நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி பலியான தெலுங்கு நடிகர் கே. விஜய்!

|

காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி தெலுங்கு நடிகர் கே.விஜய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர் கே.விஜய் (25). இவர் தற்போது எட்டகாரம் என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

elugu actor K. Vijay dies in Nepal earthquake

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எட்டகாரம் படக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். ஆனால், படத்தின் நடன இயக்கத்தையும் ஏற்றுக் கொண்ட விஜய், அதற்கான ரிகர்சலில் ஈடுபட்டிருந்தார். எனவே, ரிகர்சலை முடித்து விட்டு தனிக்காரில் சென்றுள்ளார் விஜய்.

அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அவரது கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக பலியானார். மேலும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

கே.விஜய் பலியானதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். உடனடியாக விஜயின் உடலை ஆந்திரா கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் படி அம்மாநில அரசுக்கு தெலுங்கு திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் கிஷன் ஹைதராபாத்தில் கூறுகையில், ‘விஜய் மரணமடைந்திருக்கும் தகவல் வந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது அவர்களின் கார் கவிழ்ந்து இறந்துள்ளார் விஜய். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். உடன் வந்த 3 பேர் காயமடைந்தனர்' என்றார்.

உயிரிழந்த விஜய் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பபட்லாவைச் சேர்ந்தவர்.

 

Post a Comment