தாரை தப்பட்டையில் "கன்னடத்துக் கரகாட்டம்" காவ்யா ஷா!

சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படத்தில் கன்னட நடிகை காவ்யா ஷாவும் ஒரு கரகாட்டக் கலைஞராக இன்னொரு நாயகியாக நடிக்கிறாராம்.

பரதேசி படத்திற்குப் பின்னர் நீண்ட இடைவெளி விட்டு இயக்குநர் பாலா தற்போது தாரை தப்பட்டை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் சசிக்குமார் நாயகனாக வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.

தாரை தப்பட்டையில்

அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி நடிக்கிறார். பாலாவே இந்தப் படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். இப்படத்துக்கு இசை இளையராஜா. இது இளையராஜாவின் 1000மாவது படம் என்ற பெருமையையும் பெற்று வளர்ந்து வருகிறது.

கரகாட்டம்தான் இப்படத்தின் முக்கியக் கதைக் களமாகும். இதில் கரகாட்டக் கலைஞர்களாக சசிசிக்குமாரும், வரலட்சுமியும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர காவ்யா ஷா என்ற நடிகையும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

கன்னட நடிகையாவார் காவ்யா ஷா. அங்கிருந்து தமிழுக்கு வருகிறார். ஆரம்பா உள்ளிட்ட பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார் காவ்யா ஷா.

தமிழில் இதுதான் இவருக்கு முதல் படம். பல்வேறு பாத்திரங்களில் நடித்தவரான காவ்யா ஷா, தாரை தப்பட்டையில் கரகாட்டக் கலைஞராக நடிக்கிறாராம். இதற்காக இவருக்கு சிறப்புப் பயிற்சியும் கொடுத்துள்ளனராம்.

 

அக்ஷராவுக்கு நான் டிப்ஸ் கொடுப்பதா, அட போங்க பாஸ்: தனுஷ்

சென்னை: அக்ஷரா ஹாஸனுக்கு நான் எந்த டிப்ஸும் வழங்கவில்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் இந்தியில் நடித்துள்ள இரண்டாவது படம் ஷமிதாப். படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஷமிதாபில் தனுஷ் வாய் பேச முடியாதவராக நடித்துள்ளார். அவருக்கு குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

அக்ஷராவுக்கு நான் டிப்ஸ் கொடுப்பதா, அட போங்க பாஸ்: தனுஷ்

இந்த படம் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகியுள்ளார். அக்ஷரா புதுமுகமாச்சே ஏதாவது நடிப்பு டிப்ஸ் கொடுத்தீர்களா என்று தனுஷிடம் கேட்கப்பட்டது.

அதற்கு தனுஷ் கூறுகையில்,

அக்ஷராவுக்கு டிப்ஸ் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. நான் நடித்த கதாபாத்திரம் சவால் ஆனது. அதனால் நானே அதிகமாக உழைக்க வேண்டி இருந்தது. இது உங்களின் முதல் படமோ, 50வது படமோ அது முக்கியம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கும், அக்ஷராவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றார்.

கேமராவுக்கு முன் வந்தால் தனுஷ் வேறு மனிதாரகிவிடுவார். அவர் நடிப்பதை பார்த்தாலே நாம் எல்லாம் அசந்துவிடுவோம் என்று அவரின் நடிப்பை அக்ஷரா புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டூரிங் டாக்கீஸ்... முதல் முறையாக ஒரு பெரும் சமூகக் கொடுமையை அம்பலமாக்கும் படம்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது. இவர்களில் சரி பாதி, சிறுமிகள், குழந்தைகள் என்பதுதான் மிகப் பெரிய அதிர்ச்சிக்குரிய விஷயம்.

கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத இந்தக் கொடூரத்தை முதல் முறையாக திரைப்படமாக எடுத்திருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். அதுதான் நேற்று வெளியான டூரிங் டாக்கீஸ்.

டூரிங் டாக்கீஸ்... முதல் முறையாக ஒரு பெரும் சமூகக் கொடுமையை அம்பலமாக்கும் படம்!

தன் கடைசி படம் என்று அறிவித்துவிட்டு, அதை இன்றைய சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தியோடு தந்திருப்பதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டூரிங் டாக்கீஸ் படத்தில் இரு கதைகள். இரண்டும் வெவ்வேறு கதைகள். முதல் கதையை காதல் 75 என்ற தலைப்பில் படமாக்கியுள்ளார். இது 75 வயதான ஒரு முதியவரின் காதல். சுவாரஸ்யமாகவே அதை முடித்திருக்கிறார் இயக்குநர் சந்திரசேகரன்.

இரண்டாவது கதைக்குப் பெயர் செல்வி 5-ம் வகுப்பு.

இந்தக் கதைதான் சமூகத்தில் நிலவும் அந்த மாபாதகச் செயலை படம் பிடித்துக் காட்டுகிறது.

தமிழகத்தின் ஒரு பகுதியில் இன்றும் நிலவும் கொடூரமான சாதிக் கொடுமையை, சாதீய திமிரால், அப்பாவி மக்கள் சிதைக்கப்படுவதை மிகையின்றிச் சித்தரித்திருக்கிறார் இந்தப் படத்தில். அதற்கு பெரிதும் துணை நின்றிருக்கிறது இளையராஜாவின் இசை.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை படமாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள் திரையுலகினர்.

"எனக்கு இந்த விஷயத்தைச் சொல்ல எந்தத் தயக்கமும் பயமும் இருக்கவில்லை. இப்படி ஒரு கொடுமை நடக்கிறதே என்று கண்ணை மூடிக் கொண்டு செல்ல முடியாது. என் கடைசி படம், சமூகத்தின் கண்ணைத் திறக்க உதவ வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படம் தந்தேன். இன்று அதற்கான பலன் கிடைத்திருக்கிறது," என்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன்.

 

அனுஷ்கா நடிக்கும் ருத்ரமா தேவி படத்தில் சம்பளத் தகராறு... போலீசில் புகார்

அனுஷ்கா நடித்து வரும் சரித்திரப் படமான ருத்ரமா தேவியில் நடிகர்களுக்கு சம்பளம் சரியாகத் தராததால், பிரச்சினை போலீஸ் வரை போயுள்ளது.

தமிழ், தெலுங்கில் மெகா பட்ஜெட்டில் தயாராகி வருகிறது இந்தப் படம். இதில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யாமேனன், கேத்ரினா திரேஷா போன்றோரும் நடிக்கின்றனர்.

குணசேகரன் தயாரித்து இயக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

அனுஷ்கா நடிக்கும் ருத்ரமா தேவி படத்தில் சம்பளத் தகராறு... போலீசில் புகார்

படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் சம்பள விவகாரத்தில் நடிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் சுமன் தயாரிப்பாளர் குணசேகரன் மீது ஆந்திர மாநிலம் நம்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், "ருத்ரமாதேவி படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக தயாரிப்பாளர் குணசேகர் எனக்கு ரூ.5 லட்சம் செக் கொடுத்து இருந்தார். அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது. பிறகு குணசேகரை அணுகி பணத்தை கேட்டேன். அவரிடம் இருந்து பொறுப்பான பதில் வரவில்லை," என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

 

அஜீத், விஜய்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தாங்க!- எஸ் ஜே சூர்யா

அஜீத்துக்கும் விஜய்க்கும் நான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்றது தவறு. அவர்கள்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார்கள் என்று இயக்குநர் - நடிகர் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் அவரே நடித்து இசையமைத்து வந்துள்ள லேட்டஸ்ட் படம் இசை.

அஜீத், விஜய்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தாங்க!- எஸ் ஜே சூர்யா

படம் வெளியானது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், அஜீத், விஜய் பற்றியும் கூறியுள்ளார்.

அதில், "எல்லாரும் அஜித், விஜய்க்கு நான் லைஃப் கொடுத்ததா சொல்றாங்க. எனக்குதான் அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கை குடுத்துருக்காங்க. அதுலயும் விஜய் அவ்ளோ பெரிய ஹீரோ... இன்னும் எனக்காக அவர் மனசுல இவ்ளோ பெரிய இடம் கொடுத்திருப்பார்னு நான் நெனைக்கவே இல்ல. இத்தனை வருஷம் கழிச்சு ஒரே வார்த்தைல நான் 10 வருஷம் சினிமாவுல இல்லைங்கறத மக்கள் மறக்குற மாதிரி செஞ்சுட்டாரு.

நான் கடந்து வந்த பாதைக்கு முதல் விதை போட்டவரு அஜித். நல்ல மனுஷன் இப்போ கொஞ்சம் நாளா தன்ன தனிமை படுத்திட்டாரு. அவரு போன் கூட யூஸ் பண்றதில்லை. மெயில் அனுப்பியிருக்கேன் என்னோட டிரெய்லர அஜித் பாத்துருப்பாருன்னு நம்பறேன்," என்று தெரிவித்துள்ளார்.

 

அஜீத் ரசிகர்கள் கொன்னுப்புட்டாய்ங்க...!- விவேக்குடன் ஒரு கலகல பேட்டி

ரொம்ப நாள் கழித்து தலஅஜீத்துடன் நடித்துள்ளார் விவேக். அந்த அனுபவம் பற்றி இன்னும் யாரிடமும் பெரிதாக சொல்லிக் கொள்ளாமலிருக்கிறார் மனிதர்.

நம்மகிட்டேயாவது சொல்கிறாரா பார்க்கலாம்னு நினைத்து போன் செய்தால், "நீங்க தொடர்பு கொண்ட விவேக் தற்சமயம் பிசியாக மட்டுமல்ல, பசியாகவும் உள்ளார்" என்று தனது வழக்கமான பாணியில் ஆரம்பித்தார்.

நீங்க சாப்பிட்டு முடிச்சு ஃபிரியா இருக்கும் போது கூப்பிடவா சார் என்றேன்.

அஜீத் ரசிகர்கள் கொன்னுப்புட்டாய்ங்க...!- விவேக்குடன் ஒரு கலகல பேட்டி

"அட விளையாட்டுக்கு சொன்னங்க.. பேசுங்க..." என்று சிரித்தார்... சிரிப்பின் சுவாரஸ்யத்தில் நலம் விசாரிப்பு முடித்து... கேள்விகளை ஆரம்பித்தோம்.

கேள்வி: "விவேக் டேட்ஸ் இல்லாத நிலையில்தான் விண்ணைதாண்டி வருவாயா படத்தில் விடிவி கணேஷ் நடித்தார்' என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் கூறியுள்ளார். உங்களிடம் இதை பற்றி சொல்லியிருக்கிறாரா.. அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தப்பட்டதுண்டா...?

பதில்: விடிவி கணேஷ்க்கு நல்ல பெயர் கிடைத்தது மகிழ்ச்சிதான்... ஆனால் நான் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம் தான்... ஆனால், எப்போ கவுதம் என்னிடம் கேட்டார்??? ஒருவேளை நான் மறந்திருப்பேன்!

மின்னலே இயக்குனர் கவுதம் மேனன் இப்பொழுது ‘என்னை அறிந்தால்' இயக்குனர் கவுதம் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள் ?

கேள்வி: மின்னலே- கௌதம் 13 வருடம் சின்னவர், புதியவர். பரபரப்பும், படபடப்பும் உள்ளவர்.

பதில்: என்னை அறிந்தால் - கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. அனால் அதே அன்பு. ‘ஆடி' காரில் வருகிறார்.

கேள்வி: உங்க படங்களில் வழக்கமா வரும் கூலர்ஸ் , டி ஷர்ட் போட்ட ஹீரோவின் நண்பனா இல்லாமல் என்னை அறிந்தால் படத்தில் சற்று வேற கெட்-அப்ல வர்றீங்களே.... உங்க கதாப்பாத்திரத்தை பற்றி சொல்லுங்களேன்?

பதில்: இந்த படத்தில் ஒரு சீரியசான , குசும்புமிக்க கதாப்பாத்திரம்; சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். எடுத்த காமெடி காட்சிகளில் எத்தனை எடிட்டர் ஆண்டனியின் கத்திரிக்கு தப்பிக்கிறதோ... ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

‘காதல் மன்னன்' ஷிவா, ‘என்னை அறிந்தால்' சத்யதேவ் உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பன் யார்?

ஷிவா - துடிப்பான ‘காதல்' மன்னன்
சத்யதேவ் - பொறுப்பான ‘காவல்' மன்னன்
இருவரும் நல்ல நண்பர்களே...

கேள்வி: Twitter , Facebookனு அஜித் சார் ரசிகர்கள் எங்கும் உள்ளார்கள். சமூக வலைதளங்களில் அவர்களுடன் ஏற்பட்ட ஏதேனும் ஒரு அனுபவம்

பதில்: ஐயோ... ‘தல', ‘தல' ன்னு அலறும் அவர்மேல் வெறிபுடித்த ரசிகர்கள். நான் என்னை அறிந்தால் நடிக்க தொடங்கியதில் இருந்து, ‘என்ன கதை ?', ‘ தல எப்படி இருக்கார்?னு கேட்டே கொன்னுப்புட்டாய்ங்க... பாசக்கார பசங்க...

கேள்வி: இருவார்த்தைகளில் திரிஷாவை பற்றி கூறுங்களேன்.

பதில்: இனிமை, பெண்மை - திரிஷா

கேள்வி: அனுஷ்காவை பற்றி இருவார்த்தைகளில் கூறுங்களேன்.

பதில்: அழகு, அறிவு - அனுஷ்கா

கேள்வி: தீவிர பெரியாரின் கொள்கையை பேசிய நீங்கள்... இப்பொழுது பாபா வின் தீவிர பக்தன் மாறியுள்ளீர்களே?

பதில்: பெரியாரின் சாதி ஒழிப்பு , பெண் கல்வி, மூட நம்பிக்கை போன்றவற்றை படங்களில் சொல்லி இருக்கிறேன். முரட்டுதனமான, முட்டாள் தனமான மதம் வேண்டாம் என்கிறேன் அவ்வளவுதான்.

என்னை அறிந்தால் படத்தில் உங்க கேரியரில் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும்?

ஷூட்டிங்கில் எடுத்ததெல்லாம், படத்தில் இருந்த எடுத்துவிடாமல் வைத்தால்... என் கேரியரில் முக்கியமான படமாய் இருக்கும். அஜித்தின் அன்புக்கு நன்றி...!

 

இளவரசன்- திவ்யா காதல் கதை படமாகிறது?

வாச்சாத்தி என்ற கிராமத்தில் பொதுமக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை, வாச்சாத்தி என்ற பெயரிலேயே படமாக்கியவர் ஆர் ரமேஷ்.

அவர் அடுத்து சினிமாவாக்கப் போவது தர்மபுரி இளவரசன் - திவ்யா காதல் கதையை.

இந்தப் படத்துக்கு ‘இலக்கணம் இல்லா காதல்' என்று தலைப்பிட்டுள்ளார்.

இளவரசன்- திவ்யா காதல் கதை படமாகிறது?

இப்படக்கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா.

இதில் ஆர். ரமேஷ், கவிதா, பாரதி, ராதாரவி, நந்தினி, விஜயகுமார், கெளசல்யா, வி.சி.ஜெயமணி, தேவிகிருபா, போண்டா மணி, ஐஸ்வர்யா, கராத்தே ராஜா, ப்ரியா, பெஞ்சமின், ஜெகதீஸ், விஜய கணேஷ், பழனி, கிங்காங், விஜயகுமார். பி.எஸ். ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை வி.சி.ஜெயமணி இயக்குகிறார். தீபக் - மணி ஒளிப்பதிவு செய்கிறார்கள். வில்லியம்ஸ் - நாகா பாடல்களுக்கு இசையமைக்க படத்தின் பின்னணி இசையை அம்சத்வனி அமைக்கிறார்.

‘வாச்சாத்தி' படம் போலவே இப்படமும் விமர்சகர்க்ளிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெறும் என ஆர்ரமேஷ் மற்றும் வி.சி.ஜெயமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

படத்தை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில்தான் படமாக்குகிறார்கள்.