ரீங்காரம்... இது விரைவில் வரவிருக்கும் ஒரு புதிய படத்தின் தலைப்பு. வட சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வரும் இன்னுமொரு படம் இது.
இப்படத்தை சமுத்திரகனி உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த சிவகார்த்திக் என்பவர் இயக்குகிறார். இது ஒருநாளில் நடக்கும் கதை. கதையின் விறுவிறுப்புக்கும், வேகத்துக்கும் வேகத்தடை கொடுக்கவேண்டாம் என்ற எண்ணத்தில் படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டுமே வைத்துள்ளாராம் சிவகார்த்திக்.
-பாலா என்ற புதுமுகம்தான் நாயகன். கங்காரு படத்தில் நடித்த பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், கலாபவன் மணி, ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜெயபாலன் இப்படத்தில் இருட்டில் வாழும் பூதமாக நடிக்கிறாராம். விஜய் டிவி புகழ் சிங்கப்பூர் தீபன் இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘இது புதிய கதை இல்லை. எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் கோணங்களில் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறோம்.
மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை. இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து, பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன். இதை ஓர் அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனாலும் இதை புதுசு என்று சொல்லமாட்டேன் என்கிறார்.
Post a Comment