பிரபலங்களை பின்னணி பாட வைத்தே தனி சாதனைப் படைத்து விடுவார்கள் போலிருக்கிறது பிரசாந்தும் அவர் தந்தை தியாகராஜனும்.
சாஹஸம் படத்துக்காக பின்னணி பாடியவர்கள் பற்றி அவர்கள் வெளியிடும் தகவல்கள் அப்படி.
பிரசாந்த் தற்போது ‘சாஹசம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அருண் ராஜ் வர்மா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடந்துள்ளது. ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.
தமன் இசையில் 5 பாடல்கள் இப்படத்தில் இடம் பெறுகிறது. இதில் ‘தேசி தேசி தேசி கேர்ள்...' எனத் தொடங்கும் பாடலை சிம்பு பாடியுள்ளார். ஒரு மாத காலமாக லண்டனில் இருந்த சிம்பு சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் நேராக இசையமைப்பாளர் தமன் ஸ்டுடியோவுக்கு வந்து இப்பாடலை பாடியுள்ளார்.
ஏற்கனவே பிரசாந்த் நடிப்பில் வெளியான மம்பட்டியான் படத்திற்கும் சிம்பு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இப்படத்தில் லட்சுமி மேனன், அனிருத், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், மோஹித் சவுஹான், ஹனிசிங், அர்ஜித் சிங், ஆன்ட்ரியா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
சிம்பு பாடியதோடு சாஹசம் படத்தின் அனைத்து பாடல்களின் பதிவும் முடிந்துவிட்டது. இதன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சாஹசம் படத்தில் பாடியுள்ள அனிருத், சிம்பு, மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், லஷ்மி மேனன், ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் தோன்றி சாஹசம் படத்தின் பாடல்களை நேரில் பாடவுள்ளார்கள்.
Post a Comment