ஒரு வேளை சாப்பாடுக்கே வழியின்றி கஷ்டப்பட்டேன்: பாண்ட் கேர்ள் ஓல்கா

நியூயார்க்: ஜேம்ஸ் பாண்ட் படமான குவான்ட்டம் ஆஃப் சொலேஸில் டேனியல் கிரேக் ஜோடியாக நடித்த ஓல்கா குரலென்கோ சிறு வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் படமான குவான்ட்டம் ஆஃப் சொலேஸில் டேனியல் கிரேக் ஜோடியாக நடித்தவர் உக்ரைனைச் சேர்ந்த நடிகை ஓல்கா குரிலென்கோ. 2 முறை விவாகரத்தான அவரின் காமெடி படமான செவன் சைக்கோபாத்ஸ் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

தான் நடிகையாவதற்கு முன்பு பட்ட கஷ்டங்கள் குறித்து ஓல்கா கூறுகையில்,

நானும் எனது தாய் மரினாவும் உக்ரைனில் உள்ள சிறிய ஊரான பெர்டியான்ஸ்கில் வாழ்ந்தோம். நான் என் பெற்றோருக்கு ஒரே குழந்தை. மேலும் சில குழந்தைகள் இருந்திருந்தால் எங்கள் பாடு மோசமாகியிருக்கும். அவ்வளவு வறுமை, பசிக் கொடுமையில் இருந்தோம். என் அம்மா தான் எங்கள் துணிகளை தைப்பார். சில நேரம் அவரது ஆடையைக் கிழித்து எனக்கு புதிதாக ஆடை தைத்துக் கொடுப்பார். சில நேரங்களில் சாப்பிட வழியில்லாமல் பட்டினி கிடந்தோம். எனக்கு தந்தை இல்லை. நான் பிறந்த பிறகு தனியாக வாழவே என் தாய் விரும்பினார்.

அவர் ஆசிரியையாக பணியாற்றியும் நாங்கள் மிகவும் ஏழ்மையில் இருந்தோம். எங்கள் ஊரைவிட்டு வெளியே போனதே இல்லை. அப்போது தான் என் அம்மா பணம் சேர்த்து வைத்து நாங்கள் மாஸ்கோ சென்றோம். அப்போது எனக்கு 14 வயது. அங்கே என்னைப் பார்த்த ஒருவர் மாடலிங் செய்ய அழைத்தார். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளுமாறு என் அம்மா கூறியதால் ஓகே சொன்னேன்.

உக்ரைனில் இருந்து 26 மணிநேரம் ரயிலில் பயணம் செய்து மாஸ்கோவில் மாடலிங் செய்தேன். இவ்வாறு ஒரு ஆண்டு ஓடியது. அதன் பிறகு பாரீஸில் மாடலிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு 16 வயது. பாரீஸுக்கு சென்று மாடலிங் செய்தேன். பேஷன் போட்டோகிராபர் செட்ரிக் வான் மோல் என்பவரை மணந்தேன். அதன் பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி தான் ஹாலிவுட்டுக்கு வந்தேன்.

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நான் நாயகி என்றதும் என்னால் அதை நம்பவே முடியவில்லை என்றார்.

 

ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி... போயஸ் கார்டனில் குவிந்தது கூட்டம்!

12 12 12 Special Rajini Meets His Fans Today

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இந்த தகவல் வெளியில் கசிய ஆரம்பித்ததிலிருந்து கூட்டம் கூட்டமாக போயஸ் கார்டன் நோக்கி புறப்பட்டுவிட்டனர் ரசிகர்கள். காலை 6 மணியிலிருந்தே ரஜினி வீட்டு முன்பு திரள ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.

பிறந்த நாளன்று மட்டுமல்ல, பொதுவாகவே ரசிகர்களைச் சந்திப்பதை பல்வேறு காரணங்களுக்காகத் தவிர்த்து வந்தார் சூப்பர் ஸ்டார். வீடு மற்றும் ராகவேந்திரா மண்டபப் பகுதிகளில் ஏற்படும் அசாதாரண நெரிசல் முக்கிய காரணம்.

தன்னால் எந்தவிதமாக இடையூறும் ஏற்பட வேண்டாம் என்பது அவர் எண்ணம். ஆனால் அதையே அவருக்கு எதிரான அஸ்திரமாகப் பயன்படுத்தினர் அவரை விமர்சிப்பவர்கள்.

இந்த முறை ரஜினி பிறந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க 12.12.12 ஆக அமைந்துள்ளது. உலகம் முழுக்க அவரது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். அவரது வீடு தேடி வாழ்த்து மலர்களும் மடல்களும் குவிந்து வருகின்றன.

எனவே இந்த முறை பிறந்த நாளன்று முழுவதும் வீட்டிலேயே இருந்து, வருகின்ற ரசிகர்களின் வாழ்த்துக்களைப் பெறும் முடிவிலிருக்கிறார் ரஜினி.

தனது முடிவை நேற்று மாலையே அவர் ரசிகர்களுக்கு தகவலாகத் தெரிவித்துவிட, அளவிலா உற்சாகத்துடன் அவர் வீடு நோக்கி புறப்பட்டுவிட்டனர் ரசிகர்கள்.

காலை 6 மணியிலிருந்தே வீட்டுக்கு முன் குவிய ஆரம்பித்த கூட்டம், 8 மணிக்கெல்லாம் திமிலோகப்பட ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக பரிசுகள் மற்றும் மலர்க் கொத்துகளுடன் அவர் வீட்டு முன்பு திரண்டு நிற்கின்றனர்.

 

சிறப்பு விருந்தினராக வருமாறு சூப்பர் ஸ்டாருக்கு அமெரிக்க மாகாண அரசு அழைப்பு!

Us State Invites Rajini As Special Guest

அன்னபோலிஸ் (மேரிலாண்ட்): தங்கள் மாநில அரசின் சிறப்பு விருந்தினராக வருகை தருமாறும், திரைத்துறையில் இணைந்து பணியாற்றவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது.

12.12.12 அன்று பிறந்த நாள் காணும் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது அம்மாநில அரசு. மேரிலாண்ட் மாகாண அரசின் சார்பில் இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார் அம்மாநிலத்தின் துணை அமைச்சர் டாக்டக் ராஜன் நடராஜன்.

மேலும், வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வரும் டாக்டர் ராஜன், சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளைத் தெரிவிக்க ஆவலுடன் இருப்பதாக தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிகப் பணக்கார மாகாணம் என்று புகழப்படும் மேரிலாண்டின், ஆளுநர், அம்மாகாண மக்கள் சார்பில் இந்த வாழ்த்தையும் அழைப்பையும் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள டாக்டர் ராஜன், அமெரிக்க வரலாற்றிலேயே இப்படி ஒரு உயர் பதவியை வகிக்கும் முதல் இந்தியர் – தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேரிலாண்ட் மாகாண ஸ்டேட் ஹவுஸ் லெட்டர் பேடில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தன் வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார் ராஜன்.

 

ஊரெங்கும் ப்ளெக்ஸ்.... கோவில்களில் சிறப்பு அர்ச்சனை: ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்

திருப்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் நகரில் திரும்பிய பக்கமெங்கும் ப்ளக்ஸ் பேனர்கள் களை கட்டியுள்ளன. ரஜினி ரசிகர்கள் கோவில்களில் பால்குடம் எடுத்தும் பொங்கல் வைத்தும் சிறப்பு அர்ச்சனைகளை செய்து வருகின்றனர்.

“என் வழி தனி வழி”…. , “நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”….. இவை நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் பேசிய பஞ்ச் வசனங்கள். இவைதான் ரஜினி ரசிகர்களின் தாரக மந்திரங்கள்.

fans celebrate rajini s birth day tirupur

குடும்பத்தினரின் பிறந்தநாளை, திருமணநாளை நினைவு வைத்திருப்பார்களோ இல்லையோ தங்கள் தலைவரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் நாளை நினைவு வைத்துக்கொண்டு கோவில்களில் சிறப்பு அர்ச்சனையும், பால்குடமும் எடுத்து கொண்டாடி விடுவார்கள் ரசிகர்கள்.

மதுரைதான் ரசிகர்மன்றங்களின் தலைமையிடம் என்றால் இப்போது திருப்பூரிலும் ரஜினி ரசிகர்கள் ஆண்டுதோறும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு விசேசமாக 12/12/12 என்று மூன்று 12 வருவதால் ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டம் அதிகமாகிவிட்டது.

திருப்பூர் நகரின் முக்கிய பகுதிகளில் திரும்பிய பக்கமெங்கும் ப்ளெக்ஸ்பேனர்கள் ஜொலிக்கின்றன. ராகவேந்திரா ஆலயத்தில் சிறப்பு லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர் ரசிகர்கள். பால் குடம் எடுத்தும், பொங்கல் வைத்தும் திருவிழா போல ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

 

கமலின் வழிகாட்டுதலால் மேலே வந்த நடிகன் நான்: ரஜினிகாந்த்

I Grew Up Watching Kamal S Acting

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 62வது பிறந்தநாளின்போது தான் பெரிய ஹீரோவாகக் காரணமாக இருந்த நடிகர் கமல் ஹாசன் பற்றி மனம் திறந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 62வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்நிலையில் அவர் தனது நண்பர் கமல் பற்றி கூறுகையில்,

1975ல் நான் நடிக்க வந்த புதிதில் கமல் ஹாசன் பெரிய நடிகர். அவர் அப்போது எவ்வளவு பெரிய நடிகர் என்பது இந்த தலைமுறைக்கு தெரியாது. அவர் தற்போதை விட அப்போது பெரிய நடிகராக இருந்தார். எனது குரு பாலச்சந்திரின் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தேன்.

அதன் பிறகு நான் நடித்த 16 வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, ஆடு புலி ஆட்டம், அவள் அப்படித் தான் ஆகியவை ஹிட் படங்கள். அப்போது கமல் மட்டும் ரஜினியை எடுக்காதீர்கள் என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தார் என்றால் என்னை யாருமே அந்த படங்களில் நடிக்க வைத்திருக்க மாட்டார்கள். கமல் பரிந்துரையின் பேரில் தான் என்னை இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் எடுத்தார்கள். நான் பெரிய நடிகனானதும் ஒரு நாள் கமல் என்னை அழைத்து பேசினார்.

ரஜினி நீங்கள் தனியாக சிங்கிள் ஹீரோவாக நடித்தால் தான் உங்களுக்கு எதிர்காலம். இல்லை என்றால் சினிமா உங்களைப் பயன்படுத்திக் கொள்ளும். நீங்கள் வளரவே முடியாது என்றார். அவர் சொன்னதைக் கேட்டு நான் தனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து பெரிய ஆளாக ஆனேன்.

மறுபடியும் ஒரு நாள் கமல் அழைத்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு இடையே பகை கிடையாது. ஆனால் சினிமா உலகம் அவர்களை பிரித்து வைத்துவிட்டது. சினிமா உலகம் அவர்களைப் பிரித்ததால் அவர்களின் ரசிகர்களும் பிரிந்தார்கள். அந்த நிலை நமக்கும் வந்துவிடக் கூடாது. நான் பணியாற்றும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுடன் நீங்களும் பணியாற்ற வேண்டும் என்றார். அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

கமல் போன்ற ஜாம்பவான் இருக்கும் கோலிவுட்டில் நான் எப்படி பெரிய நடிகன் ஆனேன் என்று மம்மூட்டி, மோகன் லால், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆச்சரியப்பட்டனர். காரணம் ரொம்ப சிம்பிள். கமல் ஹாசனின் நடிப்பைப் பார்த்து வளர்ந்த நடிகன் நான். கமல் அருகில் இருக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

‘அவர்கள்’ பட ஷூட்டிங்கில் நான் வெளியே உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பாலச்சந்தருக்கு கோபம் வந்துவிட்டது. என்னை அழைத்து என்ன தம்மடிக்க போயிட்டீங்களா, கமல் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர் எப்படி நடிக்கிறார் என்பதை கவனியுங்கள், அப்போது தான் உங்கள் நடிப்புத் திறமை கூடும் என்றார். அதில் இருந்து கமல் நடித்தால் நான் எங்கேயும் போகாமல் அங்கேயே உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன் என்றார்.