உலகமயமாக்கலின் பாதிப்பைச் சொல்லும் நோக்கில் தமிழில் முதல் முறையாக ஒரு படம் வருகிறது. அதுதான் டாலர் தேசம்.
‘இக்னைட் பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.
‘பருத்தி வீரன்', ‘யோகி' படங்களில் இயக்குனர் அமீரிடம் பணியாற்றிய முத்து கோபால், இப்படத்தின் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
இந்தப் படம் மூலம் பிரசாத் வி.குமார் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவிடம் பணியாற்றியவர். பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ‘பருத்தி வீரன்', ‘ஆயிரத்தில் ஒருவன்', ‘மயக்கம் என்ன' போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அருண் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
படம் குறித்து முத்து கோபால் கூறுகையில், "அதீத உலகமயக்கமாலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் பல தரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக உருவாகியிருக்கிறது ‘டாலர் தேசம்'. பொருளாதார படிநிலைகளால் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ள மனிதர்களும், அவர்களின் பல்வேறு முகங்களும், வெகுஜன மக்கள் அறிந்திராத அவர்களின் அன்பும், வன்மமும், காதலும், வாழ்க்கையும் இந்தக் கதையின் முதுகெலும்பாக இருக்கும்.
சமூகத்தோடு இணைந்து பின்னப்பட்டுள்ள இக்கதையை, தொய்வின்றி நகர்த்திச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் புதுமுகங்களை யதார்த்தமாக நடிக்க வைத்திருக்கிறோம். இக்கதை அனைத்து ரசிகர்களையும் கவரும் என நம்புகிறேன். விரைவில் திரைக்கு வருகிறது டாலர் தேசம்," என்றார்.
Post a Comment