மும்பை: பாகிஸ்தானிய பாடகி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாடகி ஆஷா போன்ஸ்லே பங்கேற்க மகராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவி்ததுள்ளார்.
கலர்ஸ் என்னும் இந்தி தொலைக்காட்சி சேனலில் சூர் ஷேத்ரா என்ற பாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு பாடகி ஆஷா போன்ஸ்லே, வங்க தேசத்தைச் சேர்ந்த பாடகி ருணா லைலா மற்றும் பாகிஸ்தானின் கவாலி பாடகி ஆபிதா பர்வீன் ஆகியோர் நடுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பாடகி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆஷா போன்ஸ்லே பங்கேற்க மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவி்த்துள்ளார்.
இதையடுத்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஆஷா கூறுகையில்,
எனக்கு அரசியல் பிடிக்காது. அது எனக்கு புரியவும் செய்யாது. ராஜ் தாக்கரே என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் சரி அவர் மீது நான் அன்பு வைத்துள்ளேன். நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவள். எனது மாநிலத்தை விரும்புகிறேன். நான் ஒரு பாடகி. எனக்கு இசையின் மொழி தான் புரியும். ராஜ் தாக்கரேவுக்கு எனது பாடல்கள் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்றார்.
இந்த சந்திப்பு நடந்தபோது ஹோட்டலுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.