தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நான் நியாயப்படியே நடந்து கொண்டேன். இதை புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன் விசாரித்து உண்மையை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று ராம.நாராயணன் கூறியுள்ளார்.
கலைஞர் டிவியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் ராம.நாராயணன், அதிமுக ஆட்சியைப் பிடித்ததுமே தனது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை விட்டு ஓடி விட்டார்.
தற்போது அவர் மீது ரூ. 15 கோடி மோசடி செய்துவிட்டதாகவும், ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டதாகவும், திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டதாகவும் தயாரிப்பாளர்கள் புகார் கூறுகின்றனர்.
தன் மீதான புகார்களுக்கு ராம.நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து வருடங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தலைவராக நான் பணிபுரிந்தது என்னுடன் இருந்த நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்.
120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை.
இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.
நியாயப்படி நடக்கும் என்னை சங்கத்தின் முன்னாள் தலைவரும் மற்றவர்களும் சங்கத்தில் 15 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பொய்யான தகவலை கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர்.
சங்கத்தில் வரவு-செலவு கணக்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிர விசாரித்து உண்மை நிலையை எல்லோருக்கும் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் கிளம்பியுள்ள இந்தப் பூசல் எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை.