ஐ படக் கதையை முதலில் சொன்னதே ரஜினிக்குத்தான்! - ஷங்கர் வெளியிட்ட ரகசியம்

ஐ படத்தின் கதையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்திடம் சொன்னதாகவும், அவர் நடிக்க மறுத்ததால்தான் இப்போது விக்ரம் நடித்ததாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஐ படத்தின் இந்தி இசை வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படம் உருவான விதம் பற்றிக் கூறுகையில், இந்தக் கதையை முதலில் உருவாக்கியது ரஜினிக்காகத்தான் என்றார்.

ஐ படக் கதையை முதலில் சொன்னதே ரஜினிக்குத்தான்! - ஷங்கர் வெளியிட்ட ரகசியம்

அவர் கூறுகையில், "பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கதையை உருவாக்கினேன். அப்போது முதலில் ரஜினிக்குத்தான் இந்தக் கதையைச் சொன்னேன். ஆனால் அவரால் அப்போது நடிக்கமுடியவில்லை.

15 ஆண்டுகள் கழித்து இப்போது விக்ரமை வைத்து இந்தக் கதையை எடுத்துள்ளேன்.

ஐ ட்ரைலர் ராம் கோபால் வர்மாவுக்கு பிடித்திருந்ததை அறிந்து மகிழ்கிறேன். ஆனால் அவரது ட்வீட் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை," என்றார்.

தமிழகத்தில் ரஜினி, ஜெயலலிதாவை விட பலம் மிக்கவர் ஷங்கர்தான் என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

 

பிட்லி சே பாதேய்ன்.. ஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவேற்பு!

ஷமிதாப் படத்தில் இளையராஜா இசையில் அமிதாப் பச்சன் பாடிய பிட்லி சே பாதேய்ன் என்ற பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் இந்தப் பாடலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வெகு அரிதாகத்தான் தன் சொந்தக் குரலில் பாடுவார் அமிதாப் பச்சன். முன்பு டான், கபி கபி, போல் பச்சன், கஹானி போன்ற படங்களில் சொந்தக் குரலில் பாடியுள்ளார்.

இப்போது முதல் முறையாக இளையராஜா இசையில் ஷமிதாப் படத்தில் பாடியுள்ளார். ஒரு பாத்ரூமில் அமர்ந்தபடி அமிதாப் பாடுவது போல இந்தப் பாடல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

பிட்லி சே பாதேய்ன்.. என்று தொடங்கும் அந்தப் பாடலில் இளையராஜாவின் மென்மையான இசையும், அமிதாப்பின் தனித்துவம் மிக்க குரலும் கேட்ட மாத்திரத்தில் யாரையும் வசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

ஷமிதாப் படத்தை பால்கி இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாஸன் ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

 

நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வரவேற்பு எப்படி?

இந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ரஜினிகாந்தின் லிங்கா படம் எதிர்ப்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்த லிங்கா படம் தமிழ், தெலுங்கில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு வரலாறு காணாத ஒபனிங் வசூல் கிடைத்தது. மூன்று தினங்களில் ரூ 104 கோடியை வசூலித்த இந்தப் படம், இப்போது 20 நாட்கள் தாண்டிய நிலையில் ரூ 200 கோடியை நெருங்கிக் கொண்டுள்ளது.

இத்தனைக்கும் இந்தப் படம் குறித்து வந்த எதிர்மறைக் கருத்துக்களும் விமர்சனங்களும் கொஞ்சமல்ல. படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே பெரிய நஷ்டம் என்ற குற்றச்சாட்டுகளும் வெளியாகின.

நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வரவேற்பு எப்படி?

கேரளாவில் எந்த மலையாளப் படமும் சரியாகப் போகாத நிலையில் லிங்கா இன்னமும் ஓடிக் கொண்டுள்ளது. ஆந்திராவில் ரூ 20 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்துள்ளது. கர்நாடகத்தில் ரூ 12 கோடி வசூலாகியுள்ளது.

இந்த நிலையில் லிங்காவின் இந்திப் பதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வட மாநிலங்களில் வெளியானது.

தமிழ், தெலுங்கில் இத்தனை எதிர்மறை விமர்சனங்கள் இருந்ததால், படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தாமல் வெளியிட்டனர். 700க்கும் அதிகமாக அரங்குகளில் இந்தி லிங்கா வெளியானது. மும்பையில் மட்டும் 65க்கும் அதிகமான அரங்குகளில் திரையிடப்பட்டது.

டெல்லியில் 40 அரங்குகளிலும், புனே மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் 30 அரங்குகளிலும் படம் வெளியானது.

இவை தவிர, லக்னோ, பாட்னா, சண்டிகர், குர்கான், அகமதாபாத், போபால், கொல்கத்தா, அமிர்தசரஸ், பரெய்லி, அஜ்மீர், ஜலந்தர், ஜெய்ப்பூர், தன்பாத், டேராடூன், காந்தி நகர், கோவா, ஹோஷியார்பூர், இந்தூர், ஜபல்பூர், கான்பூர், குல்லு, லாத்தூர், லூதியானாஸ மீரட், உஜ்ஜெயினி, லூதியானா, மொஹாலி, மதுரா, மாலேகான், நாக்பூர், ராய்பூர், சிலிகுரி, ஹால்தியா, வதோத்ரா, உதய்பூர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் வெளியாகி, ஓடிக் கொண்டுள்ளது.

பிவிஆர் கைவசம் உள்ள 400-க்கும் மேற்பட்ட மால்களில் லிங்கா திரையிடப்பட்டுள்ளது.

முதல் வாரம் முடியவிருக்கும் நிலையில் அனைத்து அரங்குகளிலும் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது. எதிர்ப்பார்ப்பு குறைவாக இருந்ததால், வட இந்தியாவில் இந்தப் படம் மக்களைத் திருப்திப்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் - கடைசி பகுதி

-இயக்குநர் முத்துராமலிங்கன்

கட்டுரையின் கடைசி பகுதியை இரு தினங்கள் தாமதப்படுத்தியதற்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன்.

தாமதமானதற்கு நேற்று நடந்த மூவி ஃபண்டிங்' சக்சஸ் மீட்டும் ஒரு காரணம்.

கிரவுட் ஃப்ண்டிங்கில் உருவான கன்னட ‘லூசியா' படமும் அதன் இயக்குநரும் மிகவும் பிரபலம் என்பதால் அதுகுறித்து நான் பெரிதாக சொல்ல வேண்டியதில்லை.

அன்று இரவு பவன் குமார் அனுப்பியிருந்த மெஸேஜின் சாரம் இதுதான்.

மூவி ஃபண்டிங் வெற்றி...   சாத்தியமானது இப்படி!

‘நண்பர்களே உங்கள் மூவிஃபண்டிங் முயற்சி குறித்து கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். இத்திட்டத்திற்கு உதவ முன்வருபவர்கள் குறித்து கவனமாக இருங்கள். நிறுவனத்தை சட்டரீதியாக பதிவு செய்யத் தவறாதீர்கள்.

உடனே அவருக்கு நன்றியும், நாங்கள் நிறுவனத்தை சட்டரீதியாக, மூத்த வழக்கறிஞர்கள், ஆடிட்டர்களை ஆலோசித்து சட்டரீதியாக பதிவு செய்திருக்கும் விபரத்தையும் அனுப்பினேன்.

துவக்கத்தில் முதல் பதினைந்து நாட்கள் இத்திட்டம் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. நடிக்கும் ஆசையில் பணம் கொடுத்து ஏமாந்து, அந்தப் படங்கள் ரீலீஸாகாமல் போன விரக்தியிலிருந்த பலபேரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அனைவருமே காதல் தோல்வியால் தாடி வளர்ப்பவர்கள் போல ஒரே மாதிரியாக காட்சி அளித்தார்கள்.

மூவி ஃபண்டிங் வெற்றி...   சாத்தியமானது இப்படி!

ஒரு நன்னாளில் பொற்கோ என்ற சாஃப்ட்வேர் எஞ்சினியர் நடிக்கும் ஆசையுடன் முன்வந்து, சுமார் நூறு கேள்விகள் கேட்டார். இருநூறு பதில்கள் சொல்லி அவரை கன்வின்ஸ் செய்து பத்து லட்சம் முதலீடு செய்ய வைத்தோம்.

மந்த நிலையை மந்தகாசம் ஆக்கும் சூட்சுமம் அந்தப் புள்ளியிலிருந்துதான் எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. மூளையின் ஒரு ஓரத்தில் சின்னதாய் பல்ப் ஒன்று எரிய ஆரம்பித்த தருணம் அது.

இதுகுறித்து எல்லோருக்கும் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கிறது. அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே பதில்களை வழங்கினால் நாம் தேடும் பங்குதாரர்கள் வந்துவிடுவார்கள் என்று தோன்றியது.

மூவி ஃபண்டிங் வெற்றி...   சாத்தியமானது இப்படி!

அதன் முதல் கட்டமாக பொற்கோ இத்திட்டத்தில் இணைந்து கொண்டதை வெளிப்படையான செய்தியாக்கினோம். மூவி ஃபண்டிங் திட்டத்தின் ஒவ்வொரு நகர்வையும் பொதுவெளியில் சிறிதும் தயக்கமின்றி பகிர ஆரம்பித்தோம்.

முதலீடு செய்ய ஆரம்பித்தவர்களுக்கு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாள் செலவும், எங்கே படபிடிப்பு, எத்தனைபேர் இன்றைக்கு, என்னென்ன செலவுகள் என்று துவங்கி புரடக்‌ஷன் பையனின் பேட்டா செலவு உட்பட இவ்வாறே கணக்கு காட்டப்படும் என்பதை வெளிப்படையாக்கினோம்.

சினிமாவில் முதலீடு செய்ய வருபவர்களில் பெரும்பாலானோருக்கு ‘இங்கு ரிஸ்க் அதிகம் என்று தெரிந்தே வருகிறார்கள். பணம் வரலாம்... போகலாம்... ஆனால் நாம் ஏமாற்றப்படக் கூடாது. ஷூட்டிங்குக்கு என்று காசு கேட்டுவிட்டு அந்தக் காசில் டைரக்டர் சொகுசாய் கார் வாங்கிக்கொண்டு, நடிகையின் வீட்டில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்துகொண்டு காலாட்டக் கூடாது என்ற எண்ணம் உள்ளவர்களே அதிகம்.

இப்படி அனைத்தையும் வெளிப்படையாக ஷேர் பண்ணத் துவங்கியவுடன் எங்கள் மேல் பலருக்கு நல்லெண்ணம் ஏற்பட்டது.

பெங்களூரிலிருந்து மோகன்குமார், ஈரோட்டிலிருந்து சூர்யா வடிவேல், ராமநாதபுரத்திலிருந்து குமாரராஜா, சென்னை ‘சவுண்ட் பார்ட்டி' ஸ்டுடியோ உரிமையாளர் சுதர்சன் லிங்கம் என்று வரிசையாக ஆர்வமாக முதலீடு செய்ய முன்வந்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜெய்லானியின் நண்பர் குழலி புருசோத்தமன், அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு, எங்கள் இருவரையும் சிங்கப்பூர் வரவழைத்து அங்குள்ள அஞ்சப்பர் ஓட்டல் ஒன்றில் ‘மூவி ஃபண்டிங்' தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தார். அங்கு தற்செயலாக வந்த ஜெய்லானியின் உறவினர்கள் சையது இப்ராஹிம் மற்றும் ராஜா ஆகியோர் இமாலய உதவிக்கு முன்வந்தனர். அடுத்த பட அறிவிப்பு சமயத்தில் உறுதியாக உதவுவார்கள் என்று நம்பக்கூடிய சில நட்புகளும் அங்கே கிடைத்தன.

பெரிய குட்டிக்கரணங்கள் அடிக்கவேண்டிய அவசியம் எதுவுமற்று, ஒருவழியாக திட்டமிட்டபடி இருபடங்களும் இலக்கை அடைய இரு மாதங்களாகின. நேற்று பிரசாத் லேப்பில் இந்த இருமாத பயணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டோம்.

எங்கள் இரு படங்களுக்கு நிதி திரட்டல் சாத்தியமானது என்பது இந்த மூவி ஃபண்டிங் திட்டத்தின் வெற்றி என்று நாங்கள் கருதவில்லை. நல்ல கதையுடன் அலையும் திறமைசாலிகள், முதல் படம் நன்றாக இருந்தும் சரியான வெளியீடு கிடைக்காமல் தோற்றுப்போனவர்கள், படம் தயாரிக்க விரும்பி தவறான நபர்களிடம் மாட்டி ஏமாறுபவர்கள் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக கொஞ்சமாவது நாங்கள் இயங்க முடியுமா என்ற ஆதங்கத்துடன்தான் இறங்கியிருக்கிறோம்.

சதா சில ரகசியங்களை தன்னுள்ளே ஒளித்து வைத்தபடி, எப்போதும் ஒரு மூடுமந்திரமாகவே காட்சிதரும் சினிமாவின் இரும்புக் கதவை இன்னும் கொஞ்சம் பலமாக முட்டித் திறக்கும் ஒரு சிறுமுயற்சியே இது.

ஸ்ஸ்ஸ்... அப்பாடா ஒரு வழியா டைட்டிலை டச் பண்ணியாச்சி...!!

(முற்றும்)

 

2015-ல் சர்வதேச அளவில் வெளியாகிறது கோச்சடையான்.. தயாரிப்பாளர் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் சர்வதேச மொழிகளில் 2015-ம் ஆண்டு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிவித்துள்ளார்.

கோச்சடையான் படம் கடந்த மே மாதம் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி மற்றும் பஞ்சாபி மொழிகளில் வெளியானது.

2015-ல் சர்வதேச அளவில் வெளியாகிறது கோச்சடையான்.. தயாரிப்பாளர் அறிவிப்பு

தமிழில் இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் சுமாராகப் போனது. மற்ற மொழிகளில் இந்தப் படம் சரியாகப் போகவில்லை. வெளியீட்டுத் தேதிகளில் நடந்த குழப்பமே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கோச்சடையானை ஆங்கிலத்தில் வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. 2015-ம் ஆண்டில் இந்தப் படம் சர்வதேச அளவில் ஆங்கிலத்தில் 80க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகிறது. ஆங்கிலம் தவிர, ஜப்பானிய மற்றும் ப்ரெஞ்ச் மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதனை படத்தின் தயாரிப்பாளர்களான மீடியா ஒன் நிறுவனத்தின் அதிபர் முரளி மனோகர் நேற்று அறிவித்துள்ளார்.

 

கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் சம்பந்தமில்லை! - தயாரிப்பாளர் முரளி மனோகர்

சென்னை: கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் தொடர்பில்லை. அந்தக் கடனை நாங்களே திருப்பிச் செலுத்திவிடுவோம், என்று தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறினார்.

சமீப நாட்களாக 'கோச்சடையான்' சம்பந்தமாக வங்கி கடன் பிரச்சினை என்றும் லதா ரஜினிகாந்தைத் தொடர்பு படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் சம்பந்தமில்லை! - தயாரிப்பாளர் முரளி மனோகர்

இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன இயக்குநர் டாக்டர் முரளி மனோகர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அவர் பேசும்போது, "நான் இங்கே சில உண்மைகளை பகிர்ந்து கொள்ளவே உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். உங்கள் முன் யதார்த்தத்தை சொல்லவே வந்துள்ளேன்.

குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் ஒரு பொது நிறுவனம். இதுகடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது படத்தயாரிப்பு, பட விநியோகம், திரையீடு என பலவிதமான தளங்களிலும் இயங்கிவருகிறது.

படத் தயாரிப்பை எடுத்துக் கொண்டால் ஐஸ்வர்யா ராய், மிராண்டா ரிச்சர்ட்சன் நடித்து ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த "provoked" போன்ற சர்வதேச தரத்திலான படங்களையும் சர்வதேச சந்தைக்குச் கொண்டு சென்றிருக்கிறது. தமிழில்'ஜீன்ஸ்' 'மின்னலே' 'தாம் தூம்' போன்றவற்றைத் தயாரித்தோம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை எங்களுக்கு சொந்தமானவை, குத்தகை என்று 30 திரையரங்குகள் உள்ளன. இந்த வரிசையில் மேலும் சில திரையரங்குகளைக் கொண்டுவர ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் சமமாக்கி ஒரு சுதந்திரமான சங்கிலியாக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் சம்பந்தமில்லை! - தயாரிப்பாளர் முரளி மனோகர்

நம் நாட்டு பிரபலங்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக 1988 லேயே 'ப்ளட் ஸ்டோன்' எடுத்தேன். அதே போல 'கோச்சடையான்' படத்தை சர்வதேச தரத்துடன் எடுக்க நினைத்தோம். இங்கென்றால் வியாபார லாபம் நஷ்டம் உடனே தெரிய வரும். நம் பிரபலங்களை உலக அளவில் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல் வியாபார லாபம் சற்று தாமதம் ஆகும்.

கோச்சடையான்' படத்தைப் பொறுத்தவரை அதை பல வெளிநாட்டு மொழிகளில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆங்கில மொழியாக்கம் தொடர்பான வேலைகள் இப்போதுதான் நடக்கின்றன.

கோச்சடையான் தொழில் நுட்பரீதியிலான ஒரு நல்ல முயற்சி. ஆனால் அப்போது நிதிப் பிரச்சினை ஏற்பட்டது.

மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் எக்ஸிம் வங்கியில் 20 கோடி ரூபாய் சட்டத்திற்கு உட்பட்டுதான் கடன் வாங்கியது. இதை தனது சுயமான திருப்பிச் செலுத்தும் சக்தியுடன் வாங்கியது. அப்போது உத்தரவாதத்துக்காக திருமதி லதா ரஜினிகாந்த் எங்களுக்கு உதவ எங்களுடன் இணைந்தார்.

உண்மையில் இந்நிறுவனம் 31.3.2015 க்குள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இருக்கிறது. இதை முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 2014ல் வங்கியுடன் சுமுகமாக முடிந்துள்ளன.

வங்கிக்கான வட்டியை ஜூன் 2014 வரை முறையாக தொடர்ச்சியாக செலுத்தியே வந்துள்ளோம்.

நிதிப் பிரச்சினை எல்லாருக்கும் வருவது சகஜம்தான். எங்களுக்கும் வந்தது. அதிலிருந்து மறு சீரமைப்பு செய்து வேறு வேறு வரவு ஆதாரங்கள் மூலம் மீளும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் உத்திரவாதம் அளித்தவர் மட்டுமே. ஆனால்அவரை சம்பந்தப்படுத்தி செய்திகள் வருகின்றன.

எனவே உத்திரவாதம் அளித்த அவருக்கு தொந்தரவு தராதபடி நாங்களே கடனை அடைத்து விடுவோம். தவறான செய்திகளை நம்ப வேண்டாம்," என்றார்.

 

கப்பல் விமர்சனம்

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: வைபவ், சோனம் பாஜ்வா, விடிவி கணேஷ்

இசை: நடராஜன் சங்கரன்

தயாரிப்பு: எஸ் பிக்சர்ஸ்

இயக்கம்: கார்த்திக் ஜி கிரீஷ்

லாஜிக் பார்க்கக்கூடாத சிரிப்புப் படங்களில் இன்னொரு வரவாக வந்திருக்கிறது கப்பல்.

கப்பல் விமர்சனம்

நல்ல நட்பை காதலும் கல்யாணமும் பிரித்துவிடும் என நினைத்து பள்ளி நாட்களிலேயே பெண்களை வெறுக்கிறார்கள் வைபவும் அவர் நண்பர்கள் நால்வரும். வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என சத்தியம் செய்கிறார்கள்.

ஆனால் வளர்ந்து பெரியவர்களான பிறகு, வைபவுக்கு காதல் வருகிறது. சோனம் பாஜ்வாவை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் நண்பர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மறைக்கிறார். இதைத் தெரிந்து கொள்ளும் நண்பர்கள் வைபவ் - சோனம் காதலைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்.

கப்பல் விமர்சனம்

காதலர்கள் பிரிந்தார்களா... இணைந்தார்களா என்பது மீதிக் கதை.

பார்வையாளர்களை முதல் காட்சியிலிருந்து சிரிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். இதில் சில காட்சிகள் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும், படம் முழுக்க நான் ஸ்டாப் சிரிப்பு வருவதென்னமோ உண்மைதான்.

குடிக்கும் காட்சிகளில் ஆண்களை மட்டும்தான் காட்ட வேண்டுமா... பெண்கள், அதுவும் இளம் பெண்கள் சர்வசாதாரணமாக சரக்கடிப்பது போல காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர். இது காமெடியாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த மாதிரி கதைகளில், குடிக்கிற காட்சிகளுக்கு என்ன அவசியமிருக்கிறது என்றும் புரியவில்லை.

கப்பல் விமர்சனம்

வைபவுக்கு இது முக்கியமான படம். ஒரு நகைச்சுவைப் படத்தில் ஹீரோ பளிச்சென்று தெரிவது அத்தனை சாதாரண விஷயமல்ல. வைபவுக்கு நல்ல நடிப்பும் வருகிறது, நகைச்சுவையும் வருகிறது. விடிவி கணேஷை அவர் மாடியிலிருந்து தள்ளிவிட முயலும் காட்சியிலும், பஞ்ச பாண்டவ நண்பர்களிடம் சிக்கிக் கொண்டு அவர் திணறும்போதும் முக பாவங்கள் வெகு இயல்பு.

விடிவி கணேஷ் இந்தப் படத்தின் இன்னொரு ப்ளஸ். அவர் வரும்போதெல்லாம் மக்கள் இயல்பாகவே சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

கப்பல் விமர்சனம்

நண்பர்களாக வரும் கருணாகரன், அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் என நால்வருமே இயல்பான நகைச்சுவையை வழங்கியிருக்கிறார்கள்.

ஆனாலும் வைபவை வெறுப்பேற்றும் காட்சிகளும், அவரிடமிருந்து சோனம் பாஜ்வாவைப் பிரிக்க போடும் திட்டங்களும் கொஞ்சம் ஓவர்தான்.

நாயகி சோனம் பாஜ்வா கவர்ச்சியில் ஏக தாராளம் காட்டுகிறார். சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். தமிழ் சினிமாவில் நாயகியாக நிலைக்க இது போதாதா என்ன!

கப்பல் விமர்சனம்

இளையராஜாவுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவரது கரகாட்டக்காரனில் இடம் பெற்ற ஊருவிட்டு ஊரு வந்து பாடலை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். கேட்க சுகமாக இருந்தது. காட்சிக்கும் அத்தனைப் பொருத்தமாக அமைந்த பாட்டு அது. ஒளிப்பதிவும் இசையும் சராசரி ரகம்தான்.

ஷங்கரின் சீடர் என்றாலும் பிரமாண்டத்தை செட்டுகளிலும் லொகேஷன்களிலும் காட்டாமல், நகைச்சுவையில் காட்டியதற்காக இயக்குநர் கார்த்திக் ஜி கிரீஷைப் பாராட்டலாம்.

 

டிவிக்கு வந்த இனியா - அருண் விஜய்

பெரிய திரையில் வாகை சூடவா, மவுன குரு படங்களுக்குப் பிறகு பெரிய ஹீரோயினாக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட இனியா, குறுகிய காலத்திலேயே வில்லியாகி இப்போது டிவிக்கும் வந்துவிட்டார். கூடவே நடிகர் அருண் விஜய்யும்.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, ஒரே உருவத்தில் இருக்கும் இரட்டையர்கள் மட்டுமே பங்குபெறும் ரியாலிட்டி ஷோவான இருவர் என்ற நிகழ்ச்சியின் நடுவர்களாக இந்த இருவரும் பங்கேற்கின்றனர்.

டிவிக்கு வந்த இனியா - அருண் விஜய்

ஜெகன், மைதிலி இருவரும் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இரட்டையர்களிடம் இருக்கும் நடனத் திறமை, பாடும் திறன், நகைச்சுவை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் சுவாரசியமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அத்துடன், பொது அறிவு கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

டிவிக்கு வந்த இனியா - அருண் விஜய்

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு காணலாம்.

 

கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்த கமல் ஹாஸன்!

சென்னை: தன் குருநாதர் கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய், அவரது இறப்புக்கு துக்கம் விசாரித்தார் நடிகர் கமல் ஹாஸன்.

ரஜினிகாந்த் - கமல் ஹாஸன் ஆகிய இரு பெரும் சிகரங்களை உருவாக்கிய, தமிழ் சினிமாவின் சாதனை இயக்குநர் பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் காலமானார்.

கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்த கமல் ஹாஸன்!

அவரது மறைவின்போது கமல் ஹாஸன் சென்னையில் இல்லை. உத்தம வில்லன் பட வேலைகளுக்காக அமெரிக்காவின் லாஜ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றிருந்தார். பாலச்சந்தர் உடலை எரியூட்டுவதற்கு முன் அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்த கமல் ஹாஸன்!

நேற்று இரவுதான் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் கமல்.

இன்று காலை மயிலாப்பூரில் உள்ள பாலச்சந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு பாலச்சந்தர் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். அவர் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலியும் செலுத்தினார்.