சென்னை: மான் கராத்தே படத்தில் குத்துச்சண்டைப் போட்டியை அவதூறாகச் சித்தரித்ததாகக் கூறி தொடரப்பட்டுள்ள வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது, தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி வருகின்றேன். பல கட்டுப்பாடுகள், விதிமுறைகள், மரபுகளைப் பின்பற்றித்தான் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் வெளியான 'மான் கராத்தே' என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அதில், இந்த கவுரவமிக்க குத்துச்சண்டைப் போட்டியை கேலி செய்யும் விதமாக படமாக்கியுள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனும், நடிகர் வம்சி கிருஷ்ணாவும் குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வருகின்றன.
அதில், இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்றால், உன் தோழியை என்னுடன் அனுப்பிவைக்க வேண்டும் என்ற வசனமும், வெற்றி பெறுவதற்காக எதிராளியிடம் கெஞ்சுவது போல காட்சியும் இடம் பெற்றுள்ளன.
அதேபோல சர்வதேச அளவில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பவர் போதை மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிகள் உள்ளன.
ஆனால், இந்தப் படத்தில் குத்துச் சண்டைப் போட்டியையே மிக மோசமாகச் சித்தரித்துள்ளனர்.
எனவே, இந்த படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ், வசனம் எழுதி இயக்கிய திருமுருகன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், வம்சி கிருஷ்ணா ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, வருகிற 30-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகயேன், திருகுமரன், வம்சி கிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment