நாளை மறுநாள் கோச்சடையான் ட்ரைலர்?

Kochadaiyaan Trailer From Sunday   

ரஜினி ரசிகர்கள் மகா ஆர்வத்தோடு எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் கோச்சடையான் படத்தின் முதல் ட்ரைலர் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா தரப்பில் இன்னும் எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

எந்திரனுக்குப் பிறகு மூன்றாண்டுகளாக ரஜினி படம் எதுவும் வெளியாகவில்லை. கோச்சடையான் படம் புதுமையான தொழில்நுட்பத்தில் வெளியாகவிருப்பதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ரஜினியுடன் பெரிய நட்சத்திரப் பட்டாளம், இந்தியாவில் இதுவரை எந்தப் படத்திலும் உபயோகிக்கப்படாத 3டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம், ஹாலிவுட் மற்றும் சீன தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, ரஹ்மானின் இசை... என அனைத்து வகையிலும் உலகத் தரமான ஒரு படமாக கோச்சடையான் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் ட்ரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேர்ததில், மேலும் சிறப்பாக ட்ரைலரை மெருகேற்றுமாறு ரஜினி கூறியதால் ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்திருந்தார். இந்த ஜூன் மாதத்துக்குள் எப்படியும் ட்ரைலர் வெளியாகிவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இப்போது, வரும் ஞாயிற்றுக்கிழமை கோச்சடையானின் முதல் ட்ரைலர் வெளியாகக் கூடும் என தகவல் கசிந்துள்ளது.

இந்த ட்ரைலரை சர்வதேச அளவிலான ஏதாவது ஒரு நிகழ்வில் வெளியிட வேண்டும் என்றுதான் தயாரிப்பாளரும் சூப்பர் ஸ்டாரும் விரும்பினார்கள். எனவே ஞாயிற்றுக்கிழமை சாதாரணமாக வெளியாகுமா அல்லது ஏதாவது ஒரு சர்வதேச நிகழ்வில் வெளியிடுவார்களா...

ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்... நகம் கடித்தபடி!

 

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகாவை கண்டுகொள்ளாத சூர்யா

Suriya Doesn T Talk Hansika

சென்னை: சிங்கம் 2 படப்பிடிப்பின் இடையே உள்ள நேரத்தில் சூர்யா தன்னுடன் பேசியதே இல்லை என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஹன்சிகா என்று இரு நாயகிகள் நடித்துள்ளனர். படத்தில் ஹன்சிகாவுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹன்சிகா சூர்யா பற்றி கூறுகையில்,

சிங்கம் 2 படப்பிடிப்பின் இடையே ப்ரீ டைமில் சூர்யா ஒரு தடவை கூட என்னுடன் பேசியதே இல்லை. அவர் தனது காட்சிகளில் வந்து நடிப்பார். காட்சி முடிந்தவுடன் ஒன்று தனது கேரவனுக்கு சென்றுவிட்டார் இல்லை என்றால் பிற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருப்பார் என்றார்.

பிரியாணில கார்த்தி எப்படி என்று சொல்லவில்லையே ஹன்சிகா...

 

கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டுது லட்சுமிக்கு!

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டுது என்பார்களே... அது முழுக்க முழுக்க உண்மையாகியிருக்கிறது லட்சுமி மேனன் விஷயத்தில்!

புதிய படத்துக்கு ஸ்கிரீன்ப்ளே எழுதும்போதே ஹீரோயின் லட்சுமிமேனன்தான் என முடிவு செய்துவிடுவார்கள் போலிருக்கிறது.

lakshmi menon signed karthik subburaj movie

கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்குமேல் கைவசம் உள்ளன. எல்லாமே முன்னணி ஹீரோ மற்றும் இயக்குநர்களின் படங்கள்.

அடுத்து பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இரண்டாவது படத்தில் லட்சுமி மேனனை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

பொதுவாக கதை கேட்பதில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை லட்சுமி மேனன்.

ஹீரோ யார் என்று கூட அதிக அக்கறை காட்டுவதில்லையாம். இயக்குநர், தயாரிப்பாளரை வைத்து அவர் படங்களை ஒப்புக் கொள்வாராம்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தொடர்பு கொண்டு, என் அடுத்த படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டதும் சரி என்று ஒப்புக் கொண்டாராம் லட்சுமி மேனன்.

பீட்சா போலவே இந்தப் படமும் ஒரு த்ரில்லர். ஹீரோ சித்தார்த்!

 

லீனா மரியா பால் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்.. போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு!

Leena Appear Before Chennai Court On Friday

சென்னை: பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை லீனா மரியா பால் நாளை சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர் சென்னையில் உள்ள கனரா வங்கியில் ரூ. 19 கோடியை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இந்த மோசடியில் அவருக்கு துணையாக இருந்தவர் லீனா. இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். டெல்லியில் சுகாஷ் தங்கி இருப்பதாக ஒரு ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

சென்னை போலீசும் டெல்லி போலீசும் இணைந்து ரகசியமாக திட்டமிட்டு நேற்று முன்தினம் இருவரையும் டெல்லி பண்ணை வீட்டில் சுற்றி வளைத்தனர்.

போலீசார் வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு நடிகை லீனா மரியாபால் இருந்தார். அவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் கூறியுள்ளார்.

சுகாஷ் மோசடிக்கு லீனாவும் உடந்தையாக இருந்துள்ளார். அதனால் அவரை கைது செய்து டெல்லியில் இருந்து சென்னை கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீஸ் பாதுகாப்புடன் நடிகை லீனா இன்று இரவு சென்னை வருகிறார்.

இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதனால் அவரை நாளை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துகிறார்கள்.

மோசடி மன்னன் சுகாஷுக்கு வைத்த குறியில் நடிகை லீனா சிக்கியுள்ளது போலீசாருக்கு பெரும் துருப்பு சீட்டாக உள்ளது. மோசடி செய்த பணத்தை நடிகையுடன் உல்லாசமாக இருந்து அவன் செவழித்துள்ளான். ஆடம்பர கார், சொகுசு வீடுகளில் தங்கி ராஜபோக வாழ்க்கையை சுகாஷ் அனுபவித்து வருகிறான்.

மோசடி செய்த பணம் குறித்து நடிகையிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்த உள்ளனர். அப்போதுதான் இந்த மோசடியில் நடிகையின் பங்கு என்ன? அவர் எந்த வகையில் உதவி செய்துள்ளார். அவருக்கும் இந்த மோசடிக்கும் என்ன தொடர்பு என்பது போன்ற விவரங்கள் தெரிய வரும்.

இதற்கிடையில் பண்ணை வீட்டிலிருந்து தப்பி ஓடிய சுகாசை பிடிக்க போலீஸ் படை விரைந்துள்ளது. டெல்லியைவிட்டு அவன் தப்ப முடியாத அளவுக்கு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

 

சென்னை கொண்டு வரப்பட்டார் லீனா மரியா பால்... மருத்துவமனையில் கர்ப்பப் பரிசோதனை!

சென்னை: ரூ 19 கோடி மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியா பால், இன்று காலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.

அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னையில் 2 வங்கிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பாலாஜி என்கிற சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடி வந்தனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பெங்களூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் என்று கூறி பல மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்தும் இவர் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ 19 கோடி மற்றும் சேலையூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.72 லட்சம் கடன் வாங்கி சுகாஷ் மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடிகளில் நடிகை லீனா மரியா பாலுக்கும் தொடர்பிருப்பது பின்னர் தெரியவந்ததும் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் டெல்லியில் அசோகா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தரா தேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

கடந்த 28-ந் தேதி டெல்லியில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த நடிகை லீனாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அங்கு அதிரடி சோதனை நடத்தி 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

லீனாவுடன் தங்கியிருந்த அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

கைதான லீனாவை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக டெல்லியில் இருந்து போலீசார் இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். காலை 7.15 மணி அளவில் தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

சுடிதார் அணிந்திருந்த அவர், ரெயிலில் இருந்து இறங்கும் போது போலீசாருடன் சாதாரண பயணி போலவே இறங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான போட்டோகிராபர்களும், டி.வி. கேமராமேன்களும் அவரை படம் பிடிக்க நெருங்கினர்.

உடனடியாக அவர் துப்பட்டாவால் தனது முகத்தை மூடிக் கொண்டார். பின்னர் போலீசார் பத்திரமாக அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். எழும்பூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

ஏற்கெனவே டெல்லி நீதிமன்றத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக லீனா கூறியதால்,. இன்று அரசு மருத்துவமனையில் லீனா கர்ப்ப சோதனை நடத்தப்பட்டது.

இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்.

 

லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததால் கர்ப்பமாக உள்ளேன்...! - மோசடி ராணி லீனா நீதிமன்றத்தில் கதறல்!

Leena Mariya Paul Bursts Before Magistrate

டெல்லி: பல கோடி மோசடியில் கைதாகியுள்ள பாலாஜி என்கிற சுகாஷ் சந்திரசேகருடன் லிவிங் டுகெதர் முறையில் மனைவியாகவே வாழ்ந்ததால் கர்ப்பமாக உள்ளேன். என்னை சிறைக்கு அனுப்ப வேண்டாம்," என்று டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு கதறி அழுதார் நடிகை லீனா மரியா பால்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை எஞ்ஜினீயர்.

லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு லீனாவுடன் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றுக்கு சென்று இருக்கிறார். பெரிய திட்டம் ஒன்றை தொடங்குவதாக கூறி, அதற்காக அவர்கள் அந்த வங்கி கிளையில் ரூ.19 கோடி கடன் வாங்கி உள்ளனர்.

இதுதவிர, இதே ஐஏஎஸ் அதிகாரி முகமூடியுடன் பலரிடம் கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்றுள்ளனர் பாலாஜியும் லீனாவும்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக கனரா வங்கி கிளையின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் சுகாஷ் சந்திரசேகர், லீனா ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 120 பி (கிரிமினல் சதி), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து டெல்லி போலீசாரின் உதவியுடன் டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த நடிகை லீனா மரியா பாலை கைது செய்தனர். மேலும் அவருடைய பாதுகாவலர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆவார்கள்.

பாலாஜியையும் சேர்த்தே கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வந்தபோது அவர் தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நான் கர்ப்பமாக உள்ளேன்.. ஜெயிலுக்கு அனுப்பாதீங்க!

நடிகை லீனாவை டெல்லி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் லீனா கதறி அழுதார்.

"நான், சுகாசுடன் மனைவி போலவே வாழ்ந்தேன். அதன் விளைவாக நான் கர்ப்பமாக உள்ளேன். என்னை ஜெயிலுக்கு அனுப்பாதீர்கள், மோசடியில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, விட்டு விடுங்கள்," என்று கெஞ்சினார்.

சென்னைக்கு...

ஆனால் மாஜிஸ்திரேட்டு, 72 மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நடிகை லீனாவை பாதுகாப்பாக ரெயிலில் சென்னை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அவருக்கு துணையாக இருக்க, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டுள்ள இன்ஸ்பெக்டர் விஜயகுமாரும், நடிகை லீனாவை அழைத்துக்கொண்டு நேற்று இரவு டெல்லியில் இருந்து ரெயிலில் சென்னை புறப்பட்டனர். அவர்கள் வரும் ரெயில் இன்று வியாழக்கிழமை இரவு சென்னை சென்ட்ரலுக்கு வருகிறது.

 

முக்கிய அரசியல் கட்சித் தலைவர் பெயரைச் சொல்லி மிரட்டிய பவர் ஸ்டார்!

New Allegation On Power Star Srinivasan

சென்னை: தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி மற்றும் அதன் தலைவர் பெயரைச் சொல்லி பலரை மிரட்டியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்.

இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் ஒரு வழக்கு உள்ளது. மதுரை உள்பட வெளி மாவட்டங்களிலும் அவர் மீது மோசடி வழக்குகள் குவிந்துள்ளன.

தமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்களிலும் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அடுத்து ஆந்திர மாநில போலீசாரும், அவரைக் கைது செய்யத் தயாராகி வருகின்றனர்.

அவரது 2-வது மனைவி ஜுலி, 3-வது மனைவி துரியா ஆகியோரும் வழக்குகளில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யவும் போலீசார் குறி வைத்துள்ளனர்.

அவர் மீது இப்போது புதிதாக மிரட்டல் புகாரும் சேர்ந்துள்ளது. முக்கிய அரசியல் கட்சியின் பெயரையும், அந்தக் கட்சி தலைவர்களின் பெயரையும் தவறாகப் பயன்படுத்தி, மிரட்டி மோசடி லீலைகளில் ஈடுபட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பவர்ஸ்டார் மீது குண்டர் சட்டமும் பாய்வது உறுதி என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

குதிரையை ஓடிப் பார்த்துருப்பே, ஆடிப் பார்த்திருப்பே, ஆனால் சுடிதாரில் பார்த்திருக்கியா?

Have You Seen Horse Churidhar   

சென்னை: சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவின் உயரத்தை புகழும் வகையில் ஒரு வசனம் வைக்கப்பட்டுள்ளதாம்.

சிங்கம் படத்தில் சூர்யா சிங்கத்தை காட்டுல பார்த்திருப்ப, கூண்டுல பார்த்திருப்ப என்ற வசனத்தை பேசியிருப்பார். அந்த வசனத்தை சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுக்கு ஏற்ற மாதிரி மாற்றியிருக்கிறார்கள்.

அனுஷ்கா ஆறடி உயர நாயகி என்பது அனைவரும் தெரிந்தது. அப்படி உயரமாகவும், கம்பீரமாகவும் இருக்கும் அந்த அரபிக் குதிரையை புகழும்படி பஞ்ச் டயலாக் வைத்துள்ளனர். படத்தில் சந்தானம் தான் அந்த வசனத்தை பேசுகிறார். அது என்ன வசனம் என்றால், "குதிரையை ஓடிப் பார்த்துருப்பே, ஆடிப் பார்த்திருப்பே, ஆனால் சுடிதாரில் பார்த்திருக்கியா? என்பது தான்.

தனக்காக எழுதப்பட்ட இந்த வசனத்தால் அனுஷ்கா சந்தோஷமாக இருந்தாலும் ஹன்சிகாவுக்கு தான் படத்தில் அதிக முக்கியத்துவம் என்று பரவும் செய்தியால் கவலையில் உள்ளாராம்.

 

விஜய் நலத்திட்ட விழா கடைசி நேரத்தில் ரத்து ஏன்?: பரபரப்பு தகவல்கள்

Why Did Vijay S Function Get Cancelled

சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடக்கவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி நாளை சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

இது குறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில்,

வரும் 8ம் தேதி விஜய் ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கவிருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்றார்.

இந்த விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் கூட நடந்து வந்தன. மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இந்த கல்லூரியில் விழா நடந்தால் விஜய் ரசிகர்கள் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கருதிய போலீசார் விழாவுக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

முதலில் சிறிய அளவில் விழா நடத்த திட்டமிட்டனர். பின்னர் மாநிலம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வந்து கலந்து கொள்ளும் பிரமாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டதால் தான் இத்தனை குளறுபடியாம். தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் திரண்டு வருவதால் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாம். அதனால் பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்து போலீசார் அனுமதி மறுத்துவிட்டார்களாம்.

மேலும் நாளை அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனால் விஜய் விழாவுக்கு பாதுகாப்பு அளிப்பதில் குளறுபடி ஏற்படலாம் என்று கருதியும் போலீசார் அனுமதி மறுத்தனராம். மேலும் அரசியல் கட்சியின் தலையீட்டாலும் தான் இந்த விழா ரத்து செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

 

'அணில்' பிறந்த நாள் விழா... ஆப்பு வைத்த 'அரசியல்'!

Politics Behind Cancellation Vijay Birthday Function

நடிகர்களும் அரசியலும் புலிவால் பிடித்த நாயர் மாதிரிதான். அவர்களும் விடமாட்டார்கள்... அதுவும் அவர்களை விடாது!

நடிகர் விஜய் என்னதான் அமைதியின் உருவமாக, சாதுப் பிள்ளயாக நடந்து கொண்டாலும், அவருக்குள் இருக்கும் அரசியல் ஆசை என்னவென்பது ஆட்சியாளர்களுக்கு - அது எந்த கட்சியாக இருந்தாலும் - நன்றாகவே தெரியும்.

திமுக மீதான கசப்பில் அவர் அதிமுகவுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட பிரச்சாரமே செய்தார். அவர் தந்தையும் களத்தில் இறங்கினார். ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததும் அணில் மாதிரி உதவினேன் என்று அவர் அறிவிக்க, அடுத்த நிமிடமே ஆட்சி மேலிடம் 'அணில்' விஷயத்தில் கறார் பார்வையுடன் நடக்க ஆரம்பித்தது.

அது இப்போது விஜய் பிறந்த நாள் விழாவில் கொஞ்சம் பெரிதாக எதிரொலித்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பெரிதாக விழா, நிகழ்ச்சிகள் எதையும் நடத்தாமல்தான் இருந்தார் விஜய். அப்படியே நடந்தாலும் சத்தமில்லாமல் முடிந்துவிடும்.

ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. கடலூரில் இலவசத் திருமணம் என்ற பெயரில் விஜய் மன்றத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டினர். அதில் விஜய்யே ஓட்டமெடுக்க வேண்டி வந்தது வேறு விஷயம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு கூடிய கூட்டம்தான் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சி நடந்த சில வாரங்களிலேயே மீண்டும் ஒரு இலவச திருமண நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார் விஜய்யும் அவர் ரசிகர்களும். அதற்கும் பெரும் கூட்டம்.

இந்த நிலையில் அவரது பிறந்த நாள் விழா வருகிறது. சாதாரண நாளிலேயே பெரிய கூட்டத்தைக் கூட்டிக் காட்டியவர்கள், பிறந்த நாள் விழா என்றால் அரசியல் மாநாடு ரேஞ்சுக்கு ஆட்களைத் திரட்டுவார்கள் என்பதை மேலிடம் கணித்திருந்தது. அதற்கேற்ப, கல்லூரி மைதானத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநாடு எனும் அளவுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் விஜய் ரசிகர்கள்.

பிரமாண்ட பந்தல், 3900 பயனாளிகளுக்கு உதவி, மாவட்டந்தோறும் நடத்தப்போகும் இலவச திருமண அறிவிப்புகள் போன்றவற்றை உளவுத்துறை மூலம் அறிந்த பிறகே, இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

'பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், 'அணிலை' பெரிதாக வளர்த்து, அதனிடமே ஆதரவு கேட்க வேண்டிய சூழல் வேண்டாமே என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்!' என்று கண்ணடிக்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. வேறு தேதிக்கு மாற்றிக் கொள்கிறோம் என விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேட்டபோது, பின்னர் சொல்கிறோம் என்று மட்டும் பதிலளித்துள்ளனர் காவல் துறையினர். அனுமதி அளிப்பதும் மறுப்பதும் அவர்கள் கையிலா இருக்கிறது!

யாரை எப்போது தட்ட வேண்டும் என்பதை கச்சிதமாக தெரிந்து வைத்துள்ளனர் ஆட்சியாளர்கள்!

 

ஹன்ஸிகாவுடன் டூயட்... சிவகார்த்திகேயனுக்கு புரமோஷன்!

Sivakarthikeyan Romanced With Hansika

இரண்டு படங்கள் ஹிட்டானதும் சிவகார்த்திகேயன் ரேஞ்சும் கிர்ரென்று எகிறிவிட்டது.

இதுவரை புதுமுகம் அல்லது இரண்டாம் நிலை நாயகிகள்தான் அவருக்கு ஜோடியாக நடித்தனர். இப்போது முதல் முறையாக டாப் ஹீரோயினான ஹன்ஸிகாவுடன் டூயட் பாடவிருக்கிறார்.

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தில்தான் சிவகார்த்திகேயனும் ஹன்ஸிகாவும் ஜோடி சேருகிறார்கள்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஹன்சிகா கூறுகையில் ''இயக்குனர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் நடிக்கவிருப்பதை பெருமையாகவும் கவுரவமாகவும் கருதுகிறேன்.

இப்படத்தின் கதை - திரைக்கதை முழுசாகக் கேட்டேன், படித்தேன். என்னை மிகவும் கவர்ந்துவிட்டது... இது ஒரு முழு நீள காமெடி படம். இப்படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது திறமையும் வளர்ச்சியும் எல்லோரையும் கவர்ந்துள்ளது. அவரது சமீபத்திய படங்களை நானும் ரசித்துப் பார்த்தேன். நாங்கள் இருவரும் இணையும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெறும் என நம்புகிறேன்," என்றார்.

சிவகார்த்திகேயனைக் கேட்டால், "ரொம்ப சந்தோஷமா இருக்கு... ஹன்ஸிகாவுடன் டூயட் பாடும் நாளை நானும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்," என்றார்.

 

எனக்கு எதுவும் தெரியாது... சுகாஷ் என்னை மோசடி செய்துவிட்டான்! - நடிகை லீனா மரியா

Actress Leena Alleges Suhash As Cheater

சென்னை: ரூ 20 கோடி மோசடி வழக்கில் கைதாகியுள்ள நடிகை லீனா, தான் அப்பாவி என்றும், பெரிய இயக்குநர் என்று கூறி தன்னை சுகாஷ் ஏமாற்றிவிட்டான் என்றும் கூறியுள்ளார்.

அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்தது மற்றும் சேலையூரைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரிடம் ரூ. 72 லட்சம் மோசடி செய்த வழக்குகளில் பாலாஜி என்கிற சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடி வந்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த இவன் தனது 19 வயதில் மோசடியை ஆரம்பித்தான். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பல கோடியை மோசடி செய்துள்ளான்.

சில மாதங்களுக்கு முன்னர் அம்பத்தூர் கனரா வங்கியின் மண்டல மேலாளர் புகார் அளித்த பின்னர்தான் சுகாஷ், சென்னையில் பதுங்கி இருந்து மோசடி செய்வது அம்பலமானது. சுகாஷை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் களமிறங்கினர். இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தராதேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது சுகாஷ் தனது காதலியும் நடிகையுமான லீனாவின் டெல்லி பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக டெல்லிக்கு விரைந்து சென்ற போலீசார், நடிகை லீனாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால் சுகாஷ் சந்திரசேகர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டான்.

லீனாவை ரயிலில் சென்னை கொண்டு வந்து நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சுகாஷ் பற்றி லீனாவிடம் கேட்டபோது, "அவனை பெரிய இயக்குநர், சினிமாவில் செல்வாக்கு மிக்கவன் என்று நம்பி நான் ஏமாந்து போனேன். என்னிடம் அறிமுகமானபோது, பெரிய டைரக்டர் என்று கூறினான். முன்னணி நடிகையாக்குவதாக கூறினான். அதனால் அவன் காதல் வலையில் நான் விழுந்துவிட்டேன்," என்று போலீசிடம் தெரிவித்துள்ளார்.

எனவே லீனாவை வைத்தே தலைமறைவாக உள்ள சுகாஷை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சுகாஷைப் பிடிக்க 2 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். சுகாஷ் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

பெங்களூரில் மட்டும் சுகாஷ் மீது 100-க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளன.

சுகாஷ் பற்றி மேலும் தகவல்களை திரட்டுவதற்காக லீனாவை போலீசார் காவலில் எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.