விஷாலின் ஆம்பள படத்தினைத் தொடர்ந்து தனுஷின் அனேகனுக்கும் “சிக்கல்”!

|

சென்னை: தமிழ்சினிமாவில் இது கொஞ்சம் போதாத காலம்தான். விஷாலின் ஆம்பள படத்தை தொடர்ந்து தனுஷின் அனேகன் படத்துக்கும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் "அனேகன்". படம் அடுத்த மாதம் 13ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் நான்கு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று சலவைத் தொழிலாளி கதாபாத்திரம்.

இந்தப் படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் எனவே, படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் சலவைத் தொழிலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விஷாலின் ஆம்பள படத்தினைத் தொடர்ந்து தனுஷின் அனேகனுக்கும் “சிக்கல்”!

இதுதொடர்பாக மதுரை வண்டியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சாலின்மணி, கே.கே.நகர் வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் மதுரை மாநகர போலீஸ் ஆணையர் சஞ்சய் மாத்தூரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், " கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

எனவே அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும். படத்தில் இழிவு வசனங்கள் இடம்பெறச் செய்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதை பேசி நடித்த நடிகர்கள் ஜெகன், தனுஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் சஞ்சய் மாத்தூர் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

 

Post a Comment