தொப்பி... குற்றப் பரம்பரை என ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட மலைவாழ் பழங்குடி இனத்தில் வாழும் ஒருவனின் லட்சியத்தையும் அதற்கு அவன் மேற்கொள்ளும் கஷ்டங்களையும் கூறும் கதை இது.
ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் இப்படத்தை இயக்குனர் யுரேகா இயக்கியுள்ளார். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் முரளி ராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இந்த குற்றப் பரம்பரையின் பின்னணியின் நன்கு அறிந்தவரான வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் ராம் பிரசாத் சுந்தர்.
வைரமுத்துவின் பாடல்கள் படத்தின் சிறப்புகளுள் ஒன்று என்கிறார் இயக்குநர்.
அவர் மேலும் கூறுகையில், "பழங்குடியினரின் வாழ்வியலையும், அவர்களின் பொருளாதார சூழலையும், எடுத்துக் கூறும் வகையில் வரிகளை வடித்துள்ளார் வைரமுத்து.
படத்தில் இடம்பெறும் "பாவப்பட்ட நாங்க.." என்ற பாடலில் வரும் ‘தேனை எடுத்தவன் வாழ்க்கை உப்பு கரிப்பதா, தினைய விதைச்சவன் வினைய அறுப்பதா...' என்ற வரிகள் அமைதியாக வாழ்கையை மேற்கொண்டிருந்த ஆதி தமிழர்களின் இன்றைய நிலையை எடுத்துக் கூறும் வகையில் அமைத்துள்ளது.
‘இச்சி இச்சி மரக் காட்டுல... ' என்ற பாடலில், மலையிலுள்ள வளங்களையும், இயற்கையின் எழிலையும் மேற்கோள்காட்டி எழுதியுள்ளார் கவிஞர்.
‘ ஊத்து தண்ணி மலையில தேங்கும், ஆத்து தண்ணி சமவெளி தோண்டும்... ஊத்து தண்ணி நீ தான் ஆத்து தண்ணி நான்தாண்டி..."
‘ நிதானமா யோசிச்சு பாரு நீயும் வேர் நானும் நீரு' ... ஆகிய வரிகள் மலைவாழ் நாயகன் நாயகியின் உள்ளார்ந்த காதலையும்,
"கழுத்துக்கு மேல காதல் பண்ணு... கல்யாணம்தான் ஆகும் முன்னே" என்ற வரிகள் இவர்தம் காதலின் நாகரிகத்தையும் எடுத்து கூறுவதாக உள்ளது.
இப்பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் வகையிலும் மலை கிராமங்களின் அழகை கண் முன்னே நிறுத்தும் வகையிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மைனா, கும்கி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் சுகுமார்," என்றார்.