பார்வையற்றோர் - மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கிய சினேகா - பிரசன்னா

Sneha Prasanna Present Free Gifts

சென்னை: பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு உடை மற்றும் வீல் சேர்களை வழங்கினர் நடிகை சினேகா - பிரசன்னா தம்பதியர்.

அகில இந்திய பார்வையற்றோர் முன்னேற்ற சங்கத்தின் 32-வது ஆண்டுவிழா, சங்கத்தின் தலைவர் புலவர் ஏ.கே.அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. சாய் சமாஜ் தலைவர் கே.தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

விழாவில், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் டி.விஜயகுமார், மாவட்ட மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு அதிகாரி சீனிவாசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் வி.விஜயகுமார், மாற்றத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் பொருளாளர் எம்.பி.நந்தகுமார், சமூக சேவகி எம்.லதா, டபுள்யூ.ராமச்சந்திரன், என்.எப்.பி.நிர்வாகி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி, பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு, உடை, வீல் சேர், மாணவர்களுக்கு சி.டி ஆகியவற்றை, நடிகை சினேகா மற்றும் பிரசன்னா வழங்கினர்.

விழாவில், 'மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையின் நகலை வைத்து, வெளியூர் செல்லும் பஸ்களில் பயணம் செய்வதற்கு பதிலாக, பார்வையற்றவர்கள், தமிழகம் முழுவதும் இலவசமாக பயணம் செய்வதற்கு வசதியாக 'ஆல் ரூட்' பஸ் பாஸ் வழங்கவேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வருக்கு வைத்திருப்பதாக அகில இந்திய பார்வையற்றோர் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.கே.அருணாசலம் தெரிவித்தார்.

 

முத்தத்திற்கு படு்க்கையறைக் காட்சியே மேல்: பிபாஷா பாசு

Bipasha Basu Prefers Love Making Over Smooching   

மும்பை: முத்தத்திற்கு படுக்கையறைக் காட்சியில் நடிப்பதே மேல் என்று பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.

மாடலாக இருந்து நடிகையான பிபாஷா பாசுவும், முத்த மன்னன் இம்ரான் ஹஷ்மியும் நடித்துள்ள ராஸ் 3 படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பிபாஷா தனது திரையுலக வாழ்க்கை பற்றி கூறியிருப்பதாவது,

2001ம் ஆண்டில் அஜ்னபி படத்தில் முதன்முதலாக நடித்தேன். அதன் பிறகு தயாரிப்பாளர் மகேஷ் பட் என்னால் நடிக்க முடியும் என்று நம்பிக்கை அளித்ததால் ராஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். முதலில் படங்களில் நடிக்க தயக்கமாக இருந்தது. ஆனால் தற்போது படங்களுக்கு தான் என்னுடைய முதல் முக்கியத்துவம்.

அனைத்து ஹீரோயின்களுமே அழகான ஆடைகள் அணிந்து, பாட்டு பாடி டான்ஸ் ஆடி, ஹீரோ தன்னை காப்பாற்றும் மசாலா படங்களில் நடிக்க விரும்புவார்கள். எப்பொழுதாவது தான் வித்தியாசமான படங்களில் நடிப்போம். பிறகு மீண்டும் மசாலா படங்களில் நடிக்கவே விரும்புவோம். ஏனென்றால் அங்கு தான் நிறைய பணம் புரளும்.

ராஸ் 3 படத்தில் இம்ரான் ஹஷ்மியுடனான முத்தக் காட்சி தான் இதுவரை படங்களில் வந்துள்ள முத்தக் காட்சிகளிலேயே மிகவும் நீளமானது. அந்த காட்சியில் அவருக்கு முத்தம் கொடுக்கும் வேளையில் பேசவும் வேண்டும் என்பதால் கஷ்டமாக இருந்தது. முத்தக் காட்சிகளில் நடிப்பதற்கு பதில் படு்க்கையறைக் காட்சிகளில் நடிக்க விரும்பும் ஒரே ஹீரோயின் நானாக தான் இருப்பேன் என்று கூறிவிட்டு சிரித்தார்.

 

சோ உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜெ வைத்த விருந்து!

Jaya Throws Party Film Personalitie

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா திரைப்பட நடிகர் நடிகையரை தனது இல்லத்துக்கு அழைத்து மதிய உணவு விருந்தளித்தார்.

மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு திரை இசைச் சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தை வழங்கி கவுரவித்த முதல்வர் ஜெயலலிதா, இன்று தன்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள், தனக்கு மூத்த கலைஞர்களுக்கு விருந்து வைத்தார்.

அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த விருந்து நடந்தது.

இவர்களில் பழம்பெரும் திரைப்பட நடிகரும், துக்ளக் இதழாசிரியருமான சோ ராமசாமி, பழம்பெரும் திரைப்பட நடிகைகள் அஞ்சலி தேவி, சௌகார் ஜானகி, சரோஜா தேவி, ஜமுனா, குமாரி சச்சு, ராஜஸ்ரீ, சுகுமாரி, பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சுசீலா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

சங்கீதத்தோடு இங்கிதமும் கொஞ்சம் தெரியும் எனக்கு... இத்தோட நிறுத்திக்கிறேன்! -எம்எஸ்வி

I Learned Music With Decency Msv

சென்னை: ஜெயா டிவி சார்பில் தனக்கு நடந்த பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் நான்கே வரிகளில் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

சங்கீதத்தோடு கொஞ்சம் இங்கிதமும் எனக்குத் தெரியும். அதனால், என் பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா உள்பட பேருக்கு மட்டுமே பேச அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இதில் ஜெயலலிதாவின் உரைதான் மிகப் பெரியது. அவர் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த உரையை வாசித்தார்.

பின்னர் எம்எஸ்வியை ஏற்புரையாற்ற அழைத்தனர். அவர் மிகச் சுருக்கமாக இப்படிச் சொன்னார்:

"எனக்கு சங்கீதத்தோடு கொஞ்சம் இங்கீதமும் தெரியும். அதனால் பேச்சை இத்தோட முடிச்சிக்கிறேன். இருக்கும் வரைக்கும் யாருக்கும் பிரச்சினை இல்லாமல், எங்களால முடிஞ்ச இசைப்பணியை செய்யும் வல்லமையை இறைவன் தரணும்னு கேட்டுக்கிட்டு, முடிச்சிக்கிறேன்," என்றார்.

டிகே ராமமூர்த்தி ஒரு வணக்கம் போட்டுவிட்டு கீழே வந்துவிட்டார்.

பொதுவாக ஏற்புரையில் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசுவார்கள், நிகழ்ச்சியின் நாயகர்கள். ஆனால் எம்எஸ்வி, தன்னை விட தன் இசை பேசட்டும் என்ற நினைப்புடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார் போலும்!

 

மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கன்னட நடிகர் அர்ஜூன் கைது

Kannada Actor Arjun Arrested Harass

பெங்களூர்: மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கன்னட நடிகர் அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.

கன்னட நடிகர் அர்ஜுனுக்கு 34 வயது ஆகிறது. இவர் கன்னட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் அர்ஜுனுக்கும் லதாஸ்ரீ என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அர்ஜுன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி லதாஸ்ரீயை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் கோபித்துக் கொண்டு லதாஸ்ரீ பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

ஆனாலும் அர்ஜுன் அவரை விடவில்லை. நேற்று இரவு குடிபோதையில் மாமனார் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த வீட்டுக் காவலருடன் சண்டை போட்டு, வீட்டுக்குள் புகுந்தார்.

வீட்டில் இருந்த லதாஸ்ரீயையும் அடித்து உதைத்தார். இதுகுறித்து லதாஸ்ரீ பெங்களூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் அர்ஜுனை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

 

தலைமுறைகளைக் கடந்த இசை எம்எஸ்வியுடையது! - கமல்ஹாஸன்

Ms Vishwanathan Music Is Beyond Generations   

சென்னை: எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மூன்று, நான்கு தலைமுறைகளையும் தாண்டி இன்றைய தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

ஜெயாடிவி 14-ம் ஆண்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியைப் பாராட்டி கமல்ஹாஸன் பேசியது:

"இது என் குடும்பம். அதேபோல் முதல்-அமைச்சரும் நினைத்ததால் தான் இங்கே நம்முடன் அமர்ந்திருக்கிறார். என் குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்கள் சொன்னது போல, நாங்கள் செய்யவேண்டியதை நீங்கள் செய்து எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மூன்று, நான்கு தலைமுறைகளையும் தாண்டி இன்றைய தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது. என் மகளை நான் இசை பயில அமெரிக்கா அனுப்பி வைத்தேன். அவள் இசைப்பயிற்சி முடித்ததும் என்னிடம் போனில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வந்த ஒரு பாடலை டியூன் பண்ணி 'இது யாருடைய இசை?' என்று கேட்டாள். அந்த அளவுக்கு இந்த தலைமுறையையும் கவர்ந்தது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.

அதன்பிறகு அவள் பயிற்சி முடிந்து வந்ததும் நேராக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அழைத்து வந்தேன். இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை எனறார், இளையராஜா. அவரே அப்படி சொல்லி விட்ட பிறகு நான் என்ன சொல்லிப் பாராட்டுவது?

இங்கே வந்திருந்த அத்தனை கலைஞர்களையும் நமது முதல்-அமைச்சர் கவுரவித்து பாராட்டியபோது என்னையே பாராட்டியதாக உணர்ந்தேன். முக்கியமாக பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்களை பாராட்டியபோது நான் சினிமாவில் முதன்முதலாக அவர்கள் பாடிய `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாடலுக்குத்தான் வாயசைத்து நடித்தது மனதில் வந்தது. அவர்களை முதல்-அமைச்சர் பாராட்டியபோது என்னையே கவுரவித்தது போல் உணர்ந்தேன்", என்றார்.

கே பாலச்சந்தர்

இயக்குநர் கே பாலச்சந்தர் பேசுகையில், "1950-ம் ஆண்டுகளில் இருந்து இசையில் சாதனை செய்து வரும் இந்த இசை மேதைகளை போற்றும் விதத்தில் இவர்களுக்கு திரையுலகம் எடுத்திருக்க வேண்டிய விழாவை ஜெயா டி.வி. எடுத்திருக்கிறது.

எம்.எஸ்.விஸ்வநாதனுடன் தமிழில் 24 படங்களிலும் தெலுங்கில் 10 படங்களிலும் பணியாற்றிய காலகட்டத்தை மறக்க முடியாது. நான், எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் மூவரும் பணியாற்றிய நாட்களில் எனக்கு கிடைத்த பெயரையும் புகழையும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். அவரது இசைக்கு இன்னும் தேசிய அங்கிகாரம் கிடைக்காதது மட்டும் இன்னும் எனக்குள் ஏக்கமாகவே இருக்கிறது,'' என்றார்.

ஏவிஎம் சரவணன்

ஏவி எம் சரவணன் பேசுகையில், "மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிடைக்கவில்லை என்ற மனக்குறை எங்களுக்கு உண்டு. அவருக்குப் பின் வந்த இளையராஜா, ரஹ்மானுக்கு கிடைத்திருக்கிறது.

அது அவர்கள் திறமைக்காக கிடைத்தது என்றாலும், இவர்களுக்கும் கிடைக்க வேண்டும். நிச்சயமாக அம்மா (முதல்வர்) அவர்களின் ஆசியுடன் அந்த விருதுகளும் இவர்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.

 

வைகை அணையில்... வெண்ணிற ஆடை படப்பிடிப்பில்... - இசைஞானியின் ப்ளாஷ்பேக்

Ilayaraaja Remembers His First Shooting Experience

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, தனது இளமை நாட்களில் பார்த்த முதல் ஷூட்டிங், ஜெயலலிதாவின் வெண்ணிற ஆடை படப்பிடிப்புதான் என்றார்.

விழாவில் இளையராஜா பேச்சு சுருக்கமாக, ஆனால் கச்சிதமாக இருந்தது.

அவர் பேசியது:

கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்களைத் தந்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு முதல்வர் இப்படி பெரிய பாராட்டுவிழா நடத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

சிறு வயதில், நான் படிக்க மிகவும் கஷ்டப்பட்ட காலம். அப்போது பள்ளிக்குப் போகும் நேரம் போக, மீதி நேரத்தில் வைகை அணையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு ஹோஸ் பைப்பில் தண்ணீர் பாய்ச்சுவது என் வேலை.

ஸ்ரீதர் சார் என்றால் எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஆசை. எங்களுக்கெல்லாம், எனக்கு, பாரதிராஜாவுக்கு, அண்ணன் பாஸ்கருக்கெல்லாம் அவர்தான் ஹீரோ. வெண்ணிற ஆடை படப்பிடிப்புக்காக அவர்கள் வைகை அணைக்கு வந்திருந்தபோது நானும் மற்றவர்களும் கூட்டத்தோடு கூட்டமாக பார்த்த முதல் ஷூட்டிங் அதுதான்.

அந்த ஷூட்டிங்குக்காக முதல்வர் புரட்சித்தலைவி அவர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் போகும் (பாடிக் காட்டுகிறார்...) என்ற பாடலுக்கு அவர்கள் நடித்தார்கள்.

மிக அருமையான பாடல். என் நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் கேட்டது கேட்டுக் கொண்டிருப்பது அண்ணன் எம்எஸ்வி அவர்களின் இசையைத்தான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒவ்வொன்றும் கேட்கத் திகட்டாதவை. என் உடம்பில் நாடி நரம்பிலெல்லாம் அந்த இசைதான் ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்று எனக்குள் இருக்கும் இந்த இசை அண்ணன் எம்எஸ்வி போட்ட பிச்சைதான். அவர் தூ என துப்பியதுதான்..

அவர்களை வேறு என்ன சொல்லி வாழ்த்தினாலும் சரியாகாது. இசை வடிவங்களாகத் திகழும் இந்த மேதைகளை உரிய நேரத்தில் கவுரவித்த முதல்வர் அவர்களுக்கும், ஜெயா டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு இளையராஜா பேசினார்.

 

என்னமா யோசிக்கிறாங்க... - முகமூடி படத் தலைப்புக்கும் வேணுமாம் தடை!!

Small Producer Seeks Ban Mugamoodi   

சென்னை: ஏதாவது ஒரு சொத்தைக் காரணம் இருந்தாலும், அதை முகாந்திரமாக வைத்து ரீலீஸ் நேரத்தில் ஒரு படத்தை முடக்க முடியுமா.. அதில் ஏதாவது பப்ளிசிட்டி கிடைக்குமா என்று ஆராய்வதில் டாக்டரேட் பட்டமே கொடுக்க வேண்டும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு.

சிறிய தயாரிப்பாளர் என்பது இவர்களுக்கு ஒரு ஆயுதம். அப்படி ஒரு ஆயுதத்துடன், நாளை மறுநாள் வெளியாக உள்ள மிஷ்கினின் முகமூடி படத்துக்கு தடை கேட்டு சிலர் களமிறங்கியுள்ளனர்.

சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் எம்.சசிகலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நான் அர்த்தநாரீஸ்வரர் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனியின் உரிமையாளர். முகத்திரை என்ற தலைப்பில் சினிமா தயாரிக்கும்படி கடந்த 2010-ம் ஆண்டில் முடிவு செய்து, அதை சட்டப்படி 27.8.11 அன்று பதிவு செய்தோம்.

பல லட்சம் ரூபாய் செலவில் தயாராகும் இந்த படத்தை ஆர்.எஸ்.கணேஷ் இயக்குகிறார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பத்திரிகை மற்றும் டி.வி.களில் வந்த விளம்பரத்தில், முகமூடி என்ற பெயரில் யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சினிமாப்படம் 31-ந் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

முகத்திரை என்ற பெயரை நாங்கள் பதிவு செய்த பிறகு அந்த பெயரை பிரதிபலிக்கும் வேறு பெயர்களை பதிவு செய்யக்கூடாது. ஆனால் முகத்திரை என்ற தலைப்பை ஒட்டிவரும் முகமூடி என்ற தலைப்பை பதிவு செய்துள்ளனர்.

முகமூடி என்ற பெயரில் சினிமா வெளியே வந்தால், மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதோடு, எங்களுக்கும் நஷ்டம் ஏற்படும். எனவே முகமூடி என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த 17-வது சிட்டிசிவில் கோர்ட்டு நீதிபதி, தென்னிந்திய தமிழ் சினிமா தயாரிப்பாளர் கில்டு, தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர் கவுன்சில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள சூப்பர் ஹீரோ கதை முகமூடி. மிஷ்கின் இயக்க, யுடிவி தயாரிப்பில் ஜீவா, நரேன், பூஜா, கிரீஷ் கர்னாட் நடித்துள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது.

 

என் சிபாரிசை ஏற்கவில்லை: எம்.எஸ்.விக்கு பத்ம விருது தர மத்திய அரசு மறுத்துவிட்டது- ஜெயலலிதா

Delhi Denies Honour Msv Tk Ramamoorthy With Padma Award

சென்னை: இசை இரட்டையர் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு பத்ம விருதுகள் வழங்குமாறு சிபாரிசு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினேன். ஆனால் மறுத்துவிட்டது, என்று குற்றம்சாட்டினார் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் 'நான் சொன்னால் இந்த விருதுகளைத் தரும் காலம் கனியும்.. அன்று கிடைக்கச் செய்வேன்', என்று உறுதியளித்தார்.

ஜெயா டி.வி.யின் 14ம் ஆண்டுத் துவக்க விழா மற்றும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அவர் பேச்சு:

இருபதாம் நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசை மாமேதைகளான மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே கௌரவிப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை நல்கிய ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு எனது நன்றி.

இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை.

அதனால்தான் "இசைக்கு மயங்காதார் எவருமில்லை", "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள்.

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி.

இசைப் பின்னணி இல்லாத எம்எஸ்வி..

இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த எம்.எஸ். விஸ்வநாதன், நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13-வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "ஜெனோவா" திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ். விஸ்வநாதன், ‘பணம்' திரைப்படம் முதல் ‘ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் வரை டி.கே ராமமூர்த்தியுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில், 1,200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை எம்.எஸ்.வி.யைச் சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான்.

முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்; மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் எம்.எஸ்.வி.

ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர் எம்.எஸ்.வி. . தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. . மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், மனப் பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார்.

அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய பல கலைஞர்கள் இவர் மூலம் வளம் பெற்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘நீராருங் கடலுடுத்த' என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர் எம்.எஸ். விஸ்வநாதன்.

வயலின் ஸ்பெஷலிஸ்ட் டிகே ராமமூர்த்தி..

டி.கே. ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் மட்டுமல்ல வில்லிசை மன்னரும் கூட. இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். மிகப் பெரிய வயலின் வித்வான். பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் வரும் ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா' என்ற பாடலில் வரும் சோக இசை டி.கே. ராமமூர்த்தியின் வயலின் இசையாகும். சி.ஆர். சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் டி.கே. ராமமூர்த்தி . அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன்.

எதிர்பாராத சூழ்நிலையில் சுப்பராமன் இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாக பல திரைப் படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள். இப்படிப்பட்ட இசை மாமேதைகளை நமக்களித்த சுப்பராமனுக்கும் நாம் இந்தத் தருணத்தில் நன்றி செலுத்த வேண்டும்.

நுட்பமான இசை..

இன்னிசையாய், செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்கள் பல நம் மனதிற்கும், நினைவிற்கும் என்றும் இனிமைத் தரக் கூடியவை. அன்று முதல் இன்று வரை ராமநாதன், மகாதேவன், ஆதி நாராயண ராவ், சலபதி ராவ், தக்ஷிணாமூர்த்தி, சுப்பைய்யா நாயுடு, இளையராஜா போன்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ இனிமையான பல பாடல்களை நமக்குத் தந்துள்ளனர். பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளனர். நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அளவுக்கு இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.

இவர்கள் இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து மக்களை பரவசத்திற்கு உள்ளாக்கின. ஹம்மிங், கோரஸ், பறவை இனங்களின் ஒலிகள், விசில் போன்றவற்றை மிக நுட்பமாக இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தி மக்களின் மனதை உருக வைத்து, நினைவில் நிலைத்து இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.

நினைவில் இருந்து நீங்காத அளவுக்கு மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அனைத்தும் பிரபலம் அடைந்ததற்கு கதையின் தன்மை, நடிகர்கள் மற்றும் நடிகையர்களின் திறமையான நடிப்பு, இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமை, முக்கியமாக கண்ணதாசன், வாலி போன்ற மிகப் பெரிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதிய விதம், மிகத் திறமை வாய்ந்த ஈடு இணையற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. லீலா, ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ஏ.எம். ராஜா, பாலசரஸ்வதி, ராகவன், சரோஜினி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடல்களை பாடிய விதம் போன்றவை காரணங்களாக இருந்தாலும், இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் என்றும் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்து இருக்கும் பாடல்களாக திகழ்வதற்கு, புகழ் பெறுவதற்கு காரணம் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் அமைந்தது என்பதுதான் உண்மை.

உயிர் மூச்சுள்ளவரை...

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் வளரும் போது எவ்வளவோ விஷயங்களை பார்த்து, ரசித்து, அனுபவித்து இருக்கிறேன். காற்று, நிலவு, பூமி, கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டற கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டற கலந்து இருக்கிறார்களோ, அதே போல் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அந்த இசையுடனேயே நான் வளர்ந்திருக்கிறேன்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950-களிலும், 1960-களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன.

தொலைக்காட்சிகளில் இன்றைக்கும் இசைப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 10-வயது, 12-வயது சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்தப் போட்டிகளில் இந்தக் குழந்தைகள் பாடுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடல்கள் எல்லாம் இந்த மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் தான். எனது தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்கள் எல்லாம் இவர்கள் இசையமைத்த படங்களை பார்த்ப்பார்கள். அதில் உள்ள பாடல்களை கேட்டிருப்பார்கள். அவ்வாறு படங்களை பார்க்காமலேயே இந்தக் காலத்து குழந்தைகளுக்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை தான் பிடித்க்கிறது. அந்த ராகம் தான் பிடித்திருக்கிறது. அதனால், இவர்கள் இசையமைத்த பாடல்களை தெரிந்தெடுத்து போட்டிகளிலே பாடுகிறார்கள்.

நான் குழந்தையாக இருந்த போதே புகழ் பெற்று விளங்கியவர்கள் இந்த மெல்லிசை மன்னர்கள். அப்போது தொலைக்காட்சி இல்லை; வீடியோ இல்லை; சி.டி., டி.வி.டி., கணினி, டேப் ரிகார்டர் ஆகிய எதுவும் கிடையாது. ரேடியோவும், கிராமபோனும் தான் இருந்தன. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு கிராமபோன் என்றால் என்ன என்றே தெரியாது. இசைத்தட்டு என்றால் என்ன என்றே தெரியாது. இப்படிப்பட்ட நவீன தகவல்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத போதே புகழின் உச்சியில் இவர்கள் இருந்க்கிறார்கள் என்றால் அது மிகவும் வியக்கத்தக்கது.

இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால் தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒரு முறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில், குழந்தையாக இருந்த போது, அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர் மூச்சு உள்ளவரை, அந்தப் பாடல்கள், என் மனதைவிட்டு அகலாது.

"சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே" என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் பிரபல கர்நாடக சங்கீத மேதை மதி டி.கே. பட்டம்மாள் கண்ணீர் விட்டு அழுததாக நான் கேள்விபட்டிருக்கிறேன். நானே பார்த்து ரசித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வீணை காயத்ரியிடம், "உங்களுக்கு சினிமா பாடல் பிடிக்குமா" என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, உடனே வீணையை எடுத்து "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா" என்ற பாடலை வாசித்துக் காண்பித்தார்கள்.

அதாவது, திரைப்படப் பாடல்களில் நாட்டம் இல்லாத கர்நாடக இசை மேதைகளையும் தன் வயப்படுத்தியவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி.

இசையால் நம்மை புது உலகுக்கு கொண்டு செல்வது போன்ற உணர்வைத் தந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை. மெலடி யுகத்தை உருவாக்கி இனிமையையும், நவீனத்தையும், காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தவர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இசையை இனிய திசைக்கு திருப்பிவிட்டவர்கள்.

உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் புகுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து முதன் முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்திய பெருமை இந்த மெல்லிசை மன்னர்களையே சாரும். கேட்போரை ஈர்த்து இழுக்கும் வகையில் இனிமையான சுருதியினைக் கொண்ட பல பாடல்களை தந்தவர்கள். உலக இசையை தமிழ் இசையில் புகுத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்து புகழ் பெற்று விளங்கினார்கள்.

இசையை ரசிக்க ஞானம் வேண்டுமா...

இசையைப் பற்றி நுணுக்கமாக தெரியாதவர்களையும் இசைய வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களுக்கு உண்டு.

சங்கீதத்தைப் பற்றி நுணுக்கமாக எதுவும் தெரியாமல் சங்கீதத்தை ஒருவர் ரசிக்க முடியுமா?

இந்தக் கேள்விக்கு திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பல ஆண்டுகளுக்கு முன் வானொலி பேட்டி மூலம் பதில் சொல்லியிருக்கிறார்.

இசை ரசிகர்களை இரு வகையாக பிரிக்கலாம். சங்கீத லட்சணங்களையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, குற்றம் குறைகள் எங்கே வரும் என்று எதிர்பார்த்து அதை விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு விதம். இவர்கள் எல்லாம் லட்சண ஞானஸ்தர்கள்.

இன்னொரு விதம் சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இசையை ரசிக்கும் ரசிகர்கள். இவர்கள் எல்லாம் லட்சிய ஞானஸ்தர்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள் தான் அதிகம். இவர்கள் சுலபமாய் புரிந்து கொண்டு ஆனந்தப்படும் வகையில் இசையமைக்க வேண்டும் என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.

திருச்சி மலைக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம். மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை வாசித்துக் கொண்டிருந்தார். நாட்டை, மல்லாரி எல்லாம் வாசித்து முடித்தவுடன், ராக ஆலாபனையை ஆரம்பித்தார்.

ஒரு முக்கியமான கட்டத்தில், "பலே" என்று ஒரு குரல் கேட்டது. அந்தப் பாராட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? கியாஸ் லைட் தூக்கிக் கொண்டிருந்த ஓருவர் தான் அப்படி சபாஷ் போட்டார். பல இடங்களில் இது போன்ற நாதஸ்வர இசையை கேட்டுக் கேட்டு ஞானம் அடைந்த லட்சிய ஞானஸ்தர் அந்த ரசிகர். இதைக் கேட்ட அந்த நாதஸ்வர வித்வானுக்கு பரமானந்தம். இதை நினைக்க, நினைக்க நமக்கு சந்தோஷம் பொங்குகிறது என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.

லட்சண ஞானஸ்தராக இருந்தாலும் சரி, லட்சிய ஞானஸ்தராக இருந்தாலும் சரி, இசையிலிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இனிமையையும், இன்பத்தையும் தான்.
தங்களது ஜனரஞ்சகமான இசையின் மூலம் லட்சிய ஞானஸ்தர்களை, அதாவது பாமரர்களை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், லட்சண ஞானஸ்தர்களான இசை மேதைகளும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.

திரையிசையின் பொற்காலம்...

இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தை தான் "பொற்காலம்" என்று சொல்வார்கள். அது போல, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம் தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்த கால கட்டத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றின் காரணமாகவே அந்தக் காலம் தென்னிந்திய திரைப்பட இசையின் பொற்காலமாக திகழ்ந்தது.

இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்மா விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது.

என் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை...

சென்ற ஆண்டிற்கான பத்மா விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. "ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்" என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்மா விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

1963-ஆம் ஆண்டு விஸ்வநாதன் - ராமமூர்த்தி-க்காக ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில் தான், இவர்களுக்கு "மெல்லிசை மன்னர்கள்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு என்னுடைய தாயார் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நாமும் நடத்த வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசை. அந்த ஆசை இன்றைக்கு ஜெயா டி.வி. மூலம் நிறைவேறி இருக்கிறது.

இசையின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிய இசைப் பயணம் வெற்றிப் பாதையில் இனிதே தொடர வேண்டும் என்று வாழ்த்தி, இசையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல இசையமைப்பாளர்களை, பாடகர்களை உருவாக்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மத்திய அரசின் விருதுகள் நிச்சயம் உங்களை நாடி வரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

 

ரசிகர்களை மிரள வைத்த மடோனாவின் 'லோ கட்'!

Madonna Spills Of Her Basque Onstage

லண்டன்: 54 வயதானாலும் மடோனாவின் அழகும், ஸ்டைலும் சற்றும் கட்டுக் குலையாமல் அப்படியே இருக்கிறது. அவரது அழகு கொடுக்கும் இம்சையிலிருந்து மீள முடியாமல் ரசிகக் கண்மணிகள் தவியோ தவியென்று தவிக்கும் நிலை. இந்த நிலையில் படு லோ கட்டான ஒரு டிரஸ்ஸுடன் வந்து ரசிகர்களுக்கு மேலும் கிளர்ச்சியூட்டியுள்ளார் மடோனா.

மேடை நிகழ்ச்சிகளின்போது அவ்வப்போது மார்புகளைக் காட்டுவது, கவர்ச்சியாக ஆடுவது என்று கலக்கி வந்த மடோனா திடீரென படு லோ கட்டான ஒரு டிரஸ்ஸில் வந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். அவரை படு கவர்ச்சியாகப் பார்த்த அத்தனை பேரும் திறந்த வாயை மூட முடியாமல் தவித்துப் போய் விட்டனராம்.

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த நிகழ்ச்சியின்போது லோ கட் பாஸ்க் உடையுடன் வந்தார் மடோனா. கிட்டத்தட்ட அவரது முக்கால்வாசி மார்பகங்கள் வெளியே தெரிந்தன. மார்புகளின் முனைப்பகுதியும் கூட கிட்டத்தட்ட வெளியே தெரிந்தது. அப்படி ஒரு பூதாகர கவர்ச்சி டிரஸ் அது.

அந்த மேடையில் மடோனாவின் மகன் ரோக்காவும் கூட இணைந்து பாடினார். மகன் இருக்கிறானே என்று கூச்சம் கூட மடோனாவிடம் துளியும் இல்லை.

இந்த நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்காவில் தனது கச்சேரிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் மடோனா என்பது குறிப்பிடத்தக்கது.

 

திரும்ப வருவேன் – அமீர்கானின் சத்யமேவ ஜெயதே சீசன் 2

Get Ready Satyamev Jayate Season 2

கையில் இருக்கும் திரைப்படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் சத்யமேவ ஜெயதே சீசன் 2 மூலம் மீண்டும் மக்களை சந்திக்க வருவேன் என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இந்தியில் தயாரிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பானது சத்யமேவ ஜெயதே. இந்தி நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மூலம் சமூக அவலங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி வெறும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இல்லாமல் இன்றைய சமூகத்தில் நிலவும் சில அவலங்களை அலசி ஆராய்ந்து அவற்றைப் பற்றி விவரமாக தொகுத்தளிக்கும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இது அமைந்தது. பெண் சிசுக்கொலை தொடங்கி பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர் சிறுமியரின் நிலை, வரதட்சணை கொடுமை, மருத்துவ முறைகேடுகள், ஆடம்பர திருமணங்கள், இன்றைய சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் அவலங்கள் போன்ற தலைப்புகள் பற்றி இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பகுதி கடந்த மாதத்துடன் முடிவடைந்து விட்டது.

இதனிடையே எப்.எம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமீர்கான், தூம் 3, பிகே போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கின்றேன். இந்த படங்கள் முடிந்த உடன் மீண்டும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

சத்யமேவ ஜெயதே சீசன் ஒன்றிர்க்காக அமீர்கான் டீம் இரண்டு ஆண்டுகளாக நாடுமுழுவதும் சுற்றித்திருந்து தகவல்களை சேகரித்தனர். இது 13 பகுதிகளாக ஒளிபரப்பானது. மீண்டும் சீசன் 2 விற்கான பணிகள் செப்டம்பர் முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

‘மானாட மயிலாட 7’ சிறப்பு விருந்தினர் டாப்ஸி

Aadukalam Heroine On Maanada Mayilaada

மானாட மயிலாட நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் நடிகை டாப்ஸி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட பகுதி 7ன் இறுதிப் போட்டி மலேசியாவில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 8 ம் தேதி மாலாவதி உள் அரங்கத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் நான்கு ஜோடிகள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

மலேசியாவில் உள்ள தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு நடிகர், நடிகையர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக், நடிகை டாப்ஸி பங்கேற்று சிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மானாட மயிலாட பகுதி 7ன் நடுவர்களாக நடன இயக்குநர் கலா, நடிகைகள் குஷ்பு, நமீதா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்... ஜெயலலிதா.. எம்எஸ்வி!- அதிர வைத்த ரஜினி!

Success Or Defeats Not Affect Leaders Like Karunanidhi

சென்னை: வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட, காலத்தை வென்ற மனிதர்கள் ஒரு சிலர்தான். அப்படிப்பட்டவர்கள் மறைந்த காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர். அந்த வரிசையில் என் ஆருயிர் நண்பர் கலைஞர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா, எம்எஸ்வியும் இடம்பெற்றுள்ளனர், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவில் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்தியை கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாஸன், இயக்குநர் கே பாலச்சந்தர், தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவின் ஹைலைட்டாக அமைந்தது ரஜினியின் பேச்சு. அந்தப் பேச்சு முழுவதுமாக:

“இந்த விழாவின் நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி சார் அவர்களே, இந்த விழாவுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, கே.பி. சார் அவர்களே, சரவணன் சார் அவர்களே, இசைஞானி இளையராஜா அவர்களே, என்னுடைய அருமை நண்பர் கமல் ஹாசன் அவர்களே, (கீழே பார்த்து) விழாவுக்கு வந்திருக்கும் சோ சார் அவர்களே, சிவக்குமார் அவர்களே, திரையுலக பெரியவர்களே, அமைச்சர்களே, பத்திரிக்கை நண்பர்களே, என்னை வாழ வைக்கும், வாழ வைத்த தமிழக மக்களே அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

சிஎம்மா பதவியேற்ற பிறகு அவருக்கு திரையுலகின் சார்பில் பாராட்டு விழா நடத்தணும்னு சொல்லி நிறையபேர் விரும்பினாங்க. ஆனா முதல்வர் இப்போதைக்கு வேணாம்னு சொன்னதா கேள்விப்பட்டேன்.

இப்போ, அவங்களே வந்து இங்கே, எம்எஸ்விக்காக பெரிய பாராட்டு விழா நடத்துறாங்கன்னு சொன்னா.. அது ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச மாதிரிதான். இது திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் கூட பெரிய வாய்ப்பு. பெரிய விஷயம். உங்களை பாராட்ட இப்போ எங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.

ஜெயா டிவி 13 ஆண்டுகள் முடிந்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அந்த சாதனைக்காக அங்கே பணியாற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சிக்கிறேன்.

எனக்கும் ஜெயா டிவி பிடிக்கும். பல நல்ல நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எனக்கும் பிடிக்கும். அதேபோல, செய்திகளுக்கு முன்னாடி வரும் வரலாற்றுச் சுவடுகள் மிகவும் அருமையாக இருக்கும்.

அப்புறம் சோவின் எங்கே பிராமணன், தொடரை நான் விரும்பிப் பார்ப்பேன். சோ கொடுக்கிற விளக்கங்கள் நல்லா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நின்னுடுச்சி. நான்கூட சோ கிட்ட, ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், ‘சிஎம் கூட என்கிட்ட கேட்டாங்க்.. ஆனா எனக்குத்தான் நேரமில்லே’ன்னார். இந்த தமிழ்நாட்ல, சிஎம் சொல்லியும் கேட்காத ஒரு ஆள் இருக்கார்னா அது சோ சார்தான்…

ஒரு சின்ன செடியா இருந்த ஜெயா டி.வி. இன்னைக்கு கமல் சொன்ன மாதிரி ஒரு மரமா வந்திருக்கு தன்னோட சொந்த முயற்சியால.

இது எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா. இங்கே உள்ள எல்லாரை விடவும் நான்தான் ஜூனியர்னு நினைக்கிறேன் சினிமாவில். எம்எஸ்வி அவர்களைப் பாராட்ட இளையராஜா சார், கமல் போன்றவர்களே வார்த்தையில்லாமல் தயங்கும்போது, நான் மட்டும் என்ன சொல்லிடப் போறேன்.

அவருடன் நான் நிறைய படங்கள் கூட செய்யவில்லை. ஆனால் நான் பெங்களூரில் இருக்கும்போது, தமிழே தெரியாத கன்னடாக்காரங்க கூட, அர்த்தம் தெரியாமலே பாடும் பாட்டு போனால் போகட்டும் போடா… நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…

எனக்கு அப்போ மொழி தெரியலேன்னாலும் தமிழ்ப் படங்களுக்கு அதிகமா போவேன். அப்படி ஒருமுறை சர்வர் சுந்தரம் படத்துக்குப் போனேன். ஒரு சாதாரண சர்வர் சினிமா நடிகனாக எப்படி ஆகிறான் என்பது கதை. நானும் கண்டக்டரா இருந்து, சினிமா நடிகனாகணும்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம் அது.

அந்தப் படத்துல ஒரு பாட்டு, ‘அவளுக்கென்ன அழகிய மனம்..’. அதுல ஒரு சீன்ல மட்டும் எல்லோரும் கைத் தட்டறாங்க. எம்.ஜி.ஆர். ஒரு சிவாஜி இவங்களோட படங்கள்ல அறிமுகக்காட்சிக்கு எப்படி கைத்தட்டல், விசில் கிடைக்குமோ.. அப்படி ஒரு ரெஸ்பான்ஸ். எனக்கு புரியவேயில்லை. எதுக்கு எல்லாரும் இதுக்கு இப்படி கைத்தட்டுறீங்கன்னு பக்கத்துல இருந்தவரைக் கேட்டேன்.

‘அங்க கோட் போட்டுக்கிட்டு மியூசிக் கம்போஸ் பண்ற மாதிரி ஒருத்தரைக் காட்டறாங்களே… அவர்தான் இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் எம்எஸ் விஸ்வநாதன். அவருக்காகத்தான் இந்தக் கைத்தட்டல்,’ என்றார்.

ஒரு இசையமைப்பாளருக்கு இவ்வளவு வரவேற்பா.. ரசிகர்களா… இத்தனை மதிப்பான்னு ஆச்சர்யமா இருந்தது.

நான் இங்கே வந்த பிறகு, அபூர்வ ராகங்கள் சமயத்துலதான் நேர்ல பார்த்தேன். நான் சினிமாவுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பார்க்கும்போது… என்ன அவர் காவி உடை போடல… மத்தபடி நெத்தியில நீறு, குங்குமம் வெச்சிக்கிட்டு சாதாரணமா இருந்தார்.

மூன்று முடிச்சு படத்துல நான் பாடற மாதிரி ஒரு பாட்டு, அந்த போட் ஸாங். ‘மண வினைகள் யாருடனோ..’ எனக்கு தனித்துவமான முகம்.. அதுக்கேத்தமாதிரி Peculier வாய்ஸ் வேணும்னு கேட்டபோது, எம்.எஸ்.வி.சார்தான் எனக்காக குரல் கொடுத்தார்.

சினிமாவில் எனக்கு முதன் முதலா பாடினது எம்.எஸ்.வி சார்தான். அதுக்கப்புறம் நினைத்தாலே இனிக்கும் படத்துல ‘சம்போ சிவ சம்போ…’ பாட்டு பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.

எம்.எஸ்.வி. – ராமமூர்த்தி மாதிரி சாதனையாளர்களைப் பத்தி பேசும்போது, எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.

இந்த மரணம் என்பது இயற்கையானது. எல்லாருக்கும் வரக் கூடியது. இந்த மரணம் ஒரு தடவைதான் என்றில்லை… ரெண்டு முறை நிகழும். நிறைய பேருக்கு அதாவது தொன்னூறு சதவீத மக்களுக்கு மரணம் ஒரு தடவைதான். அதாவது உயிர் உடலைவிட்டு போனா முடிஞ்சது… பினிஷ்.. அவ்வளவுதான்.

இன்னொரு வகை… மிகப் பெரிய பேரும் புகழும் பெற்றவர்கள். அந்த பேரையும் புகழையும் தோல்வியாலேயோ இல்லே வேற சில காரணங்களாலேயோ இழந்துட்டா, அப்போ அவங்களுக்கு முதல் மரணம் வருது. அதற்கடுத்து இயற்கையாக உயிர் பிரியும்போது ரெண்டாவது முறையாக மரணம் நிகழும்.

ஆனா மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க ஒரு பர்சன்ட்தான். அவங்க வாழும்போதும் சரி, இறந்து போன பிறகும் சரி, அவங்க பேரும் புகழும் எப்பவுமே நிலைச்சிருக்கும். அவங்கள்லாம் சாகாவரம் பெற்றவர்கள். தனிப்பிறவி.

என் ஆருயிர் நண்பர் டாக்டர் கலைஞர்…

வடக்கில் பார்த்தீங்கன்னா… சினிமாவில வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே, எஸ்.டி.பரமன், நம்ம தமிழ்நாட்டுல பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி சார், கண்ணதாசன்… இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. இன்னும் அவர்கள் நம்மோடு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.

இன்று அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி… இவங்களுக்கெல்லாம் வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இவங்களைப் பொறுத்தவரை வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது.

ஏன்னா… அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வெற்றி, தோல்விகளை தாங்கிக்கொள்ளும் சமமான மனநிலையில இருப்பாங்க.

அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன். அவங்க கூட பழகியிருக்கேங்கிற சந்தோஷத்தோட,இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு, முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செய்து, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும், அதற்கு தேவையான நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் இறைவன் அவருக்கு வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன்.”

-இவ்வாறு பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.