சென்னை: கவிக்கோ அப்துல்ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன், டாக்டர் சிவதாணுப்பிள்ளை ஆகியோருக்கு புதியதலைமுறையின் ‘தமிழன் விருதுகள்' வழங்கப்பட்டது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தமிழன் விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், கலை, விளையாட்டு, இலக்கியம், அறிவியல், வணிகம், சமூகசேவை ஆகிய 6 பிரிவுகளில் சாதனை படைத்த தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தொழில்துறையில் முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வெள்ளையன் விருதினை பெற்றார். நம்பிக்கை நட்சத்திரமாக கண்டெய்னரை வசிப்பிடமாக மாற்றித் தொழில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த வான்மதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இலக்கியத்துறையில் கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கான விருதை தமிழ்ச்செல்வி பெற்றார்.
விளையாட்டுத்துறையில் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளைக்கு விருது வழங்கப்பட்டது. நம்பிக்கை நட்சத்திரமாக கால்பந்து வீராங்கனை ராதிகா தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
சமூகசேவையில் சாதனை படைத்த தமிழராக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகப் போராடி வரும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கான விருது ஏரிகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அருண் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது.
அறிவியல் துறையில் சாதனை படைத்த தமிழராக டாக்டர் சிவதாணு பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துறையின் நம்பிக்கை நட்சத்திர விருதை சிறிய ரக டிராக்டர்களை வடிவமைத்த ரங்கசாமி பெற்றார்.
கலைத்துறையின் சாதனைத் தமிழராக நடிகர் கமல்ஹாசன் கௌரவிக்கப்பட்டார். இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக வீதி நாடகக் கலைஞர் சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
Post a Comment