சென்னை: கமலின் விஸ்வரூபம் உள்ளிட்ட எந்தப் படங்களுக்கும் தமிழகத்தில் தியேட்டர் தரக்கூடாது. மீறி யாராவது கொடுத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்க வரும் ஜனவரி 3-ம் தேதி அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.
கமல் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்' படம் வருகிற 11-ந்தேதி ரிலீசாகிறது. ஒரு நாள் முன்னதாக 10-ந்தேதி இரவு 9.30 மணிக்கு டி.டி.எச்.கள் மூலமாக டெலிவிஷன் களிலும் இப்படம் ஒளிபரப்பாகிறது. ரூ 1000 முன்பணமாகக் கட்டி இந்தப் படத்தை டிடிஎச் வைத்திருப்போர் பார்க்கலாம்.
ஆனால் டி.டி.எச்.சில் படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். டி.டி.எச்.களில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். இனி கமலின் பழைய, புதிய படங்களைக் கூட திரையிட விட மாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் கமல் டி.டி.எச்.களில் படத்தை ஒளிபரப்புவதில் தீவிரமாக உள்ளார். இன்று இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமாகக் கேட்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் விஸ்வரூபம் படத்தை திரையிட 390 தியேட்டர்கள் முன்வந்துள்ளன. படம் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரும் என்று கமல் கூறியிருந்தார்.
இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அமைப்பு மிகவும் கோபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து தியேட்டர் அதிபர்கள் மீண்டும் அவசர கூட்டத்தை கூட்டுகிறார்கள். வருகிற 3-ந்தேதி காலை 11 மணிக்கு திருச்சியில் இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
390 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்படும் என்று கமல் அறிவித்துள்ளதால் அப்படிப்பட்ட தியேட்டர்கள் எவை எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
விஸ்வரூபம் படத்தை திரையிடும் தியேட்டர்களில் வெளியாகும் இதர படங்களை மற்ற தியேட்டர்களில் திரையிடுவதில்லை என்றும் இந்தக் கூட்டத்தில் அதிரடி முடிவு மேற்கொள்ளப்பட உள்ளது.
Post a Comment