கணவர் டார்ச்சர் - தூக்கில் தொங்கிய டிவி நடிகை உமா மகேஸ்வரி!

|


சென்னை: கணவனின் டார்ச்சர் தாங்காமல் தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்ற டிவி நடிகை உமா மகேஸ்வரி, மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (27). நடனம் அறிந்தவர். தனியார் தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பரிசும் பெற்றார்.

உமா மகேஸ்வரிக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் பெயர் அருண் (32). கோயம்பேடு ஜெயின் நகரில் வசித்து வந்தனர். பிரசவத்துக்காக உமாமகேஸ்வரி வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து மனைவியை மீண்டும் வீட்டுக்கு அருண் அழைத்தார்.

ஆனால் 5 மாதம் கழித்து வருவதாகக் கூறிவிட்டாராம் உமா. இதனால் ஏமாற்றம் அடைந்த அருண் தனக்கு விபத்து ஏற்பட்டதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். இதனால் அரக்கப் பரக்க வீட்டுக்கு வந்த உமா மகேஸ்வரி, கணவருக்கு விபத்து இல்லை, தன்னை ஏமாற்ற நாடகம் ஆடியது தெரிந்து கொண்டார்.

இதனால் கணவன்- மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அருண் மனைவியை அடித்து உதைத்தார். இதனால் உமாமகேஸ்வரி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண் அக்கம்பக்கம் இருப்பவர்கள் உதவியுடன் மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

டாக்டர்களின் சிகிச்சைக்குப்பின் உமாமகேஸ்வரி உயிர் பிழைத்தார். கழுத்து எழும்பில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சம்பத் விசாரணை நடத்தினார்.

அதில், அருண் மனைவியிடம் 40 பவுன் நகை மற்றும் வீட்டை எழுதித் தருமாறு கேட்டு வற்புறுத்தி வந்தார். நடத்தையில் சந்தேகப்பட்டார். நகை, வீடு தராவிட்டால் நடத்தை பற்றி வெளியில் சொல்வேன் என்று மிரட்டி தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக உமா மகேஸ்வரி குடும்பம் நடத்த வர மறுத்துவிட்டார். உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கணவர் அருண் கைது செய்யப்பட்டார்.
 

Post a Comment