சென்னை:கானக் குரல் வேந்தன் மலேசியா வாசுதேவன் அவர்களது நினைவு தினம் இன்று.அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு உங்களுக்காக...
10000க்குஅதிகமான திரைப்பாடல்களைப் பாடிய அருமையான பாடகரும், குணச்சித்திர நடிகருமான மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
1944ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து மலேசியாவில் வசித்து வந்த சத்து நாயர்-அம்மாளு தம்பதிக்கு 8ஆவது மகனாய் பிறந்தவர் இவர்.
மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கி வந்தார்.
மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு, சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார்.
ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என்று அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.
அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.
அதன் பிறகு பல படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள அவர் ‘சிலந்தி வலை' என்ற தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்துள்ளார்.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார்.அவருடைய மகன் யுகேந்திரன் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும் உள்ளார். அவரது மகள் பிரசாந்தினியும் இப்போது பின்னணி பாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment