இனி 'தல 55' அல்ல... என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு!

பொதுவாக ஒரு படத்தின் ஷூட்டிங்குக்கு கிளம்பும் முன் அந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து விடுவது சினிமா வழக்கம். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் சிகரங்கள் தொடங்கி, புதிதாய் வருபவர்களும் அப்படித்தான் செய்து வருகிறார்கள் இதுவரை.

ஆனால் அந்த வழக்கத்துக்கு மாறாக ஒரு தலைப்புக்கே ஓவர் பில்ட் அப் கொடுக்கிறாரோ என வெளியிலிருப்பவர்களைப் பேச வைத்தவர் அஜீத்தான்.

இனி 'தல 55' அல்ல... என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு!

அவரது சமீபத்திய படங்கள் அனைத்தின் தலைப்பும் ரொம்பவே பிகு பண்ணிக் கொண்டுதான் வெளியிடுகிறார்கள்.

ஆரம்பம் படத்தின் தலைப்பைச் சொல்வதற்கு ஜவ்வாய் இழுத்தார்கள். ஆடியோ ரிலீசுக்கு முன்புதான் அந்தப் பெயரைச் சொன்னார்கள். இத்தனைக்கும் அதை முடிவு செய்து ஆறு மாதங்கள் அமைதி காத்தார்கள். எல்லாம் பப்ளிகுட்டி ஸ்டன்ட்தான்.

இப்போது கவுதம் மேனன் இயக்கும் புதுப் படத்துக்கு கடந்த எட்டு மாதங்களுக்கும் மேல் தலைப்பைச் சொல்லாமல் அமைதி காத்தார்கள். அதுவே ஏகப்பட்ட செய்திகள் உருவாகக் காரணமாக அமைந்தது. எவ்வளவு விளம்பரம் பாருங்கள்.

இப்போது படத்தின் இசை வெளியாக உள்ள தறுவாயில் படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர்.

இதுவரை தல 55 என அழைக்கப்பட்டு வந்த அந்தப் படத்துக்கு 'என்னை அறிந்தால்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

என்னை அறிந்தால்.... என்ன, தலைப்பு நல்லாருக்கா?

 

4 நாட்களில் ரூ 200 கோடியைத் தொட்டது ஹேப்பி நியூ இயர்!

நான்கே நாட்களில் ரூ 200 கோடி வசூலைத் தொட்டு புதிய சாதனைப் படைத்துள்ளது ஹேப்பி நியூ இயர்.

ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘ஹேப்பி நியு இயர்' படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்துக்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

4 நாட்களில் ரூ 200 கோடியைத் தொட்டது ஹேப்பி நியூ இயர்!

உலகம் முழுவதும் 5000 க்கும் அதிகமான அரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டன.

படம் வெளியான 4 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் கிடைத்துள்ளதாம்.

சல்மான்கானின் ‘ஜெய் ஹோ' அக்ஷய்குமாரின் ஹாலிடே படங்கள்தான் இதுவரை அதிகம் வசூல் ஈட்டிய படங்களாக இருந்தன. அந்த சாதனையை ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்' படம் முறியடித்துவிட்டதாம்.

 

கோபிகாவுக்கு ஆண் குழந்தை!

சென்னை: தமிழிலும், மலையாளத்திலும் கதாநாயகியாக வலம் வந்த நடிகை கோபிகாவுக்கு ஆஸ்திரேலியாவில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழில் ஆட்டோகிராப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கோபிகா. தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியவர். மலையாளத்திலும் நடித்தவர்.

இந்நிலையில் கோபிகாவுக்கும், அயர்லாந்தில் டாக்டராக பணியாற்றிய அகிலேஷ் என்பவருக்கும் 2008ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கி கணவருடன் சென்று இனிய இல்லறத்தில் ஈடுபட்டுள்ளார் கோபிகா.

கோபிகாவுக்கு ஆண் குழந்தை!

இவர்களுக்கு எமி என்ற நான்கு வயது பெண் குழந்தை இருக்கிறது. தற்போது அகிலேஷ் மாற்றலாகி ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிறார். இந்த நிலையில், கோபிகா 2வது முறையாக கர்ப்பமானார்.

அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டவுடன் உடனடியாக ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோபிகாவுக்கு நேற்று காலை 10 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.

 

ட்விட்டர் ட்ரெண்டில் முதலிடம் பிடித்த என்னை அறிந்தால்!

ட்விட்டர் ட்ரெண்டில் இன்று முதலிடத்தைப் பிடித்துள்ளது அஜீத்தின் என்னை அறிந்தால் தலைப்பு.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத், த்ரிஷா, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் இதுவரை தல 55 என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட 8 மாதங்கள் எடுத்துக் கொண்டனர். அதனாலேயே படத்தின் தலைப்பு குறித்து ஒரு எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.

ட்விட்டர் ட்ரெண்டில் முதலிடம் பிடித்த என்னை அறிந்தால்!

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்தனர் படக் குழுவினர்.

என்னை அறிந்தால் என்று படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர். இந்தத் தலைப்பு வெளியானதிலிருந்து, சமூக வலைத் தலங்களில் அந்தத் தலைப்பு குறித்து பலரும் எழுதி வருகின்றனர்.

ட்விட்டரில் இதுவரை 50 ஆயிரம் ட்வீட்டுகளுக்கு மேல் என்னை அறிந்தால் பற்றி வந்துவிட்டன. இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டில் என்னை அறிந்தால் என்ற தலைப்புதான் இன்று முதலிடத்தில் உள்ளது.

 

வெளியானது என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... போலீஸ் கெட்டப்பில் அஜீத்!

கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் இன்று வெளியாகின.

என்னை அறிந்தால் என்ற தலைப்பு நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தில் அஜீத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

அறிவித்தபடி, முதலில் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

வெளியானது என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... போலீஸ் கெட்டப்பில் அஜீத்!

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர்களில், அஜீத் போலீஸ் கெட்டப்பில் தோற்றம் அளிக்கிறார். கருகரு தலைமுடி, போலீஸ் கட், கூலிங்கிளாஸ் அணிந்து புல்லட்டில் கம்பீரமாக காட்சி தருகிறார் ஆங்கில போஸ்டரில்.

வெளியானது என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... போலீஸ் கெட்டப்பில் அஜீத்!

அதே கெட்டப், டிசைனில் தமிழ் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான ஒரு டிசைனில் பரந்து விரிந்த வயல் வெளி.. அதில் என்னை அறிந்தால் தலைப்பும், பின்னணியில் கோட்டுச் சித்திரமாய் அஜீத் படமும் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இரண்டு போஸ்டர்களையும் இங்கே தந்துள்ளோம். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!

 

மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''

சென்னை: தனது மகன் சண்முகப்பாண்டியன் படப்பிடிப்பை மேற்பார்வையிட விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா உடன் மலேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஜூன் மாதம் மலேசியா சென்று திரும்பினார். அப்போது அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டது.

இதற்கிடையே அவரது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்' படத்துக்கான படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூரில் நடந்தது. இதையும் விஜயகாந்த் மேற்பார்வையிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் இன்று மீண்டும் மலேசியா சென்றார்.

மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''

விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன் சண்முகபாண்டியன், மைத்துனர் எல்.கே.சுதீஷ், ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். இங்கிருந்து பகல் 11.15 மணிக்கு ஜெட்ஏர்வேஸ் விமானம் மூலம் மலேசியா சென்றனர்.

மலேசியாவில் சினிமா படப்பிடிப்பு தொடர்பான இடங்களை விஜயகாந்த் பார்வையிடுவார். அடுத்து அங்கு நடைபெறும் ‘சகாப்தம்' படப்பிடிப்பையும் பார்ப்பார் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த் முழு நலத்துடன் இருக்கிறார். என்றாலும் ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் உடல் நிலையை பரிசோதனை செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த முறை விஜயகாந்த் மலேசியா சென்றிருந்த போது அங்குள்ள விஜயகாந்த் ரசிகர்கள் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். ஒருவர் பின் ஒருவராக விஜயகாந்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர், அப்போது ஒரு ரசிகர் திரும்ப திரும்ப வந்து அவருடன் வெவ்வேறு கோணத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தாராம். இதனால் கோபமடைந்த விஜயகாந்த், ஷாஜகான் என்ற அந்த ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அதிர்ச்சி அளித்தார். இம்முறை எந்த ரசிகரின் கன்னம் வீங்கப் போகிறதோ தெரியலையே?.

 

மீஞ்சூர் கோபியின் 'மூத்தகுடி' கதை இது... கத்திக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அப்பீல்!

கத்தி படத்தின் கதை தன்னுடைய மூத்தகுடி படத்தின் கதைதான் என்று அடித்துச் சொல்லும் மீஞ்சூர் கோபி, மீண்டும் நீதிமன்றப் படியேறியுள்ளார். இந்த முறை உயர்நீதிமன்றம்.

ஏற்கெனவே சென்னை பெருநகர நீதிமன்றத்தில் கத்திக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியாகிவிட்டதால், இப்போது இந்த அப்பீலை மேற்கொண்டுள்ளார்.

மீஞ்சூர் கோபியின் 'மூத்தகுடி' கதை இது... கத்திக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அப்பீல்!

சரி... அதற்கு முன் இந்த வார ஜூனியர் விகடனில் 'கத்தி அல்ல, காப்பி' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில், மீஞ்சூர் கோபியின் கதை வெளியாகியுள்ளது. அதைப் பார்க்கலாம்...

மூத்த குடி கதை

"தமிழகத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் நீர்வளத்தைப் பார்த்து, பன்னாட்டு நிறுவனம் ஒன்று குளிர்பானம் தயாரிக்கும் கம்பெனியை அமைக்க வருகிறது. கிராம மக்கள் மற்றும் விவசாயக் கூலிகளுக்கு வேலையும் நல்ல சம்பளமும் தருவதாகவும், நிலம் தருபவர்களுக்கு நல்ல விலையும் தருவதாகவும் உறுதியளிக்கிறது. ஆனால், அந்த கிராமத்துப் பெரியவரும், இளைஞர் ஒருவரும் நிலத்தைத் தர முடியாது என்று சொல்லிவிடுகின்றனர். அந்த நிறுவனம் இவர்களைத் தாக்க முயல, கிராம மக்கள் ஒன்றிணைந்து தடுக்கின்றனர்.

மக்களின் ஒற்றுமையைக் கண்டு, பின்வாங்கும் நிறுவனம், அந்த ஊரில் இருக்கும் ஏற்றத்தாழ்வு, முரண்பாடு, மனிதர்களுக்குள் இருக்கும் விரிசல் போன்றவற்றை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நிலம் கையகப்படுத்தும் முயற்சியைத் தொடர்கிறது. கிராமத்துப் பெரியவரின் உள்ளூர் எதிரி தனது நிலத்தை குளிர்பான கம்பெனிக்கு விற்கிறான். அவனுக்கு மிகப்பெரிய தொகை கொடுக்கப்படுகிறது. அந்தத் தொகையைப் பார்த்து, ஊர் மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர். அந்த நேரத்தில், நிறைய பணம் கிடைத்தால் வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற அனிமேஷன் படம் கிராம மக்களுக்கு போட்டுக் காட்டப்படுகிறது. அதை நம்பி பெரும்பாலான மக்கள் நிலத்தைக் கொடுக்க சம்மதிக்கின்றனர். மறுநாள் புல்டோசர் வந்து, வாங்கிய நிலத்தை தோண்ட ஆரம்பிக்கிறது. அப்போது அங்கு கிடைக்கும் தங்களுடைய மூதாதையர்களின் எலும்புக் கூடுகளைப் பார்த்து மக்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர்.

இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கும் மக்களுக்கும் இடையில் தகராறு ஏற்படுகிறது. மக்களுக்கு ஆதரவாக அந்த இளைஞனும், பெரியவரும் இறங்குகின்றனர். போலீஸ் வருகிறது, இளைஞனை கைது செய்கிறது. நிலம் கொடுத்த மக்களுக்கு வேறு இடமும் நிலமும் தருவதாகச் சொன்ன நிறுவனம், அவர்களை ஒரு முகாமில் அடைக்கிறது. நிறுவனத்தின் கழிவுகளால் அங்கு தொற்றுநோய் பரவி, தங்கியிருக்கும் கிராம மக்களில் 20 பேர் மரணமடைகின்றனர்.

அப்போது சிறையில் இருந்து திரும்பிய இளைஞன், மக்களின் அவல நிலையைக் கண்டு கம்பெனிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறான். இந்த நேரத்தில் கம்பெனியின் உற்பத்திக் கோளாறைச் சரி செய்ய கம்பெனியின் உரிமையாளரும் ஆராய்ச்சியாளர்களும் வருகின்றனர். அவர்களை மக்கள் தடுக்கின்றனர். போலீஸ் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. அதில் ஒன்பது பேர் இறந்துவிடுகின்றனர். ஆனால், அவர்களின் உடல்களை எரிக்காமல், எப்போது தங்களின் நிலம் தங்களுக்குக் கிடைக்கிறதோ அன்றுதான் இவர்களின் உடலை தகனம் செய்வோம் என்று அந்த இளைஞனும், பெரியவரும் சபதம் எடுக்கின்றனர்.

இளைஞனைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவுகிறது நிறுவனம். அதனால் நாயகன் தலைமறைவாகிவிடுகிறான். அப்போது கம்பெனி முதலாளி ஊருக்குள் வருகிறார். அவரை எதிர்த்து, கிராம மக்கள் தங்களை நிர்வாணமாக்கி பாதி மணலில் புதைத்துக்கொண்டு போராடுகின்றனர். இதனால் அவர்களைக் போலீஸ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது.

அப்போது மக்கள், நீதிபதிகளிடம் தங்கள் பிரச்னையைச் சொல்ல, நாயகனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும், அவர் தாராளமாக நீதிமன்றத்துக்கு வரலாம் என்று உத்தரவிடுகின்றனர். இதையடுத்து நாயகன் கம்பெனியின் சதிகளை முறியடித்து நீதிமன்றம் வருகிறான். அப்போது, தீர்ப்பளிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

தன் வாதத்தை எடுத்து வைக்கும் நாயகன், 'கம்பெனி நிலத்துக்குத்தான் பணம் கொடுத்தது. அந்த நிலத்துக்கு அடியில் இருந்த இயற்கை வளத்துக்கு அல்ல. இயற்கை வளங்களின் மதிப்புக்கான பணத்தை, அவர் எங்களுக்குக்கூட அல்ல, இந்த நாட்டுக்குக் கொடுக்கட்டும், நாங்கள் நிலத்தை இலவசமாகவே தருகிறோம்' என்று சொல்கிறார்.

இதை நிறுவனம் ஏற்க மறுத்து வெளியேறுகிறது. மக்கள் அனைவரும் நாயகன் மற்றும் ஊர்ப் பெரியவருடன் சேர்ந்து கிராமத்துக்குத் திரும்புகின்றனர். இதுதான் நான் எழுதிய 'மூத்தகுடி' படத்தின் கதை. இதில் சிறு சிறு மாற்றம் செய்து 'கத்தி' என்ற பெயரில் படமெடுத்துவிட்டார்கள்'' என்று நீதிமன்றத்துக்குப் போனார் மீஞ்சூர் கோபி.

பெரிதாக வேறுபாடு இல்லை

என்னுடைய கதை இதுதான் என்று, நீதிமன்றத்தில் கோபி கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்த மனுவில் உள்ள கதைக்கும் 'கத்தி' படத்துக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை என்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

அவரிடம் தொடந்து பேசியபோது, ''கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று நிறுவனம் தொடங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை வைத்தும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை மனதில் வைத்தும், 'மூத்தகுடி' என்ற தலைப்பில் இந்தக் கதையை எழுதினேன்.

முருகதாசிடம்...

அதை தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் சொன்னேன். அப்போது ஜெகன் என்பவர் எங்களுடன் இருந்தார். மூன்று மணி நேரம் நான் அந்தக் கதையை சொல்லி முடித்ததும், தற்போது என்னால் இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரிக்க முடியாது என்று விஸ்வாஸ் சுந்தர் சொல்லிவிட்டார். ஆனால், அப்போது அவருடன் இருந்த ஜெகன், இந்தக் கதை அற்புதமாக உள்ளது என்றும் இதைத் திரைப்படமாகத் தயாரிக்க இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் முருகதாஸிடம் சொல்லி, தான் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். சொன்னபடியே என்னை இயக்குநர் முருகதாஸிடம் அழைத்துப்போனார். கதையைக் கேட்டு என்னைப் பாராட்டிய முருகதாஸ், 'அஜித்தை வைத்து இந்தப் படத்தைத் தயாரிக்கலாம். ஆனால், இதை இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக மாற்ற வேண்டும்' என்று சொன்னார். அதையும் செய்து கொடுத்தேன்.

ஒன்றரை ஆண்டுகள்

கதையை மெருகேற்றும் வேலைகள் மட்டும் ஒன்றரை வருடங்களாக நடைபெற்றன. ஆனால், அதன் பிறகு திடீரென அந்த வேலையை நிறுத்திவிட்டு தன்னால் இந்தத் திரைப்படத்தை இப்போது தயாரிக்க முடியாது என்று சொல்லி முருகதாஸ் ஒதுங்கிக்கொண்டார். திடீரென நடிகர் விஜய்யை வைத்து அவர் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு கொல்கத்தாவில் வைத்து பூஜை போட்டனர். அப்போதே எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. ஏனென்றால், நான் இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக 'மூத்தகுடி' கதையை மாற்றியபோது, அதில் ஒரு ஹீரோ கொல்கத்தாவில் இருந்து தப்பி வருவதுபோல்தான் அமைத்திருந்தேன்.

கோபி யாருன்னே தெரியாது... - இது முருகதாஸ்

உடனே, இதுபற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது, 'கத்தி' திரைப்படத்தின் கதை, என்னுடைய 'மூத்தகுடி'யின் கதைதான் என்பது தெரியவந்தது. நான் இதுபற்றி, அவர்களிடம் கேட்டபோது, 'அது உங்களுடைய கதை அல்ல. இந்தப் படம் முடிந்ததும், நிச்சயம் நீங்கள், அந்தக் கதையை அஜித்தை வைத்து இயக்குவீர்கள்' என்று சொல்லி வந்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. வேறு வழியில்லாமல்தான் நீதிமன்றத்துக்குப் போனேன். அங்கே இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். அதன் பிறகுதான் தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்'' என்றார்.

ஆனால் இயக்குநர் முருகதாஸோ இந்த மீஞ்சூர் கோபியை எனக்குத் தெரியவே தெரியாது, முன் பின் பார்த்தது கூட இல்லை. இது பணம் பறிக்கும் டெக்னிக், என்கிறார்!