ஹைதராபாத்: நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பி்விபி சினிமா நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ், தெலுங்கு படத்தில் நாகார்ஜுன்- கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். படப்பிடிப்புக்கு தேதிகளை ஒதுக்கி தருவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விலகிக்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது தொடர்பாக ஸ்ருதிஹாசனுக்கு எதிராக ஐதராபாத் 25-வது கூடுதல் தலைமை சிட்டி சிவில் கோர்ட்டில் பட நிறுவனம் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடுத்துள்ள நிறுவன படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை, புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு (ஏப்ரல் 8-ந்தேதி வரை) நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு ஜூபிளி ஹில்ஸ் போலீஸ் நிலைய அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பதால் அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
Post a Comment