சின்ன சண்டைக்காக நடிகர் சயீப் அலி கானின் பத்மஸ்ரீ விருதை பறிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

டெல்லி: நடிகர் சயீப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள உணவகத்திற்கு சென்ற பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் அங்கு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் அவரது மாமனாருடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் சயீப் அந்த தொழில் அதிபரின் மூக்கில் குத்துவிட்டார். இது குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சின்ன சண்டைக்காக நடிகர் சயீப் அலி கானின் பத்மஸ்ரீ விருதை பறிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு சயீப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்தை தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் எஸ்.சி. அகர்வால் கேட்டுக் கொண்டார். அவருக்கு அனுப்பிய பதிலில் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறுகையில்,

அகர்வால் புகார் தெரிவித்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாக கூறியது வழக்கமான பதில் ஆகும். நிலுவையில் உள்ள புகார்களுக்கு அவ்வாறு தான் பதில் அளிக்கப்படும். விருது வாங்கிய பிறகு அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் உடனே அவரது விருதை பறிக்க வேண்டும் என்று இல்லை. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அவரது விருதை திரும்பப் பெறும் அளவுக்கு பெரியதா என்பதை அரசு பரிசீலிக்கும். சிறிய சண்டை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ஒருவரின் விருதை திரும்பப் பெறுவது நியாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

 

கத்தி, புலிப்பார்வையைத் திரையிட்டால் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும் - மாணவர் அமைப்பு ஆவேசம்

கத்தி, புலிப்பார்வை படங்களை நிச்சயம் திரையிட விடமாட்டோம். மீறி திரையிட்டால் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும், என தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் இந்த அமைப்பினைச் சேர்ந்த செம்பியன், பிரபாகரன், மாறன், பிரதீப் குமார் மற்றும் ஜோதிலிங்கம் ஆகியோர்.

அப்போது அவர்கள் கூறுகையில், "கத்தி, புலிப் பார்வை படங்கள் ஈழ விடுதலைக்கு எதிராக இருக்கின்றன, அப்படி காட்சிகள் உள்ளன என்று கூறி நாங்கள் எதிர்க்கவில்லை. அந்தப் படத்தைத் தயாரிப்பவர் ராஜபக்சேவின் கூட்டாளியான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா என்பதால்தான் எதிர்க்கிறோம்.

கத்தி, புலிப்பார்வையைத் திரையிட்டால் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும் - மாணவர் அமைப்பு ஆவேசம்

இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவும் லைக்கா நிறுவனம் தமிழகத்தில் கால்பதிக்க விடக் கூடாது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், கத்தி படத்துக்கு தமிழக அரசே தடை விதிக்க வேண்டும்.

இன்னொரு படமான புலிப் பார்வையில், எங்கள் தம்பி பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரித்துள்ளனர். சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் சொன்ன அதே தவறான கருத்தை உறுதிப்படுத்துவது மாதிரி காட்சிகளை அமைத்துள்ளனர். இது இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மழுங்கடிக்கச் செய்யும் செயல்.

எனவே இந்த இரு படங்களையும் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். மீறி அனுமதித்தால், தியேட்டர்களின் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும்."

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

தமிழர் பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுக்கும் விஜய் அரசியலுக்கு வரணும்: சீமான்

தமிழர் பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுக்கும் விஜய் அரசியலுக்கு வரணும்: சீமான்

சென்னை: இளைய தளபதி விஜய் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி விஜய்க்கு அரசியலுக்கு வர ஆர்வம் உள்ளது என்று செய்திகள் வெளியாகின. அரசியலை மனதில் வைத்து தான் அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதாகக் கூட கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை அவர் அரசியல் ஆர்வத்தை பெட்டிக்குள் போட்டு பூட்டி பரண் மேல் போட்டுவிட்டார்.

ஆனால் அவரது ரசிகர்கள் மட்டும் அவரின் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்து வெளியிடுவார்கள். இந்நிலையில் இது குறித்து திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் கூறுகையில்,

தமிழக மக்கள் மீது அதிக பாசம் வைத்துள்ளவர் விஜய். தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் அவர் தான் முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார். அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.

இலங்கை அரசின் இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிட்டதை கண்டித்து கடந்த திங்கட்கிழமை தமிழ் திரையுலகினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம் மீனவர்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்காக நம்முடைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள், எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக்கிட்டு இருக்காங்க. இலங்கை அரசு அவர்களுடைய பாதுகாப்புத் துறை வெப்சைட்டில் கொச்சைப்படுத்துவது போன்று ஒரு கமெண்ட் போட்டிருப்பது உண்மையிலேயே என் தாயை தப்பாக பேசின மாதிரிதான் நினைக்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'சண்டியரைத் தூக்கு...'- இப்படியும் ஒரு சினிமா சதி!

சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற சண்டியர் படத்தை வெளியான ஒரே வாரத்தில் திரையரங்குகளிலிருந்து தூக்க சிலர் சதி செய்வதாக தயாரிப்பாளர் தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள்.

புதுமுகங்கள் ஜெகன், டெல்லா ராஜ் ஆகியோர் நடிக்க, சோழதேவன் இயக்கியுள்ள படம் சண்டியர்.

கடந்த வாரம் இந்தப் படம் வெளியானது. ஆனால் அப்போது இந்தப் படத்துடன் மேலும் இரு படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கு அதிக அரங்குகளும் கிடைத்தன.

ஆனால் அந்தப் படங்களை விட சண்டியர் படத்துக்கு கூடுதலாகப் பாராட்டுகளும் விமர்சனங்களும் கிடைத்தன. இருந்தும் படம் வெளியான ஒரே வாரத்தில் பெரும்பாலான அரங்குகளில் தூக்கப்பட்டுள்ளது.

இதற்கு சினிமா உலகில் பரபரப்பாக படங்கள் தயாரிக்கும் இரு தயாரிப்பாளர்களின் கூட்டு சதிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

"அந்தப் படத்துக்கு பப்ளிசிட்டியெல்லாம் இல்லை. மக்கள் பார்க்க வரமாட்டார்கள். எனவே எங்கள் படங்களுக்கு தியேட்டர்களைத் தாருங்கள். மேலும் எங்கள் கைவசம் அடுத்தடுத்து படங்கள் உள்ளன..," என்று கூறி, சண்டியர் படத்தைத் தூக்க வைத்துவிட்டார்களாம்.

இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், எந்தெந்த அரங்குகளில் சண்டியர் ஓடிக் கொண்டிருந்ததோ, அந்த அரங்குகளில் குறிப்பிட்ட இரு தயாரிப்பாளர்களின் படங்களே திரையிடப்பட்டுள்ளன.

ஒரு பக்கம் நல்ல படங்கள், சின்ன படங்கள் ஓடவில்லை என்று புலம்பும் கோடம்பாக்கத்துக்கார்கள் செய்யும் வேலையைப் பார்த்தீர்களா?

 

இந்த இளம் ஹீரோவுக்கு உடம்பில் மச்சமா, மச்சத்தில் உடம்பா?

சென்னை: டோலிவுட்டின் பெரிய குடும்பத்து நடிகருக்கு உடம்பில் மச்சம் இருக்கிறதா, இல்லை மச்சத்தில் உடம்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

டோலிவுட்டின் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த இரண்டு எழுத்து உயர்ந்த நடிகர் காட்டில் எப்பவும் மழை தான். ஆள் வஞ்சனையே இல்லாமல் ஆறடிக்கும் மேல் வளர்ந்துள்ளார். கட்டுமஸ்தான உடல் வேறு. அவர் வாழ்வில் தான் எத்தனை எத்தனை காதலிகள்.

தற்போது மார்க்கெட் இல்லாத சிவாஜி நாயகி, விஜய்யுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாலிவுட் கவர்ச்சி பிசாசு, நம்ம மூனுஷா உள்ளி்ட்டோர் அவர் வாழ்வில் வந்த வசந்தங்கள். இதில் மூனுஷாவுடன் தான் நடிகரின் பெயர் அடிக்கடி அடிபடும்.

இந்நிலையில் நடிகரின் வாழ்வில் புதிய பெண் ஒருவர் வந்துள்ளாராம். நடிகர் அடிக்கடி ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு பறப்பவர். அப்படி மும்பை சென்ற இடத்தில் அவருக்கும், ஜீன்ஸ் நாயகனின் படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள இந்தி நடிகைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம்.

நட்பு டெவலப் ஆகி இருவரும் ஜோடியாக மும்பையில் சுற்றுகிறார்களாம். ஒரு பாடல் மூலம் கோலிவுட் வந்த நடிகை விரைவில் டோலிவுட் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 

நெல்லைத் தமிழ் பேசும் கமல்... படத்துக்கு தலைப்பு பாபநாசம்!

கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படத்துக்கு பாபநாசம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் இது.

இந்தப் படத்தில் கமல் ஹாஸன் நெல்லைத் தமிழில் பேசி நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் சென்னைத் தமிழ், கொங்கு தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் என தமிழை வண்ணமயமாகப் பேசி அசத்தியவர் கமல்.

நெல்லைத் தமிழ் பேசும் கமல்...  படத்துக்கு தலைப்பு பாபநாசம்!

இந்தக் கதை முழுக்க திருநெல்வேலியை மையமாகக் கொண்டு நிகழ்வது போல மாற்றப்பட்டுள்ளது. எனவே படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் அனைவருமே நெல்லைத் தமிழ் பேசப் போகிறார்களாம்.

பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடிக்கிறர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, குற்றாலம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் நடக்க உள்ளது. இந்த மாதம் 19-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் என இதுவரை எடுக்கப்பட்ட அத்தனை மொழிகளிலும் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்தான் தமிழிலும் இயக்குகிறார்.

 

கத்தி படத்தை எடுப்பவர்கள் தமிழர்கள் - இயக்குநர் விக்ரமனின் கண்டுபிடிப்பு!!

கத்தி என்ற படத்தை எடுப்பவர்கள் தமிழர்கள்தான். அந்தப் படத்துக்கு இயக்குநர் சங்கம் ஆதரவு தரும் என்று கூறியுள்ளார் சங்கத்தின் தலைவர் விக்ரமன்.

கத்தி படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்துக்கு உறுதுணையாக அய்ங்கரன் நிறுவனம் செயல்படுகிறது.

கத்தி படத்தை எடுப்பவர்கள் தமிழர்கள் - இயக்குநர் விக்ரமனின் கண்டுபிடிப்பு!!

ஆனால் லைகா நிறுவனம் ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. ராஜபக்சேவின் அனுமதியுடன்தான் லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா, இலங்கையில் விமான சேவை தொடங்கினார்.

மேலும் லைகா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ராஜபக்சேவின் சொந்த தங்கை மகன்.

கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த காமன்வெல்த் வர்த்தக மாநாட்டுக்கு கோல்டன் ஸ்பான்சராக செயல்பட்டு, பல கோடிகளைக் கொடுத்ததும் லைகா நிறுவனம்தான்.

இப்படி பல வகையிலும் ராஜபக்சேயுடன் பின்னிப் பிணைந்துள்ள லைகா நிறுவனம் கத்தி படத்தை எடுப்பது தெரிந்ததும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் இந்த எதிர்ப்பலையை சமாளிக்க தீவிரமாக களப்பணியாற்றியுள்ளனர் நடிகர் விஜய், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோர்.

தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் அத்தனை தலைவர்களையும் ரகசியமாக சந்தித்துப் பேசி, அவர்களைச் சமாதானப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக முருகதாஸ் இந்த வேலையை கச்சிதமாக செய்து வருகிறார். லைகாவுக்காக படம் பண்ணும் வாய்ப்பையும் பெற்றுத் தருகிறார். இதனால் இதுவரை எதிர்த்து வந்த பலரும், தமிழர் தயாரிக்கும் படம்தானே இது என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமனிடம் இதுகுறித்து கேட்டபோது, "கத்தி படத்தைத் தயாரிக்கும் கருணா மூர்த்தி, சுபாஷ்கரன் இருவருமே தமிழர்கள்தான். இலங்கை தமிழர்கள். அய்ங்கரன் கருணாமூர்த்தி பற்றி எல்லாருக்குமே தெரியும். அவர்தான் முதன்முதலில் ஓவர்சீஸ் மார்க்கெட்டில் தமிழ்ப் படங்களைக் கொண்டு போனவர். அவரது கூட்டாளியான சுபாஷ்கரனும் தமிழர்தான்," என்றார்.

ராஜபக்சே - லைகா கூட்டணி பற்றியெல்லாம் அவர் பேசவே மறுத்துவிட்டார்.

ஏற்கெனவே இலங்கைத் தமிழர் பிரச்சினையை கொச்சைப்படுத்தும் வகையில் வெளியான இனம் படத்துக்கும் விக்ரமன் உள்ளிட்ட இயக்குநர் சங்கத்தினர் பெரும் ஆதரவு தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

 

கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள கத்தி படத்துக்கு தன் அமோக ஆதரவைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான்.

மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் இது பெரிய ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்பட வில்லை. ஆனால் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் இது பெருத்த அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

கத்தி படத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான், அந்தப் பட நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், லைகா நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.

இந்தப் படத்தில் சிம்பு நடிக்கிறாராம். இது ஏற்கெனவே விஜய், ஜெயம் ரவி போன்றவர்கள் நடிப்பதாக இருந்த பகலவன் படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

லைகாவுக்காக படம் இயக்கும் வாய்ப்பை சீமானுக்குப் பெற்றுத் தந்தவர் ஏ ஆர் முருகதாஸ்தான் என்பது கூடுதல் தகவல்!

 

சீனியர் ஹீரோ பேசிய 'பஞ்ச்'சால் அல்லாடும் இளம் ஹீரோ

சென்னை: பிரபல நடிகரும், இயக்குனருமான அவர் ஒரு மேடையில் இளம் ஹீரோவை பற்றி பேசிய ஒரேயொரு பஞ்ச் வசனம் அவருக்கு பெயராகிவிட்டது.

கதையே இல்லாமல் படம் எடுக்கும் அந்த நடிகர், இயக்குனர் சினிமா விழாக்களில் கலந்து கொண்டு மேடையில் பேசுகையில் சுவாரஸ்யமாக பேசி அனைவரின் கைதட்டல்களை வாங்கிவிடுவார். அருமையாக கவிதையும் எழுதக்கூடியவர் அவர். அவர் ஒரு மேடையில் பேசுகையில், இந்த ஹீரோ எப்படி பிக்கப் செய்கிறார் டிராப் செய்கிறார் என்றே தெரியவில்லை என்று கூறி கைதட்டல்களை பெற்றார்.

அவர் யாரைப் பற்றி பேசினாரோ அந்த ஹீரோவும் அதை கேட்டு சிரித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் அந்த சீனியர் ஹீரோ கூறிய பிக்கப் டிராப் பஞ்ச் தற்போது அந்த இளம் ஹீரோவின் பட்டப்பெயராகிவிட்டது.

அந்த இளம்ஹீரோவின் பெயரை கூறினாலே ஓ, பிக்கப் டிராப் நடிகரா என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது. சீனியர் ஹீரோ ஏதோ சுவாரஸ்யமாக பேசுகிறேன் என்று கூற அதுவே இளம்ஹீரோவுக்கு தலைவலியாகிவிட்டது.

இப்படி தான் அந்த சீனியர் ஹீரோ விழா ஒன்றில் மில்க் நடிகையின் காதலையும் போட்டு உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எனக்கு 'அது' வேணவே வேணாம்ப்பா... லட்சுமி மேனன் அதிரடி!

சென்னை: தமிழ் திரை உலகில் இளம்வயது நடிகையான லட்சுமி மேனன் தற்போது "தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை" என்ற திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கும்கி படத்தில் அறிமுகமானபோதே "நான் எந்த மொழியில் நடித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலித்து திருமணம் செய்வேன்" என்று அதிரடியாக அறிவித்தவர் லட்சுமிமேனன். அப்போதே அட ரொம்ப வெவரமாகத்தான் இருக்கிறார் லட்சுமி என்று பலரும் கலாய்த்தனர்.

எனக்கு 'அது' வேணவே வேணாம்ப்பா... லட்சுமி மேனன் அதிரடி!

9 ஆவது வகுப்பு படிக்கும்போது இப்படி அதிரடியாக அறிவித்தவர் இப்போது 11ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் "திருமணமே செய்து கொள்ள மாட்டேன்" என்று திடீர் முடிவெடுத்திருக்கிறார்.

தான் திருமணம் செய்து கொள்ளவே போவதில்லை. கல்யாணம் செய்து கொள்ளாமல் பலபேர் சாதித்துள்ளனர். தனக்கு மிகவும் பிடித்த சித்தார்த்துடன் நடித்து விட்டதாகவும், அடுத்து விஜய், அஜித், மம்முட்டியுடன் நடிக்க வேண்டும் என்று நிறைய கனவுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் லட்சுமி மேனன்.

மொதல்ல பிளஸ் 1 படிச்சு முடிக்கற வழியைப் பாருங்க அப்புறமா இதைப்பத்தியெல்லாம் பேசிக்கலாம் என்கின்றனராம் சில திரையுலகினர்.