சென்னை: பிலிம்சேம்பர் சார்பில் சென்னையில் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறுலை மாதம் 3 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முதல்வர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அழைக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
நூற்றாண்டு விழா
இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. முதல் படமான ‘ஹரிச்சந்திரா,' 1913 - ம் ஆண்டு மே மாதம் 3 - ந் தேதி வெளியானது. இந்த ஆண்டு மே 3-ந் தேதியுடன் 100 வருடங்கள் நிறைவடைகிறது. நூற்றாண்டு விழா, சென்னையில் வருகிற ஜூலை மாதம் 3 நாட்கள் நடக்கிறது.
இதுபற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) தலைவர் கல்யாண், சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், "இந்திய சினிமாவுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்கு உண்டு. இந்தியாவில் தயாராகும் சினிமாவில் தென்னிந்திய சினிமாக்களே எண்ணிக்கையில் அதிகம். எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், எண்ணங்களில் நீங்காத இடம்பெற்ற பல படங்களை தந்தது தென்னிந்திய சினிமாதான்.
தென்னிந்திய சினிமாவின் தாய்வீடு, சென்னை. அந்த சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய சினிமாவின் நூற்றாண்டை என்றும் நினைவில் நிற்கும்படி சிறப்பாக கொண்டாட முடிவு செய்து இருக்கிறது.
3 நாட்கள் விழா
அதன்படி, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் வருகிற ஜூலை மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடக்கிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய திரைப்பட சம்மேளனத்துடன் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.
விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த மூத்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
குடியரசுத் தலைவர் - முதல்வர்
விழாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, முதல்வர் ஜெயலலிதா, மற்றும் மற்ற தென்மாநில முதல்வர்களையும் அழைக்க முடிவு செய்திருக்கிறோம்.
4 மாநிலங்களை சேர்ந்த நடிகர்-நடிகைகள் விழாவில் கலந்து கொள்வார்கள். விழாவையொட்டி நடிகர்-நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஜூலை 12, 13 தேதிகளில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும், 14-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெறுவதையொட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களின் படப்பிடிப்புகளும் 5 நாட்கள் ரத்து செய்யப்படும். அந்த நான்கு நாட்களும் மற்ற பட வேலைகளும் நடைபெறாது.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் கமிட்டிக்கு தலைவராக டைரக்டர் கே.பாலசந்தர் இருப்பார். இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.எம்.வசந்த், பட அதிபர்கள் டி.சிவா, ஆர்.மாதேஷ் ஆகிய 4 பேரும் அமைப்பாளர்களாக இருப்பார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், எம்.சரவணன், பாரதிராஜா, சரத்குமார், ராதாரவி, சிவகுமார், கேயார், பிரபு, ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம், முரளி மனோகர், பி.வாசு, ஏ.எஸ்.பிரகாசம், சுரேஷ் பாலாஜி, கவுதம் மேனன், பாக்யராஜ், அமீர், ஜி.சிவா ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக இருப்பார்கள்," என்றார்.