சென்னை: முன்னணி இயக்குநர் சமுத்திரக் கனி குறித்து இன்று சமூக வலைத் தளங்களில் திடீர் வதந்தி கிளம்பியது.
ஆனால் அவை பொய் என்பது சிறிது நேரத்தில் அம்பலமானது. சமுத்திரக் கனி நலமுடன் உள்ளார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலா பால் நடித்த நிமிர்ந்து நில் படம் இன்று வெளியாவதாக இருந்தது.
ஆனால் நிதிப் பிரச்சினை காரணமாக இந்தப் படம் தள்ளிப் போய்விட்டது. பெரிய படம் என்பதால், இந்த தீடீர் ரத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 3 கோடி ரூபாய் நிதிப் பிரச்சினை படத்தை முடக்கிவிட்ட தகவல் இப்போது கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி குறித்து சமூக வலைத் தலங்களில் சிலர் வதந்தி பரப்பினர்.
உடனடியாக இதுகுறித்து விசாரித்தபோது, சமுத்திரக்கனி தன் அலுவலகத்தில் நண்பர்கள் சுப்பிரமணிய சிவா, கரு பழனியப்பன் போன்றவர்களுடன் படம் குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருப்பதை அவரது அலுவலகத்தினர் மற்றும் திரையுலக நண்பர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த வதந்தியால் சினிமா ஆர்வலர்கள் ஒரு கணம் ஆடிப்போய்விட்டனர். தேவையற்ற வதந்திகளைப் பரப்புமுன் ஒரு நிமிடம் பொறுமை காத்தால், நல்ல படைப்பாளிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம் அல்லவா!
Post a Comment