5/16/2011 10:34:56 AM
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி, ஜீரண கோளாறு காரணமாக மைலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ரஜினி. அன்று மாலையே வீடு திரும்பினார். பின்னர் கடந்த 4ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சுவாசப் பிரச்னை இருப்பதாக தெரிவித்தனர். ஆறு நாட்களாக மருத்துவமனையில் இருந்த ரஜினி, பின்னர் வீடு திரும்பினார். போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று முன்தினம் காலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் நேற்றும் வெளிவந்தன.
இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்னை காரணமாக, ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கவில்லை. சாதாரண வார்டிலேயே தங்கியுள்ளார். தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முழுமையான ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அவரை அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி ஓய்வெடுத்து வருகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment