ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு எதிரொலி... விக்ரம் படத்திலிருந்து ஆசின் தூக்கப்பட்டார்!

|

Asin Sacked From Vikram Movie   
ஈழத் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் உறவாடி வந்தவரான நடிகை ஆசின், விக்ரம் நடிக்கும், ஷங்கர் இயக்கும் படத்திலிருந்து தூக்கப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் பாணா காத்தாடி பட நாயகி சமந்தாவை புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈழத்தில் போர் முடிந்து, பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பி்ன்னர் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலரும் முண்டியடித்துக் கொண்டு இலங்கைக்கு ஓடினர். அத்தனை பேரையும் ராஜபக்சேவும் அவரது அரசும் இரு கரம் நீ்ட்டி வரவேற்று விருந்து வைத்து அனுப்பினர். சல்மான் கான் முதல் பலரும் அங்கு போய் விருந்தாடி வந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஆசின்.

சல்மானுடன் ரெடி படத்தில் நடித்த அவர் அப்பட ஷூட்டிங் இலங்கையி்ல வைக்கப்பட்டதால் அங்கு போனார். தமிழ்த் திரையுலகினர் யாரும் இலங்கைக்கு போகக் கூடாது என்று இங்குள்ள திரையுலக கூட்டமைப்பு உத்தரவிட்டபோதும் அதையும் மீறிப் போய் விட்டு வந்தார் ஆசின்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அதை ஆசின் கண்டு கொள்ளவில்லை. இடையில் விஜய் கூட தனது காவலன் படத்தில் நடிக்க வைத்தார்.

இந்த நிலையில் ஷங்கர் இயக்க, விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஆசினை நாயகியாககப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஈழ ஆதரவாளர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

ஷங்கர் வீட்டை முற்றுகையிடப் போவதாக இநது மக்கள் கட்சியும் அறிவித்தது. இதையடுத்து தற்போது ஆசினை தூக்கி விட்டதாகவும், சமந்தா நாயகியாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாணா காத்தாடி படத்தின் மூலம் நாயகியானவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

Post a Comment