டா பார்த்தோம் என வருத்தப்பட வைக்கும். 'வ வா ச' அப்படி வருத்தப்பட வைக்கவில்லை. சிவகார்த்திகேயன் காட்டில் மழை தொடர்கிறது.

கதை ரொம்ப வழக்கமானது. அடுத்து என்ன நடக்கும் என புரிந்து கொள்ள சிரமமற்றது.

கிராமத்துப் பெரிசு சத்யராஜ். காதலித்தால் காதை அறுக்கும் ரகம். தன் செல்லமகள் ஸ்ரீதிவ்யா காதலில் விழாமல் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறார். ஆனால் எதிர்ப்பார்த்த மாதிரியே வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் சிவகார்த்திகேயனை லவ்வ ஆரம்பிக்கிறார். உடனே வேறு மாப்பிள்ளை பார்க்கிறார் சத்யராஜ். சிவகார்த்தியும் ஸ்ரீதிவ்யாவும் ஊரைவிட்டே எஸ்ஸாகிறார்கள். எப்படி எஸ்ஸானார்கள், சேர்ந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ். கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முயன்று ட்ராமா பண்ணியிருக்கிறார்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - விமர்சனம்

படத்துக்குப் படம் சிவகார்த்திகேயன் பாடி லாங்குவேஜில் முன்னேற்றம் தெரிந்தாலும், அவர் வசன உச்சரிப்பில் மாற்றமே இல்லை. மனம் கொத்திப் பறவை, கேபிகேர, எதிர்நீச்சல் என எல்லாப் படங்களிலும் ஒரே ஏற்ற இறக்கத்தோடுதான் அவர் டயலாக் டெலிவரி இருக்கிறது. கொஞ்சம் யோசித்தால் இந்த நான்கு படங்களிலும் அவருக்கு ஒரே மாதிரி ரோல்... ஒரே மாதிரி வசனம், ஒரே மாதிரி லவ்.. நேரம் நல்லா ஒர்க் அவுட் ஆகும்போதே ரூட்டை ஸ்டெடி பண்ணுங்க சிவகார்த்திகேயன்!

ஹீரோயின் ஸ்ரீதிவ்யா, திரைக்குப் புதுசு. இயல்பான முகம்... எப்போதும் குறும்பு தவழும் கண்களும் இதழ்களும். கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சில காட்சிகளில் வரும் அனுபவ நடிகை பிந்து மாதவியை 'ஜஸ்ட் லைக் தட் ஓரம்' கட்டுகிறார் இந்த சின்னப் பெண்.

சத்யராஜ் வழக்கமான அப்பா கேரக்டருக்கு வந்துவிட்டார். க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க அவரையும் காமெடியனாக்கியிருக்கிறார்கள். அந்த நெருக்கடியான நேரத்திலும் தனக்கு வாய்த்த இரு மூத்த மாப்பிள்ளைகள் பற்றி அவர் புலம்புமிடம் வெகு இயல்பு. அதேபோல கூட இருந்தே ஏத்திவிடும் அல்லக் கைகளால் எழும் ஈகோவை அவர் சொல்லிக் காட்டும் க்ளைமாக்ஸ் குபீர்!

சூரிக்கு கிட்டத்தட்ட ஹீரோவுக்கு சமமான வாய்ப்பு. அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா தெரியவில்லை. சந்தானத்தைப் போல, வெறும் வசனங்களால் ஒப்பேற்றாமல், உடல் மொழியால் ரசிகர்களை ஈர்க்கும் திறனை இயல்பிலேயே பெற்றுள்ள சூரி, இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள நிறைய உழைக்க வேண்டியிருப்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. சிவகார்த்திகேயன் எப்படி நான்கு படங்களிலும் ஒரே மாதிரி தொடர்கிறாரோ அப்படித்தான் சூரியும் இந்தப் படத்தில்!

அந்த ஆடலும் பாடலும் காட்சியும் அதில் இடம்பெற்ற நிலா காயுது பாடலும்... பல மாரியம்மன் திருவிழாக்களை நினைவுபடுத்தியது!

சத்யராஜின் அல்லக்கைகளாக வரும் நால்வருமே கலகலக்க வைக்கிறார்கள். குறிப்பாக ஏகத்துக்கும் ஏத்திவிடும் தண்டபாணி!

கிணற்றில் விழும் மாட்டை காப்பாற்றும் காட்சி, நிச்சயம் ஏதோ ஒரு கிராமத்தில் இயக்குநருக்கு நேர்ந்த அனுபவமாக இருக்கலாம்... அத்தனை நேர்த்தி, இயல்பு!

டி இமானின் இசை இந்தப் படத்துக்கு பெரும் பலம். ஊதா கலரு ரிப்பன்... வரிகளைத் தாண்டி ரசிக்க வைக்கும் மெட்டு. அடுத்து அந்த 'பார்க்காதே பார்க்காதே...' அத்தனைப் பாடல்களும் ஏற்கெனவே கேட்ட மாதிரி இருந்தாலும், படத்தில் உட்காரும் நேரம் முழுவதும் நம்மை கட்டிப் போடுகிறது. இமான்... கமான்!

இத்தனை ப்ளஸ்கள் இருந்தாலும், அவற்றுக்கு இணையான மைனஸ்களுக்கும் படத்தில் குறைவில்லை.

முக்கியமாக சத்யராஜ் பாத்திரம். இவர் ஒன்றும் அத்தனை ஆபத்தான அப்பா இல்லை. இப்படித்தான் மாறப் போகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துமளவுக்குத்தான் இந்த கேரக்டர் உள்ளது.

நான்கு காட்சிகளில் வருகிறார் பிந்து மாதவி. ஆனால் முதல் காட்சியிலேயே நிரூபித்துவிடுகிறார் தனக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை என்று. குறிப்பாக மாணவி தரும் காதல் கடிதத்துக்கு அவர் காட்டும் ரியாக்ஷன்!

ராஜேஷின் உதவியாளரான பொன்ராம் தன் குரு வழியில் எந்த லாஜிக் பற்றியும் ரசிகர்களை யோசிக்க விடாமல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

இவற்றில் சிரிப்பு குறைவாக இருந்தாலும், வெறுப்பில்லாமல் பார்க்கும்படி இயக்கிய விதத்தில், முதல் படத்திலேயே மினிமம் கியாரண்டி இயக்குநராகத் தெரிகிறார் பொன்ராம்!

 

தனது பள்ளி ஆசிரியைக்கு உதவிய ரஜினி: மகராசனாக இருக்க வாழ்த்திய சாந்தம்மா

தனது பள்ளி ஆசிரியைக்கு உதவிய ரஜினி: மகராசனாக இருக்க வாழ்த்திய சாந்தம்மா

சென்னை: ஆசிரியர் தின விழா அன்று ரஜினிகாந்த் தனது பள்ளி ஆசிரியைக்கு ரூ.3 லட்சம் அளித்துள்ளார்.

ஆசிரியர் தின விழா அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனது பள்ளி ஆசிரியை சாந்தம்மாவின் நினைவு வந்துள்ளது. உடனே அவர் தனது உதவியாளரை அழைத்து சாந்தம்மாவை அணுகி தான் அடுத்த முறை பெங்களூர் வரும்போது அவரை சந்திப்பதாக தெரிவித்துவிட்டு அவருக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்குமாறு தெரிவித்துள்ளார்.

விசாரித்ததில் சாந்தம்மா தனது கணவருடன் ஒரு குடிசையில் கஷ்டப்படுவது தெரிய வந்தது. அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு ரூ.3 லட்சம் பணம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரது வங்கிக் கணக்கில் ரூ.3 லட்சம் போடுமாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சாந்தம்மா கூறுகையில்,

நான் சிவாஜி ராவுக்கு 5ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பாடம் எடுத்தேன். அவன் படிப்பு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அதிகம் சேட்டை செய்வான். அவன் கையெழுத்து அழகாக இருக்கும். அவன் தலையெழுத்தும் நன்றாக இருக்கும் என்று அப்போதே நினைத்தேன். அது போன்றே அவன் யாரும் நினைத்துக் கூட பார்க்காத உயரத்தில் இருக்கிறான். நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கும் நிலைமையில் அவன் இருக்கிறான். ஆனால் எனக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேட்டேன் அவனும் கொடுத்துள்ளான்.

அவன் மேலும் நன்றாக இருக்க வேண்டும். ஆண்டவன் அவனுக்கு நீண்ட ஆயுளை அளிக்க வேண்டும் என்றார்.

 

ஓணம் பண்டிகை கேரளாவிற்கு வரும் நடிகை ஸ்ரீதேவி

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகை வாரவிழாவில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினாராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் பாரம்பரியம்மிக்க பண்டிகையாக திருவோணம் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. அஸ்தம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் நடைபெறும் விழாவை மலையாள மொழி பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

கேரளா சுற்றுலாத்துறை சார்பில் ஓணம் வாரவிழா வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6.30 மணி அளவில் திருவனந்தபுரம் சந்திரசேகரன் நயார் ஸ்டேடியத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி விழாவை தொடங்கி வைக்கிறார்.

ஓணம் பண்டிகை கேரளாவிற்கு வரும் நடிகை ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி, பிரதிவிராஜ்

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை ஸ்ரீதேவி கலந்து கொள்கிறார். பிரபல நடிகர் பிரதிவிராஜ், எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன், சுற்றுலா துறை அமைச்சர் அனில்குமார், மேயர் சந்திரிகா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பிரபல பெருவனம் குட்டன் மாரார் தலைமையில் 101 கலைஞர்கள் கலந்து கொள்ளும் பாண்டிமேளம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினசரி கலை நிகழ்ச்சிகள்

20ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் 27 இடங்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், இசை, நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஓணம் பேரணி

இறுதிநாளான 20ம் தேதி பிரசித்த பெற்ற ஓணம் பேரணி நடைபெறும். இதில் கண்கவர் அலங்கார ஊர்திகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.

குவியும் காய்கறிகள்

இப்பண்டிகைக்கு தேவையான காய்கறிகள், பூக்கள் ஆகியவை தமிழகத்தில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகின்றன. நெல்லை நயினார் மார்க்கெட்டில் இருந்து கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், பத்தினம்திட்டா,மூணார், உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காய்கறிகள் லாரி லாரியாக கொண்டு செல்லப்படும். கேரளாவில் திருவோணம் கொண்டாடும் சூழலில் நெல்லை மார்க்கெட்டுக்கு தற்போது காய்கறிகள் மூடை மூடையாக குவிய தொடங்கியுள்ளன.

விலை உயர்வு

மார்கெட்டுககு வராத காய்கறிகள் பெங்களூரு, ஓசூர், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் பூசணி, தடியங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே கோவில்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவில்லை. எனவே அவை வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் கடுமையாக உயர்ந்துள்ளது.

 

கிசுகிசுக்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நம்பர் நடிகை

சென்னை: இன்சியல் இயக்குநரின் தயாரிப்பில் உருவாகி வரும் சரித்திரப் படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. படத்தின் இயக்குநர் பிரம்மாண்டத்திற்குப் பெயர் போன இயக்குநரின் சிஷ்யர். அந்த மரியாதையில் தனது குருநாதரை அழைக்கப் போக, அவரோ ஒரேயடியாக மறுத்து விட்டாராம். காரணம், இன்சியலுக்கும் பிரம்மாண்டத்துக்கும் இடையில் புகையும் நெருப்பு தானாம்.

இது ஒருபுறம் இருக்க, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு படத்தின் இருநாயகிகளும் மிஸ்ஸிங். ஒருவர் வேறொரு பட வேலையில் பிசியோ பிசி. ஆனால், மற்றொரு நம்பர் நடிகையோ மன உளைச்சலால் தான் பங்கேற்கவில்லையாம்.

இன்சியல் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விழாவில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம் நடிகை. தொடர்ந்து உண்டான காதல் வலிகளே இன்னும் ஆறா வடுக்களாக இருக்க, இப்போது புதிய வலியாக இப்படத்தின் நாயகனோடு உண்டான கிசுகிசுவும் தான் நடிகையின் ஆப்செண்டுக்குக் காரணமாம்.

விரைவில் ரகசிய திருமணம், அதுவும் ஐதராபாத்தில் என இடம், காலம் குறித்து வதந்திகள் பரவுகிறதாம். படத்தின் புரோமோஷனுக்காக படக் குழுவினரும் சில வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியதும் நடிகையின் மன வருத்தத்திற்கு பிண்ணனியில் உள்ளதாம்.

 

சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டுவிழா - ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டுவிழா - ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

சென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வரும் 21-ம் தேதி தொடங்கி நான்கு தினங்கள் சென்னையில் நடக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே, கடந்த 1913-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி அன்று ‘ராஜா அரிச்சந்திரா' என்ற படத்தை வெளியிட்டார்.

ஜெயலலிதா, பிரணாப் முகர்ஜி

இந்தியாவில் வெளியான முதல் திரைப்படம் அதுதான். தொடர்ந்து மும்பை மற்றும் சென்னையில் இருந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாக தொடங்கின.முதல் சினிமா வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த ஆண்டு (2013) இந்திய சினிமா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.சென்னையில், சினிமா நூற்றாண்டு விழாவை 4 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. வருகிற 21-ந் தேதி, முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

நிறைவு விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில்

சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா நடைபெறுவது தொடர்பாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் நேற்று மாலை நிருபர்களிடம் கூறுகையில், "இந்திய சினிமா நூற்றாண்டு விழா, செப்டம்பர் 21-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பொறுப்பேற்று நடத்துகிறது.இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை, இதுபோன்ற மாபெரும் விழா நடத்தும் முயற்சி, முதல்வர் ஜெயலலிதாவின் முழு ஒத்துழைப்பு மூலமாக மட்டுமே சாத்தியமானது.

தொடக்க விழா

செப்டம்பர் 21-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தொடர்ந்து 22-ந் தேதி காலை கன்னட சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், அன்று மாலை தெலுங்கு சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி காலை மலையாள சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

நிறைவு விழா

அனைத்து இந்திய சினிமா உலகினரும் பங்கு பெறும் நிறைவு நாள் உச்சகட்ட நிகழ்ச்சி 24-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார்கள். கவுரவ விருந்தினராக தமிழக கவர்னர் கே.ரோசய்யா பங்கேற்கிறார்.விழாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து பல அமைச்சர்களும் ரஜினி - கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள்.

அமிதாப்பச்சன்

நிறைவு நாள் உச்சக்கட்ட நிகழ்ச்சியில், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்துகொள்கிறார். அவருடன் வட இந்திய நடிகர்-நடிகைகள் பலரும் பங்கேற்கிறார்கள். சினிமா நூற்றாண்டு விழாவின் முன் நிகழ்வுகளாக சென்னை நகரத்தில் பொதுப் பூங்காக்களை ஒலி-ஒளியினால் அலங்கரித்து, அதில் சினிமா கலை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். பழைய சினிமா படங்களும் திரையிடப்படும். சென்னை கடற்கரையிலும் பழைய சினிமா படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும்.

இலவச சினிமா

சென்னை சத்யம், அபிராமி ஆகிய திரையரங்குகளில் வருகிற 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பொது மக்களுக்கு பழைய சினிமா படங்கள் இலவசமாக காட்டப்பட இருக்கிறது. சென்னை நகரமே விழாக் கோலம் பூணும்படி, நகரை சிறப்பாக அலங்கரிக்க இருக்கிறோம்.

தென்னிந்திய சினிமா சங்கங்கள், குறிப்பாக தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழாடு இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கத்தினர் அனைவரும் உரிய பங்களிப்பை அளிக்க முன்வந்து இருக்கிறார்கள்.

ஒரு வாரம் விடுமுறை

18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற ஆதரவும், முழு ஒத்துழைப்பும் கொடுத்து, தாய் அன்போடு உதவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்," என்றார்.

கேயார்

பேட்டியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார் மற்றும் புதிய நிர்வாகிகள், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பிலிம் சேம்பர் செயலாளர் எல்.சுரேஷ், பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், ‘பெப்சி' தலைவர் அமீர் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

24-ம் தேதி சினிமா காட்சிகள் ரத்து

தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் பேசும்போது, "செப்டம்பர் 24-ந் தேதி சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும்," என்றார்.

 

கோச்சடையான் ட்ரைலர் எப்படி? உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சரிங் 3 டி படம் என்ற அறிவிப்போடு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகிவிட்டது.

இணையத்திலும், வெளியிலும் ரஜினி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த டீசர் குறித்து கலவையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான ரசிகர்கள் இந்த டீசர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தாலும், சிலர் தங்கள் அதிருப்தியையும் காட்டியுள்ளனர்.

மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்திலும் நிஜ ரஜினியின் உருவம் மற்றும் ஆக்ஷனையே எதிர்ப்பார்த்த தீவிர ரசிகர்கள், இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கோச்சடையான் ட்ரைலர் எப்படி? உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

சிலர், அட பொம்மைப் படம் மாதிரி பீல் பண்ண வச்சிருச்சே இந்த சவுந்தர்யா என்று தெரிவித்துள்ளனர்.

மற்றொரு தரப்போ, 'இந்த வகை தொழில்நுட்பத்தில் இந்தியாவில் வெளியாகும் முதல் படம் கோச்சடையான். இது முதல் டீசர்தான். அதுவும் சில நொடி காட்சிகள் மட்டுமே. படத்தில் ரஜினியின் நிஜ உருவமே தோன்றும் காட்சிகளும் உள்ளதால், முழுமையான ட்ரைலர் வரும்வரை பொறுத்திருப்போம் என கருத்து வெளியிட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் விமர்சகர் தரன் ஆதர்ஷ் இந்த டீசரை பாராட்டியுள்ளார். இந்திய தரத்தில் இப்படி ஒரு படத்தை உருவாக்கியிருப்பதே சாதனை என்றும், இந்த வகைப் படங்கள் வெளிவர ரஜினி பிள்ளையார் சுழி போட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி கருத்துகள் கலவையாக இருந்தாலும், நிமிடத்துக்கு நிமிடம் இந்த டீசரைப் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தத் தலைமுறையிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர் பலரும்.

சரி, இந்த டீசைரை நீங்க பாத்துட்டீங்களா... உங்க கருத்து என்ன?