சென்னை: சென்னையில் கத்தி படம் ரிலீசான தியேட்டர் ஒன்றில் டிக்கெட் வாங்குவதில் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கல்வீச்சில் அதிர்ச்சியடைந்த தியேட்டர் உரிமையாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
தீபாவளியை ஒட்டி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தயாரான கத்தி படம் நேற்று ரிலீசானது. ஏற்கனவே, கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்ததற்கு தமிழ் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். கத்தி படத்தை வெளியிடக் கூடாது என அவர்கள் போராடி வந்தனர். இதனால், கத்தி படம் ரிலீசாக இருந்த திரையரங்குகளில் பதற்றம் நிலவியது. சில தினங்களுக்கு முன்னர் கத்தி படம் ரிலீசாக இருந்த சென்னை திரையரங்குகள் இரண்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்தது.
பின்னர், கத்திப் பட போஸ்டர் உள்ளிட்டவற்றில் தங்கள் பெயர் இடம்பெயராது என லைகா அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், திட்டமிட்டபடியே நேற்று கத்தி ரிலீசானது.
இந்நிலையில், நேற்று மதியம் சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ளது லட்சுமி திரையரங்கத்தில் கத்தி படத்திற்கு டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற ரசிகர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை ஒரு அறையிலிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார், அத்திரையரங்கின் உரிமையாளர் கிருஷ்ணன் (74). அப்போது பாய்ந்து வந்த கல் ஒன்று அவரது ஜன்னல் கண்ணாடியை உடைத்தது.
இதில் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் மயங்கிக் கீழே விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்ட அவர், நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Post a Comment