புதுச்சேரியிலும் விஸ்வரூபம் படம் வெளியிட தடை!

Puducherry Also Bans Vishwaroopam

புதுச்சேரி: தமிழ்நாடு, இலங்கையைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்ட புதுச்சேரியிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன என்பது பல அமைப்புகளின் குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 2 வார காலத்துக்கு விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. இதேபோல் இலங்கையிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது,

இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், புதுச்சேரியிலும் 2 வார காலத்துக்கு திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

 

விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிக தடை விதித்தது

Vishwaroopam Screening Suspended

கொழும்பு: கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமானது இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகிறது என்று பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு தடைவிதித்திருக்கிறது. பல்வேறு வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கையும் சேர்ந்திருக்கிறது. விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை ஆராயும் வகையில் அந்தப் படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

இதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கைத் துறையும் கூறியுள்ளது. இருப்பினும் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

 

விஸ்வரூபம் மீதான தடை சரியல்ல - மத்திய அரசு மறைமுக கருத்து

Centre Comments On Viswaroopam Ban

டெல்லி: தணிக்கை வாரியம் ஒரு திரைப்படத்திற்கு அனுமதி கொடுத்து விட்டால் அதை தடை செய்வது குறித்து பலமுறை யோசிக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

இதன் மூலம் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை சரியல்ல என்பதை மத்திய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து மணீஷ் தீவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு படம் சரியா, தவறா என்பது குறித்து முழுமையாக பரிசீலிக்கும் பொறுப்பில் தணிக்கை வாரியம் உள்ளது. தணிக்கை வாரியம் ஒரு படத்தைப் பரிசீலித்து அதை அங்கீகரித்து சான்றிதழ் அளித்த பின்னர் அதை தடை செய்வது என்பது பலமுறை யோசித்த பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.

இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு அது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மீறுவதாக அமைந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும் என்றார் திவாரி.

இதன் மூலம் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை சரியல்ல என்பதை மத்திய அரசு மறைமுகமாக கூறியிருப்பதாக தெரிகிறது.

 

இலங்கையிலும் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை

Sri Lankan Muslims Also Seek Ban On Vishwaroopam

கொழும்பு: இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது போல இலங்கையிலும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துளது.

இது தொடர்பாக இலங்கை தௌஹீத் ஜமாஅத் துணை செயலாளர் ரஸ்மின் மௌலவி கூறுகையில், தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தணிக்கைக் குழுவினால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தடை என்பது சாத்தியமாகுமா என்பது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யவேண்டும். மேலும் படத்தினை மீண்டும் தணிக்கை குழுவிற்கும் அனுப்பும் நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உண்மையில் படத்தின் அதிக காட்சிகள் இஸ்லாமியரை கொச்சைப்படுத்துவதாவே உள்ளது இந்தக் காட்சிகளை நீக்கினால் படமே இல்லை என்று படத்தை பார்த்த எமது அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலும் விஸ்வரூபம் திரைப்படத்தினை தடை விதிக்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் முதல் கட்டமாக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 

ஏப்ரல் 14-ல் ரஜினியின் கோச்சடையான்..!

Rajini S Kochadaiyaan April 14

இந்திய சினிமாவின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய படமாகப் பார்க்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வரலாற்றுப் படம் கோச்சடையான் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.

ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சௌந்தர்யா ரஜினி இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.

தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஷோபனா, ருக்மணி என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ஆரம்பத்தில் அனிமேஷன் என்று சொல்லப்பட்டு, பின்னர் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் நிஜ நடிகர்களே நடிக்கும் படமாக மாற்றப்பட்டது.

அத்துடன் மறைந்த சாதனை நடிகர்கள் நாகேஷ், நம்பியார் போன்றவர்களும் இந்தப் படத்தில் தோன்றுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் அனிமேஷன் படம் என்ற அறிவிப்புடன் இந்தப் படம் வருகிறது.

ஆரம்பத்தில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. பின்னர் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று வெளியாகும் என்றார்கள். ஆனால் மூன்று நாடுகளில் படத்தின் போஸ்ட்புரொடக்ஷன், எடிட்டிங் பணிகள் நடப்பதால், தாமதம் ஏற்பட்டு வந்தது.

இப்போது கிராபிக்ஸ் மற்றும் ஒலிக் கலவை போன்ற பணிகள் முடிந்து எடிட்டிங் நடந்து வருகிறது.

இதுகுறித்து சௌந்தர்யா கூறுகையில், "இப்போது சென்னை, லண்டன் நகரங்களில் உள்ள நான்கு ஸ்டுடியோக்களில் கோச்சடையான் பணிகள் நடந்து வருகின்றன. பாடல்கள் அனைத்தும் தயார். ஆல்பம் தயாராகிக் கொண்டிருக்கிறது. முதல் பாதியின் எடிட்டிங் முழுமையடைந்துவிட்டது. இப்போது இரண்டாம் பாதியின் பணிகள் நடக்கின்றன.

டப்பிங் வேலைகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன. தீபிகா படுகோன் சொந்தக் குரலில் டப் பண்ணுகிறார். ஏப்ரலில் படத்தைத் திரையிட முயன்று வருகிறோம்," என்றார்.

கோச்சடையான் தமிழ், தெலுங்கு, இந்தி, ஜப்பான் மற்றும் ஆங்கிலம் என 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

 

நல்ல நேரம், அன்னை ஓர் ஆலயம் படங்களில் நடித்த யானை 'ரதி' மரணம்!

Ill Health Kills Elephant Rathi

சென்னை: எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம், ரஜினியின் அன்னை ஓர் ஆலயம் படங்களில் நடித்த யானை ரதி மரணமடைந்தது.

கடந்த 1942-ம் ஆண்டு முதுமலை வனப்பகுதியில் யானை குழியில் தவறி விழுந்த குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டது.

பின்னர் அந்த யானைக்கு ரதி என்று பெயர் சூட்டினர். அமரர் எம்.ஜி.ஆர். நடித்த நல்லநேரம், ரஜினிகாந்த் நடித்த அன்னை ஓர் ஆலயம் மற்றும் கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட சினிமாப்படங்களிலும் நடித்துள்ளது.

தற்போது இந்த யானைக்கு 81 வயது. இந்த யானை மொத்தம் 13 குட்டிகளை ஈன்றது. இந்த ரதி யானைக்கு முதுமலையின் மூதாட்டி என்ற செல்லப் பெயரும் உண்டு.

இந்த யானைக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் படுக்கையில் கிடந்த இந்த யானை சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை மரணமடைந்தது.

 

கங்கிராட்ஸ்... ஷகீராவுக்கு ஆம்பளைப் புள்ளை பிறந்திருக்காம்...!

Shakira Gives Birth A Boy

பார்சிலோனா: பிரபல பாடகி ஷகீராவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. பார்சிலோனாவில் உள்ள மருத்துவமனையில் தனது மகனை பிரசவித்துள்ளார் ஷகீரா. தாயும், சேயும் நலம் என மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது.

35 வயதாகும் ஷகீராவுக்கு பார்சிலானோ மருத்துவமனையில் நேற்று இரவு குழந்தை பிறந்தது. குழந்தை3 கிலோ எடையுடன் உள்ளதாம். முன்னதாக ஷகீராவுக்கு மாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது காதலரான பார்சிலோனா கால்பந்து வீரர் ஜெரார்ட் பிக், ஷகீராவை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தார்.

குழந்தைக்கு மிலன் பிக் மெபாரக் என்று பெயரிட்டுள்ளனர். மிலன் என்றால் அன்பு என்று அர்த்தமாம். சமஸ்கிருதப் பெயரும் கூட இது என்று கூறுகிறார்கள். அதாவது ஐக்கியம் என்ற பொருள் வருமாம்.

ஷகீராவுக்கு சுகப் பிரசவம் நடைபெறவில்லை. மாறாக அறுவைச் சிகிச்சைதான் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

கமலுக்கு பெருகும் ஆதரவு!

Increase Supporting Voices Kamal

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தமிழக அரசு அந்தப் படத்தையே தடை செய்துள்ளது.

இது கமலுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கமலுக்கு ஆதரவான சூழல் திரும்பியுள்ளது.

திரையுலகினர் இந்தத் தடை குறித்து வெளிப்படையாக வாய் திறக்காத சூழலில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கமலுக்கு ஆதரவு பெருகுகிறது.

கமலை ஆதரிக்கக் கோரி பலரும் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர். ஐ சப்போர்ட் கமல் எனும் வாசகங்களுடன் சமூகத் தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

டிடிஎச், திரையரங்க உரிமையாளர்கள் விவகாரத்தின்போது அமைதி காத்த சினிமாக்காரர்கள், இப்போது கமலுக்கு ஆதரவான நிலையை வெளிப்படையாக எடுக்க வேண்டியது அவசியம் என பேச ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் - கம் - இயக்குநர், "நிச்சயம் கமல் பெரிய சிக்கலில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு படைப்பாளிக்கு இதற்கு மேல் சிக்கல் இருக்க முடியாது. அதே நேரம் முஸ்லிம் சமூகத்தை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கவும் முடியாது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு திரையுலகினர் கமலுக்கு ஆதரவு தெரிவிக்காமலிருக்கக் காரணம் இதுதான்.

ஆனால் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் இதுபோன்ற தடைகளை திரையுலகினர் இப்போது எதிர்க்காவிட்டால், சினிமாவில் புதிய முயற்சி என்பதே அருகிவிடும்," என்றார் (தன் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன்).

 

போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் வரும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான்

Shah Rukh Khan Be First Indian Actor On Cover Forbes

மும்பை: பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வரவிருக்கிறார். போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வரவிருக்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெறவிருக்கிறார்.

போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் உள்ள 100 சக்திவாய்ந்தவர்களின் பட்டியலை தனது அடுத்த இழதலில் வெளியிடுகிறது. அந்த இதழின் அட்டையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் போட்டோவைப் போட முடிவு செய்துள்ளது. இதற்காக பிரபல போட்டோகிராபர் டப்பு ரத்னானியிடம் ஷாருக்கானை போட்டோ எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

போர்ப்ஸ் இந்திய சந்தைக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த 4 ஆண்டுகளில் அதன் அட்டைப் படத்தில் வரும் முதல் இந்திய நடிகர் ஷாருக் கான் தான் என்று அப்பத்திரிக்கைக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அந்த இழதலில் ஷாருக் தன்னுடைய வெற்றி, கிரிக்கெட் அணி, தயாரிப்பு நிறுவனம் குறித்து அளித்த பேட்டி வரவிருக்கிறது.

வாழ்த்துக்கள் ஷாருக்!!!

 

விஸ்வரூபம் தடையை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு

Kamal Hassan Approaches Madras Hc Remove Viswaroopamban

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை நீக்கி உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார் நடிகர்- இயக்குநர் கமல்ஹாசன்.

விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவை அறிவித்துள்ளன.

இதையடுத்து தமிழக அரசு 2 வார காலத்திற்கு இப்படத்தை திரையிடுவதற்குத் தடை விதித்துள்ளது.

இதை எதிர்த்து தற்போது நடிகர் கமல்ஹாசன் சட்டத்தின் உதவியை நாடியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய தணிக்கைக் குழு அனுமதி தந்த பிறகும் தடை விதிப்பது சட்ட விரோதம் என கூறியுள்ளார். மேலும் இதை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்துள்ளார்.

 

அஜீத்-முருகதாஸ் படத்திற்கு பெயர் 'ரெட்டை தல'?

Rettai Thala Ajith

சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு ரெட்டை தல என்று பெயர் வைக்கிறார்களாம்.

2001ம் ஆண்டு வெளிவந்த அஜீத் நடித்த தீனா படம் மூலம் இயக்குனர் ஆனவர் ஏ.ஆர். முருகதாஸ். அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணவில்லை. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது அவர்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள். அல்டிமேட் ஸ்டாரான அஜீத்துக்கு 'தல' என்ற பட்டப்பெயரை சூட்டிய முருகதாஸ் தனது படத்திற்கும் அதையே பெயராக வைக்கிறாராம்.

அவரது படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருவதால் 'ரெட்டை தல' என்று படத்திற்கு பெயர் வைக்கிறார் முருகதாஸ். முருகதாஸ் துப்பாக்கி இந்தி ரீமேக்கை முடித்துவிட்டும், அஜீத் சிவா படத்தை முடித்த பிறகும் ரெட்டை தல பட ஷூட்டிங் துவங்கும்.

இனிமேல் துவங்கவிருக்கிற படத்திற்கு பெயரை முடிவு செய்துவிட்டனர் ஆனால் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு இன்னும் ஒரு பெயரை வைத்தபாடில்லையே. சீக்கிரமா பெயரை சொல்லுங்கப்பா.

 

திரையுலகமே ஏன் இந்த அமைதி?... கமல் ரசிகர்கள் ஆவேசம்!

Kamal Fans Anger On Tamil Filmdom

சென்னை: திரையுலகினருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கமல் முதல் ஆளாக நிற்பார். ஆனால் விஸ்வரூபம் பட விவகாரத்தில் நடிகர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை. இது வருத்தம் தருகிறது, கண்டனத்துக்குரியது என்று கமல்ஹாசன் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு எழுந்துள்ள மிகப் பெரிய சிக்கலால் அவரது ரசிகர்கள் அதிருப்தியும், வருத்தமும் அடைந்துள்ளனர். தற்போது மிகப் பெரிய திருப்பமாக படத்தைத் திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளதால் அவர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.இது நாள் வரை அமைதியாக இருந்து வந்த அவர்கள் இன்று கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டையில் உளள அலுவலகம் முன்பு குவிந்தனர்.

இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பெருமளவிலான ரசிகர்கள் வந்ததால் போலீஸார் உஷாரானார்கள்.இருப்பினும் ரசிகர்கள் அமைதியான முறையில் திரண்டு நின்றனர். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷமிட்டனர்.

தென் சென்னை மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற செயலாளர் தயாளன் என்பவர் கூறுகையில், கமல் ரசிகர்கள் எப்போதுமே பொறுமை காக்க கூடியவர்கள். கமல் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறோம். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. இதே நிலை நீடித்தால் பொங்கி எழுவோம்.

திரையுலகினருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கமல் முதல் ஆளாக நிற்பார். ஆனால் விஸ்வரூபம் பட விவகாரத்தில் நடிகர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை. இது கண்டிக்கத்தக்கது என்றார்.

அதேபோல தமீம் என்ற ரசிகர் கூறுகையில், கமல் எந்த மதத்தையும் புண்படுத்தி படம் எடுக்க கூடியவர் அல்ல. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அனைவரையும் சகோதரர்களாகத்தான் பார்ப்பார். விஸ்வரூபம் படத்தை தடை செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

 

கமல் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு.. ஆர்ப்பாட்டம் நடந்தால் கைது செய்ய உத்தரவு

Police Security Kamal Office House

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு யாரேனும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் உடனடியாக கைது செய்து அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படம் பெரும் பிரச்சினையாகியுள்ளது. ஆரம்பம் முதல் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்த இப்படம், தற்போது தடை செய்யப்படும் அளவுக்கு சிக்கலில் மாட்டி விட்டது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் குதிக்கலாம் என்ற எர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று புகார் ஒன்றை அளித்தார். அதில் பாதுகாப்பு கோரியிருந்தார்.

இதையடுத்து இன்று முதல் கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகம் மற்றும் கொட்டிவாக்கத்தில் உள்ள வீடு ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

யாராவது அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் உடனே கைது செய்து அழைத்து செல்ல போலீஸ் வேனுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

ரஜினி டிக்கெட் கொடுக்கும் ஸ்டைலுக்காக பிற பஸ்களை புறக்கணித்த மக்கள்

When Passengers Flocked Rajini The Conductor

டெல்லி: ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்தபோது அவரது பேருந்தில் பயணம் செய்வதற்காக மக்கள் பிற பேருந்துகளில் ஏறமாட்டார்களாம்.

நமன் ராமச்சந்திரன் என்வர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் ரஜினி பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்ததில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆனது வரையுள்ள சம்பவங்களை விவரமாகத் தெரிவித்துள்ளார். சினிமா வாழ்க்கை பற்றி மட்டுமல்லாமல் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் ரஜினி கண்டக்டராக இருந்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி பார்போம்.

ரஜினி பெங்களூரில் கண்டக்டராக பணிபுரிந்தபோது அவர் ஸ்டைலாக டிக்கெட் கொடுப்பதும், பணத்தை வாங்கி சில்லறை கொடுப்பதும் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதற்காகவே பயணிகள் பிற பேருந்துகள் காலியாகச் சென்றாலும் அதில் ஏறாமல் ரஜினி கண்டக்டராக இருந்த பேருந்தில் காத்திருந்து பயணம் செய்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

'கலாச்சாரத் தீவிரவாதத்தை' சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.. கமல் அறிக்கை

Kamal Hassan S Statement On Viswaroopam Ban

சென்னை: என்னுடைய விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாச்சாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன் என்று நடிகர்-இயக்குநர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்குத் தமிழக அரசு தடைவிதித்துள்ள நிலையில், இப்படத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் இன்று காலை கமல்ஹாசனின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஆங்கிலத்தில் அமைந்துள்ள கமல்ஹாசனின் அறிக்கை:

எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை.

அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் குரல் கொடுத்துள்ளேன். மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன்.

ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.

சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள முஸ்லீமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார். அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது நான் சட்டத்தையும், எதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் அறிக்கை