சென்னை: இன்னும் வெளி வராத ரஜினியின் கோச்சடையான் படம் குறித்து தவறான தகவல் பரப்பும் விஷமிகளைக் கண்டிப்பதாக சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைமை நிர்வாகிகள் அறிக்கை விடுத்துள்ளனர்.
ரஜினி இருவேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் கோச்சடையான் பொம்மை படம், கார்ட்டூன் படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்றும் இண்டர்நெட்டில் சிலர் செய்தி பரப்பி உள்ளனர். படமே இன்னும் வரவில்லை. ஆனால் அதற்குள் இப்படி விஷமத்தனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று ரஜினி ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்.ராம்தாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோச்சடையான் டிரைலர் காட்சிகளை 3டி பரிமானத்துடன் புதிய தொழில் நுட்பத்துடன் பார்க்கும்போது அற்புதமாக இருந்தது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தியது.
டிரையிலரை ரசித்து மகிழ்ந்த ரசிகர்கள் மெயின் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதுவரை தலைவரின் எந்தப் படத்துக்கும் கிடைக்காத வசூலும், வெற்றியும் கோச்சடையானுக்குக் கிடைக்கும்.
டிரைலர் வெளியீடு அன்று தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களை விட வெளியே சூப்பர் ஸ்டாரை பார்க்க நின்ற ரசிகர்கள் கூட்டம் பலமடங்கு. ரசிகர்களை பார்த்த சூப்பர்ஸ்டார் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்கள் முன்னிலையில் நடத்துவேன் என்று கூறினார்.
முத்து படம் வெற்றி மூலம் ஜப்பான் பாராளுமன்றத்தில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முன் ஜப்பான் பிரதமர் பாராட்டியது போல், ஐ.நா.சபையில் கோச்சடையான் படத்தை உலக தலைவர்கள் பாராட்ட வேண்டும். அதுதான் எங்கள் லட்சியம்.
கோச்சடையான் படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு வைரக் கல்லாகவும் அதே வகையில் தமிழ் மண்ணின் பெருமையை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமையும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.
கோச்சடையான் கார்ட்டூன் பொம்மை படம் என சில விஷமிகள் வதந்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது. இது தலைவர் படம். அது ஒன்றுபோதும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.