தான் எடுத்த படங்களில் மிகச் சிறந்தபடம் ‘நந்தலாலா’ என்றார். தான் இயக்கிய சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகியவை மிகவும் கீழ்த்தரமான படங்கள் என்றார் இயக்குநர் மிஷ்கின். இதுபற்றி படவிழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசுகையில், நான் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படமும், ‘அஞ்சாதே’ படமும் மிக கீழ்த்தரமான படங்கள். மூன்றாம் தரமானவை.
நான் இயக்கிய மிக சிறந்த படம், ‘நந்தலாலா.’ ஆனால் அந்த படம் வெளிவர முடியவில்லை. படத்தை பார்த்தவர்கள் எல்லாம் என்னை பாராட்டினார்கள். படத்தை பார்த்தவர்கள், அழாமல் வெளியே வரமுடியாது என்றார்கள்.‘நந்தலாலா’ படத்தை இங்கு நடக்கும் சந்தையில், ஒரு பொருளாக விற்பதற்கு எடுக்கவில்லை. ஆத்மார்த்தமாக அந்த படத்தை எடுத்தேன். தமிழ் சினிமா இருக்கும் சூழலில் ஒரு நல்ல படம் எடுப்பதும், வெளியிடுவதும் சிரமமான விஷயமாக இருக்கிறது.
குத்துப்பாட்டு இல்லாமல் எடுத்தால், அதுதான் நல்ல சினிமா. குத்துப்பாட்டும், நகைச்சுவையும், சுவிட்சர்லாந்தில் 25 பெண்களுடன் கதாநாயகன்-கதாநாயகி ஆடுவதும், உச்சக்கட்ட காட்சியில் 200 பக்க வசனத்தை பேசுவதும் இல்லாமல் படம் எடுத்தால், அது நல்ல சினிமா.
குடும்பத்துடன் படம் பார்க்க போகலாமா? என்று கேட்டால், என் வீட்டில் ரஜினிகாந்த் படம் பார்க்க போகலாம் என்றுதான் சொல்வார்கள். நல்ல படம் பார்க்க போகலாம் என்றா சொல்வார்கள்?
அப்படி இருந்தும் ‘நந்தலாலா’ மாதிரி நல்ல சினிமா எடுப்பது ஏன் தெரியுமா? நல்ல படங்களை விரும்பும் வெகு சிலருக்காகத்தான். நல்ல சினிமா எடுப்பது, ஒரு தாய்மை போராட்டம் மாதிரி. எல்லா தாய்மார்களும் பிரசவத்தின்போது, ஒரு மகாராஜனை பெறவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி நினைத்துதான் நல்ல சினிமா படங்களை எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்…,” என்றார்.
Source: Dinakaran
Source: India Glitz
Post a Comment