பேய் படங்கள், அமானுஷ்யக் கதை படங்களுக்குக் கிடைக்கும வரவேற்பைப் பார்த்து, கோலிவுட்டே பேய் உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் வரும் இன்னொரு படம் களம்.
அருள் மூவீஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் பி.கே.சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை, ‘நான்' பட இயக்குனர் ஜீவா ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராபர்ட் எஸ். ராஜ் இயக்குகிறார்.
இதில் ஸ்ரீனி, அம்ஜெத், லக்ஷ்மி ப்ரியா, மதுசூதனன், ரேகா சுரேஷ் மற்றும் பேபி ஹியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Arri Alexa cooke S-4 என்ற அதி நவீன கேமிராவின் மூலம் ‘களம்' படத்தை படமாக்குகிறார் ஒளிப்பதிவாளர் முகேஷ். பிரகாஷ் நிக்கி என்ற புதிய இசை அமைப்பாளர் ‘களம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை, வசனத்தை சுபீஷ் எழுதுகிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராபர்ட் எஸ்.ராஜ் கூறும்போது, "சராசரி மனிதனின் கற்பனைக்கும் எட்டாத உண்மைகள் ‘அமானுஷயம்' என்று அழைக்கப்படும். இந்த பாணியில் பல்வேறு படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்தக் கதையின் ‘களம்' படத்தின் தரத்தை மெருகேற்றும்.
‘களம்' படத்தின் கதையே ஒரு ‘கள'த்தை பற்றிய கதைதான் என்பதே சிறப்பு. ஒரு விலை மதிப்பிட முடியாத குறிப்பிட்ட ஒரு மாளிகையை பற்றிய கதை. ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு ‘களம்' இதில் இருக்கும். அது என்ன என்பதுதான் சஸ்பென்ஸ்..." என்கிறார்.
Post a Comment