ஆண் குழந்தைக்கு அப்பாவானார் இசையமைப்பாளர் ஜிப்ரான்

சென்னை: இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளால் அவர் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.

'வாகை சூடவா' படத்தில் 'சர சர சார காத்து' என்ற பாடல் மூலம் பரிச்சயம் ஆன இவர், உலக நாயகன் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் ஆகிய மூன்று படங்களிலும் இசையமைத்துள்ளார். இந்த மூன்று படங்களுமே ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் இசையமைப்பாளர் ஜிப்ரான்

கமலின் மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ளதன் மூலம் தென்னிந்தியாவின் முதல்தர இசை அமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் ஜிப்ரான் இசையில் வெளிவந்த 'ரன் ராஜா ரன்' படத்தை தொடர்ந்து தெலுங்கில் அவருக்கு நல்ல பெயர் ஈட்டியதோடு, பல்வேறு பெரிய படங்களுக்கும் இசை அமைக்க வாய்ப்பு வருகிறதாம்.

இதற்கெல்லாம் மகுடம் சூடியதை போல் அவருக்கு மேலும் ஒரு நற்செய்தி. நேற்றிரவு அவர் தந்தை ஸ்தானத்துக்கு உயர்ந்தார். சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்றிரவு அவர் மனைவி ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

'இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஒரு தந்தை என்ற ஸ்தானத்துக்கு உயர்வது எனக்கு மிக பெருமை. தாயும் சேயும் இருவருமே நலம் என்று செய்தியாளர்களிடம் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜிப்ரான்.

இந்த தருணத்தில் 'உத்தம வில்லன்' படத்துக்காக பல்கேரியாவில் சிம்போனி இசை குழுவுடன் பாடல் பதிவு செய்ததையும், அதன் தொடர்ச்சியாக சர்வதேச பேராமவுண்ட் ஸ்டுடியோ அரங்கில் புகழ் பெற்ற ஒலிப்பதிவுக் கூடத்தில் இசைகோர்ப்பு பணியை செய்தேன் என்றும் கூறியுள்ளார் ஜிப்ரான்.

 

சாஹசம் படத்துக்காக பின்னணி பாடிய சங்கர் மகாதேவன்!

பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சாஹசம்' படத்தில், முன்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனும் ஒரு பாடல் பாடினார்.

இப்படத்தை அருண்ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். தமன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பாடல்கள் பாடியுள்ளனர்.

சாஹசம் படத்துக்காக பின்னணி பாடிய சங்கர் மகாதேவன்!

ஏற்கெனவே, அனிருத், நடிகை லஷ்மி மேனன், ஆண்ட்ரியா, இந்தியாவின் சிறந்த பாடகர்களான மோஹித் சவ்ஹான், யோ யோ ஹனிசிங், அர்ஜித் சிங் ஆகியோர் தலா ஒரு பாடல் பாடியுள்ளனர்.

இந் நிலையில், இசையமைப்பாளரும், முன்னணி பாடகருமான சங்கர் மகாதேவனும் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல் நேற்று மும்பையில் பதிவானது. பெண்களை கவரும் வண்ணம் பாடலாசிரியர் கபிலன் எழுதிய இந்த பாடலை ஏற்கெனவே ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.

சாஹசம் படத்துக்காக பின்னணி பாடிய சங்கர் மகாதேவன்!

இப்போது பிரசாந்த் பாடும் வரிகளை ஷங்கர் மகாதேவன் பாடியது சிறப்பாக வந்துள்ளது என தயாரிப்பாளரும் இயக்குனருமான தியாகராஜன் கூறியுள்ளார். மும்பையில் சங்கர் மகாதேவன் பாடல் பதிவாகும்போது உடன் இருந்த பிரசாந்த் உற்சாக மிகுதியில் ரிக்கார்டிங் தியேட்டரிலேயே மகிழ்ச்சியோடு சங்கர் மகாதேவனை கட்டித் தழுவி பாராட்டினாராம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சாஹசம்' படத்தின் பாடல்களை கேட்பதற்கு ஒட்டுமொத்த இசை பிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

 

பிசாசு விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5


நடிப்பு: நாகா, ப்ரயாகா, ராதாரவி

இசை: அரோல் கொரோலி

தயாரிப்பு: பாலா

எழுத்து - இயக்கம்: மிஷ்கின்

ஒரு சாலை விபத்தில் அழகிய இளம்பெண் ப்ரயாகா அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிக்க, அந்தப் பக்கமாக வரும் நாகா உள்ளிட்ட மூவர் ஒரு ஆட்டோக்காரர் உதவியுடன் அவளை மருத்துவனையில் சேர்க்கின்றனர். அவர்களில் நாகாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள் ப்ரயாகா. மருத்துவமனைக்குப் போன சில நிமிடங்களில் அவன் கையை இன்னும் இறுகப் பற்றிய நிலையில், 'ப்பா..' என்ற ஒற்றைக் குரலோடு அவள் உயிர் அடங்குகிறது.

பிசாசு விமர்சனம்

ப்ரயாகாவின் தந்தை ராதாரவியிடம் உடலை ஒப்படைத்துவிட்டு மனசு முழுக்க பாரமாய், அவளின் ஒற்றைச் செருப்பை நினைவாக எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான் நாகா. கவலையைப் போக்க மது அருந்த முடிவு செய்து பாட்டிலை எடுக்கிறான். முதலில் ஓபனர் காணாமல் போகிறது.. அடுத்து பாட்டில்கள் தாமாக உடைந்துவிடுகின்றன. தன் வீட்டில் அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறான் நாகா. அது இறந்துபோன ப்ரயாகாவின் ஆவிதான் என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் தெரிந்து கொள்கிறான்.

அடுத்து அந்த பிசாசை விரட்டும் முயற்சிகளில் இறங்குகிறான். விரட்டினானா? ப்ரயாகா பிசாசாகக் காரணமானவனைக் கண்டுபிடித்தானா? என்பதெல்லாம் திரையில் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள். படம் நூறு சதவீதம் பிசாசு சம்பந்தப்பட்டது என்பதால், பிசாசின் உருவம், நடமாட்டம் போன்றவற்றில் லாஜிக் பார்க்க முடியாது. பிசாசைப் படைப்பதில் அவரவருக்கு ஒரு பாணி!

ஆனால் படம் முழுக்க மிஷ்கினுக்கே சொந்தமான க்ளீஷேக்கள் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. முன்பக்க முடி பாதி முகம் மறைத்தபடி, ஒருவித சைக்கோத்தன்மை யுடன் ஹீரோ, சற்றும் இயல்பில்லாத பாத்திரங்கள், சண்டைக்காட்சி, காமிரா கோணங்களை, பழகிய மனநிலையுடன் கடந்து போக வேண்டியிருக்கிறது.

காரைவிட்டு இறங்கி மாடிப்படிகளேறி, கதவை சாவி போட்டுத் திறந்து, விளக்கின் பொத்தான்களை அழுத்தி, உடை களைந்து, குளித்து, இருக்கைக்கு வரும் வரை அந்தக் காட்சியை அசாதாரண நீளத்துடன் காட்டுவது என்ன வகை காட்சியமைப்போ... இதுபோல பல காட்சிகளில் நீ...ண்ட விவரணைகள் ஆயாசம் தருகின்றன.

பிசாசு விமர்சனம்

ஆனால்... மிஷ்கின் எடுத்திருக்கும் சில காட்சிகளில் மனசு நெகிழ்ந்து கண்ணீராய் வழிகிறது. அந்த அன்பும், பரிவும், மனிதாபிமானமும்தான் இந்த வாழ்க்கையை நகர்த்தும் பெரும் சக்தி.

ஆரம்பக் காட்சியில் மருத்துவமனை நடையில் தூரத்தில் தெரியும் ராதாரவி, 'அய்யோ மகளே.. பவானி, என் சாமி..' என கதற, உள்ளுக்குள் நாம் உடைந்து போகிறோம். பெரிய நுட்பமெல்லாம் அந்தக் காட்சிக்குத் தேவைப்படவில்லை. அடிநாதமாய் ஓடும் அன்பின் வெளிப்பாட்டைத் தவிர..

அதேபோல, தன் மகள் பேயாய் உலவும் வீட்டுக்கு வரும் ராதாரவி, மகளின் பிசாசு ரூபம் பார்த்து கதறியழ, மேலிருந்து மகளின் கரங்கள் இறங்கி வந்து அவர் தலையையும் முகத்தையும் தடவிக் கொடுக்க... பெருங்குரலெடுத்து 'என் மகளே.. தெய்வமே.. வீட்டுக்கு வந்துடும்மா.. அடுத்தவங்களுக்கு தொந்தரவு தரலாமா?' என்றெல்லாம் அவர் கதற.. அங்கே கலங்காத கண்கள் மனிதருடையவையாக இருக்காது. அத்தனை நெகிழ்ச்சி.

ராதாரவி நடிப்பில் புதிய பரிமாணம் இது. அலட்டிக் கொள்ளாமல் கலங்கடித்திருக்கிறார்.

பிசாசு விமர்சனம்

ஹீரோவாக வரும் நாகாவின் முகத்தை கடைசி வரை சரியாகப் பார்க்க முடியாதபடி முடி மறைக்கிறது. அதில் ஏதாவது குறியீடு வைத்திருக்கிறாரா மிஷ்கின் என்பது தெரியவில்லை.

ப்ரயாகாவுக்கு மிக அழகான முகம். அந்த கண்களும் உதடுகளும் ஏதோ சொல்ல வருவதைப் போன்ற தோற்றம். கொஞ்சமே வந்தாலும் நிறைக்கிறார் மனசை. மற்றெல்லாரும் சிறுசிறு வேடங்களில் வருகிறார்கள். நிறைவாய் செய்திருக்கிறார்கள்.

வேறு பிரதான பாத்திரங்களே படத்தில் இல்லை. ஆனாலும் கடைசி காட்சி வரை ஒரு எதிர்ப்பார்ப்புடன் படத்தை நகர்த்திச் செல்வதில் வெற்றி கண்டுள்ளார் இயக்குநர்.

அந்த 20 நிமிட க்ளாமாக்ஸ் காட்சி எல்லோருக்கும் புரிய வேண்டும். ஆட்டோ ட்ரைவருக்கு நிறக்குருடு என்பதை இன்னும் சற்று நேரடியாகச் சொல்லியிருக்கலாம்.

பேயை விரட்ட வரும் ஆவி அமலாவின் டுபாக்கூர்தனங்களைக் காட்சிப்படுத்தியிருப்பதில் மிஷ்கின் வெளிப்படுத்தியிருக்கும் 'சர்காஸம்' புன்னகைக்க வைக்கிறது. எடுத்தது பேய்ப் படம் என்றாலும், தன்னால் முடிந்த ஒரு பகுத்தறிவுப் பிரச்சாரத்தை வைத்திருக்கிறார்.

பிசாசு விமர்சனம்

ரவி ராயின் கேமராவும், அரோல் கொரோலியின் இசையும் படத்தின் பெரும் பலம். தேவையான காட்சிகளில் மட்டும் இசை. மற்ற நேரங்களில் மவுனம். மிக அழகாகச் செய்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் அந்த ஒற்றைப் பாடலில், வரிகளை விட வயலின் இசை மனதைப் பிசைகிறது. வெல்டன்!

கமர்ஷியலாக வெற்றியைப் பார்த்தாக வேண்டும்... வேறு வழியில்லை, இருக்கிற பேய் சீசனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்து மிஷ்கின் தந்துள்ள படம் இந்த பிசாசு.

பார்ப்பவரை நடுங்க வைக்கும், மிரள வைக்கும் பிசாசல்ல இது... பேரன்பும் பெரும் கருணையும் கொண்ட பிசாசு!

Mysskin's Pisasu is definitely not his best, but a watchable movie for its nice content.

 

இந்தியில் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் லிங்கா!

ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் வரும் டிசம்பர் 26-ம் தேதி இந்தியில் உலகெங்கும் வெளியாகிறது. வட இந்தியாவில் அதிக அரங்குகளில் வெளியிட ஈராஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடித்த படம் லிங்கா. கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்தப் படம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இந்தியில் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் லிங்கா!

படத்தின் இந்திப் பதிப்பை அதே தேதியில் வெளியிடப் போவதாகக் கூறியவர்கள், திடீரென நிறுத்திவிட்டனர்.

இப்போது வரும் டிசம்பர் 26-ம் தேதி இந்திப் பதிப்பை உலகெங்கும் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கில் இரண்டே முக்கால் மணி நேரமாக உள்ள இந்தப் படம், இந்தியில் இரண்டரை மணி நேரப் படமாக வெளியிடப்படுகிறது. மேலும் சில காட்சிகள் இதில் குறைக்கப்பட உள்ளன.

 

லிங்காவுக்குப் பிறகு சோனாக்ஷிக்கு குவியும் பாராட்டுகள்.. வாய்ப்புகள்!

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ல சோனாக்ஷி சின்ஹாவுக்கு பாராட்டுரகளும் வாய்ப்புகளும் குவிகின்றன.

புதிய தமிழ்ப் படங்களில் நடிக்க அவருக்கு பெரிய இயக்குநர்களிடமிருந்து அழைப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக அவர் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

லிங்காவுக்குப் பிறகு சோனாக்ஷிக்கு குவியும் பாராட்டுகள்.. வாய்ப்புகள்!

லிங்காவில் ராஜா லிங்கேஸ்வரன் பாத்திரத்தில் வரும் ரஜினியின் ஜோடி சோனாக்ஷி. இந்திப் படங்களில் தாராள கவர்ச்சியுடன் நடிக்கும் சோனாக்ஷிக்கு இந்தப் படத்தில் பழங்கால தமிழ்ப் பெண்களைப் போல, ரவிக்கையில்லாமல் புடவை கட்டி நடிக்க வேண்டிய வேடம்.

அவரும் சிறப்பாக நடித்திருந்தார். அனுஷ்காவை விட சோனாக்ஷிக்கு ரசிகர்களிடமிருந்து ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்தன.

இப்போது அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. தனது அடுத்த படமும் லிங்கா மாதிரி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதால், கதைகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறார் சோனாக்ஷி.