சென்னை: வடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி தெலுங்கு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை நிறுவன தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
"ஏ.ஜி.எஸ். எண்டெர்டைன்மென்ட் நிறுவனம், நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில், மன்னர் கிருஷ்ண தேவராயரை ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினோம். இதற்கு பதிலளித்த அந்த நிறுவனம், கிருஷ்ணதேவராயரை அவமரியாதை செய்யும் விதமாக எந்த ஒரு காட்சியும் இடம் பெறவில்லை என்று கூறியுள்ளது.
ஆனால், இதற்கு முரணான தகவலை இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள காமெடி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இந்த படத்தை தெலுங்கு மக்களின் பிரதிநிதிகளிடம் போட்டுக் காட்ட வேண்டும் என்று ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்".
-இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி, ‘இந்தhd படம் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளதால், படத்தின் கதை, வசனம் உள்ளிட்டவைகள் குறித்து என்னால் பரிசீலிக்க முடியாது. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு அனுப்பி வைக்கிறேன்' என்று உத்தர விட்டார்.
Post a Comment