அஜித்தின் அடுத்த அதிரடியான 'பில்லா 2' தமிழகம் தொடங்கி ஐரோப்பா வரையிலும் 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டைட்டில் பாடலுடன் ஒரு வார 'பேட்ச் ஒர்க்' மட்டுமே மீதமிருக்கும் நிலையில் 'பில்லா 2' பட பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அற்புதமாக வந்துள்ளதாக படக்குழுவை சேர்ந்தவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எப்போது பில்லா 2 தியேட்டர்களைத் தாக்கும்..?" என்றால், "ஏப்ரல் 2012..." என்கிறார் தெளிவாக.
திருமணத்தை ரத்து செய்தார் நடிகர் கோபிசந்த் : அதிர்ச்சியில் மணமகள் தந்தை தற்கொலை
'ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த், தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணத்தை திடீரென்று ரத்து செய்தார். இந்த அதிர்ச்சியில் மணமகள் தந்தை தற்கொலை செய்து கொண்டார். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம்: ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். தெலுங்கு படவுலகில் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்து முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார். இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் ராம்பாபுவின் 2வது மகள் ஹரிதாவுக்கும்(21) கடந்த ஜனவரி 26ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் திரையுலக¤னர், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது. தனது மருமகன் சினிமா ஹீரோ என ராம்பாபு பெருமையாக பலரிடம் கூறி திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தாராம். இந்நிலையில் திடீரென மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் திருமணம் வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் நடிகர் கோபிசந்த்-ஹரிதா திருமணம் நின்று போனது. இதனால் ராம்பாபு அதிர்ச்சியும், அவமானமும் அடைந்தார். இதை தாங்கிக்கொள்ள முடியாத அவர், நேற்று முன்தினம் ஐதராபாத் தில்சுக் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டின் படுக்கை அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பலமணி நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு வாயில் நுரைதள்ளியபடி ராம்பாபு இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டைட்டிலை மாற்றும் சுந்தர்.சி
சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடிக்கும் படம் 'மசாலா கபே'. ரோம்ப நாட்களுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் இது. சமீபகாலமாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சுந்தர்.சி, தற்போது மீண்டும் இயக்குனர் பணியில் களமிறங்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு விஷாலை வைத்து படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் 'மசாலா கபே' படத்தின் டைட்டிலை மாற்ற முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.
கண்மாய்கரையில் தூங்கிய வெளிநாட்டு ஹீரோயின்
தமிழ் படத்தில் நடிக்கும் வெளிநாட்டு நடிகை நம்மூர் கண்மாய்கரையில் தலைக்கு கையை வைத்து தூங்கி ஓய்வெடுத்தார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த எலினா அசன், செல்வின் ஜோடி நடிக்கும் படம் 'ஒண்டிப்புலி'. இப்பட இயக்குனர் ராஜகுரு கூறியதாவது: தண்ணீரின் தேவை, அணைகளின் அவசியம், தடுப்பணைகள் கட்ட வேண்டியதின் அவசரம் போன்றவற்றை மையமாக வைத்து இப்பட கதை உருவாகி உள்ளது. மழைநீர் கடலில் வீணாகிறது. பயிர் செய்யும் காலத்தில் அணைகள் திறக்கப்படாமல் அறுவடை காலத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தவறுகள் இப்போதும் நடக்கிறது. முல்லை பெரியாறு அணையை பென்னி குக் என்ற ஒற்றை மனிதர் தலைமை தாங்கி கட்டி முடித்தார். இந்த வரலாறும் இப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. செல்வின் ஹீரோ. எலினா அசன் என்ற ஜெர்மன் நாட்டு இளம்பெண் ஹீரோயின். இவர் டெல்லியில் இந்தோ-ஜெர்மன் தூதரக அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். நடிப்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி, பெரியகுளம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. தும்பிபுரம் என்ற இடத்தில் கண்மாய் அருகே ஷூட்டிங் நடந்தது. ஓய்வு நேரத்தில் கண்மாய் கரை ஓரத்திலேயே எலினா அசன் தூங்கி ஓய்வெடுத்தார். ஏசி கேரவேன் தந்தால்தான் ஷூட்டிங் வருவேன் என்று பல ஹீரோயின்கள் கண்டிஷன்போடும் இந்நாளில் கண்மாய் கரையோரம் ஒரு ஹீரோயின் தூங்கியதை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவரது எளிமை வியக்க வைத்தது. ஜேம்ஸ்வசந்தன் இசை. வைரமுத்து பாடல்கள். இப்பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு பென்னி குக்கின் கொள்ளுபேரன் சாம் சான் குக்கை அழைத்து வர உள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது.
இயக்குனர் ஆகிறார் சித்தார்த்
இயக்குனர் ஆகப்போவதாக கூறி இருக்கிறார் சித்தார்த். 'பாய்ஸ்', 'நூற்றெண்பது' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சித்தார்த். இவர் கூறியதாவது: அமலா பாலுடன் இணைந்து நான் நடித்துள்ள 'காதலில் சொதப்புவது எப்படி?' என்ற பெயரில் தமிழிலும், லவ் ஃபெயிலியர் என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கண்டு த்ரில்லாக உணர்கிறேன். 'பொம்மரில்லு' என்ற படம் தெலுங்கில் வெளியானபோது இதே அனுபவத்தை உணர்ந்தேன். 'கா.சொ.எப்படி' படம் மூலம் நான் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறேன். வியாபாரத்தில் வெற்றிக்கான புதுவித பாணி படமாக இப்படம் இருக்கிறது. இயக்குனர் இக்கதையை சொல்லும்போது இதுவரை கேட்காத பாணியில் அமைந்திருந்ததை உணர முடிந்தது. காதலில் சொதப்பாதவர்கள் இருக்க முடியாது. அப்படி சொதப்பும் பட்சத்தில் அந்த காதல் என்னவாகிறது என்பதுதான் கதை. இது எனது 10 வருட சினிமாவின் அனுபவத்தில் வந்தது. காதல் கதையை மாறுபட்ட வடிவத்தில் தரவேண்டும் என்பதற்காக பல பாணிகளை சிந்தித்தோம். அதில் இந்த திட்டம் கைகொடுத்திருக்கிறது. இந்தியிலும் இப்படத்தை ரீமேக்க செய்ய திட்டமிட்டுள்ளேன். 'நீங்கள் இயக்குனர் ஆவீர்களா?' என்கிறார்கள். இப்போது வெற்றியின் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இயக்குனர் ஆவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இவ்வாறு சித்தார்த் கூறினார்.
தாகூர் வாழ்க்கை படத்தில் ரெய்மா
தேசிய கீதம் இயற்றியவர், இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். அவரது வாழ்க்கை, செய்திப் படமாக உருவாகிறது. இதில் தாகூர் வேடத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. இதற்கிடையில் தாகூரின் உறவுக்கார பெண்ணாக காதம்பரி என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் ஹீரோயின் ரெய்மா சென் நடிக்கிறார். இப்படத்தை ரிதுபர்னோ கோஷ் இயக்குகிறார். 'செய்தி படத்தில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. அதுவும் ரவீந்திரநாத் தாகூர் படத்தில் நடிப்பது அதிர்ஷ்டம்' என்றார் ரெய்மா.
ஹாலிவுட் பாணியில் கோலிவுட்டிலும் 2-ம் பாகம் மோகம்
ஹாலிவுட் பாணியில் சூப்பர்ஹிட் படங்களின் 2-ம் பாகம் மோகம் அதிகரித்துள்ளது. மிஷன் இம்பாசிபிள், ஹாரி பார்ட்டர், ஜுராசிக் பார்க் என பல்வேறு ஹாலிவுட் படங்கள் முதல்பாகத்தோடு நின்றுவிடாமல் 2, 3 என அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின்றன. அந்த பாணி இப்போது தமிழ் படங்களிலும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம் அஜீத் நடிக்கும் 'பில்லா 2'. ரஜினி நடித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த 'பில்லா' படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இது ஹிட் ஆனது. இதையடுத்து 'பில்லா 2' உருவாகிறது. சக்ரி இயக்குகிறார். அதேபோல் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் 'மாற்றான்' படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் முடிகிறது. அதன்பிறகு 'சிங்கம்-2'வில் நடிக்கிறார் சூர்யா. அதே போல் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி' 2-ம் பாகம் தொடங்க உள்ளது. தற்போது திரு இயக்கத்தில் 'சமரன்', சுந்தர்.சி. இயக்கும் புதுபடம் என 2 படங்களில் விஷால் நடிக்கிறார். அப்படங்கள் முடிந்த பிறகு 'சண்டக்கோழி 2' தொடங்க உள்ளது. இதே பாணியில் மேலும் பல படங்களின் 2-ம் பாகம் உருவாக்குவது பற்றி ஆலோசனை நடக்கிறது.