அனிருத்தை விட்டுவிட்டு யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க வைத்தது ஏன்?

சென்னை: கைவசம் அனிருத் என்ற முன்னணி இசையமைப்பாளரை வைத்துக் கொண்டு, யுவன் சங்கர் ராஜாவை தன் படத்துக்கு இசையமைக்க வைத்தது ஏன் என்று ஐஸ்வர்யா தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் படம் 3-ன் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய உறவினர். ஐஸ்வர்யாவின் மாமா மகன்.

அனிருத்தை விட்டுவிட்டு யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க வைத்தது ஏன்?

3 படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகப் புகழ் பெற்றது.

அந்தப் படத்துக்குப் பிறகு அனிருத் முன்னணி இசையமைப்பாளர் ஆகிவிட்டார். ரஜினியும், இயக்குநர் ஷங்கரும் பாராட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தனது இரண்டாவது படமான வை ராஜா வை-க்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவை அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சர்யம்.

கைவசம் முன்னணி இசையமைப்பாளர் இருக்கும்போது, ஐஸ்வர்யா இன்னொரு பிரபல இசையமைப்பாளரைத் தேடிப் போனது ஏன் என்று கேள்வி எழுந்தது.

இதற்கு தற்போது ஐஸ்வர்யா விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "நானும் அனிருத்தும் மீண்டும் சேரும் போது, ஒய் திஸ் கொலவெறி ரேஞ்சுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது நிறைவேறாமல் போனால் எதிர்மறை விளைவுகள் இருக்கும். யுவன் இன்றைக்கு முதல் நிலை இசையமைப்பாளர். எங்கள் கூட்டணி பற்றி வேறுமாதிரி எதிர்ப்பார்ப்பு இருக்கும். நானும் யுவனும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்தான். அதனால்தான் யுவனை இசையமைப்பாளராக்கிக் கொண்டேன்," என்று கூறியுள்ளார்.

வை ராஜா வை படத்துக்காக யுவன் 5 பாடல்களைத் தந்துள்ளார். விரைவில் பாடல்கள் வெளியாக உள்ளன.

 

பிரேம்ஜி பாகவதராக நடிக்கும் மாங்கா!

பிரேம்ஜி அமரன் பாகவதர் வேடத்தில் நடிக்கும் மாங்கா படம் வெளியீட்டுக்குத் தயாராகிறது.

ட்ரீம்ஜோன் மூவிஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரேம்ஜிதான் ஹீரோ. கதாநாயகியாக அத்வைதா நடிக்கிறார். லீமா, இளவரசு, ரேகா, மனோபாலா, தென்னவன், டி.பி.கஜேந்திரன், வெங்கல்ராவ், லேடி ரஜினி ஆகியோர் நடிக்கிறார்கள் .

பிரேம்ஜி பாகவதராக நடிக்கும் மாங்கா!  

பிரேம்ஜி ஹீரோவாக நடிப்பதும், படத்தின் இசையையும் அமைத்துள்ளார். கங்கை அமரனும் சினேகனும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஆர் எஸ் ராஜா.

படம் குறித்து இயக்குநர் ராஜாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், "விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கும் அதிசயங்கள் பல. அப்படி அவர் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள் பலரது பார்வையில் விநோதமாக தெரிகிறது.

ஒரு முறை அவர் பாகவதர் ஒருவரைச் சந்திக்கிறார். 1950ம் ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவர் அந்த பாகவதர். இருவருக்கும் இடையே ஒரு நட்பு உண்டாகிறது. இதையெல்லாம் காமெடி கலந்து சொல்கிறோம். முழுக்க முழுக்க காமெடிதான்.

பிரேம்ஜி நல்லாவே காமெடி பண்ணுவார். இதில் முழு ஹீரோ என்பதால் தூள் கிளப்பி இருக்கிறார். படத்தின் அனைத்துகட்ட வேலைகளும் முடிந்து விட்டன.

பிரேம்ஜி இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விரைவில் இசை வெளியீட்டு விழா நடை பெறவுள்ளது," என்றார்.

 

அஞ்சான் தெலுங்கு இசையை வெளியிட்டார் நாகார்ஜூனா!

சூர்யா நடித்துள்ள அஞ்சான் படத்தின் தெலுங்குப் பதிப்பான சிக்கந்தரின் இசையை வெளியிட்டார் நடிகர் நாகார்ஜூனா.

லிங்குசாமி இயக்கி தயாரித்துள்ள படம் அஞ்சான். இதில் சூர்யா ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சூர்யாவின் பல படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த அஞ்சான் படத்துக்கு சிக்கந்தர் என்று தலைப்பிட்டு தெலுங்கில் வெளியிடுகின்றனர்.

அஞ்சான் தெலுங்கு இசையை வெளியிட்டார் நாகார்ஜூனா!

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக ஹைதராபாதில் நடத்தினர்.

விழாவில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா, இயக்குநர் ராஜமவுலி ஆகியோர் கலந்து கொண்டு இசையை வெளியிட்டனர்.

படத்தின் நாயகன் சூர்யா, நாயகி சமந்தா, இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

இனப்படுகொலையில் பங்கு பெறப் போகிறீர்களா? - கத்தி படத்துக்கு எதிராக மாணவர்களின் போஸ்டர்கள்!

சென்னை: கத்தி படத்துக்கு எதிரான போர்க்குரல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இன்று அந்தப் படத்தை எதிர்த்து கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர். அதுவும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்காகவே இந்த சுவரொட்டி அச்சிடப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்:

இனப்படுகொலையில் பங்கு பெறப் போகிறீர்களா? - கத்தி படத்துக்கு எதிராக மாணவர்களின் போஸ்டர்கள்!

அன்பார்ந்த நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நண்பர்களே, ரசிகர்களே...

மூன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இனப்படுகொலைக்காரன் ராஜபக்சே அரசுக்கு பொருளாதார ரீதியாக உதவிக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்துக்கு, நீங்கள் 'கத்தி' திரைப்படம் மூலம் வருமானம் ஈட்டித் தரப் போகிறீர்களா?

தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையில் நீங்களும் பங்கு பெறப் போகிறீர்களா?

உயிர் தந்த தாயும் உடன் பிறந்த சகோதரியும் உன் கண்முன்னே கற்பழிக்கப்படுவார்களேயானால்,

சிங்கள ராணுவத்தால் உன் தந்தையும் சகோதரனும் படுகொலை செய்யப்படுவார்களேயானால்,

முள்வேலி முகாம்களில் சித்திரவதைக்குட்படுத்தப்படுவது
உன் குடும்பமாக இருந்தால்..

நீ என்ன செய்வாயோ.. அதைச் செய்!

-இவ்வாறு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. கூடவே, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

திருட்டுக்கல்யாணம்... பாக்யராஜ் உதவியாளர் இயக்கும் புதிய படம்!

பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த ஷக்தி வேலன் இயக்கும் புதிய படத்துக்கு திருட்டுக் கல்யாணம் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

திருட்டுக்கல்யாணம்... பாக்யராஜ் உதவியாளர் இயக்கும் புதிய படம்!

கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் வழக்கு எண் 18/9 படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தவர். கதாநாயகியாக தேஜஸ்வீ அறிமுகமாகிறார். இவர் மூடர்கூடம் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தவர்.

ஆடுகளம் நரேன், பசங்க செந்தி, தம்பி ராமையா, தேவதர்ஷினி ஆகியோருடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் - ஷக்திவேலன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சசி போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் ஷக்திவேலனிடம் பேசியபோது, "திருட்டுக்கல்யானம் பண்ணிக்கிறமா? திருக்கல்யாணம் பண்ணிக்கிறமா? என்பது முக்கியமல்ல. கல்யாணம் பண்ணிகிறதும் சந்தோஷமா வாழ்றதும்தான் முக்கியம் என்ற கருத்தை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக டெஸ்ட் ஷூட் பண்ணும்போதே படத்திற்காகப் பேசப்பட்ட முழு தொகையையும் பெற்றுக் கொண்ட நாயகன், நாயகி இவர்களாகத்தான் இருப்பார்கள்.

படத்தின் படப்பிடிப்பு கோவை, கடலூர், சென்னையை தொடர்ந்து கடப்பாவிலும் நடைபெற்றுக் கொண்டிருகிறது," என்றார்.

 

பலாத்காரம்: பெங்களூர் பந்த்தைத் தொடர்ந்து கன்னட திரையுலகினரும் பந்த்?

பெங்களூர்: பெண்களுக்கு எதிராக பெங்களூரில் அதிகரித்துவரும் கொடுமைகளுக்காக கன்னடத் திரையுலகினர் தனியாக ஒரு பந்த் நடத்தத் தீர்மானித்துள்ளனராம்.

பலாத்காரம்: பெங்களூர் பந்த்தைத் தொடர்ந்து கன்னட திரையுலகினரும் பந்த்?

நேற்றுதான் பெங்களூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாலியல் பலாத்கார செயல்கள் அதிகரிப்பைக் கண்டித்து பந்த் நடந்தது. இதற்குப் பரவலாக ஆதரவு காணப்பட்டது. இந்த நிலையில் திரையுலகினர் ஒரு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று மாலை கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவரான ஹெச்டி. கங்காராஜூ பத்திரிக்கையாளார்களிடம் இச்செய்தியை தெரிவித்தார். அதில், கன்னடத் திரையுலகம் (நேற்று நடந்த) இந்த போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். ஆனால், தாங்கள் இந்த போராட்டத்தில் தனியாக ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நடிகர் ரவிச்சந்திரன் நேற்று தனது அபூர்வா படத்தின் படபிடிப்பினை இப்போராட்டத்திற்காக ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'பாலிவுட்டின் கிங்' நான் அல்ல ஷாருக்கான் தான்: சொல்வது பரம எதிரியான சல்மான் கான்

மும்பை: பாலிவுட்டின் கிங் ஷாருக்கான் என்று அவரது பரம எதிரியான சல்மான் கான் தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பாலிவுட்டின் முக்கியமான கான்களுக்குள் ஆகாது. சல்மான் கானுக்கும், ஆமீர் கானுக்கும் ஒத்துப் போனாலும் அவர்களுக்கும் ஷாருக்கானுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் தான். சந்து கேப்பில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவார்கள்.

'பாலிவுட்டின் கிங்' நான் அல்ல ஷாருக்கான் தான்: சொல்வது பரம எதிரியான சல்மான் கான்

இந்நிலையில் தான் பாலிவுட் மக்கள் நம்ப முடியாத அந்த அதிசயம் நடந்துள்ளது.

ஷாருக்கான்

பல ஹிட்கள் கொடுத்துள்ள போதிலும் தனது பரம எதிரியான ஷாருக்கானை பாலிவுட்டின் மன்னன் என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பிற கான்கள்

பிற கான்களை பற்றி பேசுவதில் இனிமேல் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று சல்மான் கூறியுள்ளார். இதை நம்ப முடியாத பலர் இது நிஜமா என்பதை தெரிந்து கொள்ள தங்கள் கையை தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்கின்றனர்.

சல்மான்

செய்தியாளர் ஒருவர் பாலிவுட்டின் மன்னன் பற்றி கேட்க ஓ, நீங்கள் ஷாருக்கானை பற்றி பேசுகிறீர்களா என்று சல்மான் கேட்க அவரோ இல்லை என்றார்.

பின்னால்

நான் பாலிவுட்டில் ஷாருக்கானை அடுத்து தான் உள்ளேன் என்று சல்மான் தெரிவித்துள்ளார். ஒரு வேலை சல்மானுக்கு காய்ச்சல் வந்து அந்த வேகத்தில் இப்படி பேசிவிட்டாரா என்று பலர் வியக்கிறார்கள்.

கிக்

ரம்ஜான் பண்டிகையையொட்டி ரிலீஸான சல்மான் கானின் கிக் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று கூறப்பட்டது.

 

பெயரில் இருந்து ரித்திக் ரோஷனை கழற்றிவிட்ட சூசன்

மும்பை: நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் தனது பெயரில் இருந்த ரோஷனை நீக்கிவிட்டார்.

நடிகர் ரித்திக் ரோஷன் சூசன் கானை காதலித்து கடந்த 200ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டின் சூப்பர் தம்பதியாக வலம் வந்தனர். யார் கண் பட்டதோ என்னவோ 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து ரிஹான், ரிதான் என்ற 2 குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர்.

பெயரில் இருந்து ரித்திக் ரோஷனை கழற்றிவிட்ட சூசன்

இதையடுத்து அவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர்கள் பிரிய ஒரு சில காரணங்கள் கூறப்படுகின்றன. சூசனுக்கும் மாடல் அழகியை திருமணம் செய்த நடிகருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துவிட்டதால் அவர் ரித்திக்கை பிரிந்தார் என்று ஒரு பேச்சு உள்ளது. மேலும் சூசன் போதை பொருளுக்கு அடிமையானதால் அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் பேசப்பட்டது.

இது தவிர ரித்திக் மற்றும் சல்மான் கான் மூலம் பாலிவுட் வந்த நடிகைக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதும் அந்த ஜோடி பிரிய ஒரு காரணம் என்று கூறப்பட்டது. என்ன காரணமோ ஏதோ நன்றாக இருந்த குடும்பம் பிரிந்துவிட்டது.

இந்நிலையில் சூசன் தனது பெயருக்கு பின்னால் இருந்த ரோஷனை நீக்கிவிட்டு மீண்டும் தனது தந்தையின் இரண்டாவது பெயரான கானை பயன்படுத்த துவங்கியுள்ளார்.

 

கொடுத்தால் ரூ. 2 கோடி கொடுங்க, இல்லாட்டி நடையை கட்டுங்க: நடிகை கறார்

சென்னை: பெரிய கண்களை உடைய ஜல் நாயகி சம்பள விஷயத்தில் ரூ.2 கோடியை விட்டு இறங்கி வர மறுப்பதால் தயாரிப்பாளர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளார்களாம்.

முட்டை கண்களை உடைய ஜல் நாயகி தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அம்மணிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. மேலும் ஹீரோக்கள் எத்தனை மணிநேரம் தாமதமாக படப்பிடிப்புக்கு வந்தாலும் கோபப்படாமல் காத்திருந்து நடிப்பதால் நடிகைக்கு ஹீரோக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. அதனால் ஹீரோக்களின் பரிந்துரையின்பேரில் வாய்ப்புகள் மட்டும் இன்றி சம்பளமும் கோடிகளில் கிடைக்கிறது.

தமிழில் அவரது நிலைமை அப்படி இல்லையே. அவர் என்ன தான் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருந்தாலும் அவர் படங்கள் வெற்றி பெறவில்லை. இரண்டு படங்கள் மட்டும் தான் ஓடின. ஆனால் அதுவும் ஹீரோவுக்காகத் தான் ஓடின. சொல்லப் போனால் அந்த படங்களில் நடிகைக்கு வெயிட்டான கதாபாத்திரம் எல்லாம் கிடையாது.

நிலைமை இப்படி இருக்க தெலுங்கை போலவே தமிழ் படங்களுக்கும் தனக்கு ரூ. 2 கோடி தான் சம்பளமாக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் நடிகை. அடுத்தடுத்து ஹிட் கொடுக்கும் நடிகைகள் கூட இப்படி சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது இல்லை. அதனால் நடிகை மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளார்களாம்.

 

ஸ்பெஷல் செட் போட்டு.. சன்னி லியோன் ஆட்டம்.. இந்த வாரக் கடைசியில்.. பெங்களூரில்!

டிகே... அதாவது இது ஒரு கன்னடப் படத்தின் டைட்டில். இந்தப் படத்தில் ஒரு குத்துப் பாட்டு இடம் பெறுகிறது. அதில் பங்கேற்று ஆடிச் சிறப்பிக்கவுள்ளார் சன்னி லியோன். இதற்காக அவர் இந்த வாரக் கடைசியில் பெங்களூருக்குப் பறந்து வருகிறாராம்.

இயக்குநர் -நடிகர் ஜோகி பிரேம்தான் இந்தப் படத்தை இயக்குபவர். அவரும், சன்னியும் சேர்ந்துதான் ஆடப் போகிறார்களாம் இந்தக் குத்துப்பாட்டுக்கு.

ஸ்பெஷல் செட் போட்டு.. சன்னி லியோன் ஆட்டம்.. இந்த வாரக் கடைசியில்.. பெங்களூரில்!

ஜோகி பிரேம் யாருன்னு சொல்லவே இல்லையே.. தமிழில் சிம்புவுடனும், விஜய்யுடனும் நடித்தவரான முன்னாள் நடிகை ரக்சிதாவின் கணவர்தான் இந்த ஜோகி பிரேம். இப்படத்தை தயாரிப்பவர் ரக்சிதாதான். அதாவது இது ஜோகி பிரேமின் குடும்பப் படமும் கூட.

பேபி டால் .. லைலா... வட கறி

ஏற்கனவே பேபி டால், லைலா போன்ற குத்துப் பாடல்களுக்கு ஆட்டம் போட்டவர்தான் சன்னி லியோன். தமிழிலும் கூட வடகறியில் ஆட்டம் போட்டுள்ளார்.

கன்னடத்து ஐட்டம்

இப்போது கன்னடத்தில் ஐட்டம் பாட்டுக்கு ஆடப் போகிறார். அவரது வருகைக்காக பெங்களூர் காத்திருப்பதாக ஜோகி பிரேம் குதூகலமாக கூறியுள்ளார்.

தெலுங்கிலும்

ஏற்கனவே தெலுங்கிலும் கூட தலை காட்டியுள்ளார் சன்னி. மலையாளம் மட்டும்தான் பாக்கி. சீக்கிரம் அங்கும் தனது திறமையைக் காட்டுவார் என்று நம்பலாம்.

ஸ்பெஷல் செட்

சன்னியின் ஆட்டத்துக்காக பெங்களூர்ப் புறநகர்ப் பகுதி ஒன்றில் விசேஷமாக செட் போட்டுள்ளனராம். அங்குதான் ஆடப் போகிறார் சன்னி. ஆட்டத்தை வடிவமைத்திருப்பவர் அர்ஜூன் ஜான்யா.

ஹீரோயின் யாருப்பா

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பவர் சைத்ரா சந்திரகாந்த் என்பவர் ஆவார்.