என்னை அறைந்த கோழை உண்மையான முஸ்லீம் அல்ல: நடிகை கவ்ஹர் கான்

என்னை அறைந்த கோழை உண்மையான முஸ்லீம் அல்ல: நடிகை கவ்ஹர் கான்  

இந்நிலையில் இது குறித்து கவ்ஹர் கான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

என் மீது அன்பு வைத்து ஆதரவு அளித்துள்ள என் குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்கள், மீடியா, சினிமா துறையினருக்கு நன்றி. நான் காயம் அடைந்தேன். ஆனால் அதனால் நொந்துவிடவில்லை. அதிர்ச்சி அடைந்தேன் ஆனால் இன்னும் உறுதியோடு உள்ளேன். முன்பை விட தற்போது வலிமையாக உணர்கிறேன். அந்த ஆள் அமைதியை போதிக்கும் என் அழகிய மதத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது.

அவர் நான் ஒரு நடிகை என்பதாலேயே என்னை தாக்கியுள்ளார். இது போன்ற செயல்களை எதிர்த்து நிற்குமாறு நான் பெண்களை கேட்டுக் கொள்கிறேன். அடிவாங்கியதும் நான் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு செல்லவில்லை.

நான் தாக்கப்பட்டதை அறிந்து கோபம் அடைந்த இந்திய வாலிபர்களின் பிரதிநிதி அல்ல அந்த கோழை என்றார்.

 

பெங்களூரில் நாளை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்!

பெங்களூருவில் வியாழக்கிழமை (டிச.4) சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது.

இதுகுறித்து கர்நாடக திரைப்பட அகாதெமியின் தலைவர் ராஜேந்திரசிங் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு அம்பேத்கர் பவனில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் தொடங்கும் சர்வதேச திரைபட விழாவுக்கு மாநில அமைச்சர் ரோஷன் பெய்க் தலைமை வகிக்கிறார். முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரில் நாளை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்!

இந்த விழாவில் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 170 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. முதல் படமாக ஹங்கேரி மொழியின் தி அம்பாசிடர் டு டர்ன் திரைப்படம் திரையிடப்படும்.

மாநகரில் சுதந்திரப் பூங்கா, சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோ, லிடோ, பாதாமி ஹவுஸ், செய்தித் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் படங்கள் திரையிடப்படும். திரைப்பட விழாவில் மறைந்த இயக்குநர் ஹுனுசூர் கிருஷ்ணமூர்த்தி, ஹொன்னப்பா பாகவதர், ஞானபீட விருது பெற்ற யு.ஆர்.அனந்தமூர்த்தி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

இந்த விழாவில் இந்தி திரைப்பட மூத்த இயக்குநர் சுபாஷ் கய், அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, அம்பரீஷ், உமாஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கன்னட திரைப்பட பிரிவில் பிருக்குருதி, அகசி, பார்லர், ஹரிவு, உலித்வரு கண்டந்தே, கஜகேசரி படங்கள் திரையிடப்படுகின்றன என்றார்.

 

ஈராஸிடமிருந்து சோனிக்குப் போனது என்னை அறிந்தால் இசை உரிமை!

ஈராஸ் நிறுவனம் வாங்கியதாக முதலில் அறிவிக்கப்பட்ட அஜீத்தின் என்னை அறிந்தால் பட இசை வெளியீட்டு உரிமையை, இப்போது சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஈராஸின் தென்னகத் தலைவராக சௌந்தர்யா ரஜினி பொறுப்பேற்ற பிறகு, அந்த நிறுவனம் இசை வெளியீட்டு உரிமைகளைப் பெறுவதிலும், பெரிய படங்களின் வெளியீட்டு உரிமைகளை வாங்குவதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.

ஈராஸிடமிருந்து சோனிக்குப் போனது என்னை அறிந்தால் இசை உரிமை!

சவுந்தர்யா பொறுப்பேற்ற பிறகு முதலில் வாங்கியது கத்தியின் இசை உரிமையைத்தான். அடுத்து தன் தந்தை ரஜினி நடித்த லிங்கா படத்தின் இசையை வாங்கினார்.

அதன் பிறகு அஜீத்தின் என்னை அறிந்தால் இசை உரிமையையும் சவுந்தர்யா மூலம் ஈராஸ் வாங்கியதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது சோனி நிறுவனம் அந்த உரிமையை தட்டிச் சென்றுள்ளது.

இதனை சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

சோனி மியூசிக் - ஹாரிஸ் ஜெயராஜுடன் நெருக்கமான நட்பு வைத்துள்ளதால், சோனிக்கே இசை உரிமையைத் தரவேண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் விரும்பினாராம். இதனாலேயே டீல் கை மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

 

விக்ரம் பிரபுவின் தாய்மாமனாகிறார் வடிவேலு

ஹீரோவாக நடித்த வடிவேலு மீண்டும் காமெடியனாகவே நடிக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார் என்றே தெரிகிறது. தெனாலிராமனாக ரீ எண்ட்ரி ஆனாலும் எலி படம்தான் கைக்கு சிக்கியது. அதுவும் சிக்கலில் இருப்பதால் இருப்பை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் காமெடி பாதைக்கே திரும்பிவிட்டாராம்.

அரசியல் ஆசையால் திமுகவிற்கு போன வைகைப் புயல் வடிவேலுவின் சினிமா வாழ்க்கை அஸ்தமித்து போனது. எனினும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘தெனாலிராமன்' திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். தற்போது கதாநாயகனாக ‘எலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை யுவராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ஏதோ சிக்கலாம்.

விக்ரம் பிரபுவின் தாய்மாமனாகிறார் வடிவேலு

இந்நிலையில் வடிவேலு, விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் ஒன்றில் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் ரீ- எண்ட்ரி செய்த பின்னர் காமெடி கேரக்டரில் நடிக்கும் முதல்படம் இதுதான்.

பிரபல இயக்குனர் எழில் அவர்களின் உதவியாளர் முருகைய்யா இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு மாமாவாக வடிவேலு நடிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. பிப்ரவரியில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என முருகைய்யா தெரிவித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வடிவேலு மீண்டும் காமெடி வேடங்களில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

 

எமி ஜாக்சனுக்கு ஏக டிமாண்ட்.. தனுஷ், உதயநிதி படங்களில் ஒப்பந்தம்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு வெளிவரும் ஐ படம் குறித்த எதிர்ப்பார்ப்பு, எமி ஜாக்ஸனுக்கு ஜாக்பாட் அடிக்க வைத்திருக்கிறது.

இந்தப் படம் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை இருப்பதால், எமியை முன்னணி ஹீரோக்கள் தங்கள் ஜோடியாக்க முயற்சிக்கின்றனர். ஏற்கெனவே சூர்யா-வெங்கட் பிரபு இணைந்துள்ள ‘மாஸ்' படத்திலும் எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.

எமி ஜாக்சனுக்கு ஏக டிமாண்ட்.. தனுஷ், உதயநிதி படங்களில் ஒப்பந்தம்

அடுத்து தனுஷ் தனது அடுத்த படத்துக்கு எமியை ஜோடியாக்கிவிட்டார். இந்தப் படத்தை வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறது.

எமி ஜாக்சனுக்கு ஏக டிமாண்ட்.. தனுஷ், உதயநிதி படங்களில் ஒப்பந்தம்

அதேபோல், ‘மான்கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன், உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்திலும் எமிஜாக்சன் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் ஏதும் தெரியவில்லை.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

 

மகள் வயது உதவியாளருடன் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு காதல்?

லண்டன்: மிஷன் இம்பாசிபிள் 5 படத்தில் நடித்து வரும் டாம் க்ரூஸுக்கு தனது மகள் வயதில் உள்ள உதவியாளர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாம்.

ஹாலிவுட்டில் நெடுநெடுவென இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் மிதமான உயரமுள்ள டாம் க்ரூஸ் பல பெண்களின் கனவுகளில் வருகிறார். 52 வயதானாலும் அவருக்கு இன்னும் ஏராளமான ரசிகைகள் உள்ளனர். மூன்று முறை திருமணமாகி விவாகரத்தான டாம் க்ரூஸ் தற்போது மிஷன் இம்பாசிபிள் 5 படத்தில் நடித்து வருகிறார்.

மகள் வயது உதவியாளருடன் நடிகர் டாம் க்ரூஸுக்கு காதல்?

படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடந்து வருகிறது. படத்தில் அவரது உதவியாளரான 22 வயது எமிலி சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் க்ரூஸ், எமிலி இடையே ஒரே காதல் என்று கூறப்படுகிறது. டாம் க்ரூஸின் மூத்த மகள் இசபெல்லாவின் வயது தான் எமிலிக்கு. மகள் வயதில் உள்ளவர் மீது க்ரூஸுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

க்ரூஸ் தன்னுடன் டின்னர் டேட்டுக்கு வருமாறு எமிலியை கேட்டதாக கூறப்படுகிறது. க்ரூஸுக்கு எமிலி போன்று வேறு யார் மீதும் இவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டது இல்லை என்றும், படப்பிடிப்பு தளத்தில் அவர் எமிலியுடன் கடலை போடுவதாகவும் கூறப்படுகிறது.

டாம் க்ரூஸ் தனது இரண்டாவது மனைவியான ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனுடன் சேர்ந்து இசபெல்லா ஜேன் மற்றும் கானர் ஆண்டனி ஆகிய குழந்தைகளை தத்தெடுத்தார். அதில் இசபெல்லாவுக்கு தற்போது 22 வயதாகிறது, கானருக்கு 19 வயதாகிறது.

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தவிர க்ரூஸுக்கு தனது மூன்றாவது மனைவி நடிகை கேட்டி ஹோம்ஸ் மூலம் சூரி என்ற 8 வயது மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கேக் மிக்ஸிங்கில் அசத்திய வைஷாலி, விஜிதா!

சென்னை: சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் நிகழ்ச்சியில் நெருங்கி வா முத்தமிடாதே புகழ் நடிகை வைஷாலி, பாடகி விஜிதா கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மிக்ஸிங்கில் பங்கேற்றனர்.

கேக் மிக்ஸிங்கில் அசத்திய வைஷாலி, விஜிதா!

இப்போது ஸ்டார் ஹோட்டல்களில் கேக் மிக்ஸிங் களை கட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான கே தயாரிப்புக்கான மிக்ஸிங்கை விழா போல தற்போது கொண்டாடி வருகின்றனர். இதில் நடிகர், நடிகையர் உள்பட பிரபலங்களை அழைத்து மிக்ஸிங்கை நடத்துவது பேஷனாகி விட்டது.

அந்த வகையில் அம்பிகா எம்பயர் ஹோட்டலில் ஒரு மிக்ஸிங் நடந்தது. அதில் கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் நடந்தது. இதில், நடிகை வைஷாலி கலந்து கொண்டார். இவர் சென்னையில் ஒரு நாள், புலிவால், பாண்டியநாடு, நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். அதேபோல பின்னணிப் பாடகி விஜிதா கணேசனும் இதில் கலந்து கொண்டார்.

 

கப்பல் படத்துக்கு 'யு' சான்றிதழ்!

இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வழங்கும் கப்பல் படத்துக்கு 'யு' சான்றிதழ்!  

இயக்குனர் ஷங்கரால் மிகச் சிறந்த படம் என பாராட்டு பெற்ற இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் மிகவும் பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பாராட்டின் உடனடி பரிசாக படத்துக்கு யு சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல நகைச்சுவைக்கு கிடைத்த சான்றிதழ் இது என்ற மகிழ்ச்சியுடன் தயாரிப்பாளர்கள் 'கப்பல்' படத்தை இந்த மாதம் 25 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் கடைசியில் வெளிவரும் இந்த படம் ரசிகர்களின் எண்ணத்தில் நீங்கா இடம் பெறும் என நம்பிக்கையும் தெரிவிக்கின்றனர். கப்பல் படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ், அர்ஜூனன், வெங்கட் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

புண்யகோடி... இளையராஜா இசையில் உருவாகும் சமஸ்கிருத அனிமேஷன் படம்

முழுக்க முழுக்க சமஸ்கிருதத் தில் முதல் முறையாக ஒரு அனிமேஷன் படம் உருவாகிறது. புண்யகோடி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ரவிசங்கர் என்பவர் இயக்குகிறார்.

வறுமை தலைவிரித்தாடும் கருநாடு என்ற கிராமத்தில் உண்மையை மட்டுமே பேசும் ஒரு பசு, அதைப் பழிவாங்கக் காத்திருக்கும் புலியின் கதைதான் இந்த புண்யகோடி.

புண்யகோடி... இளையராஜா இசையில் உருவாகும் சமஸ்கிருத அனிமேஷன் படம்

கிரவுட் பண்டிங் எனும் பொதுவெளியில் பணம் திரட்டி படம் எடுக்கும் முயற்சி இது. யார் வேண்டுமானாலும் இந்தப் படத்துக்கு நிதியுதவி செய்து தயாரிப்பாளர்களில் ஒருவராகலாம்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதோடு, வாழ்த்தும் தெரிவித்துள்ளார் இளையராஜா.

படத்தை ஏன் சமஸ்கிருதத்தில் எடுக்கிறார் ரவிஷங்கர்?

இதற்கு அவர் தரும் விளக்கம்:

"சமஸ்கிருதம் விஞ்ஞான மொழி. வாழ்க்கை முறையைச் சொல்லித் தரும் மொழி. ஆங்கிலம் உள்ளிட்ட பல மேலைநாட்டு மொழிகளுக்கு மூலமே சமஸ்கிருதம்தான்.

சமஸ் கிருதம் படித்து. சமஸ்கிருதத்தில் பேசுவதால் பல உடல் உபாதைகள் நீங்குகின்றன.

இந்திய கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் செய்யும் மரியாதையாகவே இந்தப் படத்தை எடுக்கிறேன்," என்கிறார்.

சமஸ்கிருத வாரம், சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்கும் திட்டம் என மோடி அரசு சமஸ்கிருதத்துக்கு பெரும் முக்கியத்துவம் தந்து வரும் இந்தத் தருணத்தில், சமஸ்கிருதத்தில் முழு நீள அனிமேஷன் படம் உருவாவது குறிப்பிடத்தக்கது.

 

பல்கேரியாவில் ‘மாஸ்’ ஷூட்டிங்: சூர்யா, ப்ரணீதா ஆட்டம்!

சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்' படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யாவும், ப்ரணீதாவும் நடிக்கும் பாடல்காட்சிகளும், சில சண்டை காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாஸ்'. இந்த படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கேரளா ஆகிய இடங்களில் முடிவடைந்தது. தற்போது மாஸ் படக்குழுவினர் ப்ரணிதா சம்பந்தப்பட்ட ஒருசில காட்சிகளை படமாக்க பல்கேரியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

பல்கேரியாவில் ‘மாஸ்’ ஷூட்டிங்: சூர்யா, ப்ரணீதா ஆட்டம்!

அதிகாலையில் படமாக்கப்பட்ட காட்சிகள், சூர்யாவின் படங்களை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பதிவேற்றி வருகின்றனர்.

ப்ரேம்ஜி அமரன், சஞ்சய் பாரதி ஆகியோறும் மாஸ் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் மாஸ் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மலைகளும், கடல்பிரதேசங்களும் கொண்ட பல்கேரியா நாட்டில் மாஸ் படப்பிடிப்பு நடப்பதை போல, அனுஷ்கா, ராணா, பிரபாஸ், தமன்னா நடிக்கும் பிரமாண்ட திரைப்படமான 'பாஹுபலி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் அதே பல்கேரியா நாட்டில் நடைபெறுகிறதாம்.

ஏற்கனவே மாஸ் படத்தில் ராணா, பிரபாஸ் ஆகியோர் சில காட்சிகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

பல்கேரியாவில் முதல்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் நடக்க உள்ளதால் அங்கு வாழும் தமிழர்கள் தங்கள் டுவிட்டர் வலையதளம் மூலம் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். பல்கேரியா ஒரு மினி கோடம்பாக்கமாக மாறியுள்ளதாகவும் ஒரு பல்கேரிய தமிழர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

ரஜினியின் லிங்கா படத்திற்கு எதிரான வழக்கு... தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

மதுரை: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லிங்கா படத்திற்கு எதிராக தொடரப் பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோச்சடையான் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்கா நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் ரஜினியின் பிறந்த தினமான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளது.

ரஜினியின் லிங்கா படத்திற்கு எதிரான வழக்கு... தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

இந்நிலையில், லிங்கா படத்தின் கதை தன்னுடைய முல்லைவனம் 999 படத்தின் கதை என இயக்குநர் ரவிரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவுக்கு நடிகர் ரஜினிகாந்த், லிங்கா இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமரன் ஆகியோர் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் தங்களது மனுவில், மனுதாரர் ரவிரத்தினத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு கூறுவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று லிங்கா பட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

பிரசாந்த் படத்துக்காக பாடிய லட்சுமி மேனன்!

படிப்புதான் முக்கியம் என்று நினைத்து விஷால் படத்தையே தவிர்த்தவர் லட்சுமி மேனன்.

இப்போதைக்கு கார்த்தியுடன் 'கொம்பன்' படத்தில் நடித்துவரும் லட்சுமி மேனன், பிரசாந்தின் 'சாஹசம்' படத்துக்காக ஒரு பாடலைப் பாடி இருக்கிறார். தமன் இசையில், மதன் கார்க்கி எழுதிய பாடலை லட்சுமி மேனன் பாடிய விதம், தொழில்முறை பாடகர்களுக்கு நிகராக வந்துள்ளதாம்.

பிரசாந்த் படத்துக்காக பாடிய லட்சுமி மேனன்!

தியாகராஜன் தயாரிப்பில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அருண் ராஜ் வர்மா எனும் புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.

லட்சுமி ஏற்கெனவே 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தின் இமான் இசையில், ஏக்நாத் எழுதி, லட்சுமி மேனன் பாடிய பாடல் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

லிங்கா கதையைத் திருடிட்டேனா.. தனக்குத் தானே பப்ளிசிட்டி தேடிய போர்வெல் டைரக்டர்!

ரஜினியின் லிங்கா படத்தின் கதையை திருடி வேல்முருகன் போர்வெல் படத்தை எடுக்கவில்லை என்று அதன் இயக்குநர் கோபி ஒரு திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கம்பம், தேனி, போடி, கூடலூர் ஆகிய பகுதிகளில் மழைக்காலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்பொழுது மக்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுவார்கள். வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

லிங்கா கதையைத் திருடிட்டேனா.. தனக்குத் தானே பப்ளிசிட்டி தேடிய போர்வெல் டைரக்டர்!

நான் எனது வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தில் முழுக்க முழுக்க போர் லாரியை பயன்படுத்தி ஏழை விவசாயிகளின் தண்ணீர் பஞ்சம் போக வைத்து விவசாயத்தையும், விவசாயியின் வாழ்க்கையையும் உயர்த்த போர் வண்டி எவ்வாறு பயன்படுகிறது என்பதை படத்தில் கூறி உள்ளேன்.

அதேபோல டேம் ஒன்று உடையும் தருவாயில் உள்ளதைப் பார்த்து ஊரையும், ஊர் மக்களையும் காக்க வேல்முருகன் போர் லாரி குழுவினர்கள் எப்படி பாடுபட்டு அந்த டேமை அடைக்கிறார்கள் என்பதும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

வேல்முருகன் போர்வெல்ஸ் படம் லிங்கா படத்தில் இருந்து திருடப்பட்டதாக கூறுவது தவறான செய்தி. இதை நம்பி ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் வேல்முருகன் போர்வெல்சை பார்க்க சென்றதாக வாய்வழி செய்தி பரவியுள்ளது. தயவுசெய்து தவறான தகவல்களை பரப்பி என்னையும், என் படக் குழுவினரையும் அவமானப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இப்படி ஒரு குற்றச்சாட்டே எழாத நிலையில், இந்த இயக்குநரே முன்வந்து அறிக்கை விட்டிருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர் கோடம்பாக்க பப்ளிசிட்டி ஸ்டன்ட் புரிந்தவர்கள்.

 

எக்கச்சக்க பரிசுடன் வேந்தர் வீட்டு கல்யாணம்!

வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய வேந்தர் வீட்டு கல்யாணம். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை, ரிஷி மற்றும் நிஷா இருவரும் தொகுத்து வழங்குகின்றனர். நடன இயக்குநர் கலா மாஸ்டர் இயக்குகிறார்.

ஒவ்வொரு வாரமும் 4 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இறுதியில் வெற்றிபெறும் ஜோடிக்கு, பத்து லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

எக்கச்சக்க பரிசுடன் வேந்தர் வீட்டு கல்யாணம்!

"இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் ஜோடிகளுக்கு போட்டிகள் வைக்கப்படுகின்றன. அனைத்துப் போட்டிகளுமே திருமண வாழ்க்கைக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜோடிகள், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இந்த நிகழ்ச்சி உறவுப் பாலமாக அமைகிறது," என்கிறார் கலா.

ஜோடிகளுக்கு திருமணப் பரிசு தரும் இந்த நிகழ்ச்சி, வேந்தர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பை அன்றைய தினமே இரவு 8 மணி முதல் 9 மணி வரை காணலாம்.

 

ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா

ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினருக்கே கூட ரஜினியைச் சந்திப்பதென்பது ஒரு அதிகபட்ச ஆசை.. அல்லது கனவு என்றாலும் மிகையல்ல.

ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா

திரையுலகில் நுழைந்து ஒரு அடையாளம் பெற்றதும், ரஜினியைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது பலரது ஆசை.

இப்போதைய நடிகர்களில் சிம்பு, சிவகார்த்திகேயன், சந்தானம், சிவா போன்றவர்கள் ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகர்கள். அவரது ஒவ்வொரு பிறந்த நாளிலும் போயஸ் தோட்டத்தில் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள்.

ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா

நடிகைகளும் அப்படித்தான். சமீப காலமாக நகைச்சுவைப் பாத்திரங்களில் மின்ன ஆரம்பித்திருப்பவர் நடிகை வித்யுலேகா. நீதானே என் பொன் வசந்தம், வீரம் போன்ற படங்களில் சந்தானத்தின் ஜோடியாக வருவாரே.. அவர்தான் இந்த வித்யுலேகா. நடிகர் மோகன் ராமின் மகள்.

ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா

சமீபத்தில் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார் வித்யு லேகா. அவருக்கு ராகவேந்திரர் படத்தை பரிசாகத் தந்து வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

வித்யுலேகாவுடன் அவர் தந்தை மோகன் ராமும் சென்று ரஜினியைச் சந்தித்தார்.

 

சகதிச் சண்டை, ஸ்பீடாக ஓடி வருவது, ஸ்கார்பியாவில் பறப்பது... இதோ இன்னும் ஒரு சினிமா!

சென்னை: தமிழ்ப் படங்களுக்கென்று ஒரு முத்திரை இருக்கிறது.. அதிலும் ஆக்ஷன் படங்கள் என்றால் சில பல சமாச்சாரங்கள் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அதில் நடித்தவர்களுக்கே கூட ஒரு மாதிரி இருக்கும்.

அந்த அடிப்படை திரைப்பட விதிகளுக்குட்பட்டு கோலிவுட்டில் ஒரு படம் உருவாகிறது. பெயர் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்.

சகதிச் சண்டை, ஸ்பீடாக ஓடி வருவது, ஸ்கார்பியாவில் பறப்பது... இதோ இன்னும் ஒரு சினிமா!

இது ஒரு ரஜினி பட பாட்டு வரிதான். ஆனால் இதையே இப்போது படத் தலைப்பாக்கி விட்டார்கள். கொஞ்சம் உற்றுக் கேட்டால் எவனா இருந்தா எனக்கென்ன என்ற அர்த்தம் தொணிக்கும் இதில்.

பரசுராமன் என்பவர் இயக்குகிறார். படத்தில் யார் நடிக்கிறார், நடிக்கவில்லை என்ற கதையை விட்டு விடுவோம். இந்த ஸ்டில்களைப் பார்த்தாலே படம் பக்கா ஆக்ஷன் படம் என்பதை மட்டும் புரிந்து கொள்ளமுடியும்.

சகதிச் சண்டை, ஸ்பீடாக ஓடி வருவது, ஸ்கார்பியாவில் பறப்பது... இதோ இன்னும் ஒரு சினிமா!

வழக்கமாக தமிழ் சினிமாவில் சகதிச் சண்டை ரொம்ப பிரபலமானது. சகலகலாவல்லவன், முரட்டுக்காளை என அந்தக் காலத்து சூப்பர் ஹிட் படங்களில் தவறாமல் ஒரு சகதிச் சண்டை இடம் பெறும். விக்ரமின் சாமி படத்திலும் கூட ஒரு சண்டை வைத்து ஹிட் ஆக்கினர். இந்த ராமன் ஆண்டாலும் படத்திலும் கூட அது இருக்கிறது.

போலீஸ் யூனிபார்ம் போட்டு நடித்தால் கண்டிப்பாக ஒரு ஷாட்டில் அதி வேகமாக ஹீரோ முறைத்த கண்கள், விரைத்த மீசை, முறுக்கிய உடலுடன் படு வேகமாக ஓடி வருவது போல ஸ்லோ மோஷனில் காட்டுவார்கள் - காட்டியாக வேண்டும். அதை இந்தப் படத்திலும் ஹீரோ செய்கிறார்.

அடுத்து பறக்கும் கார்.. அதாவது பரபரப்பான கார் காட்சி. முன்பெல்லாம் அம்பாசடர் காரில் ஜெய்சங்கர் வில்லனைத் துரத்திக் கொண்டு ஓடுவார்..ஸாரி ஓட்டுவார். பிறகு படிப்படியாக மாறி டாடா சுமோவில் வந்து நின்றது. அதையும் விவேக் ஒரு படத்தில் கிண்டலடிக்க, இப்போது ஸ்கார்பியோ காரை வைத்துக் கொண்டு பட்டையைக் கிளப்புகிறார்கள்.

சகதிச் சண்டை, ஸ்பீடாக ஓடி வருவது, ஸ்கார்பியாவில் பறப்பது... இதோ இன்னும் ஒரு சினிமா!

ஸ்கார்பியோ காரை ஓட்டியபடியே சைடில் சுடுவார்கள். நேரே சுடுவார்கள், கீழே சுடுவார்கள், நாலாபக்கத்திலும் சுடுவார்கள். காருக்கும் ஒன்றும் ஆகாது..அதன் டயர்களுக்கும் ஒன்றும் ஆகாது.. அதாவது அதை ஹீரோ ஓட்டினால். இதையே வில்லன் ஓட்டினால், ஸ்கார்பியோவை மேலே பறக்க விட்டு கீழே வரும்போது வெடிக்க வைத்து விடுவார்கள். இந்தப் படத்திலும் ஸ்கார்பியோ சண்டை இருக்கிறதாம்.

செங்கல் சுவர் ஒரு கூடுதல் ஆட் ஆன் வசதி. ஹீரோவை ஸோலோவாக சுவரோரமாக அல்லது சுவரைப் பார்க்க நிறுத்தி வைத்து சில பல போஸ்களைக் கொடுக்க வைப்பார்கள். அல்லது பாட வைப்பார்கள். பல படங்களில் பார்த்திருப்போம். இதிலும் ஒரு சுவர் வருகிறது.. ஹீரோவும் நிற்கிறார்.. சுவருக்கு பச்சை நிறத்தை அடித்து வைத்துள்ளனர்.!

எனவே ஆக்ஷன், ரொமான்ஸ் படங்களுக்குரிய பல்வேறு முக்கிய அம்சங்களும் கலந்து காணப்படுவதால் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் ஒரு பக்கா ஆக்ஷன் கதையாக மாறி ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றே தோன்றுகிறது.

 

ஜூகேஸ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் மிருதுளாவுடன்.. என்னுள் நீ!

சென்னை: கோலிவுட்டில் புதிதாக துவங்க இருக்கும் "என்னுள் நீ" என்ற திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது.

இப்படத்தில் புதுமுகமான ஜூகேஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு இரண்டு கதாநாயகிகள். ஐஸ்வர்யா தத்தா மற்றும் மிருதுளா விஜய் ஆகிய இரண்டு இளம் புதுமுகங்கள் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர்.

ஜூகேஸ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் மிருதுளாவுடன்.. என்னுள் நீ!

இப்படத்தினை விக்டர் இம்மானுவேல் தயாரித்து வெளியிட இருக்கின்றார். இப்படத்தினை கே.சி.குமரேஷ் இயக்க உள்ளார்.

என்னுள் நீ என்னும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் இசையமைக்க உள்ளார்.

படத்தின் ஸ்டில்களைப் பார்த்தாலே "பயமாக" இருக்கிறது.. படம் எப்படி இருக்குமோ!

 

பாலிவுட் நடிகர் தேவன் வர்மா மரணம்!

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பில் தனி இடம் பிடித்த நடிகர் தேவன் வர்மா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

தேவன் வர்மாவுக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு கிட்னி செயல் இழந்தது. நேற்று திடீரென மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.

பாலிவுட் நடிகர் தேவன் வர்மா மரணம்!

தேவன்வர்மா இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருந்தார். குணசித்திர வேடங்களிலும், காமெடி கேரக்டர்களிலும் நடித்து உள்ளார். ஆங்கூர் சோரி மேரா காம், அந்தஸ் அப்னா அப்பா, ஜுதாயி, தில் தோ பாகல் ஹை, கோரா கஹல் போன்ற படங்களில் தேவன்வர்மா நடிப்பு பேசப்பட்டது.

தேவன் வர்மா மறைவுக்கு நடிகர் அமீர்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "தேவன் வர்மா மறைவுச் செய்தி கேட்டு துயரமுற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தேவன் வர்மா சிறந்த நடிகர். அவருடன் நடித்தது மறக்க முடியாத நினைவுகள் என்றும் கூறினார்.

 

திலீப் - மஞ்சு வாரியார் விவாகரத்துக்கு நான் காரணமல்ல! - காவ்யா மாதவன்

திலீப் - மஞ்சு வாரியார் விவாகரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் நடிகை காவ்யா மாதவன்.

மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை மஞ்சுவாரியருக்கும் 1998-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். திருமணத்துக்கு பிறகு மஞ்சு வாரியர் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். இருவரும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.

திலீப் - மஞ்சு வாரியார் விவாகரத்துக்கு நான் காரணமல்ல! - காவ்யா மாதவன்

இதையடுத்து மஞ்சுவாரியர் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். அவர் நடித்த ஹவ் ஓல்ட் ஆர் யு பெரும் வெற்றி பெற்றது. பல மலையாளப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அவர், அடுத்து தமிழ் படங்களிலும் நடிக்கப் போகிறார்.

திலீப்-மஞ்சுவாரியர் விவாகரத்துக்கு நடிகை காவ்யா மாதவன்தான் காரணம் என்று நீண்ட நாட்களாகவே பேசப்படுகிறது.

மலையாளத்தில் திலீப் ஜோடியாக நிறைய படங்களில் நடித்துள்ளார் காவ்யா. இவருக்கு 2009-ல் திருமணமாகி, கணவனின் கொடுமை காரணமாக ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றுவிட்டார்.

தற்போது மீண்டும் திலீப்புடன் இணைந்து நடித்து வருகிறார். திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் ஏற்கனவே காதல் இருந்ததாகவும், இருவரின் நெருக்கம் தெரிந்ததால்தான் மஞ்சு வாரியார் பிரிந்தார் என்றும் செய்திகள் வந்தபடி உள்ளன.

இதனை காவ்யா மாதவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டனர் செய்தியாளர்கள்.

இதற்கு பதிலளித்த அவர், "ஏற்கெனவே பலமுறை நான் இந்த கேள்விக்கு பதில் கூறிவிட்டேன். அவர்கள் வீட்டில் நடக்கும் எல்லாவற்றுக்கும் நான்தான் பொறுப்பு என்பதா? இதுபோன்ற தவறான செய்திகளைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்," என்றார்.

 

மொசக்குட்டி படம் எப்படி போகுது? சென்னையில் விளக்கிப் பேசிய படக் குழு

சென்னை: கோலிவுட்டில் புதிதாக வெளிவந்துள்ள மொசக்குட்டி படத்தின் தொழில்நுட்பக்கலைஞர்கள் கலந்து கொண்ட பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

தமிழில் லேட்டஸ்டாக வந்துள்ள படம் மொசக்குட்டி. வீரா என்ற புதுமுகம் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் பெயர்தான் மொசக்குட்டி என்பதாகும்.

மொசக்குட்டி படம் எப்படி போகுது? சென்னையில் விளக்கிப் பேசிய படக் குழு

சும்மாச் சொல்லக் கூடாது. புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நன்றாகவே நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மகிமா படத்தின் இன்னொரு சிறப்பு. சிறப்பாக நடித்திருக்கிறார். அழகாக வந்து அளவாக நடித்திருக்கிறார்.

படம் முழுக்க வீராவுடன் வலம் வருகிறார் செண்ட்ராயன். ஒரு சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். முந்தைய படங்கலில் வந்த சென்ட்ராயன் போல இல்லாவிட்டாலும் கூட முதலுக்குமோசமில்லை என்ற ரகத்தில் இருக்கிறது அவரது நடிப்பு இப்படத்தில்.

ஜோமல்லூரி, விருமாண்டி என்னும் கதாபாத்திரத்தில் மிடுக்கான நடிப்பால் மிளிர்கிறார். இடைவேளைக்குப்பின் வரும் பசுபதியின் நடிப்பு அருமை.

மொசக்குட்டி படம் எப்படி போகுது? சென்னையில் விளக்கிப் பேசிய படக் குழு

வழக்கமான காதல் கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஜீவன். இப்படத்திற்கு இசை ரமேஷ் விநாயகம். ஒளிப்பதிவு சுகுமாறன்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 

ஜாதகம், ஜோதிடம் பார்த்து வாய்ப்புகளை கோட்டை விட்ட நடிகர் ரீஎன்ட்ரி

சென்னை: ஹாலிவுட்டில் உள்ள மையத்தில் நடிக்க பயிற்சி எடுத்து வந்த அந்த 3 எழுத்து ஹீரோவுக்கு பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் பட வாய்ப்பு வந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த பெயரில் உயிரை வைத்திருக்கும் அந்த 3 எழுத்து நடிகர் பல்கலைக்கழக மாணவராக கோலிவுட் வந்தார். சிங்கத்துடன் பள்ளியில் படித்த அவர் ஹீரோ தவிர வில்லன் கதாபாத்திரங்களிலும் கலக்கினார். அவரை தேடி வாய்ப்புகளும் வந்தது. ஆனால் அவரோ ஜோதிடம், ஜாதகம் என்று பார்த்து பார்த்தே வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழித்தார்.

5 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ள சிங்கத்தின் தோஸ்த்

சில காலம் பார்த்த கோலிவுட்காரர்கள் ஆமாம் இவரை நடிக்க அழைத்தால் ரொம்பத் தான் செய்கிறார் என்று அவரை விட்டு விலகினர். விளைவு நடிகர் சுமார் 5 ஆண்டுகளாக பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் தான் அவர் விலங்கின் பெயர் கொண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இனியாவது ஜோதிடம், ஜாதகம் என்று பார்த்து படங்களை ஒதுக்காமல் இருந்தால் தான் பிழைக்க முடியும் என்பதை அவர் உணர வேண்டும்.

அவர் தற்போது நடித்து வருவது காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படமாம்.

 

மீண்டும் ஜோடி சேரும் தேவதாஸ் ஜோடி... ஷாரூக்- ஐஸ்வர்யாராய்!

மும்பை: ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்க உள்ள புதிய படத்தில் ஐஸ்வர்யாராய் நாயகியாக நடிக்க உள்ளாராம். முன்னதாக இப்படத்தில் கஜோல் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அபிஷேக்பச்சனைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யாராய் பச்சன். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு குழந்தை பிறந்தவுடன், நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஐஸ்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஜஸ்பா என்ற இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ஐஸ்வர்யா ராய்.

மீண்டும் ஜோடி சேரும் தேவதாஸ் ஜோடி... ஷாரூக்- ஐஸ்வர்யாராய்!

இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் மீண்டும் மறுபிரவேசம் ஆவார் எனவும் தகவல்கள் வெளியானது. ஆனால், பின்னர் இந்தி படத்தின் மூலம் ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க வருவது உறுதி ஆனது.

மீண்டும் தொடர்ச்சியாக நடிப்பாரா அல்லது மாட்டாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மாவுடன், கரன் ஜோகரின் ஏ தில் ஹய் முஸ்கில் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஐஸ்வர்யா ராய்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் பச்சன் மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இது பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்கும் படம்.

முன்னதாக இந்த படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை காஜோல் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது கஜோலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மதுபாலா, கிஷோர் குமார் நடிப்பில் வெற்றி பெற்ற சல்டி கா நாம் காடி என்ற படத்தின் ரீமேக் தான் இது. ரோஹித் ஷெட்டியும், அஜய் தேவ்கனும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்தப் படத்தில் ஷாரூக் ஜோடியாக கஜோல் நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், கஜோல் தனது வேறு பல வேலைகளில் பிசியாகி விட்டதால், தற்போது அந்த வாய்ப்பு ஐஸ்வர்யாராய் கைக்கு மாறியுள்ளது.

ஏற்கனவே தேவ்தாஸ் படத்தில் ஷாருக் கானுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராய் பச்சன், தற்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளதால், பாலிவுட்டில் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ராய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தொடர்ந்து இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் அவர் ஒப்பந்தமாகி வருவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


 

என்னை அறிந்தால்... போதிய தியேட்டர்கள் கிடைக்காவிட்டால்?

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டால், படத்தை தள்ளி வைக்கக் கூடும் என்ற தகவல் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் நிலவி வருகிறது.

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். அஜீத் படங்கள் ஆரம்ப வசூலில் சாதனைப் படைப்பவை. கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை நிலையான ஆரம்ப வசூல் அஜீத்தின் படங்களுக்குக் கிடைத்துவிடும்.

என்னை அறிந்தால்... போதிய தியேட்டர்கள் கிடைக்காவிட்டால்?

எனவே அஜீத் படத்தைத் திரையிட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் விருப்பம் காட்டுகின்றனர்.

அதே நேரம் ஐ படம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி இருப்பதால், அந்தப் படத்தை அதிக அரங்குகள் திரையிட தயாரிப்பாளர் முயற்சிக்கிறார். எனவே ஜனவரி முதல் வாரத்திலிருந்தே தமிழகத்தின் பெரிய, நல்ல அரங்குகளை ஆஸ்கர் ரவிச்சந்திரன் முன் பதிவு செய்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அஜீத் படத்துக்கு குறைந்தது 450 அரங்குகள் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். அவ்வளவு அரங்குகள் கிடைக்காவிட்டால் படத்துக்கு வரவேண்டிய வசூல் பாதிக்கும் என்பதால் தள்ளி வைக்கலாமா என யோசிப்பதாகக் கூறப்படுகிறது.

ஐ படத்தை ஒரு வாரம் முன்கூட்டியே வெளியிட்டாலும், அஜீத் படம் வரும்போது திரையரங்குகளிலிருந்து ஐ படத்தைத் தூக்க விடுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் பொங்கலுக்கு என்னை அறிந்தால் வருவதையே அஜீத் விரும்புகிறாராம்.

இந்த சிக்கல் எப்படி தீரப் போகிறதென்று கவலையுடன் கவனிக்கிறது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ்.