கோவை: மகாசிவராத்திரி தினத்தன்று வெள்ளியங்கிரி மலையில் மாயமான திரைப்பட ஆர்ட் டைரக்டரை தேடும் பணியில் 70 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஆர்ட் டைரக்டராக உள்ளவர் வினோத் என்ற வினோ மிர்தார்த் (வயது 35). திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் சென்னை கே.கே.நகரில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.
மதுபானக்கடை உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார். மேலும் சில படங்களில் பணியாற்றி வருகிறார்.
மகா சிவராத்திரிக்காக கடந்த கோவை பூண்டி அருகே உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தார். மலை இறங்கியபோது 6-வது மலையில் பாதை மாறிவிட்டதாக தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டது. நண்பர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆதிவாசி மக்களின் உதவியுடன் மிர்தார்த்தை தேட ஆரம்பித்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. செல்போன் இணைப்பும் சுவிட்ச் ஆப் என்று தெரிவிக்கிறது.
வினோத் மிர்தார்த்தின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கோவை மாவட்ட எஸ்.பி. சுதாகரிடம் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் வினோத் மிர்தார்த்தின் நண்பர்கள், மலைவாழ் மக்கள், போலீசார் மற்றும் வனத்துறையினர் அடங்கிய 70 பேர் கொண்ட குழுவினர் மலைப்பகுதியில் வினோத் மிர்தார்த்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள எல்லைப்பகுதியான மன்னார்காடு, சோலையூர் உள்ளிட்ட பகுதியிலும் தேடுதல் பணி தொடங்கியது. இதுகுறித்து கேரள போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினோத் மிர்தார்த் மாயமாகி இன்றுடன் 7 நாள் ஆகிறது. வழிதெரியாமல் சென்ற அவர் பசியால் எங்காவது மயங்கி கிடக்கிறாரா? அல்லது வனவிலங்குகள் தாக்குதலில் காயம் அடைந்துள்ளாரா? என்று தேடி வருகிறார்கள்.
Post a Comment