ஈழத் தமிழர்களுக்காக போராடும் மாணவர்களுக்கு செவ்வணக்கம்: சத்யராஜ்- மணிவண்ணன்

Sathyaraj Manivannan S Red Salute To

சென்னை: ஈழத்து உறவுகளின் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டுத்தர பசியையே ஆயுதமாக்கிப் போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவச் செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என்று நடிகர் சத்தியராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இன்று அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

குருதிச் சேற்றில் தங்கள் உறவுகளையும், வாழ்வையும், உரிமைகளையும் புதையக் கொடுத்து விட்டு, முள்வேலிக் கம்பிகளுக்குள் பசித்த வயிரோடு பரிதவித்து நிற்கும் நமது, ஈழத்து உறவுகளின் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டுத்தர பசியையே ஆயுதமாக்கிப் போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவச் செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

சுயநலமும், அரசியலும் கலக்காத சமூகத்துக்கான சமூக மனிதர்களின் தூய்மையான போராட்டமாக மாணவர்களின் போராட்டம் அமைந்திருக்கிறது. ஒன்றிணைந்த மாணவர் சக்தி பெரும் வெற்றிகளை குவித்திருக்கிறது என்பதே இதுவரை உலக வரலாறு.

அதற்கு தமிழகமும் ஒரு சான்றாக விளங்குகிறது. இந்த மாணவர்களின் பட்டினிப் போராட்டமும், ஈழத்தில் நடந்தது போர் குற்றமல்ல இனப்படு கொலை என்ற உண்மையான உன்னதமாக குரலை ஓங்கி ஒலிக்கிறது. இந்தக் குரல் உலகத்தின் செவிப் பறைகளைக் கிழிக்கும்.

கொடுங்கோலன் ராஜபக்சேவை கூண்டில் நிறுத்தும் எம் ஈழ உறவுகளுக்கு நீதி பெற்றுத் தரும் என்பது தின்னம். உள்நோக்கமற்ற அறம் நிறைந்த எமது மாணவர்களின் இந்த தூய்மையான போராட்டத்துக்கு எமது செவ்வணக்கம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

மகளுக்கு 'உமையாள்' என்று பெயர் வைத்த கார்த்தி

Karthi Names His Daughter Umayaal

சென்னை: கார்த்தி தனது மகளுக்கு தூய தமிழ் பெயரும், கடவுளின் பெயருமான உமையாள் என்ற பெயரை வைத்துள்ளார்.

கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ரஞ்சனி. குழந்தைக்கு ஸ்டைலாக பெயர் வைக்கப் போகிறார்கள் என்று பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் கார்த்தி-ரஞ்சனி ஜோடி தங்கள் மகளுக்கு தூய தமிழ் பெயரும், கடவுளின் பெயருமான உமையாள் என்ற பெயரை வைத்துள்ளனர்.

இந்த காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஸ்டைலான பெயர்களை வைக்கவே பெற்றோர் விரும்புகின்றனர். அப்படி இருக்கையில் கார்த்தி தனது மகளுக்கு உமையாள் என்று பெயர் வைத்துள்ளார்.

அவரது அண்ணன் சூர்யா தனது மகளுக்கு தியா என்றும், மகனுக்கு தேவ் என்றும் பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது - டைரக்டர் லிங்குசாமி

We Expected The Award Directer Lingusamy

தியேட்டர்களில் எழுந்து நின்று ரசிகர்கள் கைதட்டியபோதே விருது உறுதியாகி விட்டது. இப்போது தேசிய விருது கிடைத்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது என டைரக்டர் லிங்குசாமி கூறியுள்ளார்.

டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில், அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்து, பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்த படம் 'வழக்கு எண் 18/9'. இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது கிடைத்து இருக்கிறது.

இதுபற்றி டைரக்டர் லிங்குசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘வழக்கு எண் 18/9' படத்தை பார்த்து விட்டு, படம் முடிந்ததும் தியேட்டர்களில் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். அப்போதே அந்த படத்துக்கு விருது உறுதியாகிவிட்டது. பத்திரிகைகள் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்த பொதுமக்களின் பாராட்டுகள், மேலும் எனக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தின.

ஏற்கனவே இந்த படத்துக்கு, தமிழ்நாட்டில் நடந்த சர்வதேச படவிழாவில் விருது கிடைத்தது. பிரான்சு திரைப்பட விழாவிலும் விருது கிடைத்தது. இதற்கெல்லாம் மேலாக, ‘வழக்கு எண் 18/9' படத்துக்கு இப்போது தேசிய விருது கிடைத்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்துக்கு முதலில் ஆதரவு தந்த ரசிகர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

‘வழக்கு எண் 18/9' படத்தின் டைரக்டர் பாலாஜி சக்திவேல், என் நண்பர். அவர் மூலம் இந்த படத்துக்கு விருது கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறினார்.

டைரக்டர் பாலாஜி சக்திவேல் கூறும்போது, ஒரு தரமான படத்துக்கு கிடைத்த மிக சிறந்த விருதாக இதை கருதுகிறேன். தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய நண்பர்களின் சந்தோஷத்தை என் சந்தோஷமாக நினைக்கிறேன். ‘வழக்கு எண்' படத்துக்கான ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுகளை அங்கீகரித்த மத்திய அரசுக்கு என் நன்றி. இந்த விருது எனக்கு இன்னும் நல்ல சமூக படைப்புகளை கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்து இருக்கிறது' என்று கூறினார்.

‘வழக்கு எண் 18/9' படத்துக்காக, மேக்கப்மேனுக்கான தேசிய விருது பெறும் ராஜா கூறும்போது, நான் எதிர்பாராத விருது இது. இந்த விருது கிடைப்பதற்கு காரணமான தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ், டைரக்டர் பாலாஜி சக்திவேல் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் ' என்றார்.

 

2 வயசுல எங்கப்பா எனக்கு பிகினி வாங்கி கொடுத்தார்: பிபாஷா பாசு

I Got My First Bikini When I Was Two   

மும்பை: தனக்கு 2 வயது இருக்கையில் முதன்முதலாக பிகினி அணிந்ததாக பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிகினி காட்சிகள் சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் பிகினி காட்சியில் நடிக்க நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் தூம் 2, பிளேயர்ஸ் படங்களில் பிகினியில் வந்த பிபாஷா பாசு கூறுகையில்,

எனக்கு 2 வயது இருக்கையில் என் தந்தை ஆஸ்திரேலியாவில் இருந்து பிகினி வாங்கி வந்து கொடுத்தார். அந்த பிகினி அணிந்து எடுத்த போட்டோவில் நான் மிகவும் அழகாக இருப்பேன். அப்பொழுதில் இருந்தே எனக்கு சூரியன் மற்றும் கடற்கரை என்றால் கொள்ளைப் பிரியம். திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் பிகினி அணிவது எனக்கு சவுகரியமானது என்றார்.

பிகினியில் எந்த நடிகை நன்றாக இருப்பார் என்று கேட்டதற்கு, ஜீனத் அமன் என்றார் பிப்ஸ். தற்போது அனைத்து பெண்களுமே பிட்டாக, ஹாட்டாக உள்ளனர். அதனால் யார் வேண்டும் ஆனாலும் பிகினியில் அழகாக இருக்கலாம் என்றார்.

 

’செழியனுக்கும் இல்லையா?’ - அதிர்ச்சியில் பாலா

Chezhian Should Be Awarded Direct Bala

சென்னை: தனது பரதேசிக்கு எதிர் பார்க்கப்பட்ட விருதுகள் கிடைக்கவில்லையே என்ற அதிர்ச்சி டைரக்டர் பாலாவுக்கும் இருக்கிறதாம். ஆனால் மிகவும் மனதுடைந்தது அதர்வாவும், செழியனும் தானாம்.

பாலா படத்தில் நடித்தால், நிச்சயம் விருது இருக்கும் என்பது நடிகர்களின் கருத்து. இதை ஏற்கனவே, சூர்யாவும், விக்ரமும், ஆர்யாவும் நிரூபித்திருக்கிறார்கள். அதர்வாவுக்கும் விருது கனவு இருந்தது.

ஆனால், தமிழைப் பொறுத்தவரை சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்துக்கான விருது பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த ஒப்பனைக்கான விருதையும் இப்படம் தட்டிச் சென்றுள்ளது.விஸ்வரூபம் சிறந்த நடனம், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என்ற இரு பிரிவுகளில் விருது பெற்றுள்ளது.

சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு என அனைத்து வித விருதுகளையும் வழங்கிட உச்சபட்ச தகுதிகள் இருந்தும் ஏனோ, தேசிய விருதுகள் பரதேசிக்குக் கிடைக்காமல் போய்விட்டன.

சிறந்த உடை அலங்காரம் என்கிற பிரிவில் மட்டுமே பரதேசிக்கு விருது கிடைத்திருக்கிறது. இயக்கம், ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு என நான்கு பிரிவுகளில் பரதேசிக்கு விருதுகள் எதிர்பார்க்கப்பட்டன.

பாலாவைக் காட்டிலும் விருது அறிவிப்பை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த இருவர் அதர்வாவும், ஒளிப்பதிவாளர் செழியனும்தான். விருது அறிவிப்பில் தனது பெயர் இல்லை எனத் தெரிந்ததும் கதறித் அழுதிருக்கிறார் அதர்வா. செழியனுக்கும் விருது அறிவிப்பில் சொல்ல முடியாத அளவுக்கு வருத்தமாம்.

தமிழ்ப் படங்கள் விருது விவகாரங்களில் புறக்கணிக்கப்படுவது தொடர்ந்து நிகழும் ஒன்று தான். ஆனாலும், அனைத்து விதங்களிலும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட பரதேசி படம் பெரிய அளவில் விருதுகளை வாங்காதது அனுராக் காஸ்யப் உள்ளிட்ட இந்தி இயக்குனர்களையே அதிர வைத்திருக்கிறது.

சரி, விருது அறிவிப்பின்போது பாலாவின் மனநிலை எப்படி இருந்ததாம்...?

''பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை பரதேசி வாங்கும்னு பாலா சார் நம்பிக்கையோடு இருந்தார். விருது அறிவிப்பில் பரதேசிக்கு முக்கியத்துவம் இல்லைன்னு தெரிஞ்ச உடனே, 'செழியனுக்காவது கிடைச்சிருக்கணுமே...' சொன்னார். அவ்வளவுதான்... அதற்குமேல விருது அறிவிப்பில் பாலா சார் பெரிசா ரியாக்ட் பண்ணிக்கலை." என்கிறார் உதவி இயக்குனர் ஒருவர்.

 

சமந்தாவை திருமணம் செய்யும் திட்டம் எதுவுமில்லை… நடிகர் சித்தார்த்

No Plans Wed Samantha Says Siddharth

சென்னை: நடிகை சமந்தாவை தாம் திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல்களுக்கு நடிகர் சித்தார்த் மறுப்பு தெரிவித்துள்ளார். சமந்தாவை திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் பற்றி பல கிசுகிசுக்கள் உலா வந்துள்ளன. இப்போதைய கிசுகிசு நடிகை சமந்தாவுடன் சித்தார்த்துக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதுதான். ‌

கடந்த சனிக்கிழமையன்று சித்தார்த் மற்றும் சமந்தா ஆகிய இருவரும், அவர்களின் குடும்பமும் காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து, புதிதாக திருமணமானவர்கள் நடத்தும் ராகு - கேது பூஜைகளையும் அவர்கள் நடத்தியதால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மேலும், பூஜை நேரத்தில் சித்தார்த்தின் தந்தை மயங்கி விழுந்ததாகவும் கூறப்பட்டது.

இது குறித்து பேசிய அவர் , தனக்கும் சமந்தாவுக்கும் இடையே திருமணம் நடந்ததாக கூறுவது பொறுப்பற்றதனம் என்றும்‌, அது நேர்மையான செய்தி இல்லை என்றும் மறுப்புத் தெரித்துள்ளார். மேலும், தன்னுடைய திருமணம் முறைப்படி நடக்கும் எனவும் சித்தார்த்‌ உறுதியாக கூறி திருமண வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் சித்தார்த்.

 

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சின்னத்திரை தயாரிப்பாளர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்பு

Tv Producers Join Directors Fast

சென்னை: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கமும் பங்கேற்றது.

முன்னதாக இது தொடர்பாக தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.ராதிகா சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, அவர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு நிச்சயமாக ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

மனிதாபிமானத்தோடு நடைபெற இருக்கும் இந்த போராட்டத்தில், தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும் கலந்து கொண்டுள்ளது. இதனையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு வேலைகளை நிறுத்தி வைத்து, உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ஈழத்தமிழர்களின் இன்னல் நீங்கிட, அவர்களின் கண்ணீரை துடைத்திட ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்று அனைத்து சின்னத்திரை தயாரிப்பாளர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ராதிகா சரத்குமார் கூறியிருக்கிறார்.