செல்லமே சீரியலில் வில்லத்தனம் காட்டும் சிநேகாவாக வந்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்குகிறார். அதேசமயம் அத்திப்பூக்கள் சீரியலில் போலீஸ் அதிகாரி ரெஜினாவாக வந்து பாராட்டு பெறுகிறார் நடிகை தேவிப்ரியா.
எப்படி ஒரே நாளில் வில்லியாக, நகைச்சுவை நடிகையாக, கண்டிப்பான அதிகாரியாக நடிக்க முடிகிறது என்ற கேள்வியோடு அவரை சந்தித்தோம்.
சினிமாவா சீரியலா என்று கேட்டால் நான் சீரியலுக்குத்தான் முக்கியத்துவம் தருவேன். ஏனெனில் சினிமாவை விட சீரியலில்தான் நடிகைகளின் கேரக்டர்கள் அதிகமாகப் பேசப்படுகிறது.
சீரியல் பல கதைகளை வீட்டுக்குள்ளேயே கொண்டு செல்வதால் மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. சினிமா போல் சீரியல் பொழுதுபோக்கிற்காகப் பார்க்கப்படுவதில்லை. சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோமே அதுவே பெரிய வெற்றிதான்.
மேலும் சினிமாவை விட சீரியலுக்கான வரவேற்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் சீரியல்களின் புதிய கதைக் களங்கள்தான்.
சீரியலில் பழி வாங்கல், துரோகம், கணவன் மனைவி தொடர்புகளில் சிக்கல் இவைகள்தான் சீரியல்களில் ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றன என்பது உண்மைதான். மனிதர்களின் சராசரி வாழ்க்கைதான் இங்கு சீரியலாக்கப்படுகிறது.
மாமியார்-மருமகள் பிரச்னையை பற்றி சொல்லும் போது பழி வாங்கல், துரோகம் போன்றவற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். சினிமாவை விட பாலியல் தொடர்பான விஷயங்கள் சீரியலில் குறைவுதான். இருந்தாலும் ஒரு கதை சொல்லப்படும்போது அது தவிர்க்க முடியாத விஷயமாகி விடுகிறது.
சீரியலை குடும்பமே உட்கார்ந்து பார்க்கக் கூடிய இன்றைய சூழலில் இந்த விஷயங்கள் குறைந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் சீரியலுக்கென தனி சென்சார் வந்தால் வரவேற்கலாம்.
இப்போது ‘செல்லமே', ‘ அத்திப்பூக்கள்', போன்ற குறிப்பிடத்தக்க சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறேன். இந்த இரண்டுமே மாறுபட்ட கதாபாத்திரங்களை கொண்டவை. மக்களிடம் நன்றாக ரீச் ஆகியிருக்கின்றன.
சினிமாவில் எனக்கு முக்கியத்துவமான கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறேன். ‘வல்லமை தாராயோ', ‘நாயகன்' படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தது. அது போல் கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்று கூறி விடை பெற்றார் தேவிப்ரியா.