சென்னை: 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் பிரபல இந்தி நடிகை வஹீதா ரஹ்மான்.
விஸ்வரூபம் 2 படத்தில் கமல் அம்மாவாக அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கல்பட்டு பெண்
வஹீதா ரஹ்மான் ஒரு தமிழ் முஸ்லிம் பெண்மணி என்பது பலருக்குத் தெரியாது. செங்கல்பட்டில் பிறந்த இவரது தாய் மொழி தமிழ். மதம் சார்ந்த முறையில் உருது, இந்தியைக் கற்றுக் கொண்டவர். பின்னர் ஹைதராபாத் போய், குருதத் பார்வையில் பட்டு ஹிந்தியில் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்றவர்.
தமிழில்..
இந்தியில் கொடிகட்டிப் பறந்தாலும், வஹீதா ரஹ்மான் முதலில் நடித்தது இரு தமிழ்ப் படங்களில்தான். ஒன்று எம்ஜிஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம்.
அடுத்து ஜெமினி கணேசன் நடித்த காலம் மாறிப்போச்சு. இரண்டுமே சூப்பர் ஹிட். இவர் அந்தப் படங்களில் நாயகி இல்லை என்றாலும், ராசியான நடிகை என்ற பெயர் கிடைக்க, தொடர்ந்து நான்கு தமிழ்ப் படங்களில் நடித்தார்.
ஹிந்தியில்...
பின்னர் இந்தியில் சிஐடி படத்தில் தன் கேரியரைத் தொடங்கினார். ஏராளமான வெற்றிப் பங்களில் நடித்தார். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த வஹீதா, கணவர் இறந்த பிறகு 2002-லிருந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
55 ஆண்டுகளுக்குப் பிறகு
தமிழில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வஹீதா ரஹ்மான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படம் விஸ்வரூபம் 2.
கமலுக்கு அம்மாவாக...
இந்தப் படத்தில் கமல்ஹாஸனுக்கு அம்மாவாக நடிக்கிறாராம் வஹீதா. இந்தியிலும் விஸ்வரூபம் 2 வெளியாகிறது. வஹீதா ரஹ்மான் நடிப்பது இந்தி ஏரியாக்களில் படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பை உருவாக்கும் என்பதால் வஹீதாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கமல்.
Post a Comment