கம்பன் கழகம் படம் பார்த்து கண் கலங்கினார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.
இயக்குநர் ஏஆர் முருகதாசின் உதவியாளர் அஷோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் கம்பன் கழகம்.
க்யூ சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் அஷோகன் தயாரித்து, இயக்கும் இந்தப் படத்தில் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி ஆகியோருடன் கிருத்திகா, ஸ்வப்னா என்ற இரண்டு புதுக்கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள்.
இவர்களுடன் கிஷோர், ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சிங்கமுத்து என பழகிய முகங்களும் உண்டு.
‘கம்பன் கழகம்' படத்தின் முதல் பிரதி தயாரான உடன், இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான அஷோகன், தன் குரு ஏ.ஆர்.முருகதாஸுக்கு படத்தைப் போட்டுக் காட்ட விரும்பினார்.
ஒரு பிரிவியூ தியேட்டரில் ‘கம்பன் கழகம்' படத்தைப் பார்த்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இடைவேளையின் போதே கண்கள் கலங்க வெளியே வந்தார். ஒவ்வொரு காட்சிகளும் உருக்கமாகவும், மனசைத் தொடுமளவுக்கும் இருக்கின்றன என்று பாராட்டியவர், முழுப் படத்தையும் பார்த்த பிறகு ரொம்பவே உணர்ச்சி வயப்பட்டுவிட்டார்.
படம் குறித்து தன் சிஷ்யனிடம் முருகதாஸ் பேசுகையில், "கம்பன் கழகம் பார்த்த பிறகு 'எங்கேயும் எப்போதும்' சின்ன படம் போல் தோன்றுகிறது. புதுமுகங்களை வைத்துக் கொண்டு அந்தளவுக்கு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறீர்கள்," என்று பாராட்டினார்.