7/18/2011 12:35:18 PM
செவன் சன் மூவி, எஸ்.எஸ்.ஏ மூவி நிறுவனங்கள் சார்பில் கே.பிரசாந்த் தயாரிக்கும் படம், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்'. ஒளிப்பதிவு, நாக கிருஷ்ணன். இசை, ஆதிஷ், பாடல்கள், நா.முத்துக்குமார். ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இதன் தொடக்க விழா சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. பிரபல நடிகை கேரக்டரில் நடிக்கும் சோனியா அகர்வால், நிருபர்களிடம் கூறியதாவது: மலையாளத்தில் ஒரு படம், தமிழில், 3 படங்கள் என மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளேன். சினிமாவில் நடிக்கும் ஹீரோயின், மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார். அதிக பணம் சம்பாதிக்கிறார். இதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்? எத்தனை சவால்களை சந்தித்து இருப்பார் என்பதை மாறுபட்ட திரைக்கதையுடன் இப்படம் சொல்கிறது. நான், பிரபல ஹீரோயின் வேடத்தில் நடிக்கிறேன். இதற்காக எந்த நடிகையையும் இன்ஸ்பிரேஷனாக நினைக்கவில்லை. அப்படி யாரையாவது மனதில் நினைத்தால், நடிக்கும்போது அவருடைய ஸ்டைல் வந்து விடும் என்பதாலேயே தவிர்த்தேன்.
ஒரு நடிகையின் வாழ்க்கையிலுள்ள எல்லா பக்கங்களையும் இப்படம் சொல்கிறது. என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களுக்கும், இப்படத்தின் கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன். ரிலீசுக்குப் பிறகு இப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும். தனிப்பட்ட எந்த நடிகையைப் பற்றியும் சொல்லும் கதை அல்ல. எனது அம்மா வேடத்தில் மலையாள நடிகை ஊர்மிளா, ஹீரோவாக புதுமுகம் நடிக்கின்றனர். இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார். ராஜ்கிருஷ்ணா கூறுகையில், 'இப்படத்தின் கதை, பழம்பெரும் நடிகை காஞ்சனாவின் கதை என்பது சரியல்ல. இப்படத்தை பார்க்கும்போது, இது அந்த நடிகையின் கதையாக இருக்குமோ? இந்த நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றும்' என்றார்.
Post a Comment