சென்னை: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு ‘மர்ம மனிதன்' எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘ஐ' படத்தைத் தொடர்ந்து விக்ரம் தற்போது விஜய் மில்டனின் ‘பத்து எண்றதுக்குள்ள' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் பசுபதி மற்றும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இப்படத்தைத் தொடர்ந்து, ‘அரிமா நம்பி' இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படமும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளார் விக்ரம். கௌதம் மேனன் படம் ஜூனில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் மாதம் ஆனந்த் சங்கரின் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.
இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் பிரியா ஆனந்த் என இரண்டு நாயகிகள்.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தத் தலைப்பை வேறு யாரும் பதிவு செய்து வைக்காவிட்டால், இந்தத் தலைப்பையே இறுதியாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
Post a Comment