சென்னை: பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு உடை மற்றும் வீல் சேர்களை வழங்கினர் நடிகை சினேகா - பிரசன்னா தம்பதியர்.
அகில இந்திய பார்வையற்றோர் முன்னேற்ற சங்கத்தின் 32-வது ஆண்டுவிழா, சங்கத்தின் தலைவர் புலவர் ஏ.கே.அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. சாய் சமாஜ் தலைவர் கே.தங்கராஜ் முன்னிலை வகித்தார்.
விழாவில், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் டி.விஜயகுமார், மாவட்ட மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு அதிகாரி சீனிவாசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் வி.விஜயகுமார், மாற்றத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் பொருளாளர் எம்.பி.நந்தகுமார், சமூக சேவகி எம்.லதா, டபுள்யூ.ராமச்சந்திரன், என்.எப்.பி.நிர்வாகி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு, உடை, வீல் சேர், மாணவர்களுக்கு சி.டி ஆகியவற்றை, நடிகை சினேகா மற்றும் பிரசன்னா வழங்கினர்.
விழாவில், 'மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையின் நகலை வைத்து, வெளியூர் செல்லும் பஸ்களில் பயணம் செய்வதற்கு பதிலாக, பார்வையற்றவர்கள், தமிழகம் முழுவதும் இலவசமாக பயணம் செய்வதற்கு வசதியாக 'ஆல் ரூட்' பஸ் பாஸ் வழங்கவேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வருக்கு வைத்திருப்பதாக அகில இந்திய பார்வையற்றோர் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.கே.அருணாசலம் தெரிவித்தார்.
Post a Comment