சென்னை: தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி மற்றும் அதன் தலைவர் பெயரைச் சொல்லி பலரை மிரட்டியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
'கண்ணா லட்டு தின்ன ஆசையா', படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்.
இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் ஒரு வழக்கு உள்ளது. மதுரை உள்பட வெளி மாவட்டங்களிலும் அவர் மீது மோசடி வழக்குகள் குவிந்துள்ளன.
தமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்களிலும் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அடுத்து ஆந்திர மாநில போலீசாரும், அவரைக் கைது செய்யத் தயாராகி வருகின்றனர்.
அவரது 2-வது மனைவி ஜுலி, 3-வது மனைவி துரியா ஆகியோரும் வழக்குகளில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யவும் போலீசார் குறி வைத்துள்ளனர்.
அவர் மீது இப்போது புதிதாக மிரட்டல் புகாரும் சேர்ந்துள்ளது. முக்கிய அரசியல் கட்சியின் பெயரையும், அந்தக் கட்சி தலைவர்களின் பெயரையும் தவறாகப் பயன்படுத்தி, மிரட்டி மோசடி லீலைகளில் ஈடுபட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பவர்ஸ்டார் மீது குண்டர் சட்டமும் பாய்வது உறுதி என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment